திமுக, பாமக வடமாவட்ட அரசியல்

கடந்த உள்ளாட்சி தேர்தலில் ஏற்பட்ட திமுக-பாமக கூட்டணி நான்கு தொடர் தேர்தலுக்கு(ஐந்தாண்டுகளுக்கு) பிறகு அதே உள்ளாட்சி தேர்தலால் விரிசல் ஏற்பட்டுள்ளது, இந்த விரிசல் பற்றி வெகுசன அரசியல் பத்திரிக்கைகள் எழுதுவதைப் போல ஒரு பக்கத்தில் அடக்கினால் சரியான புரிதலை தருமா என்ற சந்தேகத்தில் சற்று விரிவாக எழுத முயற்சித்துள்ளேன்.

வடமாவட்ட அரசியலை தொடர்ந்து கூர்ந்து கவனித்து வருபவர்களுக்கு திமுக-பாமக கூட்டணி தொடர்ந்து நான்கு தேர்தல்களுக்கு தாங்கியதே ஆச்சரியகரமான விடயம் என்பார்கள், ஏனெனில் வடமாவட்ட அரசியல் அப்படியானது, தேர்தல் அலைகளையும் அசாதாரண சூழல்களையும் விடுத்து பார்த்தால் பொதுவாக வடமாவட்டங்கள் 1990க்கு முன் திமுகவை தேர்தல்களில் ஏமாற்றியதில்லை, எம்ஜிஆர் அவர்கள் திமுகவை பிளந்து அதிமுகவை உருவாக்கிய போது தென்மாவட்டங்களில் திமுக பாதிக்கப்பட்டு நிறைய இழப்பை சந்தித்த போதும் வடமாவட்டங்களில் திமுக பலமாகவே இருந்தது, இதற்கு முக்கிய காரணம் திமுகவிற்கு பலமான வாக்கு வங்கியாக இருந்த வன்னியர் சமுதாயம், அதே சமயம் தலித்களின் வாக்குகள் பெருமளவிற்கு அதிமுகவிற்கு சென்று கொண்டிருந்தது, காங்கிரசுக்கு வன்னியர்களிடமும் தலித்களிடமும் ஆதரவு இருந்தாலும் பல மாவட்ட அளவிலான தலைவர்கள் இவ்விரு சமுதாயத்தை சேர்ந்தவர்களாக இல்லை, ஆனால் 1984ல் வன்னியர் சங்கம் வடமாவட்டங்களில் ஒரு பலம்மிக்கதான எழுச்சி ஏற்பட்ட போது கிராம அளவில் திமுகவில் இருந்த பலர் வன்னியர் சங்கத்திற்கு நிறைய வேலை செய்தார்கள், 1987ல் வன்னியர் சங்கத்தின் சாலைமறியல் போராட்டத்தின் போதும் அதன் முன்பும் பிறகும் வடமாவட்டங்களில் திமுகவும் வன்னியர் சங்கமும் பல இடங்களில் மோதிக்கொண்டன, பொதுவாக ஒரு அமைப்போ கட்சியோ வலுவாக உருவாகும் போது அந்த அமைப்பும் ஆளுங்கட்சியும் தான் மோதிக்கொள்ளும், ஆனால் வடமாவட்டங்களில் அந்த காலகட்டத்தில் நடந்ததோ வன்னியர் சங்கமும் அந்த நேரத்தில் எதிர்கட்சியாக இருந்த திமுகவும் பல இடங்களில் மோதிக்கொண்டன.

பாமக என்ற அரசியல் கட்சி 1989ல் உருவாகி சில மாதங்களிலேயே 1989ல் நாடாளுமன்ற தேர்தலையும் சந்தித்தது, சென்னையிலிருந்து தஞ்சை வரை எப்போதுமே திமுகவின் கோட்டையாக இருக்கும், தஞ்சைக்கு தெற்கே கொஞ்சம் கொஞ்சமாக திமுகவிற்கு வலுகுறைந்து வந்து மதுரைக்கு தெற்கே அதிமுக பலமானதாக இருக்கும் 1989 நாடாளுமன்ற தேர்தலில் மொத்த தமிழகத்திலும் திமுக ஒரு இடம் கூட வெற்றி பெறவில்லை என்றபோதும் முதல் தேர்தலிலேயே பாமக 7%வாக்குகள் வாங்கியதும் வாக்குவித்தியாசம் அதிமுக-காங்கிரஸ் கூட்டணிக்கும் திமுகவிற்கும் இடையே வடமாவட்டங்களில் பல இடங்களில் ஒரு இலட்சத்திற்கும் மேல் இருந்ததற்கு காரணம் பெரும்பாலும் திமுகவிற்கும், கொஞ்சம் காங்கிரசுக்கும் வாக்களித்து வந்த வன்னிய சமுதாயத்தில் பலர் பாமகவிற்கு வாக்களித்தது, திமுகவின் பலமான வாக்குவங்கியாக இருந்த சமுதாயத்தின் வாக்குகளை எப்போது பாமக பிரித்ததோ அப்போதே ஆரம்பமாகிவிட்டது இரண்டு கட்சிகளுக்குமான போட்டி, அன்றிலிருந்து இன்றுவரை வடமாவட்டங்களில் திமுகவை மிதித்துதான் பாமக வளரமுடியும், பாமகவை மிதித்துதான் திமுக இருக்க முடியும் என்ற நிலை, வன்னிய சமுதாயத்தின் வாக்கு வங்கியில் சரிவு ஏற்பட்டவுடனேயே திமுகவிற்கு வடமாவட்டங்களில் முதலியார்(உடையார்) சமூகத்தின் ஆதரவு கொஞ்சம் கொஞ்சமாக அதிகரிக்க ஆரம்பித்தது( திமுகவின் ஏ.ஜி.சம்பத் கை இறங்கி பொன்முடி கை விழுப்புரம் மாவட்டத்தில் ஓங்கியது இந்த நேரத்தில் தான்), பாமக திமுகவின் வாக்கு வங்கியில் மட்டும் கைவைக்கவில்லை, காங்கிரசிலும் கைவைத்தது, தமிழகம் முழுவதும் ஓரளவிற்கு செல்வாக்காக பெரும்பாலும் எல்லா இடத்திலும் மூன்றாமிடத்தில் இருந்த காங்கிரஸ் பாமகவின் தோற்றத்திற்கு பின் வடமாவட்டங்களில் மூன்றாவது இடத்தை பாமகவிடம் இழந்தது, அதனால் காங்கிரஸ் கட்சிக்கு பெரும்பக்கபலமாக இருந்த ரெட்டியார் சமூகத்தினரும் திமுக பக்கம் சாய ஆரம்பித்தனர், இப்படியாக தொடர்ந்து திமுக வடமாவட்டங்களில் முதலிடத்தில் இருந்தாலும் அதன் வாக்கு வங்கிக்கு கடுமையான சரிவு ஏற்பட்டது முழுதும் சரியாகவில்லை, அதிமுகவிற்கும் இலேசான சரிவிருந்தாலும் அது வெளித்தெரியுமளவிற்கு பாதிப்பில்லை.

சென்ற ஆண்டு மே மாதத்தில் நான் எழுதிய மருத்துவர் இராமதாசுவின் மீதான சொல்லடிகள் - ஒரு அலசல்-2 என்ற பதிவிலிருந்து சிலவரிகளை இங்கே தருகிறேன்.

பாமக உருவானதால் பாதிக்கப்பட்ட கட்சிகள் திமுகவும், காங்கிரசும் தான். வன்னியர்களின் வாக்கு வங்கி திமுகவிடமும்,காங்கிரசிடமும் இருந்தது, ஆனால் பாமக கிட்டத்தட்ட மொத்தமாக அந்த வாக்குவங்கியை தன் பக்கம் திருப்பிக்கொண்டது திமுகவிற்கு அந்த கோபம் இன்னும் இருக்கின்றது, அதுவும் இல்லாமல் இட ஒதுக்கீட்டில் உயிரை கொடுத்து போராடியது வன்னிய இனம் ஆனால் இன்னும் 108 சாதியையும் பட்டியலில் இனைத்தது திமுக அரசாங்கம் அந்த கோபமும் கருணாநிதி அவர்கள் ராசதந்திரமாக நினைத்துக்கொண்டு 1996 தேர்தலிலே செய்த கூட்டணி துரோகமும் இன்றைக்கும் கூட திமுக பாமக விடையே chemistry work out ஆகாமல் இருக்கிறது. திமுக வை எதிர்க்கும் போது பாமகவினர் காட்டும் ஆவேசம், அதிமுக வை எதிர்க்கும் போது காட்டுவதைவிட பல மடங்கு அதிகம்.

2006 சட்டமன்ற தேர்தல் நேரத்தில் பதிவுகள் எழுதியிருந்தேன், அப்போது ஒரு அனானி கேட்டார் திமுக-பாமக கூட்டணி தேர்தலில் தோற்றால் என்ன காரணம் சொல்வீர்கள் என்றார், அப்போது பதிலளித்திருந்தேன் திமுக-பாமகவிடம் மேல்மட்ட அளவில் இருக்கும் ஒற்றுமை கீழ்மட்டங்களில் இல்லாததும் உள்ளடி வேலைகளும் தானென்று.

ஏன் திமுக-பாமக கூட்டணியில் மட்டும் இந்த உள்ளடி, இது ஏன் அதிமுக-பாமக கூட்டணியில் இல்லை என்பவர்களுக்கு இந்த உள்ளடி விடுதலை சிறுத்தைகள் - அதிமுக கூட்டணியின் போது நடக்கும், அது தான் கடந்த சட்டமன்ற தேர்தலில் நடந்ததும் கூட.

இந்த உள்ளடிகளில் ஏன் பாமகவும், விடுதலைசிறுத்தைகளும் அதிகம் பாதிக்கப்படுகிறது?

பாமக-விடுதலை சிறுத்தைகளுக்கு கூட்டணியில் உள்ள தேர்தல் அழுத்தம் பற்றிய சில அலசல்கள், பாமக திமுக நேரடியாக மோதும் உள்ளூர் அரசியல், சட்டமன்ற உள்ளாட்சி தேர்தல்களில் நடந்த சில உள்ளடிகள்,திமுகவில் கலைஞர் அன்பழகன் தவிர மற்றவர்கள் எல்லாம் மோசம், அதிமுகவில் ஜெயலலிதா, சசிகலா தவிர மற்றவங்கல்லாம் நல்லவங்க, அதிமுக தொண்டன் கூட்டணிக்காக உயிரைக்கொடுத்து வேலை செய்வான் என்று மருத்துவர் இராமதாசு சொன்னதன் பின்னனி, திமுக மாவட்டசெயலாளர்கள் மீதான பாமகவின் விமர்சனங்கள் பற்றிய அலசல்கள் வரும் பதிவுகளில்.

http://www.eci.gov.in/StatisticalReports/LS_1989/Vol_I_LS_89.pdf

8 பின்னூட்டங்கள்:

said...

நல்ல சிந்தனை....நானும் இதற்கு உடன்படுகிறேன்....

said...

நல்ல அலசல் குழலி..!!!
அப்போ மருத்துவர் ஜெ பக்கம் போய்விடுவார் என்று சொல்கிறீர்களா ?

தனித்து நின்று பழக்கம் இல்லாதவர் ஆயிற்றே மருத்துவர் ? ( தனித்து நின்றால் நல்ல ஓட்டு வாங்கலாம், ஆனால் வெற்றி பெறமுடியாது அல்லவா ?)

அல்லது விஜயகாந்துக்கு ஆதரவாக திமுக தலைமை இருப்பது போல் மருத்துவர் நினைக்கிறாரா ( மருத்துவரில் அறிக்கைக்கு அடுத்த இரண்டு நாட்களில் விஜயகாந்த் கல்யாண மண்டபம் இடிக்கப்படும் அறிவிப்பு ஏனோ ?)

அல்லது திருமாவை கூட்டணியில் சேர்க்கவேண்டாம் என்று சொல்லி அது ஏற்க்கப்படவில்லையோ ?

அல்லது மீண்டும் ஒரு மத்திய அமைச்சர் பதவி (விரிவாக்கத்தின்போது) கிடைக்கவில்லை அதற்க்கு திமுக தலைமை அதுக்கு ஒத்துக்கல்லியா ?

அல்லது துணை நகரம் பிரச்சினையில் ஏற்ப்பட்ட வெறுப்பா ?

வேணுகோபால் பிரச்சினையில் திமுகவினர் அன்புமணிக்கு சப்போர்ட் செய்யவில்லை என்பது காரணமா ?

இலங்கை பிரச்சினைக்கு குரல் கொடுக்க தங்களுடன் சேர்ந்து முன்வரமாட்டேன் என்கிறதே திமுக, அந்த காரணமா ?

அல்லது இவர்களோடு இருந்தால் அமுக்கிவிடுவார்கள் என்ற எண்ணமா மருத்துவருக்கு ?

said...

என் பின்னூட்டம் வர தாமதம் ஏனோ !!!

said...

ரவி உமது கேள்விகளுக்கு பதில் சொன்னால் வரும் பதிவுகளுக்கு தேவையிருக்காது, அதனால் பொறுக்கவும்.

//என் பின்னூட்டம் வர தாமதம் ஏனோ !!!//
ராசா கொஞ்சம் பொறுத்துக்க முடியாதா? போட்டு நாலு மணி நேரம் கூட ஆகலையே, வேறு வேலை இருக்கப்பா அதான்...

said...

//அல்லது இவர்களோடு இருந்தால் அமுக்கிவிடுவார்கள் என்ற எண்ணமா மருத்துவருக்கு ?//

அப்பிடித்தான். தோழர்களுக்கு கூட அதுதான் பயம் !!! அது தான் 6ஆம் தேதி ஆர்ப்பாட்டம் நடந்தது

said...

குழலி / Kuzhali அவர்களே!

இஎத வச்சை துரோகத்தில் 'பச்சை'ங்கரது நிறமா இல்லை வேற ஏதாவது கலர் மாறப்போறதை சோல்றாறா?

(மூப்பனார் மாதிரி இதை அவர்கிட்டத்தான் கேட்கனும்ன்னு சொல்லமாட்டீங்களே)

said...

அப்போ சரி...

ஆனால் என்னோட கேள்விகளுக்கு சம்பந்தமான பதிவு வரும்போது, என்னை கூப்பிட்டு ஆட்டத்துல சேர்த்து ஜூட் சொல்லனும்..

சரியா !!!!

said...

You are true and correct.

Even, DMK's First MLA is a vanniar. DMK symbol " Rising SUN" is the symbol of SS Ramaswamy padayachi's party symbol. It was annadurai,who gained the support of A.Govindswamy padayachi( Mugaiyur MLA) and got the symbol. Even today, many old vanniars believe " Rising SUN" is the padayachi's symbol.