ஆணாதிக்கமும் பெண்ணியமும் சொந்த வாழ்க்கையும்

குஷ்புவின் பேட்டியும், அதைத் தொடர்ந்து வலைப்பதிவுகளில் நடந்த விவாதங்களும் பிரச்சினைகளின்/கருத்துகளின் பல பரிமாணங்களை காண்பித்தன, பெரும்பாலும் நாகரீகமாகவும், சில இடங்களில் அநாகரீகமாகவும் நடந்தேறின, அநாகரீகங்கள் கண்டிக்க வேண்டியவை, முழுமையாக நீக்கப்படவேண்டியவை.

தங்கரை முழுமையாக எதிர்ப்பதும் குஷ்புவை முழுமையாக ஆதரிப்பதுமே ஆணாதிக்கத்தையும் பெண்ணியத்தையும் அளக்கும் அளவுகோலாக வைத்து இங்கே பேசப்பட்டுக்கொண்டிருக்கின்ற இந்த சூழ்நிலையில் எனக்கு தோன்றிய/ நான் இதற்கு முன் கேட்ட, மற்ற சிலரின் கருத்துகளையும் விடயத்தையும் பகிர்ந்துகொள்கின்றேன், முழுவதும் படிக்காமல் இரண்டு வரிகளை படித்துவிட்டு பின்னூட்டமிடுவதும் திரித்து பின்னூட்டமிடுவதையும்,பதிவிடுவதற்கும் விளக்கம் சொல்லி துடித்த காலங்கள் கடந்து அலட்சியப்படுத்தும் மனநிலைக்கு வந்து பல நாட்களாகிவிட்டன.... எல்லா கேள்விளோடும் என்னை பொறுத்தி பார்க்க வேண்டாம், கேள்வி கேட்பதாலேயே இதை நான் ஆதரிக்கிறேன் என்றோ எதிர்க்கிறேன் என்றோ இல்லை.


1. அமெரிக்காவிலோ,சிங்கப்பூரிலோ,சப்பானிலோ வேலை செய்து கொண்டிருக்கும் ஆண்கள் தாங்கள் வேலை செய்து கொண்டிருக்கும் நாட்டிற்கு திருமணமானவுடன் அந்த மங்கையும் இடம்பெயர வேண்டுமென்ற கோரிக்கையை தங்கள் திருமணத்திற்கு பெண் பார்க்கும் போது வலியுறுத்தவில்லையா?

2. அமெரிக்காவிலோ,சிங்கப்பூரிலோ,சப்பானிலோ வேலை செய்து கொண்டிருக்கும் ஆண்கள் திருமணமானவுடன் அவரின் மனைவி வேலைசெய்து கொண்டிருக்கும்/ வாழ்ந்து கொண்டிருக்கும் ஊர் சூழலை விட்டு முழுமனதோடு வரவில்லையென்றால் பரவாயில்லை நான் அங்கே வருகின்றேன் என புலம்பெயர்ந்துள்ளனரா?
(என் மனைவி அப்படியெல்லாம் சொல்லவில்லையே என்றால் இன்று கேட்டுபாருங்கள் எத்தனை முழுமனதுடன் அவர் வந்தார் என, ஒரு வேளை நீங்கள் மனைவி வாழும் ஊருக்கு புலம் பெயர தயாராக இருந்தால் அவர் நீங்கள் இருக்கும் நாட்டிற்கு வந்திருப்பாரா என கேட்டு பாருங்கள்)

3. பண்பாடு,வழக்கம், கலாச்சாரம் இதிலெல்லாம் நம்பிக்கை இல்லை என்று கூறி அப்பா,அம்மா விருப்பம், நாலு பேர் கேவலமாக பேசுவார்கள் என்பதை புறந்தள்ளி உங்கள் மனைவிக்கு தாலி கட்டாமல் இருந்தீர்களா?

4.வழக்கம்,விருப்பம் என கூறி தாலி கட்டியிருந்தாலும் கூட அதற்கு இணையாக ஆண்கள் தாலி அணிந்துள்ளீர்களா? அட கூறைந்தபட்சம் ஒரு மனைவி படம் போட்ட லாக்கெட் வைத்த சங்கிலியாவது அணிந்துள்ளீர்களா?

5. தாலி என்பது பெண்ணடிமைத்தனம், ஊரில் நாலு பேர் கேவலமாக பேசுவார்கள் என்பதற்காகத்தான் கட்டினேன், வெளிநாட்டில் யாரைப் பற்றியும் கவலை இல்லை, அதனால் தாலியை கழற்றிவிடு என்று மனைவியிடம் சொல்லியிருக்கின்றீரா? அல்லது உங்கள் மனைவி அப்படி செய்துள்ளாரா?

6.எத்தனை ஆண்கள் வீட்டில் சமைக்கின்றீர், வார இறுதியில் சமைப்பதை கேட்கவில்லை, குறைந்த பட்சம் முறை வைத்து இன்று நான் சமைக்கின்றேன் நாளை நீ சமையல் செய் என்று கூறுகின்றீரா?

7.நீங்கள் வீட்டு வேலையை உண்மையாகவே மனைவியுடன் பகிர்ந்து கொள்கின்றீர்களா?

8.கணவன் மனைவி இருவரில் யாராவது ஒருவர் வேலையை விட்டுவிட வேண்டும் என்ற சூழலில் தன் வேலையை உதற தயாராக இருக்கின்றீரா?

9.குழந்தை வளர்ப்பில் உதவி செய்கிறேன் என்று கூறாமல்(உதவி என்று கூறும் போதே அது பெண்களின் பொறுப்பு என்ற பொருள் தொணிக்கின்றது) உண்மையாக பகிர்ந்து கொண்டுள்ளீர்களா?

10. தங்கள் காதல் பிரதாபங்களை முகம் மலர அகம் மலர் மனைவியிடம் பீற்றிக்கொள்ளும் போது உங்கள் மனைவியும் அவருடைய காதல் அனுபவத்தை அல்லது இன்பாக்சுவேஷனையாவது பகிர்ந்து கொண்டுள்ளாரா? (பகிர்ந்து கொள்ளவில்லையென்றால் உங்கள் மீது நம்பிக்கையில்லை என்று பொருள்)

11. உங்கள் மனைவி அவரின் காதல்/இன்பாக்சுவேஷன் அனுபவத்தை சொல்லும் போது அதை உண்மையான ஆர்வத்தோடு கேட்டு இருக்கின்றீரா?

12.அப்படி மனைவியின் காதல்/இன்பாக்சுவேஷன் அனுபவத்தை சொல்லும் போது அதை உண்மையான ஆர்வத்தோடு கேட்டு பிறகு அதை எதிலாவது எங்கேயாவது இணை(கம்பேர்)வைத்து பார்க்காமல் இருந்ததுண்டா?

13.சாலையிலோ கூட்டத்திலோ இருக்கும் பெண்ணை காண்பித்து அழகாக இருக்கிறாள் என்று உங்கள் மனைவியிடும் கூறும் உங்களிடம் உங்கள் மனைவி சாலையிலோ கூட்டத்திலோ இருக்கும் எந்த ஆண்மகனையாவது உங்களிடம் சிலாகித்து பேசியதுண்டா?

14.அப்படி சிலாகித்து பேசும்போது எள் முனையளவு வேற்றுணர்ச்சி தோன்றவில்லையா?

15.வெளிநாட்டில் இருக்கும் போது மிடியும் ஜீன்சும் பனியனுமாக இருக்கும் உங்கள் மனைவி உங்கள் பெற்றோர் முன்னும் அதே போல அணிந்துள்ளாரா? அல்லது நீங்கள் அணிய சொல்லியிருக்கின்றீரா?

16.வெளிநாட்டில் உங்களை பெயர் சொல்லி அழைக்கும் மனைவி ஊரில் உங்கள் பெற்றோர் உறவினர் முன் பெயர் சொல்லி அழைத்துள்ளாரா?

17.வெளிநாட்டில் வீட்டு வேலைகளில் உதவி செய்யும் நீங்கள் ஊரிலும் உங்கள் பெற்றோருடன் இருக்கும் போதும் உங்கள் மனைவிக்கு வீட்டு வேலைகளில் உதவி செய்துள்ளீர்களா?

18.உங்கள் மனைவி உங்களிடம் அனுமதி பெறாமல் அவரின் பெற்றோருக்கு அல்லது யாருக்காவது பணம் அனுப்பியதுண்டா?

19.வரதட்சனை வாங்காமல் திருமணம் செய்துள்ளீரா?

20.வரதட்சனை நாங்களாக கேட்கவில்லை, பெண் வீட்டில் அவர்களாக தந்தார்கள் என்பதை வேண்டாம் என்று சொன்னீர்களா?

21. திருமணத்தின் போது நாம மாப்பிள்ளை வீட்டுகாரங்க என்று பேசிய உங்கள் பெற்றோர்களை அடக்கியது உண்டா?

22. உங்கள் மனைவி உண்மையிலேயே பொருளாதார சுதந்திரநிலையில் உள்ளாரா? வேலைக்கு போய் சம்பாதிப்பதற்கும் உண்மையான பொருளாதார சுதந்திரத்திற்கும் பெரிய வேறுபாடு உள்ளது.

மேற்கண்ட கேள்விகள் அனைத்தும் ஆண்களுக்கு, தற்போது பெண்களுக்கு சில கேள்விகள்

23. ஒரு வேளை உங்கள் கணவர் மேற்கண்ட கேள்விகளில் இல்லையென்று பதிலளிக்கும் நிலையில் உள்ளபோது என்றாவது உங்கள் எதிர்ப்பை காண்பித்துள்ளீரா? இதில் குழந்தை வளர்ப்பிற்காக வேலையை விடுவதிலிருந்து கணவன் வேலை நிமித்தமாக புலம்பெயரும் எல்லா இடங்களுக்கும் விருப்பமில்லையென்றாலும் புலம்பெயர்ந்தவையும் அடங்கும்.

இனி திருமணத்திற்கு பெண் தேடிக்கொண்டிருக்கும் ஆண்களுக்கு

'அ' என்றொரு பெண்
'ஆ' என்றொரு பெண்

'அ' என்ற பெண் உங்களின் எதிர்பார்ப்பிற்கு 100% பொருத்தமானவர், ஆனால் இதற்கு முன் வேறொரு ஆணுடன் பாலியல் ரீதியான தொடர்பு உள்ளவர் என்றும் தற்போது அந்த தொடர்பு இல்லையென்றும் உங்களுக்கு தெரியவந்துள்ளது

'ஆ' என்ற பெண் உங்களின் எதிர்பார்ப்பிற்கு 90% தான் பொருத்தமானவர், ஆனால் இதற்கு முன் வேறொரு ஆணுடன் பாலியல் ரீதியான தொடர்பு உள்ளவரா இல்லையா என்று உங்களுக்கு தெரியாது.

24.இந்த தொடர்பு விடயம் உங்களுக்கு மட்டுமே தெரிந்தது என்ற சூழ்நிலையில் 'அ' பெண்ணை திருமணத்திற்கு தேர்ந்தெடுப்பீரா?

25.'அ' என்ற பெண்ணை நீங்கள் திருமணத்திற்கு தேர்ந்தெடுத்த பின் அவருடைய பாலியல் தொடர்பு உங்கள் பெற்றோருக்கு தெரிந்து வேண்டாம் என கூறும் போது உங்கள் பெற்றோரை எதிர்த்து/ சமாதானப்படுத்தி அந்த பெண்ணையே திருமணம் செய்வீர்களா?

26. லேடி பாஸ்கிட்ட வேலை செய்வதே கடினமானது சரியான நச்சரிப்பு என்று புலம்பாமல் இருந்துள்ளீரா?

27. லேடி கொலீக்ஸ் உடன் வேலை செய்வதே கடினமானது எல்லாவற்றிலும் இந்த பெண்கள் Slow என்று புலம்பாமல் இருந்துள்ளீரா?

28. லேடிஸ்னா சீக்கிரம் வீட்டுக்கு போய்விடுவார்கள், எல்லா வேலையும் என் தலையில் விழுது என்று புலம்பாமல் இருக்கின்றீரா?

29. மகளின்,சகோதரியின் திருமணத்தில் அவர்களின் விருப்பம் எந்த அளவு இருந்தது, நீங்கள் தேர்வு செய்த சில வரன்களில் ஒருவரை தேர்ந்தெடுக்கும் சுதந்திரம் தந்திருப்பீர்கள் ஆனால் சொந்தமாக அவரே தேர்வு செய்தாரா?

30. தந்தையிடம் பகிர்ந்துகொண்டு ஆலோசனை கேட்கும் எல்லா விடயங்களையும் தாயிடமும் பகிர்ந்து கொண்டு ஆலோசனை கேட்டுள்ளீர்களா?

31. பொம்பளைனா புடவை கட்டனும் ஆம்பளைனா வேட்டி கட்டனும் என்று தனக்கு மிகப்பிடித்த திரைப்பட நடிகன் வசனம் பேசும் போது அதனை அருவெறுப்பாக பார்த்துள்ளோமா?

32.இப்படி பேசும் நடிகனை/ அரசியல் தலைவனை ஒரு முறையாவது கண்டித்திருப்போமா?

கடுமையான முகத்தில் அறைய கூடிய சில கேள்விகள் இன்னும் உள்ளன ஆனால் தற்போது அதை பகிர்ந்துகொள்ளும் நிலை இல்லையென்பதால் பிறிதொரு சமயத்தில் அதை பார்ப்போம்.

மேலே உள்ள கேள்விகளில் எத்தனை 'ஆம்' சொல்லியிருக்கின்றோம், மேற்சொன்ன விடயங்களில் ஆணாதிக்கத்தை அழிக்க அரசியல் தலைவனோ, திரைப்பட நடிகனோ அவ்வளவு ஏன் உங்களை சுற்றியிருப்பவர்கள் கூட தேவையில்லை, நீங்கள் ஒருவரே போதும். வாழ்வில் ஒவ்வொரு இடத்திலும் கூடவே இருக்கும் சக மனுஷிகளின் பிரச்சினைகளை கவனிப்போம், அதற்காக விளிம்பு நிலை மனிதர்களையும், மற்ற கருத்துகளையும் பேசவே கூடாது என்பதில்லை ஆணாதிக்கத்தையும், பெண்ணியத்தையும் பற்றி ஒவ்வொருமுறை பேசும் போதும் பின்னூட்டமிடும்போதும் பதிவிடும்போதும் மேலே கேட்ட கேள்விகளில் ஒவ்வொரு முறையும் குறைந்தது ஒரு இல்லை என்ற பதிலையாவது ஆம் என மாற்றிவிட்டு பேசலாம்.

மற்ற சித்தாந்தங்களில் கொள்கைவிடயத்தில் ஆதரிப்பதற்கும் நடைமுறைக்கும் வித்தியாசம் உள்ளது, உதாரணமாக கம்யூனிச கொள்கையை இந்தியாவில் முழுமையாக கடைபிடிக்க முயற்சி செய்யும் போது அங்கே அரசியல்,சமூகம், தன் வாழ்வு, தன் குடும்பத்தின் வாழ்வு என எத்தனையோ புறக்காரணிகளும் தாக்கத்தை ஏற்படுத்துகின்றன, ஆனால் மேலே உள்ள கேள்விகளுக்கு ஆம் சொல்லி கடைபிடிக்க நம் ஒரு ஆள் ஒரே ஆள் போதும், இதனால் பாதிக்கப்படப்போவதும் யாரும் இல்லை, அதனால் இந்த ஆணாதிக்க விடயத்தில் வெறுமனே கொள்கை ஆதரவு என்று பேச்சில் மட்டுமில்லாமல் நடைமுறையிலும் கடைபிடிக்கலாம் யாரையும் பாதிக்காமலே...



குஷ்புவின் பேட்டியை ஆதரிக்கும்(இதை தவறு சொல்லவில்லை நான்) அதே நேரத்தில் அரசுவின் http://arrasu.blogspot.com/2005/09/blog-post_26.html இந்த பதிவில் வீக் என்ட் பார்ட்டியைப் பற்றி கவலைப்பட்டு 'வருங்காலப் பெண்மை பற்றிய நியாயமான கவலைகளுடன், ஒரு தாய்' எழுதியுள்ளாரே இது தான் நிதர்சனமான உண்மை நிலை இதற்கு மேலும் விளக்கமாக சொல்லத் தேவையில்லை என கருதுகின்றேன்.

இந்த பதிவை பிரதியெடுத்து உண்மையான/ மனசுக்கு நேர்மையான பதிலை எழுதுங்கள் பாஸா/பெயிலா என உங்கள் மனசுக்கு தெரியும், பின்னூட்டத்தில் எழுத வேண்டியதில்லை.

இதோ முதல் ஆளாக நான் இந்த பதிவை அச்செடுத்து பதிலளிக்கப் போகின்றேன், பார்ப்போம் பாசாகின்றேனா/பெயிலாகின்றேனா என்று

கற்பு அது உடல் சார்ந்ததா? மனம் சார்ந்தததா? இருக்கா இல்லையா என்று பேசும் நிலையில் தற்போது நான் இல்லை, இந்த சச்சரவுகள் அடங்கி பிறிதொரு நாளில் ஒரு நல்ல சூழ்நிலையில் திறந்த மனதோடு பேசலாம் நான் கற்றுக்கொள்ள நிறைய இருக்கின்றது.

இவர்கள் என்ன செய்துவிட்டார்கள்?

இவர்கள் என்ன செய்துவிட்டார்கள் என தினமலர் இந்த குதி குதிக்கின்றது?!

காவல்துறை வேறு இதற்கெல்லாம் நடவடிக்கை எடுக்க வேண்டுமென்கிறது!!!

இங்கே படமெடுக்க யார் அனுமதித்தது?

Image hosted by Photobucket.com


Image hosted by Photobucket.com


Image hosted by Photobucket.com


Image hosted by Photobucket.com


Image hosted by Photobucket.com


Image hosted by Photobucket.com

இது தான் தினமலரின் இன்வேஸ்டிகேட் ஜர்னலிசம் போல...


எதுக்கும் ஒரு சிரிப்பு குறியீடு போட்டுக்கொள்கின்றேன் தர்ம அடியிலிருந்து தப்பித்துக்கொள்ள
:-)

நன்றி
தினமலர்
http://www.dinamalar.com/2005sep26/imp7.asp

புரட்சிப்பெண் குஷ்பு

குஷ்பு சமீபத்தில் "பெண்கள் கல்யாணம் ஆவதற்கு முன்பு வேறு ஆண்களுடன் உறவு கொள்வது சகஜம்" என ஒரு புரட்சிகரமான கருத்தை வெளியிட்டுள்ளார், பொதுவாக புரட்சி பெண்கள் என்றும் பெண்ணியம் பேசுபவர்களும் கூறுபவர்கள் கற்பை பற்றி பேசும் போது அது என்ன கற்பு பெண்ணுக்கு மட்டும், ஆணுக்கில்லையா என்பார்கள்(என்பேன்), கற்பை ஆணுக்கும் பெண்ணுக்கும் பொதுவில் வைப்போம் என்பார்கள்(என்பேன்), தற்போது ஒரு படி மேலே போய் கல்யாணம் ஆவதற்கு முன்பு வேறு ஆண்களுடன் உறவு கொள்வது சகஜம் என்கிறார் அது அவருடைய நிலை, அவருடைய கருத்து, அதில் தவறொன்றுமில்லை தான் அவர் விதிவிலக்காக(exceptional) இருப்பவர், அதை சகஜம் என்று கூறி பொதுமைபடுத்தியதால் தான் இத்தனை எதிர்ப்போ என்னவோ!!!

எனக்கென்ன ஒரு வருத்தம் குஷ்புவிடம் என்றால் அதென்ன கல்யாணம் ஆவதற்கு முன்பு (மட்டும்) என ஒரு கால வரையறை கல்யாணம் ஆன பின்பும் வேறு ஆண்களுடன் உறவு கொள்வது என்ன பாவமா?!

இத்தனை நாட்கள் குஷ்புவிற்கு கோவில் கட்டிய தமிழ்ரசிகர்களின் மீது எனக்கு ஒரு விதமான ஏளனமான பார்வை இருந்தது, ஆனால் இப்படிப்பட்ட ஒரு புரட்சிப்பெண்ணிற்கு தான் கோவில் கட்டினார்கள் என்பதற்கு என் தமிழ் ரசிகர்களை பார்த்து பெருமிதம் கொள்கின்றேன்.

போட்டி - வாத்து

நான் வாத்து படப்பதிவு போடாததினால் தமிழ்வலைப்பதிவர் என்று என்னை ஒத்துக்கொள்ளாமல் ஆங்காங்கே பேசிக்கொள்வதாக உளவுப்படை தெரிவித்துள்ளது, ஆதலால் உடனடியாக வாத்து படப் பதிவு போட்டு சின்னவனின் போட்டியிலும் கலந்துகொள்ள முடிவெடுத்துவிட்டேன்...

சரி இப்போ வாத்துக்கு எங்கே போவது.

நான் பார்க்கும் வாத்தெல்லாம் கீழே படத்தில் உள்ள நிலையில் இருக்கின்றது.
Image hosted by Photobucket.com

அதனால் இன்று அனிமல்பிளானெட்ஸ் தொலைக்காட்சியில் பார்த்த சில வாத்துகளை கைத்தொலைபேசியில் படம் பிடித்து இங்கே பதிவிடுகின்றேன்...

Image hosted by Photobucket.com


Image hosted by Photobucket.com


Image hosted by Photobucket.com


Image hosted by Photobucket.com

வாத்து படம் போட்டாச்சி, இப்போ ஒரு கவிதை எழுதவேண்டுமல்லவா

வாத்து சாதம் (எ) டக் ரைஸ்

மசாலா போட்டு
சமைத்து இந்திய
உணவாய் வந்தாலும்

மசாலா போடாமல்
அவித்து சீன
உணவாய் வந்தாலும்

பாதி அவித்துமீதி
பச்சையாய் சப்பான்
உணவாய் வந்தாலும்

உன் மேலடிக்கும்
காலங்காலமான கவுச்சி
சொல்கிறதே நீ

வாத்தென்று.

கருடபுராணமும் அன்னியனும்...


அந்தகூபம்:

கொலை செய்வோன், துரோகிகள் அடையும் நரகம். இதில் பல விஷப் பிராணிகளால் துன்புற்றுக் கண் தெரியாது ஆன்மா வருந்துவன்.

--
சாலையில் ஒன்னுக்கு போனவனையும், காரை நிறுத்தாமல் போனவனையும் கருடபுராணத்தை சொல்லி கொன்ற அம்பி அன்னியனுக்கும் இதே அந்தகூபம் தானா?

கிருமி போஜனம்:

தெய்வத்திற்கு படையல் செய்யாமல் உண்பவர்கள் பசியால் வருந்தித் தாமும் புழுக்களாய்த் தம்மை ஒத்த பெரும் புழுக்களால் புசிக்கப்படும் இடம்.
--
தெய்வம் என்ன அந்த அளவிற்கு பசியாகவா இருக்கின்றது? அல்லது கருடபுராணத்தில் சொல்லப்படும் தெய்வம் அந்த குறிப்பிட்ட, மனிதர்களாக வாழும் தெய்வங்களா? ஆனால் எனக்கு கிருமிபோஜனம் தான் கண்டிப்பாக...

பன்றிமுகம்:

அதர்மமாகத் தண்டிப்பவனும் மற்ற தீமை செய்வோரும் அடையும் பன்றி போன்ற முகத்தை உடைய நரகம்.
--
சிவனேன்னு தூங்கிக் கொண்டிருந்தவனையும், காரை நிறுத்தியவனையும் அதர்மமாக கொன்ற அன்னியனுக்கும் பன்றிமுகம் தானா?

கும்பிபாகம்:

பிற உயிரைக் கொன்று தின்றோரைக் கும்பியிற் பாகப்பட்ட பொருளைப் போல் வருத்தும் இடம்.
--
அது சரி ஆடு,கோழி இன்ன பிற உயிர்களை கொன்று தின்றால் கும்பிபாக தண்டனை... நெல் போன்ற உயிருள்ள பயிர்களை கொன்று தின்றாலும் இதே கும்பிபாகம் தானா? அப்படியெனில் உலகில் உள்ள எவனுமே கும்பிபாகத்திற்கு தப்பமுடியாது அன்னியன் உட்பட.

இது போல 28 தண்டனைகள் கருடபுராணத்தில் குறிப்பிடப்பட்டுள்ளது

முனுக்கென்றதற்கெல்லாம் கருடபுராணம் சொல்லி பலர கொன்ற அன்னியன் காதலியின் தப்புக்கு காதலியை கொல்லாமல் விட்டதற்கு அன்னியனுக்கு என்ன தண்டனை என தேடிப்பார்த்தேன் கிடைக்கவில்லை.

சாதிக்கொரு நியாயம் என போதித்த இயக்குனருக்கும் வசனம் எழுதியவருக்கும் என்ன தண்டனை என கருடபுராணத்தில் தேடிப்பார்த்தேன் அதுவும் கிடைக்கவில்லை.

சதா பயத்திலும் புத்திசாலித்தனமாக மார்ஷல் ஆர்ட்ஸ் பள்ளிக்குச் சென்று அடைக்கலம் பெறுகிறாள். அந்த சண்டை நடக்கும் நேரத்தில் அம்பியின் பெர்சனாலிடியும் வந்து விடுகிறது.
(நன்றாக கவனியுங்கள் மற்றவர்களுக்கு இல்லாத புத்திசாலித்தனம் சதாவிற்கு மட்டும் வந்துவிடுகின்றது, அங்கதான் நிற்கின்றார் அம்பி...)

இப்படியெல்லாம் பேசுபவர்களுக்கு கருடபுராணத்தில் ஏதாவது தண்டனை உண்டா என பார்த்தேன், அதுவும் இல்லை.


சமீபத்தில் கருடபுராணம்(ஆங்கிலத்தில்) PDF கோப்பாக என்னிடம் உள்ளது, பிரதி வேண்டுபவர்கள் kuzhali140277(at)yahoo(dot)com என்ற மின்னஞ்சல் முகவரிக்கு தகவல் அனுப்பவும், இலவசமாக கருடபுராண pdf கோப்பு அனுப்பிவைக்கப்படும்.

இப்படியெல்லாம் கருடபுராணத்தின் புகழை பரப்புவதால் கிருமிபோஜனம், கும்பிபாகம் போன்ற தண்டனைகள் எனக்கு கிடைக்காமல் இருக்குமா?

.யிர் கொடுத்து தமிழ் என்று கூவியவர்களுக்கு ஒரு கேள்வி

உங்களக்கு பிடிக்காதவர் எது செய்தாலும் அதை கேலி,கிண்டல் செய்பவர்களே, உங்களுக்கு பிடிக்காதவர் சொன்னார் என்பதற்காக தமிழ் உணர்வை கேலி செய்கின்றீரே! நாளை உங்களுக்கு பிடிக்காத அவர் எல்லோரும் அவரவர்கள் தாயை நேசிக்க வேண்டும் என்று கூறினால் உங்கள் நிலை என்ன? அப்போதும் இதே மாதிரியான எதிர்நிலையை எடுப்பீர்களா? உங்களுக்கு தமிழ் உணர்வு உள்ளதா? இல்லையா?!

காதில் புகை

நானும் பதிவுபோட்டு நிறைய நாட்களாகின்றதே, அட நம்ம வீ.எம். நம்மை காணாமல் போனவர்கள் பட்டியிலில் சேர்த்துவிட்டார், அதுவும் இல்லாமல் ஒரு முறை நினைவூட்டல் வேறு செய்துவிட்டார், தற்போதைக்கு எழுதும் அளவிற்கு நேரம் (டேய்... அடங்கு அடங்கு என சொல்வது எனக்கு கேட்கின்றது...)இல்லையே, சரி ஒரு படப்பதிவாவது போடலாம் என நினைத்தேன்...

சரி நம்ம இருப்பையும் சொல்லிய மாதிரி ஆனது, சிலர் புகையற மாதிரியும் ஆனது என்று தான் நம்ம மத்திய சுகாதாரத்துறை அமைச்சர் மருத்துவர் அன்புமணி அவர்கள் இன்று பி.பி.சி. தொலைக்காட்சியில் ஒரு நிகழ்ச்சியில் பேசியதை கைத்தொலைபேசியை பயன்படுத்தி படம் பிடித்து இங்கே பதிக்கின்றேன்.

Image hosted by Photobucket.com

விஜயகாந்தின் முதிர்ச்சி

வணக்கம் விஜி,
எல்லோருக்கும் கேப்டன்னாலும் எனக்கு என்னமோ உங்களை விஜினு கூப்பிடறதுதான் மிகவும் பிடித்திருக்கு, எங்க சொந்தகார பயபுள்ள சின்ன வயசிலருந்தே உம்ம ரசிகர், நீங்க கேப்டனாகறதுக்கு முன்னாடி என் கிட்ட விஜி அண்ணன், விஜி அண்ணன்னு தான் பேசுவான், உங்களுக்கு யாரு கேப்டன்னு பெயர் வைத்தார்களோ எனக்கு தெரியாது, ஆனால் அவனோடு கேப்டன் பிரபாகரன் படம் பார்த்துட்டு வந்து நான் மன்சூரலிகான் நடிப்பை தலையை சொறிந்து கொண்டே பெரபாகரானு வசனம் பேசி நடித்து காட்டிக்கொண்டிருந்தபோது முதல் முதலில் கேப்டன்னு சொன்னது அவன்தான் இப்போ கூட உங்க மாநாட்டுல ஒரு ஓரமா கண்டிப்பாக இருப்பான் (பயபுள்ள அன்னைக்கி அவன் பொழப்பு போச்சி), இப்போ கூட மன்றத்து ஆளுங்க பேரில் கொஞ்சம் கோபமா இருக்கான், இரண்டாயிரம் செலவு செஞ்சும் அவன் பெயரை சுவரொட்டியில் போடலையாம், அவன் விஜி அண்ணனை கேப்டன்னு கூப்பிட்டாலும் இன்னும் எனக்கு நீங்க விஜிதான்.

சொன்னதை செய்வோம் செய்வதை சொல்வோம்னு கலக்கலா உங்க அரசியல் பிரவேசத்திற்கு தேதி குறிச்சிங்க செப்டம்பர் 14, வருவேன்,வந்தாலும் வருவேன்,எல்லாம் அவன் கையில், லேட்டா வந்தாலும் லேட்டஸ்டா வருவேன்னு வாய்ஸ் குடுக்காம, சொன்ன மாதிரியே வந்துட்டீங்க அப்பு, அந்த விதத்தில் சொன்ன சொல்லை காப்பாத்திட்டிங்க, அட நீங்க மற்ற அரசியல் கட்சிகளைவிட வித்தியாசமானவர், மக்கள் மாற்றத்தை விரும்புறாங்க அப்படினு சொன்னீங்க, அது எனக்கு என்னமோ சரியா படலை, அதனால் ஏதோ என்னால முடிந்தது விஜயகாந்த்தின் விஜயம் ஜெயமாகுமா? அப்படினு ஒரு பதிவு போட்டேன், அட இதெல்லாம் அரசியல்ல சகஜமப்பானு நினைத்தாலும் இப்போ இருக்குற அரசியல்வாதிகளை தாண்டி இவர் ஒன்னும் செய்யலை அதனால இன்னொரு அரசியல்வாதியா இருந்துட்டு போங்க அப்படினு நினைத்தேன், ஆனா இன்னும் அரசியலுக்கு வருவதற்கு முன்பே உங்க ஆண்டாள் அழகர் மண்டபத்துக்காக சுத்தி சுத்தி அடிச்சிங்களே கள்ளக்குறிச்சியில், அவங்ககிட்டயே போய் நின்னிங்களே(இரண்டு காந்துகளும் இரண்டு மண்டபங்களும்) அடடா இவர் சாதரண அரசியல்வாதியில்லையா இப்ப இருக்குறவங்களை முழுங்கி ஏப்பம் விடுவாரு டோய் அப்படினு நினைத்தேன்,

எனக்கு உங்க நிர்வாகத்திறமையில் முழு நம்பிக்கை உண்டு, சும்மாவா நடிகர் சங்க கடனை அடைச்சிங்க கைக்காசை போடாமல்,தங்கர் பச்சானை மன்னிப்பு கேட்கவைத்து ஏழு மாங்காய் அடிச்சிங்க மீண்டும் நடிகர் சங்கத் தலைவரானிங்க(ஆமா இன்னமும் தென்னிந்திய நடிகர் சங்கம்னே பெயர் இருக்கே,தமிழ்நாடு நடிகர் சங்கம்னு எப்போ மாற்றப்போறிங்க), இப்போ பழம் தின்று கொட்டை போட்ட கட்சிகளுக்கு இணையா ஒரு மாநாடு நடத்துறிங்க அதுவும் சொந்த காசை போட்டு பாராட்ட வேண்டியது ஆனால் திடீரென யாரும் மாநாட்டு மேடையில் நன்கொடை கொடுத்தா வாங்கிப்போம் அப்படிங்கறிங்க, ஒன்னும் புரியலை விஜி, மாநாட்டு மேடையில் நன்கொடை கொடுங்கனு சொல்றீங்களா? நம்ம பயபுள்ளைகளுக்கு ஒன்னும் புரியாது பாருங்க அதனால கொஞ்சம் தெளிவா சொல்லிடுங்க விஜி.

உங்க பேட்டி விஜய் தொலைக்காட்சியில் வரப்போகுது அப்படின்ன உடனே எனக்கு கொஞ்சம் அதிர்ச்சி, என்னடா நம்ம விஜி தொலைக்காட்சிக்கெல்லாம் பேட்டி தரமாட்டாரே அவரோட கொள்கையாச்சே அது, அவரே மற்ற நடிகர்களை தொலைக்காட்சிக்கெல்லாம் பேட்டி தரக்கூடாதுனு தடா போட்டவராச்சேனு நினைச்சேன், அப்புறம் தான் ஞாபகம் வந்துச்சி நீங்க கட்சி கொள்கையிலெல்லாம் உங்களுக்கு நம்பிக்கையில்லைனு ஏற்கனவே பேட்டியில சொல்லியிருந்தீங்க, அப்புறம் நீங்க அரசியல்வாதியா மாறி ரொம்ப நாளேச்சே அப்படினு.

சரி ஏதோ பேச வந்து ஏதேதோ பேசிக்கிட்டிருக்கேன், உங்க பேட்டியை குமுதத்தில் படித்தேன், அட நீங்க முதிர்ச்சியா பேட்டி தந்ததா பெரியவங்கலாம் சொன்னாங்க, சரி நம்ம விஜி மத்த அரசியல்வாதிங்க மாதிரி இல்லப்பா அரசியல் முதிர்ச்சியாத்தான் இருக்காருனு சந்தோசமா விகடன் படிக்க போனங்க, விஜயகாந்த் அரசியல் பிரகடனம் அப்படின்ற தலைப்புல மதன் எடுத்த பேட்டியைப்பற்றி மதனே பேசியிருக்காருங்க, உங்களுக்கு தமிழ் உச்சரிப்பே வரலைனு தொடக்க காலத்தில் படங்களில் மூன்று நாளில் நீக்கிய கதை அப்புறமா நீங்க ரமணால கண்ணீர் வர பேசியது, நீங்க கடினப்பட்டு தமிழ்திரைப்படத்துல வளர்ந்த கதையெல்லாம் சொன்னாருங்க, நெகிழ்ச்சியா இருந்தது.

"மனைவி என்பதே இன்றைய அரசியலில் எக்ஸ்ட்ரா கான்ஸ்ட்டிடியூஷனல் அத்தாரிட்டி" என்கிற மாதிரி ஆகிப்போச்சே, அப்புறம் இன்னும் என்னென்னமோ சொன்னாரு மதன், அதுக்கு நீங்க ரெண்டு பத்தியில் ஒரு நீளமான பதில் சொன்னீங்க,நீங்க எவ்வளவு உயர்வா பெண்களை நினைக்கின்றீர்னு அப்போதான் புரிந்தது எனக்கு, மேலும் "எல்லாத்துலயும் என்னோடு பங்கெடுத்துக்கற என் மனைவிக்கு பொதுத்தொண்டிலும் உரிய பங்கு கொடுத்தா அதை எப்படி தப்புனு சொல்லமுடியும் வாழ்க்கையில எல்லா வகையிலும் துணையா நிக்கற மனைவிக்கு உரிமை கொடுக்காம வேற ஒருத்தரை எப்படி கூட்டிக்கிட்டு போக முடியும்?" அப்படிங்கற வரிகளை படித்த உடனே தூக்கி வாரி போட்டுடுச்சிங்க, அப்போ அண்ணி தான் வாரிசுங்கறிங்க, சரி விடுங்க எந்த கட்சியல தான் வாரிசு இல்ல அப்படினு மனச தேற்றிக்கொண்டு அடுத்த வரிக்கு போனேன்.

"வாழ்க்கையில எல்லா வகையிலும் துணையா நிக்கற மனைவிக்கு உரிமை கொடுக்காம வேற ஒருத்தரை எப்படி கூட்டிக்கிட்டு போக முடியும்? இதுக்காக ஒரு வைப்பாட்டியை ஏற்பாடு பண்ணி கூட்டிக்கிட்டு போக முடியுமா இல்ல வேற பொண்ணுங்களை அழைச்சிக்கிட்டு போகமுடியுமா?..." நீங்க சொன்னதா மதன் சொன்ன இந்த வரியை படித்த உடனே பகீர்னு ஆனது எனக்கு இன்னமும் இதனோட அர்த்தம் முழுசா புரியலை, ஆனால் உங்கள் முதிர்ச்சி மட்டும் நன்றாக புரிகின்றதுங்க விஜி.

இப்போ இருக்கின்ற அரசியல்வாதிகளை விட நீங்கள் இந்த விடயத்தில் நிச்சயம் வித்தியாசமானவர்தாங்க விஜி.

நீங்க என்னதான் பழைய சோறும் பச்சமிளகாயும் சாப்பிட தயாராயிருந்தாலும் என் சொந்தகார பயப்புள்ள மனசு தாங்காது விஜி. அதனால 2006 தேர்தல்ல சரியான ஆதரவு கிடைக்கலைனா அண்ணி சொல்ற மாதிரி கேட்டு உங்க சொத்து பத்த காப்பாத்திக்குங்க விஜி.

வாரிசு அரசியலுக்கு ஜே!

கொஞ்சம் வழக்கமான முத்திரைகளை ஒதுக்கிவிட்டு இதை பார்ப்போம், செப்டம்பர் 7, 2005 அன்று வெளியான இந்தியாடுடே பத்திரிக்கையில் வந்த ஒரு கட்டுரை வாரிசுகளுக்கு ஜே! அதில் சில புள்ளிவிவரங்கள், கருத்துக்கள் எழுதப்பட்டிருந்தன.

வாரிசு அரசியல் என்பது மன்னராட்சி மனோபாவத்தின் எச்சம், ஆனால் இது உலகளவில் நடைபெறுகின்றது, தமிழகத்தில் இது தலைதூக்கியது 1990க்கு பிறகு, இதில் ஸ்டாலின் அரசியல் பிரவேசம், வாரிசு அரசியல் என இந்தியா டுடே கணக்கிலெடுக்கவில்லை,அது ஸ்டாலினின் வளர்ச்சியை 30 ஆண்டுகால அரசியல் களப்பணிக்கான வளர்ச்சியாகத் தான் அடையாளம் காண்கின்றது.

Image hosted by Photobucket.com

மு.க.ஸ்டாலின் மீது வாரிசு அரசியல் என்ற ஆயுதம் பிரயோகிக்கப்படுவது திமுகவை தாக்குவதற்காண பலவீனமானப்புள்ளி என்கிறது இந்தியாடுடே.

சில சமயங்களுக்கு முன் வாரிசு அரசியல் பற்றி நான் குறிப்பிட்டிருந்த ஒரு விடயம் வாரிசுகளின் அரசியல் பிரவேசத்தின் முக்கிய காரணம் கட்சி உடையாமல் காப்பாற்ற வேண்டுமென்பது. இதே கருத்தை இந்தியா டுடேவும் கட்சி என்ற தேனீக் கூட்டத்தை பணபலத்தாலும் கலைக்கும் முயற்சிகள் அரசியல் ராஜதந்திரமாக உருவானது 90களில்தான், காங்கிரசின் எம்.எல்.ஏ. ஒருவர் கூட்டணியில் இல்லாத அதிமுக வை பாராட்டி பேசுவார், அல்லது கட்சியின் உத்தரவை மீறி எதிரிக் கட்சிக்கு ஆதரவாக செயல்படுவார், அதுவரை ஒரு கட்சிக்கு சொந்தமாக இருந்த எம்.எல்.ஏ. திடீரென வெளிப்படையாக இன்னொரு கட்சி ஆள்போல் செயல்படுவார். இதெல்லாம் கட்சிகளுக்கு பெரும் அச்சுறுத்தலாக உருவாகிய காலகட்டம் இது. இப்படிபட்ட நிலையில் "கட்சி கையைவிட்டு நழுவாமல் இருப்பதற்கான சூட்சமமாக வாரிசு அரசியல் உருவெடுத்தது" என்று குறிப்பிடுகின்றது.

Image hosted by Photobucket.com

Image hosted by Photobucket.com

இன்னும் பல காரணங்களை இந்தியாடுடே வாரிசு அரசியல்களுக்கு காரணமாக இயம்புகின்றது, வாரிசு அரசியல் பற்றிய மக்களின் கணிப்பு என்ன என்பதையும் இந்தியாடுடே புள்ளிவிவரமாக வெளியிட்டுள்ளது.

தமிழக அளவில் வாரிசு அரசியலை ஏற்றுக்கொள்பவர்கள் 48%, இது ஒரு மிகப்பெரிய சதவீதம், பொதுவாக வாரிசு அரசியல் தவறானது என்ற கண்ணோட்டமிருப்பதாக கூறப்படும் நேரத்தில் 48% மக்கள் வாரிசு அரசியலை ஏற்பதாக கூறுவது சில கண்ணோட்டங்களை உடைத்தெறிகின்றது.

ஆனால் இந்திய அளவில் வாரிசு அரசியலை எதிர்ப்பவர்கள் 63%, தமிழக அளவில் 48% வாரிசு அரசியலை ஏற்பவர்கள் தேசிய அளவில் 37% தான் ஆதரிக்கின்றனர்.

Image hosted by Photobucket.com
Image hosted by Photobucket.com
இது புலப்படுத்துவது ஒன்றுதான் அவர்கள் சார்ந்திருக்கும் கட்சியில் அல்லது அவர்கள் ஆதரிக்கும் கட்சிகளில் வாரிசுகளின் அரசியல் அவர்களுக்கு ஒரு பிரச்சினையே அல்ல, அவர்கள் கட்சியை வெறுக்கவேண்டும் என்பதற்கு வாரிசு அரசியல் என்பது ஒரு பலவீனமான காரணமாக மட்டுமே இருக்கும், அதாவது வாரிசு அரசியல் என்ற ஒரே ஒரு காரணத்திற்காக அவரவர்கள் நம்பும் கட்சியை வெறுக்க யாரும் தயாராக இல்லை. வாரிசு அரசியல் என்ற காரணத்திற்காக அவர்கள் அனுதாபியாக இருக்கும் கட்சி சிதறுவதில் அவர்களுக்கு விருப்பமில்லை.

தமிழக அளவில் 48% வாரிசு அரசியலை ஆதரிப்பவர்கள் இந்திய அளவில் 37% தான் ஆதரிக்கின்றனர், அதாவது அவர்களுக்கு அவர்கள் சார்ந்திருக்கும் கட்சியின் வாரிசு அரசியல் பிரச்சினை அல்ல, ஆனால் மற்ற கட்சிகள் வாரிசு அரசியலை ஊக்குவிக்க கூடாது என்று கருதுகின்றனர், இதன் வெளிப்பாடுதான் தேசிய அளவில் வாரிசு அரசியலை ஆதரிப்பது குறைவாக உள்ளது.அதாவது ஸ்டாலினோ,அன்புமணியோ, வாசனோ அரசியல் வாரிசாக இருப்பது பிரச்சினையில்லை ஆனால் ராகுலோ,பிரியங்காவோ அல்லது தேசிய அளவில் மற்ற வாரிசுகளோ அரசியலுக்கு வருவதை பிரச்சினையாக கூறுகின்றனர்(?!).

இன்றும் வாரிசு அரசியலை ஊக்குவிக்காத கட்சிகளாக மதிமுகவும் கம்யூனிஸ்ட்களும் இயங்குகின்றனர் (பாஜகவையும் ஒரு குறிப்பிட்ட எல்லை வரை இதில் சேர்த்துக்கொள்ளலாம்)

இன்று வாரிசு அரசியலை எதிர்ப்பவர்கள் ஒன்று எந்த கட்சி வட்டத்திலும் சிக்காதவர்களாக இருப்பார்கள் அல்லது அவர்கள் அனுதாபியாக இருக்கும் கட்சியில் தற்போதைய நிலையில் வாரிசு அரசியல் இல்லாத நிலையிருக்கும் ஆனால் நாளை இதே கட்சியில் வாரிசு அரசியல் இருக்குமானால் அதை எதிர்ப்பவர்கள் மிகச்சிலராகவே இருப்பர், இன்று வாரிசு அரசியலை எதிர்ப்பவர்கள் நாளை அந்த நிலையில் அந்த வாரிசு அரசியலை ஆதரிப்பார்கள்.

தனி மனித வழிபாடு இருக்கும் வரை இந்த நிலை மாறுவது மிகக்கடினம்.

மன்னராட்சி மனோபாவத்திற்கும் வாரிசு அரசியலுக்கும் முக்கிய காரணம் கொள்கையின் மீதான பிடிப்பைவிட தலைவனின் மீதான பிடிப்பு தான் காரணம், இதற்கு படித்தவர்கள்,படிக்காதவர்கள் என எந்த வித்தியாசமும் இல்லை, இதற்கு பெரும்பாலானோர் விதிவிலக்குமல்ல.

சிங்கை எழுத்தாளர் 'தேடி' கோவிந்தசாமி அவர்களின் சிறுகதையில் குறிப்பிட்டதைப்போல தலைவனுக்காக கொள்கை என்பதை கைவிட்டு கொள்கைக்காக தலைவன் என்ற நிலை வரும்போது தான்(நானும் விதிவிலக்கல்ல) இந்த மன்னராட்சி மனோபாவமும் வாரிசு அரசியலும் முடிவுக்கு வரும் ஆனால் இன்றைய நிலையில் கம்யூனிஸ்ட் கட்சிகளைத் தவிர வேறு எந்த கட்சியிலும் இந்த நிலை இல்லை, அதற்கு நாம் இன்னும் வெகுதூரம் செல்ல வேண்டும் போலுள்ளது. அது வரை தான் அனுதாபியாக இருக்கும் கட்சியில் வாரிசு அரசியல் வரும்வரை வாரிசு அரசியலை எதிர்த்துக் கொண்டிருப்பது தான் தொடரும்.

புரட்சி புரோகிராமர்

நம்ம புரட்சி தலைவர், புரட்சி தலைவி, புரட்சி கலைஞர் எல்லாரையும் பார்த்து நமக்கும் ஏன் எதுனா பட்டம் போடக்கூடாது அப்படினு நினைச்சேன், அட நம்ம படிச்சி வாங்கியது ஒரு பட்டம்னா ப்ளாக்ல நமக்கு குடுக்குற பட்டம் எக்கச்சக்கம், என்ன இருந்தாலும் நாமலே நமக்கு ஒரு பட்டம் கொடுத்துக்கிறதுல இருக்கிற சொகம் வேறெதுக்குமில்லை

சரி ஆனா பட்டத்துல மொத வார்த்தை புரட்சினு இருக்கனும், ஆமா நீ என்ன பெரிய புடுங்கி புரட்சி செஞ்சனு நம்ம தேசிகனோட வேதாளம் கேட்குது,
அதனால என்ன மத்த புரட்சிகள்ளாம் என்ன செஞ்சிட்டாங்க அப்படினு கேட்டேன், அது தெரியாம வேதாளத்தின் தலை இஞ்சி நூறாக சுக்கு நூறாக உடைந்துவிட்டது (இனி தேசிகனுக்கு வேதாளம் தொல்லை இருக்காது.).

தலைவர், தலைவி(அட நமக்கு இது வராது இருந்தாலும் இதை சொல்லலைனா ஆணாதிக்கவெறியன்னு போட்டு தள்ளிடுவாங்க), கலைஞர் எல்லாம் ஏற்கனவே சிலருக்கு இருக்கு, அதனால சரி புரட்சி மனிதன் அப்படினு போட்டுக்கலாம் பார்த்தேன் அட நம்ம வலைப்பதிவுல உள்ள புரட்சி மனிதர்களை பார்த்தவுடனே நமக்கு இந்த புரட்சி மனிதன் பட்டம் சரியாவராதுனு தோணிச்சி.

புரட்சி நடிகன்னு பட்டம் போடலாம்னா நான் நடிகன் இல்ல, சரி புரட்சி பிள்ளைனு போடலாம்னா பிள்ளை சாதிக்காரங்கலாம் பிரச்சினைக்கு வந்திடுவாங்க, ஆனா என்னனாலும் புரட்சினு பட்டபெயர் போட்டே ஆகனும்னு பிடிவாதமா இருந்தேன், சரி நம்ம பொட்டி தட்டுற தொழிலை சேர்த்து புரட்சி புரோகிராமர்னு போட்டுக்கலாம்னு தோணிச்சி.

நாளைக்கு தேசிகன் வேதாளம் மாதிரி யாரும் வந்து என்ன பெரிய புரட்சி செஞ்சிட்ட புரட்சி புரோகிராமர்னு பட்டம் போட்டுகிட்டனு கேட்க கூடாதில்லையா அதான் என்ன தகுதியிருக்கு அப்படினு யோசித்தேன்

ஜாவா(நம்ம தருமியோட ஜாவா இல்லை) கிளாஸ், கம்பைளர்,டீ-கம்பைளர் லாம் தெரிந்தவர்கள் இப்பவே அப்பீட் ஆயிடுங்க

ஜாவால புரோகிராம் எழுதிய பிறகு கம்பைள்(compile) செய்யனும் அதை கம்பைள் செஞ்சா கிளாஸ் (அப்படியே நமக்கு ஒன்னரை கிளாஸ் போடுங்கனு யாரும் கேட்டுடாதிங்க இது class) அப்படினு ஒன்னு கிடைக்கும், இது இருந்தா போதும் அந்த ஜாவா பைல் தேவையேயில்ல.

இதுல என்ன மேட்டர்னா நாங்கெல்லாம் எங்க ப்ராடெக்டை வாடிக்கையாளர் கிட்ட கொடுக்கும் போது கிளாஸ் கொடுத்தா போதும், ஜாவா பைல் தரத்தேவையில்லை.

இந்த பாடாவதி பசங்க டீ-கம்பைளர்னு (de-compiler) ஒன்னு கண்டுபிடிச்சிட்டானுங்க, இந்த கிளாஸ் பைல அந்த டீகம்பைளர்ல குடுத்தா அது ஏற்கனவே இருந்த ஜாவா பைலை கொடுத்துவிடும். அதனாலா நாங்க ஜாவா புரோகிராம்ல எழுதின லாஜிக்(பெரிய்ய பொல்லாத லாஜிக்) எல்லாம் தெரிந்துவிடும்.

உலக ரகசியம் தெரிந்துவிடும் அதனால இன்னொரு கும்பல் கிளம்புச்சி, அப்வியூசிகேஷன் (obfuscation) அப்படினு சொல்லி ஒரு அப்ளிகேஷன் எழுதி துட்டு பார்க்க ஆரம்பிச்சாங்க, இது என்னனு கேட்கிறிங்களா

இந்த கிளாஸ் பைல அப்வியூசிகேஷன் செஞ்சோம்னா உள்ள எல்லாத்தையும் கலைச்சி போட்டு விடும், டீகம்பைளர் வைத்து டீ-கம்பைள் செய்து பார்த்தா ஒன்னும் புரியாது, அதனால எல்லாத்தையும் அப்வியூசிகேட் செய்துடுவோம்

இதுல பார்த்திங்கனா புளோ அப்வியூசிகேஷன் (flow obfuscation), நேம் அப்வியூசிகேஷன் (name obfuscation) அப்படினு இரண்டு இருக்கு, நேம் அப்வியூசிகேஷன்னா இப்போ height , weight,length அப்படினு எழுதினா jingilika, jikka, pumbilika னு பெயரை மாத்திடும், டீ-கம்பைள் செய்து பார்த்தா ஒரு மண்ணும் புரியாது

புளோஅப்வியூசிகேஷன் (flowobusication) அப்படினா இப்போ சைதாப்பேட்டையில இருந்து சிங்கப்பூர் வரனும்னா சைதாப்பேட்டையிலிருந்து மீனம்பாக்கம் வந்து அங்கேயிருந்து சிங்கப்பூருக்கு ஏரோபிளேன் புடிச்சி சாங்கி ஏர்போர்ட்டுக்கு வரணும் இது தான் நான் ஜாவால எழுதியிருக்கிறதுனா புளோஅப்வியூசிகேஷன் என்ன செய்யும்னா சைதாப்பேட்டையிலருந்து மதுரைக்கு போயி அங்கேயிருந்து டெல்லி போய் பிறகு அங்கிருந்து கொரியா போயி அங்கேயிருந்து ஜப்பான் அய்யய்யோ வேண்டாம் வேண்டாம் அங்கேயிருந்து சிங்கப்பூர் வரும், டீ-கம்பைள் செய்து பார்த்தா ஒரு மண்ணும் புரியாது.

ஆனா நான் எழுதுற புரோகிராம் லாம் அப்வியூசிகேஷன் செய்யவே தேவையில்லை, நான் எழுதறதே அப்படித்தான் எழுதுவேன் நானே இரண்டு நாளைக்கு பிறகு எடுத்து பார்த்தா புரியாது, அப்படி இருக்க சொல்ல டீகம்பைள் செய்து பார்த்தா என்ன வெளக்கெண்ண விளங்கும், இப்போ சொல்லுங்க நான் புரட்சி புரோகிராமர் தானே.

சரினு சொல்லி என் கொசுமெயில் சாரி சாரி ஈமெயில் signatureல் புரட்சி புரோகிராமர்னு போட்டேன், இரண்டு மூன்று தொலைபேசி அழைப்புகள் "கங்கிராட்ஸ், யூ காட் புரமோஷன்?" அப்படினு, என்ன சொல்லுங்க அப்படின்னேன், இல்ல உன் டெசிக்னேஷன் மாறியிருக்குதே அப்படின்னு கேட்டேன், "வாட் ஈஸ் தட் பொர்ரட்ட்ட்சி" அப்படி ஒரு டெசிக்னேஷன் நம்ம ஆபிஸ்லயே இல்லையேனு பிறகு நான் நம்ம புரட்சி தலைவர், புரட்சி தலைவி, புரட்சி கலைஞர் எல்லாரை பற்றியும் சொன்னேன் அவங்க புரட்சி பற்றியெல்லாம் சொன்னேன், மரமண்டைங்களுக்கு நம்ம புரட்சிதலைவர்,புரட்சிதலைவி,புரட்சிகலைஞர் இவங்களோட புரட்சி பற்றியெல்லாம் ஒன்னுமே தெரியவேயில்லை, என்ன மக்கள் இவங்க, இவங்களையெல்லாம் தெரியாம.

அப்பாலிக்கா இந்த அப்வியூசிகேஷன் மேட்டரை சொன்னேன், ஆனால் இந்த அப்வியூசிகேஷன்லாம் புரட்சியில்லை ஏன்னா பல புரோகிராமர்ங்க இப்படிதான் எழுதறாங்க அப்படினு ஒருத்தர் வயித்தெரிச்சல்ல சொன்னாரு, சே எங்க போனாலும் இந்த வயித்தெரிச்சல் பார்ட்டிங்க தொல்லை தாங்கலை யாராவது மந்திரியானாலும் வயிறெரியறாங்க, யாராவது புரட்சி செய்தாலும் வயிறெரியறாங்க, சரி அதைவிடுங்க ஒரு புராஜெக்ட் வேலைக்கு ஆறுமாசம் ஆகுதுனு வச்சிக்குங்க, மொதல் அஞ்சு மாசத்துல 5% வேலைதான் நடந்து இருக்கு அப்போ மீதி வேலையை முடிக்க எத்தனை மாசம் ஆகும் அடடே உடனே கால்குலேட்டர் எடுக்காதிங்க,95 மாசம் ஆகுமா?! ஆனால் மீதி 95% வேலை ஒரே மாசம் தான் இது புரட்சிதானே, அட எல்லா IT புராஜெக்ட்டும் இப்படித்தானே இதில் என்ன பெரிய்ய புரட்சி அப்படினு சொல்றாங்க....

மக்கா இருடா உன் மேலாளர் கிட்ட போட்டு தரேன் உனக்கு இனி ஆறு மாசமெல்லாம் கிடையாது அரை மாசம் தான்னு யாரும் கெளம்பிடாதிங்கோ அப்பாலிக்கா நான் ப்ளாக் பக்கமே வரமுடியாம போய்விடும் (பெனாத்தல் சுரேஷ் குஜாலாயிடுவார்)

தேசிகன் வேதாளத்திற்கு மற்ற புரட்சியாளர்களைத் தெரியும் அதனால் அவங்க என்ன புரட்சி செய்தாங்கனு கேட்டு வேதாளத்தையே போட்டு தள்ளியாச்சி, ஆனா நம்ம பொரட்சியாளர்களை தெரியாதவங்ககிட்ட என்ன சொல்றது, அதனால் ஏதாவது பெரிய மனசு செஞ்சி இந்த பட்டத்தை நான் தக்கவைத்துக்கொள்ள எதுனா யோசனை இருந்தா சொல்லுங்க. நம்ம வலைப்பதிவர்களுக்கும் பட்டமளிப்புக்கும் அவ்வளவு நெருக்கமாச்சே அதான் இங்கே வந்து கேட்கிறேன்.

புரட்சி புரோகிராமர் என்பதை நான் காப்பிரைட் செய்துவைத்துள்ளதால் யாரும் இதை பயன்படுத்தக்கூடாது, மீறுபவர்கள் மீது கி.மு.32000 இ.பி.கே நூத்திமுப்பத்திரெண்டரையாவது சட்டப்பிரிவின் கீழ் நடவடிக்கை எடுக்கப்படும்.

சாருவை மிரட்டிய ரசிகர்கள்

சாருநிவேதிதாவின் இணையதளம் வேலை செய்யவில்லை, எனவே சுட்டிகள் கொடுக்க முடியவில்லை

சாருநிவேதிதா சில நாட்களுக்கு முன் நடிகர் ரஜினிகாந்த்தை விமர்சித்து ஒரு கட்டுரை எழுதினார், ஆகா கெளம்பிட்டாங்கய்யா அவரு ரசிகர்கள், அவங்க எல்லாம் யாரோட ரசிகர்கள் ஆன்மீகவாதி யின் ரசிகர்கள் அல்லவா?! வன்முறையின் ராஜா என மற்றவர்களை பேசுபவரின் ரசிகர்கள் அல்லவா?! அன்பின் இமயமலை அல்லவா?! அதான் ஏகப்பட்ட ஈ-மெயில் கொசு மெயில் மிரட்டல்கள் அனுப்பினர் சாருவிற்கு

அதைப்பற்றி அவர் சொன்னதை நினைவில் இருந்து எழுதுகின்றேன், "நடிகர் ரஜினிகாந்த்தை விமர்சித்து எழுதிய கட்டுரைக்கு ஏகப்பட்ட மிரட்டல் மெயில்கள் 'டேய் நாயே' என்று ஆரம்பித்து 'அடிவாங்கி சாகதடா' என்று முடிந்த மெயில்கள், அதை ஒரு முறை கூட படித்து பார்க்காமல் முதல் வரியையும் கடைசி வரியையும் தவிர வேறு எதையும் படிக்காமலே அழித்துவிடுவது அராஜகம் தான்" என்று எழுதியிருந்தார்.

ஆகா படித்த ஈமெயில், கொசு மெயில் அனுப்பத் தெரிந்த ரசிகர்களே இப்படி மிரட்டினால் படிப்பறியாத கொடி தோரணம் கட்-அவுட் கட்டும் ரசிகர்கள் எப்படியிருப்பார்கள்(?!) நல்ல வேளை தமிழ்நாட்டை யார் யாரிடமிருந்தோ காப்பாற்ற ஆண்டவனை கூப்பிட்டார்கள் ஆனால் இவர்களிடமிருந்து அந்த ஆண்டவன் தான் இந்த தமிழ்நாட்டை காப்பாற்றினாருங்கோ!!!

151 ஆவது பதிவாக ரஜினியை விமர்சித்து எழுதியவுடனே 152வது பதிவாக சில மாதங்களுக்கு முன் திரைப்படங்களில் புகைப்பிடிப்பதை எதிர்த்து கொண்டுவரப்பட்ட சட்டத்தை அப்போதே விமர்சித்து எழுதாமல் இப்போது மருத்துவர் இராமதாசுவை விமர்சித்து எழுதினார், பாவம் சாரு அவருக்கு என்ன கட்டாயமோ நடிகர் ரஜினிகாந்த்தை விமர்சித்து எழுதியவுடன் மருத்துவர் இராமதாசுவைப் பற்றியும் எழுத வேண்டுமென என்ன செக்கியூலரிச பிரச்சினையோ.

அது சரி நடிகர் ரஜினியைப்பற்றி எழுதியவுடன் ஈமெயில் கொசுமெயில் மிரட்டல் விட்டார்களே விசிறிகள், அதே சாரு இராமதாசுவைப் பற்றி எழுதியவுடன் எந்த ஈமெயில் மிரட்டலோ கொசுமெயில் மிரட்டலோ வந்ததாக சொல்லவில்லையே ஒரு வேளை ஈமெயில் கொசுமெயில் அனுப்ப தெரிந்த ஒரு பாமக தொண்டன் கூட இல்லையோ என்னமோ ஹா ஹா....

வாழ்க அன்பின் இமயமலை ரசிகர்கள்

ஏதோ ஒரு அப்பாவி என்னமோ சொல்றாரே என்னங்க கொஞ்சம் சத்தமாதான் சொல்லுங்க என்னது

'அவங்கள்ளாம் எத்தனை ஈமெயில் கொசுமெயில் அனுப்புனாங்களா...' அட அவங்ககிட்டயே கேட்டுக்குங்களேன்...

வாங்க கண்ணுங்களா வாங்க பின்னூட்ட பெட்டி திறந்து தான் இருக்கு... அப்புறமா போய் கூலா ஒரு லைம் ஜீஸ், ஐஸ் தண்ணி எதுனா குடிங்க.

முதல் பின்னூட்டம் இடப்போறவர் யார் என்று சொல்லுங்க

அவரா? அவரே தான்...

தங்கர்பச்சானும் உள்குத்து அரசியலும்

முன்குறிப்பு
இங்கே தங்கர்பச்சான் பேசியது சரியா? தவறா? என்ற கோணத்தில் இந்த பதிவு எழுதப்படவில்லை, ஆனால் தங்கர் பச்சானின் பேச்சுக்கு புரியப்பட்ட அதிக பட்ச எதிர்வினையில் உள்ள உள்குத்து அரசியல் தொடர்பானது

தங்கர்பச்சானின் பேச்சிற்கு அளவுக்கு மீறிய எதிர்ப்பு நடிகர்களாலும் நடிகைகளாலும் காட்டப்படதற்கு உள்ளே சில அரசியல் காரணங்கள்.

1. தங்கர் பச்சான் திருமாவின் மேடைகளில் அடிக்கடி தோன்றுபவர், திருமாவின், இராமதாசுவின் நடிகர்களின் மீதான விமர்சனங்களை தாங்கமுடியாமல் இந்த அரசியல் பாறைகளின் மீது மோதி ரஜினி போன்ற தலைகளுக்கே மண்டை உடைந்தது தான் மிச்சமானது , நடிகர்கள் அங்கே பட்ட காயம், ஈகோவிற்கு வசமாக மாட்டினார் தங்கர், யாரிடமோ பட்ட காயத்திற்கான ஈகோவை இவரை போட்டு தாக்குவதினால் தீர்த்துக்கொள்கின்றனர்.

2.இயக்குனர் சீமானும் கவிஞர் அறிவுமதியும், இயக்குனர் சேரனும் திருமாவின் மேடைகளில் அடிக்கடி தோன்றுபவர்கள், இவர்கள் அத்தனை பேருமே நடிகர்களுக்கு முதுகு சொறிந்து விட்டுக்கொண்டு திரையுலகில் பிழைப்பை ஓட்டுபவர்கள் அல்ல, திறமைசாலிகள் அதே சமயம் முதுகெலும்பு உள்ளவர்கள் எந்த நடிகனுக்கும் முதுகு சொறிந்து கொண்டும் கூஜா தூக்கியும் கலைவாழ்க்கையை நடத்துபவர்கள் அதே சமயம் அதிரடியாக பேசுபவர்கள், அடிக்கடி நடிகர்களின் உண்மையான முகத்தை கிழித்து காட்டியவர்கள், எனவே தங்கரை தட்டுவதன் மூலம் இவர்களுக்கும் எச்சரிக்கை கொடுக்கப்பட்டுள்ளது.

3. சமீபத்தில் தயாரிப்பாளர் காஜா மொய்தீன் மாத்திரை தின்றதற்கு கமல்,விஜயகாந்த் மேலெல்லாம் கைகாட்டப்பட்டு பின் உடல் நலம் தேறி வந்தவுடன் என்ன நடந்தது என சொல்கிறேன் என புறப்பட்ட காஜா மொய்தீன் மடக்கப்பட்டு சில ஆண்டுகளுக்கு முன் வைத்து படம் எடுத்த அஜீத்தை பலிகடாவாக்கினார், ஆனாலும் இதில் பெருந்தலைகள் கெட்ட பெயர் சம்பாதித்துக்கொண்டனர், அதிலும் கட்சி ஆரம்பித்து தமிழர்களை காப்பாற்றப்போகும் கேப்டன் நிறையவே கெட்ட பெயர் சம்பாதித்துக்கொண்டார்

4.திரைத்துறை என்றாலே நடிகர்கள் என்றிருந்த நடிகர்களின் ஆதிக்கத்தை உடைத்தெரிந்து தயாரிப்பாளர்களின் கை ஓங்க ஆரம்பித்தது சமீப காலங்களில், தாணு விடயத்தில் சிம்பு மன்னிப்பு கேட்டதும், மாதவன் மன்னிப்பு கேட்டதும், ஜோதிகாவிலிருந்து பலருக்கும் ரெட் கார்டு போடப்பட்டதுமென தயாரிப்பாளர்களின் கை ஓங்கியது, அதிலும் கடைசியாக விஜயகாந்த்திற்கு தயாரிப்பாளர்கள் சங்கத்திலிருந்து நோட்டீஸ் அனுப்பப்பட்டு 3 நாள் கெடுவும் வைக்கப்பட்டது, தயாரிப்பாளர்கள் விஜயகாந்த்தை எதிர்த்து பத்திரிக்கையில் பேச இருப்பதாக தயாரிப்பாளர்கள் தரப்பிலிருந்து பேட்டி கொடுக்கப்பட்ட நேரத்தில் ஒரு தயாரிப்பாளர் என்ற முறையிலும் தங்கர் மாட்டினார், தயாரிப்பாளர்களுக்கு திரைத்துறை என்றாலே நடிகர்களின் ஆதிக்கம் மட்டுமே என்று காண்பிக்கவும் நடிகர்களின் வண்டவாளங்களை வெளியில் சொன்னால் என்ன ஆகும் என தயாரிப்பாளர்களை மிரட்டவும் தங்கர் பயன்பட்டார்.

5.திறமை இருக்கும் அதே சமயத்தில் வாயும் இருக்கும் மனிதர்கள் யாருக்கும் பயப்படாமல் முதுகு சொறிந்துவிடாமல் வெற்றிகளை கண்டிருக்கும் மனிதர்களின் மீது பொறாமை ஏற்படுவது இயல்பு, அதுவும் திரைத்துறையில் நடிகர்களுக்கு முதுகு சொறியாமல் எந்த பின்புலங்களும் இல்லாமல் ஒரு திறமைசாலி வெற்றி பெற்றால் அது கடும் பொறாமை தீயை ஏற்றிவிடும், அப்படி பட்ட இயக்குனர் தான் தங்கர், அவர் வாய்கொழுப்பு அவர் மீதிருந்த வன்மத்தை காட்ட சரியான தருணமாக அமைந்துவிட்டது.

6."நடிகர்-நடிகைகளைப் பற்றி இனிமேல் அவதூறாக பேசி னால், ஸ்டிரைக்தான். ஸ்டிரைக்கைத் தவிர வேறு எதுவும் கிடையாது'' என்று விஜயகாந்த், கூட்ட முடிவில் அறிவித்தார்"

இது தங்கருக்கு மட்டுமல்ல, தயாரிப்பாளர்கள், அரசியல்வாதிகள் என அனைவருக்கும் விடப்பட்ட எச்சரிக்கை, படத்திற்கு படம் மேடைக்கும் மேடை அரசியல்வாதிகளையும், காவல்துறையினரையும் இன்ன பிறரையும் கேவலமாக காண்பித்து விமர்சிக்கும் நடிகர்கள் அவர்களை யாரும் விமர்சித்தால் வேலை நிறுத்தம் தானாம்! நடிகர்/நடிகைகளுக்கு வேலை நிறுத்தத்தால் ஒரு பிரச்சினையும் இல்லை, ஆனால் திரைத்துறையை நம்பியிருக்கும் குடும்பங்கள்?!

7.தயாரிப்பாளர்களின் பிரச்சினகளைப் பற்றி மேலும் பேச தயாராக உள்ளேன் என்று அதே பேட்டியில் கூறியுள்ளார், ஒரு வேளை தங்கர் பேச ஆரம்பித்தால் பலரின் வண்டவாளம் தண்டவாளம் ஏறும் என்பதால் தங்கரின் வாயை மூட கிளம்பிவிட்டனர்.
ஆக மொத்தத்தில் ஒரே கல்லில் ஏழு மாங்காய்கள் அடிக்கப்பட்டுள்ளது, இன்னும் எத்தனை மாங்காய்கள் என்பது போகப்போகத் தெரியும்

எச்சரிக்கை அல்லது வேண்டுகோள்

இங்கே பதிவில் வந்து எவனாவது தரக்குறைவான வார்த்தைகளை பயன்படுத்தினால் நானும் தமிழன் தான் எனக்கும் தமிழில் உள்ள அத்தனை தரக்குறைவான வார்த்தைகளும் தெரியும் நாய் மனிதனை கடிப்பது அதன் இயல்பு என்று சொல்லி அந்த தரக்குறைவு பேர்வழிகளை நாய்களோடு ஒப்பிட்டு நாயை கேவலப்படுத்த விரும்பவில்லை, தரக்குறைவு பின்னூட்டங்கள் அழிக்கப்படும், அதுவும் ஒரு அளவு வரை தான்.

தங்கர் செய்த தவறுதான் என்ன?

சொல்ல வரும் கருத்தில் கடுமையான வார்த்தைகள் இருந்தால் கருத்தைவிட்டு வார்த்தையை பிடித்து தொங்கும் விபரீதம் நடைபெறும், அதற்கு இதோ மற்றுமோற் உதாரணம் தங்கர்பச்சான்.

நடிகர் நடிகைகள் தயாரிப்பாளர்களுக்கும் இயக்குநர்களுக்கும் தரும் இன்னல்களை எடுத்து கூற வந்து "பணத்துக்காக நடிக்கும் நடிகைகள் விபச்சாரிகளுக்கு ஒப்பானவர்கள்" என புயலை கிளப்பிவிட்டார்.

தாணு கமலிடமும் நேற்று முளைத்த காளான் சிம்புவிடமும் பட்ட அவதியெல்லாம் தெரிந்த விடயம் தான்.

தயாரிப்பாளர் G.V. தூக்கு கயிற்றை முத்தமிட்டதற்கும் காஜாமொய்தீன் மாத்திரை தின்றதற்கும், பழவண்டி வைத்து வியாபரம் செய்து கொண்டிருக்கும் தயாரிப்பாளர்களும் இந்த நிலைக்கு ஆனதற்கு வெறும் கந்துவட்டிகாரர்கள் மட்டுமா காரணம் இந்த பஞ்சாயத்து பேசும் நடிகர்களும் தானே காரணம்.

பணத்திற்காக வேலை செய்யாதவர்கள் யார்தான் உள்ளனர்? தங்கர்பச்சான் பணம் வாங்கமல் ஒளிஓவியர் வேலையையோ அல்லது இயக்குனர் வேலையையோ செய்வாரா? திரைப்படத்துறையைவிடுங்கள் யார்தான் பணம் வாங்காமல் எந்த வேலையைத்தான் செய்வர், ஆனால் work ethics என்பதே இல்லையா?? இந்த நடிக,நடிகைகள் படப்பிடிப்பின் இறுதி கட்டத்திலும் டப்பிங் போதும்தான் இந்த டகால்டி வித்தையெல்லாம் காண்பிப்பர், படத்தின் தொடக்கத்தில் பொத்திக்கொண்டு இருப்பார்கள்.

நடிகர்,நடிகைகளுக்கும் கோடிக்கணக்கில் கொட்டி அழுதுவிட்டு பின் மாத்திரை தின்னும் தயாரிப்பாளர்கள் துணை நடிக/நடிகைகளுக்கும் தொழில்நுட்பர்களுக்கும் இன்ன பிற வேலை செய்பவர்களுக்கும் சரியான கூலி கொடுக்காமல் வயிற்றில் அடிப்பார்கள்.


தங்கர் விபச்சாரி என்ற வார்த்தையை பயன்படுத்தியதுதான் இங்கே பிரச்சினை. "பணத்துக்காக மட்டும் நடிக்கும் " என்றாவது சொல்லியிருக்கலாம் ஆனால் இதற்காக செய்யப்படும் அளவுக்கு மீறிய எதிர்வினைகள் எங்கே இந்த நடிகர்களும்/நடிகைகளும் பணத்திற்காக செய்யும் அட்டகாசங்கள் வெளியாகிவிடுமோ என்ற பயத்தினால் செய்யப்படும் காட்டு கூச்சல் தான் என்பதில் சந்தேகமில்லை.

கேரவன் வேன் வேண்டும், அரசப்பரிலிருந்து நண்டு வறுவல், தாஜ் லிருந்து தோ-மியான், என்று பதார்த்ததிற்கு ஒரு உணவகத்திலிருந்து உணவு கேட்டு தயாரிப்பாளர்களை வறுத்தெடுக்கும் நடிகர்/நடிகைகளின் முகத்திரை கிழியும் போது கூச்சல்கள் எழத்தான் செய்யும்.

தயாரிப்பாளர்களின் பிரச்சினகளைப் பற்றி மேலும் பேச தயாராக உள்ளேன் என்று அதே பேட்டியில் கூறியுள்ளார், ஒரு வேளை தங்கர் பேச ஆரம்பித்தால் பலரின் வண்டவாளம் தண்டவாளம் ஏறும் என்பதால் தங்கரின் வாயை மூட கிளம்பிவிட்டனரோ?

இத்தனை நாளும் இதெல்லாம் வெளிவராமலில்லை, ஆனால் அந்த துறையில் உள்ள ஒருவர் சொல்லும் போது அதற்கு அழுத்தம் அதிகம் என்பதால் தான் இந்த குதி குதிக்கின்றனர்.

தங்கரின் வரிகளின் வார்த்தைகளுக்கிடையில் சில வாக்கியங்களை எடுத்துவிட்டு சிலம்பம் ஆடிக்கொண்டிருக்கும் பஞ்சாயத்து நடிகர்கள் "டிஸ்கஷன்"னுக்கு போகாதவர்களா? "டிஸ்கஷன்"னா என்னவென்று திரைப்படத்துறையில் இருப்பவர்களிடம் கேட்டுப்பாருங்கள்.

நடிகைகளுக்கு ஆதரவாக போராடும் நாயகர்களே நீங்கள் டிஸ்கஷன் நடத்தாமல் இருந்தாலே போதும், அதுவே அவர்களுக்கு நீங்கள் செய்யும் பெரிய உபகாரம்.

"தங்கர்பச்சான் படங்களில் இனிமேல் நடிப்பதா, வேண் டாமா?'' என்பது பற்றி முடிவு செய்ய, தனியாக ஒரு ஆலோ சனை கூட்டம் நடத்தி, அதில் முடிவு எடுப்போம்'' என்று விஜயகாந்த் கூறினார்."

தங்கரு உங்க அடுத்த படத்திற்கு 10கோடி சம்பளம் தருகிறேன் என பஞ்சாயத்து செய்தவரிடம் சொல்லிப்பாருங்க முதல் கால்ஷீட் உங்களுக்குத்தான்.

அடவிடுங்க தங்கர் காசு வாங்காமலே நான் உங்க படத்தில் நடித்து தருகின்றேன், எனக்கு கேரவன் வேன் வேண்டாம், அரசப்பர் நண்டு வறுவல் வேண்டாம்.

"நடிகர்-நடிகைகளைப் பற்றி இனிமேல் அவதூறாக பேசி னால், ஸ்டிரைக்தான். ஸ்டிரைக்கைத் தவிர வேறு எதுவும் கிடையாது'' என்று விஜயகாந்த், கூட்ட முடிவில் அறிவித்தார்."

படத்திற்கு படம் மேடைக்கும் மேடை அரசியல்வாதிகளையும், காவல்துறையினரையும் இன்ன பிறரையும் கேவலமாக காண்பித்து விமர்சிக்கும் நடிகரே வாழ்க உம் தலைமை.

தெக்கத்தி டெர்மினேட்டர் லிங்கம்

லிங்கம்,பிரபு,அயோத்திக்குப்பம் வீரமணி, எர்ணாவூர் நாராயணன், காட்டான் சுப்பிரமணி, கேட் சுப்பிரமணி, மிலிட்ரி குமார், வெல்டிங் குமார், சேரா, வெள்ளை ரவி, ஆத்தூர் கண்ணையா, வெடிகுண்டு பாஸ்கர், பாக்ஸர் வடிவேலு,கபிலன், ஆசைத்தம்பி மற்றும் பலர்.

தினம் செய்தித்தாள் படிப்பவரா நீங்கள்? அப்படியென்றால் இந்த பெயர்களையெல்லாம் நிச்சயம் கேள்விப்பட்டிருப்பீர், இந்த பட்டியலில் உள்ளவர்களில் சிலர் தற்போது உயிருடன் இல்லை, சிலர் திருந்தி வாழ்வதாக கூறியுள்ளனர்.

தற்போது சில வாரங்களாக தெக்கத்தி டெர்மினேட்டர் லிங்கம் என்றொரு தொடர் ஜீனியர் விகடனில் வந்து கொண்டுள்ளது, இந்த லிங்கம் என்பவர் சில ஆண்டுகளுக்கு முன் கன்யாகுமரி மாவட்டத்தை கலக்கியவர்,தமிழக அணியின் கபடி வீரராக இருந்தவர், அதன் பிறகு கொஞ்சம் கொஞ்சமாக மொத்த கன்னியாகுமரியையும் தன் பிடியில் கொண்டுவந்தவர், இவர் 90களின் முற்பகுதியில் ஆரம்பித்து 90களின் மத்திய பகுதிவரை கன்னியாகுமரியை கலக்கியவர், இவர் ஒரு கொலைவழக்கில் காவல்துறை தேடியபோது தலைமறைவாக இருந்த படியே நக்கீரன்(அல்லது ஜீனியர் விகடன்) பத்திரிக்கைக்கு பேட்டி தந்தார். அதை படித்த பிறகு அதனை தொடர்ந்து லிங்கம் தொடர்பான பத்திரிக்கக செய்திகளை சற்று ஆர்வத்துடன் தொடர்ந்து படிக்க ஆரம்பித்தேன், 1995ல் குமுதம்(அ)விகடன் ஏதோ ஒரு பத்திரிக்கையில் அட்டையில் (தகவல் பிழை இருக்கலாம்) இவரது படத்துடன் கூடிய இவரது பேட்டியை பதிப்பித்திருந்தனர், அந்த சமயத்தில் எப்போது வேண்டுமானாலும் கொல்லப்படலாம் என்றும் தெரிவித்தார், சரியாக ஒரு வருடத்திற்குள் கொடூரமாக தலை தனியாக துண்டிக்கப்பட்டு அவரின் எதிரிகளால் கொல்லப்பட்டார்.

இவரை போன்றவர்களின் பேட்டியும் அவர்களின் வாழ்க்கை வரலாற்றையும் அவர்களின் வீர பிரதாபங்களையும் நக்கீரன்,விகடன்,குமுதம் போன்றவை அவ்வப்போது பேட்டிகளாகவும் தொடர்களாகவும் வெளியிட்டு வருகின்றன. எந்த மனிதனும் முழுக்க கெட்டவனுமில்லை, முழுக்க நல்லவனுமில்லை, கெட்டவர்கள் என்று சமூகம் சொல்பவர்களிடம் சில நல்ல குணங்களும் உண்டு, நல்லதும் செய்திருப்பர், நல்லவர்கள் என்று சமூகம் சொல்பவர்களிடம் சில கெட்ட குணங்களும் உண்டு, கெட்டதும் செய்திருப்பர்.

இது மாதிரி சில நல்லதுகள் செய்திருந்தாலும் அவர்களின் பின்னணி இரத்தமயமானது, எனவே இதை படிக்கும் அத்தனை பேரும் ஒரு சம்பவமாகவோ அல்லது முதிர்ந்த மனத்துடனோ இருப்பார்கள் என்று சொல்லமுடியாது, அதிலும் முக்கியமாக இளம் வயதினர் (15-23 வயது) எந்த ஆபத்தையும் பற்றி எண்ணாமல் கால் தரையில் படாமல் திரியும் வயதினர், ஓடுற பாம்பை மிதிக்கிற வயதினருக்கும் ஒரு விதமான சாகச மனப்பான்மையிலிருப்பவர்களுக்கும் எது சரி எது தவறு என்று புரிவதில்லை, செயல்களின் விளைவுகள் சுத்தமாக புரிவதில்லை, இது மாதிரியான தொடர்களையும் நாயகன்,தளபதி,ரெட் இன்னபல இது மாதிரியான படங்களை பார்க்கும்போதும் 'நாலு பேருக்கு நல்லது செய்ய எது வேணா செய்யலாம்' என்ற வசனங்களை கேட்கும்போதும் அவர்களை அறியாமல் இதெல்லாம் தவறேயில்லை, சரி தான் என்கிற நினைப்பு வந்துவிடும் அவர்களுக்கு.

இந்த வயதிலுள்ள எல்லோருக்கும் அரவணைப்பான, நல்ல பெற்றோர்களும், நல்ல சகோதர சகோதரிகளும், நல்ல ஆசிரியர்களும், நல்ல நண்பர்களும் அமைந்தால் அவர்களை நல்வழிபடுத்துவர் எங்கேயானும் இதில் குறைபாடுகளிருந்து அதே சமயத்தில் இது மாதிரியான தொடர்களையும் படங்களையும் பார்த்துவிட்டு சாகச மனப்பாண்மையோடு ஏதேனும் முயற்சியில் இறங்கினால்?? இந்த வயதில் செய்யும் ஒரு சில செயல்கள் மொத்த வாழ்க்கையையும் மாற்றிவிடும், ஆனால் கொஞ்சம் கூட சமூக பொறுப்பின்றி நாயகன்,தளபதி,ரெட் மாதிரியான படங்களை எடுப்பதும் பத்திரிக்கைகள் தொடர்கள் வெளியிடுவதும் திரைப்படங்களும் பத்திரிக்கைகளும் அவர்களுடைய சமூக பொறுப்பற்று செயல்படுவதையே காண்பிக்கின்றது.
'இது யாரையும் நியாயப்படுத்தும் தொடர் அல்ல இதை படிப்பவர்கள் வன்முறையை நினைத்து பார்க்கக்கூட மாட்டார்கள்' என்று சப்பைகட்டு கட்டுவது வன்முறை வேண்டாமென படம் முழுக்க வன்முறையை காண்பித்து கடைசி காட்சியில் இரண்டு நிமிடம் போதனை வசனங்கள் பேசிய விருமாண்டி படத்தை போன்றது தான்.

நாம் அறிந்து கொள்ள எத்தனையோ சாதனையாளர்களின் வாழ்க்கை வரலாறு உண்டு, எத்தனையோ தியாகிகளின் வாழ்க்கை வரலாறு உண்டு.

குமுதம்,நக்கீரன்,விகடன், இன்ன பிற இதழ்களும் திரைப்படத்துறையினரும் தம் சமூக பொறுப்பை சிந்தித்து இம்மாதிரியான படங்களையும் தொடர்களையும் வெளியிடாமல் இந்த சமூக இளைஞர்களை வன்முறை வழியில் இறங்காமல் இருக்க உதவுங்கள்.

மரணத்தின் அருகில்

இருநூறு முன்னூறு பேர் கொண்ட கூட்டம் தனியாக இருக்கும் நான்கு பேருக்கு கொலை மிரட்டல் விடும்போது மனநிலை எப்படி இருக்கும்?

நான் கல்லூரியில் முதல் ஆண்டு படித்த போது முதலாண்டு செமஸ்டர் தேர்விற்காக விடப்பட்ட Study leaveல் ஊருக்கு சென்று அங்கு படிக்காமல் சாப்பிட்டு,தூங்கி எழுந்து கொண்டிருந்தேன், அந்த சமயத்தில் எங்கள் விடுதியில் உணவுக்கூடம்(மெஸ்) மூடப்பட்டுவிட்டது, ஆனால் ஒரு சில மாணவர்கள் மட்டும் விடுதியில் தங்கி தேர்விற்காக படித்தனர், சரி நாம்தான் வீட்டில் படிக்கவில்லையே, விடுதிக்கு சென்றாலாவது அங்கு இருக்கும் சில நண்பர்களோடு சேர்ந்து படிக்கலாம் என கிளம்பி விடுதிக்கு தேர்விற்கு ஒரு வாரத்திற்கு முன் அதிகாலை வந்து சேர்ந்தேன், நான் வந்த பொழுது விடுதி பரபரப்பாக இருந்தது.

விடுதியிலிருந்த சில நண்பர்கள் பரபரப்பாக இருந்தனர், என்ன என்று விசாரித்தபோது விடுதியிலிருந்த ஒரு மாணவர் விடம் குடித்த நிலையில் மருத்துவமனையிலிருக்கின்றார் என்று.

அதிகாலை 5.00மணிக்கு அந்த மாணவரின் அறைக்கு சென்று படிக்க எழுப்பியபோது வாயில் நுரை தள்ளிய நிலை, உடனடியாக நண்பர்கள் ஒரு ஆட்டோ வைத்து அருகிலிருந்த தனியார் மருத்துவமனைக்கு எடுத்து சென்றபோதும் ஏதோ விசப்பூச்சி கடித்துவிட்டது என்றே எண்ணியிருந்தனர்(பிறகு அவருடைய அறையின் மேசையிலிருந்து அவரின் கடிதம் கண்டெடுக்கப்பட்டது), தனியார் மருத்துவமனையில் பார்த்த உடனே விசம் குடித்துவிட்டார், இங்கே அனுமதியில்லை என்று கூறிவிட்டனர், இந்த நிலையில் ஆட்டோகாரரும் மருத்துவமனை வாயிலில் இறக்கிவிட்டு காசு கூட வாங்காமல் ஓடிவிட்டார், உடனடியாக அரசு மருத்துவமனைக்கு அழைத்து செல்ல வேறு ஆட்டோ பிடிக்க ஆட்டோ நிறுத்துமிடம் சென்றபோது ஒரு வாகனம் கூட இல்லை, எல்லோரும் மறைந்து விட்டனர், தனியார் மருத்துவமனையில் ஆம்புலன்ஸ் கேட்டபோது ஓட்டுனர் இல்லை என்றனர், உடனடியாக தாமதிக்காமல் எங்கள் பேராசிரியர் ஒருவரை தொலைபேசியில் அழைத்து அவருடைய காரில் அரசு மருத்துவமனைக்கு கொண்டு சென்றனர் இவை அத்தனையும் 15 நிமிடத்தில் நடந்தது, விசம் குடித்து வெகுநேரம் ஆகியிருந்ததால் எத்தனை முயன்றும் காப்பாற்றமுடியவில்லை.

இதே நேரத்தில் அவருடையை தந்தைக்கு ஆள் அனுப்பியாகிவிட்டது. அவர் வீடு கல்லூரியிலிருந்து 100கி.மீ. தாண்டி இருக்கும் ஒரு கிராமம்.

கல்லூரி பேராசிரியர்கள் சிலர் வந்தனர், பிரேத பரிசோதனை செய்தால் செய்தித்தாள்களில் செய்தி வரும், காவல் துறை விசாரனை வரும், உங்களுக்கு தேர்வு சமயம், தேவையில்லாத பிரச்சினை வரும் உடனே பிரேதத்தை எடுத்து செல்லுங்கள் என மருத்துவரும் பேராசிரியர்களும் வலியுறுத்தினர், அந்த சமயத்திலெல்லாம் நான் மருத்துவமனையிலிருக்கின்றேன்.

பின் உடனடியாக ஒரு கார் வைத்து விடுதியில் காத்திருக்கின்றோம் இறந்தவரின் தந்தைக்காக, அங்கேயும் சிலர் வந்து இன்னும் எத்தனை நேரம் காத்திருப்பீர் நேரம் ஆக ஆக சிக்கல் தான் பெற்றோருக்காக காத்திருக்காதீர்கள் உடனே கிளம்புங்கள் அவர் ஊருக்கு என்றனர்,

யார் அந்த ஊருக்கு செல்வது என்ற போது பலர் ஒதுங்கினர்,என்னையும் சேர்த்து 6 பேர் தயாரானோம், ஆனால் நானும் இன்னும் மூன்று மாணவர்களும் எங்கள் கல்லுரியில் வேலை செய்த Non-Teaching அலுவலர் (இவர் அந்த மாணவனின் பக்கத்து ஊர்) ஒருவரும் கிளம்பினோம், எங்கள் பேராசிரியர் சிலர் நீங்கள் யாரும் பயப்படாதீர், நாங்கள் பின்னால் வேறொரு காரில் வருகின்றோம் என்றனர்.

காலை 10.30க்கு கிளம்பி அந்த ஊரை 12.00க்கு அடைந்தோம், டிக்கியில் பிரேதம். அந்த மாணவரின் வீட்டை அடைந்த போது அவரின் தந்தை மருத்துவமனைக்கு சென்றுள்ளார், அவரின் அண்ணி நிறைமாத கர்ப்பினியாக, உடனடியாக விடயத்தை சொல்லாமல் அவரின் அண்ணனுக்கு தகவல் சொல்லி காத்திருந்தோம், எங்களோடு வந்த ஓட்டுனர் உடனே சொல்லுங்கள் நான் செல்ல வேண்டும் என்றார், நாங்கள் அவரை பொறுக்க சொன்னோம், அவர் திடீரென அவரின் அண்ணியிடம் சென்று அந்த மாணவர் இறந்துவிட்டார் சடலம் டிக்கியில் உள்ளது என்று கூறிவிட்டார், பெருங்குரலெடுத்து அவரின் அண்ணி அழ 5 நிமிடத்தில் ஒரு 200 - 300 பேர் கூடிவிட்டனர், சடலத்தை எடுத்து அவர்கள் வீட்டில் வைத்துவிட்டு வெளிவந்த அந்த நிமிடத்தில் கூட்டத்தில் இருந்த ஒவ்வொருவரும் எங்கள் நால்வரையும் இழுத்து கேள்வி மேல் கேள்வி கேட்க ஆரம்பித்தனர், அந்த வீட்டின் முன்பு ஒரு போக்குவரத்து மிக்க சாலை அங்கே சென்ற பேருந்துகள் கூட்ட நெரிசலால் நின்று நின்று போக ஆரம்பித்தன.

இன்னும் அவரின் சகோதரரும், தந்தையும் வரவில்லை, நானும் மற்றொரு நண்பரும் மட்டும் வாடகைக்காருக்கு பணம் தந்துவிட்டு மாலை வாங்கி வர சென்ற போது அந்த வாடகைக்கார் ஓட்டுனர் தம்பி நிலவரம் சரியில்லை, நீங்க 4 பேரும் உடனடியா என்னோடவே வந்துடுங்க என்றார் ஆனாலும் எந்த பதட்டமுமில்லாமல் அவருக்கு பணம் தந்துவிட்டு அருகிலிருந்த நகரத்திலிருந்து மாலை வாங்கிக்கொண்டு மீண்டு அதே ஊருக்கு வந்தோம்.

நேரம் ஆக ஆக கூட்டம் அதிகமாகிக்கொண்டிருந்தது, அதற்குள் சிலர் குடித்துவிட்டு வந்தனர், அவர்கள் வந்து கேவலமாக பேச ஆரம்பித்தனர், வருவதாக கூறிய விரிவுரையாளர்களும் பேராசிரியர்களும் வரவில்லை, தனித்தனியாக எங்களை பிரித்து கும்பல் கும்பலாக விசாரணை நடத்தினர், அங்கு நின்றிருந்த பேருந்து ஓட்டுனர் என்ன கூட்டமென கேட்க நீ இங்கேயே கொஞ்சம் நில்லு இன்னும் கொஞ்ச நேரத்தில 4 கொலை விழப்போகுது பாடி எடுத்துக்கொண்டு போக நில்லு என்றார் கும்பலில் ஒருவர், மேலும் கடுமையான கொலை மிரட்டல்கள் நேரடியாக விடப்பட்டன, இத்தனை நடந்தும் ஒரு சிறிய பதட்டம் கூட என்னில் இல்லை கூட படித்த நண்பன் இறந்தவிட்டானே என்ற வருத்தத்தைதவிர இந்த கொலை மிரட்டல்கள் எல்லாம் மிக சிறிய அளவில் கூட என்னிடம் பாதிப்பேற்படுத்தவில்லை, ஆனால் சில ஆண்டுகளுக்கு பிறகு இதையெல்லாம் நினைத்துப்பார்க்கும் போது நடுங்கிவிட்டேன் ஏன் தற்போது இதை எழுதிக்கொண்டிருக்கும் போது கூட என் நெஞ்சு பட படக்கின்றது எத்தனை ஆபத்திலிருந்து அன்று தப்பியிருக்கின்றோம் என்று, அன்று மட்டும் யாரேனும் ஒருவன் எங்களில் ஒருவனி சட்டையை பிடித்திருந்தாலோ ஒரு அடி கொடுத்திருந்தாலும் மொத்த கூட்டமும் எங்களை பஞ்சராக்கிவிட்டிருக்கும் கிட்டத்தட்ட 4 மணி நேர மிரட்டல்களை 4 பேரும் இலாவகமாக சமாளித்துக்கொண்டிருந்த போது அவரின் தந்தை வந்துவிட்டார், வந்த உடன் எங்கள் நான்கு பேரையும் கையோடு சேர்த்துக்கொண்டார், அதன் பிறகு யாரும் எங்கள் கிட்டே வரவில்லை, அதன் பிறகு இடுகாட்டில் எரியூட்டப்பட்டு பிறகு நாங்கள் வண்டியேறும் வரை எங்களை ஒரு நொடிக்கூட பிரிந்திருக்கவில்லை, கடைசியில் வேறு சில நண்பர்களும் எங்கள் நண்பராக இருக்கும் ஒரு விரிவுரையாளரும் வந்தனர். அதன் பிறகு அந்த ஊரின் அருகிலிருந்த ஊரிலிருந்து எங்கள் கல்லூரிக்கு படிக்க வந்த சில பெண்கள் பல ஆண்டுகளாக அந்த தற்கொலைக்கு வேறு வேறு காரணம் கற்பித்து வந்ததை அவ்வப்போது எங்களிடம் சொல்வார்கள்.

எந்தவித அரசு சான்றுகளுமில்லாமல் ஒரு சடலத்தை எடுத்துக்கொண்டு எங்களுக்கு தெரியாத உணர்ச்சிவயப்படும் ஒரு கிராமத்திற்கு செல்ல எது எங்களுக்கு தைரியம் கொடுத்தது?

கும்பலாகவும் சிலர் குடிபோதையிலும் கையில் கழி, கடப்பாரை, கத்திகள் போன்ற ஆயுதங்கள் வைத்துக்கொண்டு எங்களுக்கு கொலை மிரட்டல் விட்ட போதும் அந்த மிரட்டல்களை கொஞ்சம் கூட லட்சியம் செய்யாமல் அத்தனை பேரையும் பேசி சமாளிக்க தைரியம் கொடுத்தது எது?

ஓட்டுனர் எச்சரித்த போதும் திரும்பி போகாமல் கடைசி வரை கூடவே இருந்ததற்கான தைரியம் கொடுத்தது எது?

இன்றைக்கு அதை நினைத்தாலும் குலை நடுங்குகின்றேன், ஆனால் அப்போது இந்த பயம் இல்லை எதனால் என்றால் எல்லாம் அந்த வயசுங்க, வயசு, எந்த ஆபத்தையும் பற்றி எண்ணாமல் கால் தரையில் படாமல் திரிந்த வயசு. ஓடுற பாம்பை மிதிக்கிற வயசு, இந்த வயதில் செய்யும் ஒரு சில செயல்கள் மொத்த வாழ்க்கையையும் மாற்றிவிடும், இந்த வயதில் பெற்றோர்கள், ஆசிரியர்களின் கண்காணிப்பு மிக அவசியம், நல்ல நண்பர்கள் முக்கியம், நண்பராக பெற்றோர்களும் ஆசிரியர்களும் செயல்படவேண்டும் எதிரியாக அல்ல. ஏன் இதை இத்தனை விரிவாக எழுதினேன் என்பது அடுத்த பதிவில்.

கமல் என் கனவு நாயகன் - அசின் மன்றம் கலைப்பா?!

'கமல் என் கனவு நாயகன்' - சிலிர்க்கிறார் அசின், என்று அசின் பேட்டி விகடனில் வெளிவந்துள்ளது. அசின் அப்படி என்றால் குற்றமற்றவள் என்றும் அதாவது சின் இல்லாதவள் என்று அர்த்தம், இனிமையான சங்கீதம்னும் அர்த்தம் உண்டு என்று பேட்டியளித்த போது கமல் என் கனவு நாயகன் என்றும் அவர் காலேஜ் படிக்கும் போது அவர் கனவில் கமல் தான் வருவாரென்றும் இந்த பேட்டியில் கூறியதை படித்த குழலி கடுங்கோபத்தில் இருப்பதாக நம்பத்தகுந்த வட்டாரங்கள் தெரிவிக்கின்றன.

Image hosted by Photobucket.com

அது மட்டுமின்றி கோபத்தில் ரசிகர் மன்றத்தை கலைப்பதாக குழலி கூறுவதாக உறுதிபடுத்தப்படாத தகவல்கள் தெரிவிக்கின்றன. அசினுக்கு கோவில் கட்டும் பணியை நிறுத்த சொல்லிவிட்டதாகவும் உறுதிபடுத்தப்பட்ட தகவல்கள் தெரிவிக்கின்றன.

அது மட்டுமின்றி நடிகையாக வராமல் போயிருந்தா என்று மிக அற்புதமான ஒரு கேள்வியை கேட்ட நிருபரிடம் "அந்த பேச்சே கிடையாது, உங்க அம்மா மாதிரி நீயும் டாக்டரா ஆகியிருக்கலாமே?னு நிறைய பேர் என்னை கேட்டு இருக்காங்க. நோயாளிங்க பாவமில்லையா. பிழைச்சு போகட்டும்னு விட்டுட்டேன்" - சிரிக்கிறார்

"நோயாளிகளை விட்டுட்டீங்க... ஆனா ஆரோக்கியமானவங்களை உங்க அழகுசிரிப்பால நோயாளி ஆக்கிடுவீங்க போலிருக்கே" என்று நிருபர் விட்ட ஜொள்ளு ஆறாக பெருகிஓடியதும் கேள்விப்பட்ட குழலி மிகக்கடும் கோபத்தில் இருப்பதாக நம்பத்தகாத வட்டாரங்கள் தெரிவிக்கின்றன.

அசின் மன்றத்தை கலைத்துவிட்டு சிங்களத்து சின்னக்குயில் 'பூஜா' ரசிகர் மன்றம் ஆரம்பிக்க முனைவதாக வதந்'தீ' பரவியுள்ளது, ஆக மொத்தத்தில் ஏதேனும் ஒரு மன்றத்தில் மூளையை கழற்றிவிட்டு இருப்பதாக முடிவு செய்துள்ளார் போலும்.

Image hosted by Photobucket.com

மன்ற கலைப்பு விவாகரத்தை தெரிந்து கொள்ள +65 0000000 என்ற அவரது எண்ணிற்குதொடர்பு கொண்ட போது அவர் கைத்தொலைபேசியை நிறுத்தி வைத்துள்ளதாக தெரிகின்றது.

இன்னைக்கு நிம்மதியா தூங்கலாம் அசின் படத்தை போட்டு ஒரு பதிவு போட்டாச்சி

நன்றி
விகடன்.காம்

ஒரு முயற்சி

இந்த வலைப்பதிவு சராசரியாக ஒரு நாளைக்கு 200 முறை பார்வையிடப்படுகின்றது(ஹி ஹி என்னையும் சேர்த்துதான்), நையாண்டி, நகைச்சுவை, கருத்து கந்தசாமியாக கருத்து சொல்லித்திரிவது, என் படைப்புகளை பதிவது, என் சார்பு கருத்துகளை எடுத்து வைப்பது என்பதோடு இதை சில ஆக்கப்பூர்வ விடயங்களுக்கும் பயன்படுத்தலாம் என இந்த வலைப்பதிவில் கூகுள் விளம்பரங்களை இணைத்துள்ளேன்,

இந்த கூகுள் விளம்பரங்கள் வழியாக கிடைக்கும் தொகை முழுவதும் ஆதரவற்றோர் இல்லங்களுக்கும், நலிவடைந்த தமிழ் பள்ளிகளுக்கும் அனுப்பப்படும்.

கூகுளின் Terms and Conditions ஐ நான் ஏற்றுக்கொண்டிருப்பதால் இதற்கு மேல் இங்கே பேச முடியவில்லை.

அவ்வப்போது இது தொடர்பான விடயங்களை(updates) தெரிவிக்கின்றேன்.

பின் குறிப்பு:
இது மாதிரியான முயற்சிகளில் எனக்கு அதிக முன் அனுபவமில்லாததால், இதில் ஏதேனும் தவறோ, சட்ட சிக்கல்களோ, விதிமுறை மீறல்களோ இருப்பின் தெரிவிக்கவும்

கனடா கொண்டார் பட்டம்

முன்குறிப்பு
ஏற்கனவே நான் பதிப்பித்த இந்த பதிவை ப்ளாக்கர் தின்று சதி செய்துவிட்டதால் மீண்டும் பதிப்பிக்கின்றேன், இதற்கெல்லாம் அசந்துவிடமாட்டோம்.

மூன்று மணி நேரம் ஓடக்கூடிய திரைப்படம் வெளியாகவில்லை, சுயபுகழ் பேசும் வசனங்கள் இல்லை, தில்லானா தில்லானா பாடல்கள் இல்லை, போஸ்டர்கள் இல்லை, விளம்பரங்கள் இல்லை, கொடிகள் இல்லை, மன்றங்கள் இல்லை, துதி பாடிகள் இல்லை, இத்தனை இத்தனை இல்லைகள் ஆனால் ஒரே ஒரு புகைப்படம் மொத்த கனடாவையும் கவிழ்த்துவிட்டது.
Image hosted by Photobucket.com
தங்கத்தலைவி அசினின் ஒரே ஒரு புகைப்படம் கனடாவை பித்து பிடித்து அலையவைத்தது, தலைவியை காண வேண்டுமென்ற ஆவலில் என்ன ஏதென்று விசாரிக்காமல் மூளையை கழற்றி வைத்துவிட்டு கனடாவிலிருந்து இந்தியா வந்து அலைகின்றார்கள் என்றால் தலைவியின் புகழ் உலகெங்கும் எந்த அளவிற்கு பரவியுள்ளது என்பது எல்லோருக்கும் புலப்படும், வேறெந்த நடிகரும் நடிகையும் ஒரே ஒரு புகைப்படத்தால் மொத்த நாட்டையும் பித்து பிடித்து அலைய வைத்ததில்லை.

ஆனால் எம் தலைவியின் புகழ் பாரெங்கும் பரவுவதை கண்ட சில பொறாமை பிடித்த உள்ளங்கள் வயிற்றெரிச்சலில் அசின் செய்த பிராடு என பதிவெழுதி எம் தலைவியின் புகழை குலைக்க பார்க்கின்றனர், ஏற்கனவே கனடா முழுக்க அசின் பித்து பிடித்து அலைந்து கொண்டிருக்கும் நேரத்தில் ஐஸ்வர்யாவின் புகைப்படத்தை போட்டு வெளிச்சம் போட்டு காட்டுவதாக கூறும் முகமூடியே அவர்களே நீர் எத்தனை பதிவு போட்டாலும் அசின் அசின் தான், ஆயிரம் கரங்கள் மறைத்தாலும் ஆதவனின் ஒளி மறைவதில்லை, எனவே எத்தனை பதிவுகள் முயன்றாலும் அசின் புகழை யாராலும் மறைக்க இயலாது என சவால் விடுக்கின்றேன்.

இது போன்ற ஏமாற்று வேலைகளை யாரும் செய்யக்கூடாது என்றுதான் எங்கள் தலைவி இணையத்தில் அசின்ஆன்லைன் என்ற இணையதளத்தை ஏற்படுத்தி அவரின் புகழ் பரப்பிவருகின்றோம்.

இதுவரை யாரும் செய்யாத சாதனையாக ஒரே ஒரு புகைப்படத்தில் கனடாவை கைப்பற்றிய அசினுக்கு தீவிர ரசிகர்களின் சார்பாக கனடா கொண்டார் என்ற பட்டத்தை தங்கத்தலைவி அசினுக்கு வழங்குகின்றோம்.

எப்படியோ இன்று அசின் படத்தை போட்டு ஒரு பதிவு போட்டாயிற்று

நன்றி
அசின்ஆன்லைன்.காம்
தினமலர்.காம்

கூகிள் விளம்பரங்கள் மூலம் ஒரு முயற்சி

இந்த வலைப்பதிவு சராசரியாக ஒரு நாளைக்கு 200 முறை பார்வையிடப்படுகின்றது(ஹி ஹி என்னையும் சேர்த்துதான்), நையாண்டி, நகைச்சுவை, கருத்து கந்தசாமியாக கருத்து சொல்லித்திரிவது, என் படைப்புகளை பதிவது, என் சார்பு கருத்துகளை எடுத்து வைப்பது என்பதோடு இதை சில ஆக்கப்பூர்வ விடயங்களுக்கும் பயன்படுத்தலாம் என இந்த வலைப்பதிவில் கூகுள் விளம்பரங்களை இணைத்துள்ளேன்,

இந்த கூகுள் விளம்பரங்கள் வழியாக கிடைக்கும் தொகை முழுவதும் ஆதரவற்றோர் இல்லங்களுக்கும், நலிவடைந்த தமிழ் பள்ளிகளுக்கும் அனுப்பப்படும்.

கூகுளின் Terms and Conditions ஐ நான் ஏற்றுக்கொண்டிருப்பதால் இதற்கு மேல் இங்கே பேச முடியவில்லை.

அவ்வப்போது இது தொடர்பான விடயங்களை(updates) தெரிவிக்கின்றேன்.

பின் குறிப்பு:
இது மாதிரியான முயற்சிகளில் எனக்கு அதிக முன் அனுபவமில்லாததால், இதில் ஏதேனும் தவறோ, சட்ட சிக்கல்களோ, விதிமுறை மீறல்களோ இருப்பின் தெரிவிக்கவும்

இணையத்தில் அழகுக் கிளி அசின்

Image hosted by Photobucket.com

இணையத்தில் அழகுக் கிளி அசின் என்ற தலைப்பை விகடன்.காம் இல் பார்த்தவுடன் பரவசமாகிவிட்டேன், பரபரப்பாக இருந்தது, சரியென்று அந்த சுட்டியை சொடுக்கினால் சந்தா கட்டணம் கேட்கிறது விகடன், அட நம் தங்கத் தலைவி அசினைவிட பணம் பெரியாத என உடனே பணத்தை கட்டி உள்ளே சென்று பார்த்தேன் ஆகா என்னே நான் செய்த பாக்கியம் என்னே நான் செய்த பாக்கியம், என் தங்கத் தலைவி புரட்சித் தலைவி, சூப்பர்த் தலைவி தனக்கென தனி வெப்-சைட் ஆரம்பிக்கின்ற செய்தியை போட்டிருந்தனர், அதனோடு 'அய்யய்யோ அப்போ இனிமே மத்த பத்திரிக்கைக்கெல்லாம் பேட்டி தரமாட்டிங்களா?' என்று ஒரு உலகின் மிக முக்கியமான கேள்வியையும் 'அப்போ சிஸ்டம் முன்னாடியே கிடந்து அப்-டேட் பண்ற வேலைதான்' என புரட்சிக் கேள்வியையும் கேட்டுள்ளனர்.

Image hosted by Photobucket.com

இதுவா நமக்கு முக்கியம், நான் தேடியது தங்கத் தலைவி அசினின் இணைய தள முகவரி, ஆனால் அந்த நாசமா போன விகடன் பேட்டியில் இணைய தள முகவரியை போடவில்லை.

அய்யோ நானூனூனூனூத்தி அம்பது ரூபாய் வீணாப்போச்சே வீணாப்போச்சே, என நிணைத்தபோது கூகுள் ஆண்டவர் நினைவுக்கு வந்தார், கூகுள் ஆண்டவரிடம் முறையிட்ட போது மிகச்சரியாக தலைவி அசினின் இணைய தள முகவரியை தந்தார், அடடா இதை முன்பே செய்திருந்தால் நானூத்திஅம்பது ரூபாய் மிச்சமாகியிருக்குமே என்று நொந்துகொண்டேன்.
எங்கே தலைவி அசினின் படத்தை பார்த்தவுடன் மூளை வேலை செய்யமாட்டேங்குதே.

தலைவி அசின் ஆகஸ்ட்-16 2005ல் தான் ஆரம்பித்துள்ளார் இந்த இணையதளத்தை, 5 நாளில் 17,143 முறை அவரது இணையதளம் சொடுக்கப்பட்டுள்ளது.

அந்த இணைய தளத்திற்கு போன போது அடா அடா உலகத்தின் அதிசயமே அங்கேதான் இருக்கிறது, எத்தனை எத்தனை உலக முக்கியத்துவம் வாய்ந்த தகவல்கள், அவருடைய முந்தைய திரைப்படங்கள் நடித்துக்கொண்டிருக்கும் அடுத்த திரைப்படங்கள் என்றும் அவருடைய ஃபேவரிட்ஸ் என்றும் எத்தனை அதிமுக்கிய புள்ளிவிவரங்கள் கிடைக்கின்றன, தலைவி அசின் அவர்கள் ஆசியாவில் ஜாக்கிசானின் சாதனையை முறியடித்து தற்போது புருஸ்வில்லீஸ்,அர்னால்டு சிவனேசன் போன்றோரை நெருங்கிக்கொண்டிருக்கின்றார்.

Image hosted by Photobucket.com

நான் அசின் ரசிகனாக இருப்பதற்கு முக்கிய காரணம் அசினின் அழகைவிட, அவரின் நடிப்பை விட அவருடைய தங்கமான குணம் தான், அது எப்படி உனக்கு அசினின் குணம் தெரியும் என கேட்கக்கூடாது அக்காங்...

தலைவி அசினை தமிழகத்தின் முதல்வர் பதவியில் அமர்த்தாமல் ஓயமாட்டோம், தலைவி அசினுக்கு கோவில் கட்டாமல் ஓயமாட்டோம் என்று அகில உலக அசின் ரசிகர் மன்றத்தின் (இன்னும் மன்றம் ஆரம்பிக்கவில்லை) ஒரே தலைவன் என்ற முறையில் சபதமெடுக்கின்றோம்.

அடுத்ததாக விரைவில் எதிர்பாருங்கள் அசின்-31 என்ற ஒரு பதிவு, 31 அவரின் வயசல்ல, அவர் சமீபத்தில் தும்மிய தும்மல்களின் எண்ணிக்கை.

நன்றி
விகடன்.காம்
அசின்ஆன்லைன்.காம் (www.asinonlilne.com)