தீபாவளி தீபாவளியாம்.... சிங்கப்பூரில் தீபாவளியாம்

Image hosted by Photobucket.com

வணக்கம்ம்ம்ம்ம்ம்ம், நம்ம நிர்மலா பெரியசாமி வணணணணக்கம் சொல்வது மாதிரி ஒலி96.8ல் ஒருவர் இப்படித்தான் வணக்கம்ம்ம்ம் அப்படினு சொல்லுவாங்க, அது ஒலி96.8 னா சிங்கையில் உள்ள 24 மணி நேர வானொலிச்சேவை... சிங்கப்பூரில் தீபாவளி தேசிய விடுமுறை நாள், எங்கள் அலுவலகத்தில் இந்துக்களுக்கு மட்டும் தீபாவளிக்கு முந்தைய நாளில் அரை நாள் விடுமுறை எடுத்துக்கொள்ளலாம், வழக்கம் போல குட்டி இந்தியா பகுதி இந்த ஆண்டும் வண்ண அலங்கார விளக்குகளால் அலங்கரிக்கப்பட்டுள்ளது, 2002,2004ம் ஆண்டுகளைக் காட்டிலும் இந்த ஆண்டு அலங்காரம் மிக அருமையாக உள்ளது.

Image hosted by Photobucket.com

Image hosted by Photobucket.com

என்னதான் தீபாவளி பண்டிகை கொண்டாடப்படுவதற்கான காரணம் பிடிக்கவில்லையென்றாலும் தீபாவளி என்றால் அது ஒரு தனி மகிழ்ச்சி தான், பள்ளி பருவத்தில் தீபாவளிக்கு இன்னும் 20 நாள் இருக்கு இன்னும் 10 நாள் இருக்கு என்று நாட்களை எண்ணிக் கொண்டிருப்பதிலும் சரி நம்ம வீட்டு சந்தில் வெடித்த வெடி குப்பைகளை சந்து முனையில் கொண்டு வந்து கொட்டி நம்ம வீட்டில் நிறைய வெடி வெடித்த தாக பீலா விட்டுக்கொண்டு திரிந்ததும் சரி மறக்கவே முடியாதது, பதின்ம வயதில்...அட வேண்டாங்க, அதை வேறு ஜொல்லிக் கொண்டு... தீபாவளியின் போது பெரிய வில்லனே மழை தான் ஆனால் ஒரு தடவை வில்லனாக வாய்த்தது தமிழக அரசு, ஆமாங்க 30 நாட்கள் என் தந்தையை தூக்கி உள்ளே வைத்து விட்டார்கள், ஆசிரியர் போராட்டத்தில் கலந்து கொண்டு முதல் நாளே சிறை சென்று விட்டார், அந்த தீபாவளி இன்னமும் மறக்க முடியாதது, ஒரு பக்கம் அந்த ஒரு மாதமும் காலையில் 5.00 மணிக்கு எழுந்து படிக்க வேண்டுமென்ற பிரச்சினை இல்லையென்றாலும் மறுபக்கம் அப்பா வீட்டில் இல்லாமல் மிகவும் கடினமாக இருந்தது, ஆனாலும் வழக்கம் போல புதுத்துணி உடுத்தி பட்டாசு வெடித்து நான் சந்தோசமாகத் தான் கொண்டாடினேன் புரியாத வயசு பாருங்க, உலக சந்தோசமே அந்த பட்டாசு வெடிக்கிறதுல மட்டும் தானே இருந்தது.

Image hosted by Photobucket.com

Image hosted by Photobucket.com

Image hosted by Photobucket.com

Image hosted by Photobucket.com
இந்த குட்டி பசங்களை பாருங்களேன் எவ்வளவு ஆர்வமாக பட்டாசு கடையை வேடிக்கை பார்க்கிறாங்க

Image hosted by Photobucket.com
தீபாவளி சிறப்பு கடைகள்

சரி இந்த முறை தீபாவளியும் ஹரிரயாவும்(ரம்ஜான்) ஒரே வாரத்தில் வருகின்றது, அதனால் குட்டி இந்தியா பகுதியில் வேலை நாட்களிலும் கூட கூட்டம் களை கட்டி இருக்கின்றது. தீபாவளி சிறப்பு கடைகள் எல்லாம் தூள் பறக்கின்றன, 'தீபாரயா' என்ற சொல் இங்கே தற்போது மிகப் பிரபலம், அட சென்ற ஆண்டு எங்கள் அலுவலக தீபாவளி கொண்டாத்தில் எல்லோரும் பாரம்பரிய உடையில் வரவேண்டுமென்றனர், நான் ஒரு வெள்ளை வேட்டி, வெள்ளை சட்டை அணிந்து கொண்டு போய் நின்றேன், சி(ப)லர் என்ன ஸ்கர்ட் அணிந்து கொண்டு வந்துள்ளாய் என்று ஒரே கரைச்சல் தான் போங்க, அதன் பிறகு ஏய்... எப்படி உனக்கு இந்த ஸ்கர்ட் இடுப்பில் நிற்கின்றது, பெல்ட் போட்டு கட்டியிருக்கிறாயா என்றெல்லாம் கலாய்த்தனர், கட்ட கடைசியாக மேடையிலும் ஏற்றி விட்டு விட்டனர், ஐஸ்வர்யாராய் உலக அழகி போட்டியில் இறுதி சுற்றில் மேடையில் நின்றது போல நான் உணர்ந்தேன், ஒரே உதறல், என் முறை வந்த போது நம் பராம்பரிய உடை இது என்று கூறினேன், குர்தா அணிந்து வந்திருந்த ஒரு வட நாட்டு நண்பர் எனக்கு முன் குர்தாவை பாரம்பரிய உடை என்று வேறு கூறிவிட்டார், உடனே கூட்டத்திலிருந்து ஏய் என்ன டகால்ட்டி வித்தையா நீயும் பாரம்பரிய உடை அப்படிங்கற, அவரும் பாரம்பரிய உடைங்கறார் என்ன இது சின்ன புள்ளத்தனமா என சத்தம், அதன் பிறகு வேட்டியின் பிரதாபங்களை விளக்கிவிட்டு கட்ட கடைசியாக இது எங்கள் அரசியல்வாதிகளின் சீருடை(யூனிபார்ம்)யும் கூட என்றேன், அன்னைக்கே வச்சாங்கய்யா நமக்கு ஆப்பு, என்னனா என் பேரிலேயே இன்னும் ஒருவரும் எங்கள் அலுவலகத்தில் இருக்கின்றார், அதனால் வேறு படுத்தி காட்ட 'பொலிட்டீஷியன்' என்ற அடை மொழி என் முன் ஒட்டிக்கொண்டுவிட்டது. இதில் என்ன பெரிய ஆச்சரியம் என்றால் கங்குலி ஆஸ்திரேலியாவோட சதம் அடித்த மாதிரி எனக்கு முதல் பரிசு தந்து விட்டார்கள் அந்த அதிர்ச்சியிலிருந்தே இன்னும் மீளவில்லை அதுக்குள்ள அடுத்த தீபாவளி வந்துவிட்டது.

அனைவருக்கும் என் தீபாவளி நல் வாழ்த்துக்கள், தலை தீபாவளி கொண்டாடப் போகும் கோபி, மூர்த்தி, கங்கா மற்றும் தலை தீபாவளி கொண்டாடப்போகும் அனைவருக்கும் தீபாவளி நல் வாழ்த்துக்கள்....

சரி கடைசியா ஒரு கேள்வி... என்ன கடைசியா இது தானடா முதல் கேள்வியே என்று யாரப்பா என் தலையில் கொட்டுவது?

இராமரும், சீதையும் தலை தீபாவளியை எங்கு கொண்டாடினர்? மிதிலையா? அயோத்தியா?

சரி சரி பழசு தான் பழசு தான் என்ன செய்யறது புதுசா சரக்கு எதுவும் இல்லையே!!!

சிங்கப்பூர் குட்டி இந்தியா பகுதியிலிருந்து உங்களிடமிருந்து விடை பெறுவது குழலி குழலி குழலி.... நன்றிஇஇஇ

நூறு! நூறு!! நூறு!!!

Image hosted by Photobucket.com

அது என்னமோ தெரியலைங்க நூறுக்கும் நமக்கும் ராசியே இல்லை, 90 அடிச்ச டெண்டுலகர் அடுத்த 10 அடிக்கறதுக்குள்ள கட்டையை போட்டு படுத்துவாரே அது மாதிரி வேகமாக வந்த பதிவுகள் கடந்த சில வாரங்களாக கட்டை போட்டுக் கொண்டிருக்கின்றது, 90க்கு அப்புறம் அப்படி இப்படி தட்டி போங்கு ஓட்டங்கள் எடுப்பது மாதிரி நானும் அமைச்சர் அன்புமணி படம், குரங்கு படம், .ஜினி படம் அப்படினு போங்கு பதிவுகளா போட்டாலும் நூறு வருவதற்குள் ஸ்ஸ்ஸ்ஸ் மூச்சு வாங்குது.

நூறுனாலே ஒரு கவர்ச்சி தானுங்க, கவர்ச்சின்ன உடனே கற்பனை குதிரையை வாய்வேகம், மனோவேகத்துல(பாடகர் மனோ இல்லீங்க) தட்டிவிட்டுடாதிங்க. ஆனா பாருங்க நான் முன்பே சொன்னது மாதிரி நூறுக்கும் நமக்கும் ராசியே இல்லிங்க, இது வரை ஒரு தடவை கூட நூற்றுக்கு நூறு மதிப்பெண்கள் எடுத்ததேயில்ல அட முதல் ரேங்க் கூட எடுத்துருக்கேன் (நெசமாதாங்க!!!) ஆனால் 12+4=16 வருசத்துல ஒரு முறை கூட நூற்றுக்கு நூறு எடுத்ததேயில்லை, நூறுனா உடனே எனக்கு மூன்று நூறு ஞாபகத்துக்கு வரும், என்னோட சித்தி வீட்டுக்கு போயிருந்தப்ப பக்கத்து வீட்டுல ஒரு பாட்டி நூறு நூறுனு நூறு தடவை நூறை கூப்பிட்டு இம்சை செஞ்சாங்க, அப்புறமா தான் தெரிந்தது நூறு நூறுனு கூப்பிட்டது நூறு இல்லை நூரு ன்னு, நூரு அந்த வீட்டு குட்டி பாப்பா...

11வது படிக்கும்போது நானும் நம்ம நண்பரும் கணக்கு பாடத்துக்கு டியூஷன் போயி சேரலாம்னு பிரபலமா இருந்த ஒரு ஆசிரியர் கிட்ட சேர போனோம், அப்போ கேட்டாரு தம்பி நீ எத்தனை மதிப்பெண் கணக்குலனு உடனே நம்ம நண்பர் நூறு அப்படின்னாரு, அந்த ஆசிரியர் ரொம்ப சந்ததோசமா கணக்குல சென்டமா கிரேட் கிரேட்னு புகழ்ந்தாரு, என்னை கேட்டாரு எத்தனைனு நான் நாம எடுத்த மதிப்பெண்ணை சொன்னோம், அப்புறமா நம்ம நண்பர் மச்சான் நான் அவர் +1 காலாண்டுல எடுத்த மார்க்க கேட்கிறார்னு(+1,+2 லாம் 200க்கு தான் மதிப்பெண்கள்) சொன்னேன்டா அவர் 10வது பரீட்சை மார்க்குனு நினைச்சி என்னை ரொம்ப புகழ்ந்துட்டாரு வெட்கமா இருக்கு அப்படின்னான்.

பெங்களூர் கொரமங்களாவில் ஒரு நிறுவனத்தில் வேலை செய்த போது எங்க அலுவலகத்தின் செக்யூரிட்டியை அழைக்க இன்டர்காமில் 100 அழுத்த வேண்டும், அன்னைக்கு பாருங்க ஏதோ நினைப்பில் 100 அழுத்திவிட்டேன், பேசியது ஹலோ கோரமங்களா போலீஸ் ஸ்டேஷன் அப்படின்னாங்க, சாரி சார் தவறுதலா அழைத்துவிட்டேன் என்று பேசி வைத்துவிட்டேன் பிறகுதான் எத்தேச்சையாக '0' அழுத்தி பிறகு 100 அழுத்தியது புரிந்தது, 0 அழுத்தி பிறகு எண் அழுத்தினால் உள்ளூர் தொலைபேசிக்கு தொடர்பு கொள்ளலாம்.

இந்த கிரிக்கெட் விளையாட்டுல பைத்தியமா பள்ளியில் படிக்கும் போது அலைந்து கொண்டிருப்பேன், நமக்கு உடம்பில் வலுவே இருக்காது, ஆனா மட்டையடிக்க முதல்லயே அனுப்புவாங்க அதாங்க ஓப்பனிங் பேட்ஸ்மேன், கட்டை போடுறதுல மன்னனாச்சே, சோயிப் அக்தர் மாதிரி மாங்கு மாங்குனு ஓடி வந்து போடுவான் நம்ம சின்னி, அத ஒரு கட்டை வைத்தா பந்து எந்திரிக்கவே எந்திரிக்காது, ஒரு கட்டத்துல நம்ம ஆளுங்களே டென்சனாயி டேய் ஒன்னு அடி இல்ல அவுட் ஆகு அப்படின்னுவாங்க, நாமளும் எப்படித்தான் நூறு அடிக்கறது அதனால் பொடிப்பசங்களை கூப்பிட்டு வச்சி கிரிக்கெட் விளையாடுறது, எப்படியும் நூறு அடிச்சிடறதுனு ஆடினேன் 95 வந்துட்டேன், கேட்ச் எடுக்கவே தெரியாத பக்கத்து வீட்டு பையன் கீப்பிங் கேட்ச் எடுத்துட்டாங்க, அன்னையோட இந்த நூறு ரன் அடிக்கிற கனவை மறந்துட்டேன்.

சரி சென்டமும் செஞ்சுரியும் தான் நம்ம பள்ளி வாழ்க்கையில கனவாவே ஆயிடுச்சி, கல்லூரியிலாவது செய்முறை தேர்விலாவது நூறு எடுக்கன்னும்னு பார்த்தா எழுத்து தேர்வுலயாவது சொல்லிக்கிற மாதிரி மதிப்பெண் வந்தது, செய்முறை தேர்வில் அரை செஞ்சுரி தான் எப்பவும் நல்ல புள்ளயா செஞ்ச பிராஜெக்ட் ஒர்க்குக்கே 67% தான் டேய் உன்னையெல்லாம் பொழச்சி போனு பாஸ் போட்டது பெரிய விடயம்னு மனசாட்சி சொன்னது.

சரி கல்லூரியிலும் நூறு எட்டாத கனியாகவே ஆயிடுச்சா, இந்த நூறை எப்படியாவது புடிச்சிடனும்னு பார்த்தேன், அப்போதான் அப்பா ஆசையா ஹீரோ ஹோண்டா ஸ்ப்ளென்டர் வாங்கி தந்தாரு, அத எடுத்துக்கொண்டு பாண்டிச்சேரி கோரிமேடு ஜிப்மர் மருத்துவமனைய தாண்டினா ஒரு நேரான நெடுஞ்சாலை வரும் அதுல அது கழுத்தை திருகினேன்... 70கி.மீ. வேகம் வந்தப்ப ஸ்பெளென்டர் கொஞ்சமா அதிர ஆரம்பிச்சது அப்படியே 80, 90னு போனேன்.. 95 க்கு திருகினேன் எதிர மினிலாரி ஒன்னு வந்து அப்படியே லேசா ஆட்டம் காமிச்சாபுள நம்ம முன்னாடி பப்பரக்கானு ஒரு குட்டிகரணம் அடிச்சி அப்படியே நெடுஞ்சாலையில் தேய்த்துக்கொண்டே போனது பிறகு பார்த்தா வண்டி பள்ளத்துல கிடக்குது, கை, தோள்பட்டை, லேசா முகத்துல, கால் என எல்லாம் இடத்திலும் அடி, இன்னைக்கு வரை தெரியாது மினி லாரி நம்ம வண்டி கண்ணாடியை தட்டினாரா என்னனு, அப்புறமா பாண்டி ஜிப்மர் மருத்துவமனைக்கு போனா அந்த செவிலியம்மா அடிச்ச நக்கலும் கிண்டலும், தெரியும் உன்னை மாதிரி பசங்கலாம் இங்க கண்டிப்பா வருவிங்க, என்னமோ வண்டியில உக்காந்தா ப்ளைட் ஓட்டுறதா நினைப்பு உங்களுக்குனு டோஸ் விட்டாங்க, அதுல இருந்து என் வண்டி 60வதையே தொட்டது இல்லை, என்னடா நீ இவ்ளே மெதுவா வண்டி ஓட்டுறனு கொட்டு வேற விழுந்திருக்கு, இப்படியே நூறு கி.மீ. வேகம் போலாம்னா அந்த நூறும் ஊத்திக்கிச்சி.

அப்புறமா நூறுக்கு வேலையே இல்லாம போயிடுச்சி, நண்பர் செந்தில் மூலமா தமிழ்மணம் வந்து வந்து கொஞ்ச நாள் மேய்ந்து கொண்டிருந்துவலைப்பதிவு வந்து பதிவு போட ஆரம்பிச்சா ம்... நம்மள ஒரு ஆள் திரும்பி பார்க்கனுமே... எப்பவும் படிக்கிற என் இருபது நண்பர்கள் கிட்ட சுட்டி கொடுத்து படிக்க சொல்லி அப்படியே போய்கொண்டிருந்தது நானும் கதை,கவிதை (அப்படிதான் நாஞ் சொல்லிக்கிறேன்) எழுதறதுனு போய்கொண்டிருந்தேன், நம்ம வலைப்பதிவு நண்பர்கள் மருத்துவர் இராமதாசுவை போட்டு பொறட்டி பொறட்டி எடுத்துக்கொண்டிருந்தாங்களா, சரி நமக்கு தெரிஞ்ச விடயத்தை சொல்லலாமே மத்த இடத்த பார்க்க சொல்ல இங்கே எல்லாம் ரீஜன்டா இருக்காங்க அப்படினு மருத்துவர் இராமதாசுவின் மீதான சொல்லடிகள் அப்படினு ஆரம்பிச்சேன், கொஞ்சம் பேரு வந்து எட்டி பார்த்தாங்க இது யாருடா இங்க கூவுறதுனு, அப்புறமா அப்படியே போயி 99 பதிவு போட்டாச்சி, ஒரு தடவை கொஞ்சம் நிதானமிழந்துட்டேன் தினமலர் வாசகர் கடிதத்துல ஒரு அறிவுசீவி எழுதிய கடிதத்தை பார்த்து ஒரு பதிவு போட்டேன், அப்புறமா நம்ம நண்பர்கள் புத்தி சொன்னாங்க உடனே அந்த பதிவை அழித்துவிட்டு கொஞ்சம் நிதானமாக எழுதினேன். பிறகு தங்கர் விடயத்தில் சண்டை அப்புறம் அடுத்த விடயத்தில் இன்னும் கொஞ்சம் நிதானம், இன்னும் சிறிது நாளில் சின்ன புள்ள மாதிரி சண்டை புடிக்கிறதை நிறுத்தி முழு நிதானம் அடைவேன் என நம்புகின்றேன்.

அப்புறம் நம்ம தமிழ்மணத்தால நிறைய நிறைய நண்பர்கள் கிடைத்தாங்க, இப்போ அதுக்கு முன்னாடி நான் எழுதியதை என் நண்பர் வட்டத்துக்கு அனுப்புவேன் ஒரு 20 பேர் அதை படிப்பாங்க (அப்படினு நம்புகின்றேன்) அந்த வட்டம் இங்கே வந்த பிறகு பெருசானது, எனக்கு ரொம்ப சந்தோசமா இருந்துச்சி, சிங்கையில் பல நண்பர்கள் கிடைச்சாங்க, அமெரிக்கா,துபாய்,ஜெர்மனி,மலேசியா, இந்தியா, வளைகுடா நாடுகள், ஆஸ்த்திரேலியா,பிரான்சு மற்றும் பல நாடுகளிலிருந்து எல்லா வயதிலும் வலைப்பதிவு நண்பர்கள் கிடைச்சாங்க, இதுக்கெல்லாம் காரணம் என் எழுத்து திறமை அப்படினு நான் நினைத்தால் அது என்னுடைய தவறு அதற்கு காரணம் நிச்சயம் தமிழ்மணமும் நான் எழுதறதையும் படிக்கிறாங்களே நண்பர்கள் அவர்களும் தான்.

எனக்கு எப்போதுமே கட்டுபாடுகளற்ற, அளவற்ற சுதந்திரத்தில் நம்பிக்கை இருந்ததில்லை, அதற்கு காரணம் ஒரு வேளை நான் வளர்ந்த, வாழும் விதமாக கூட இருக்கலாம், கட்டுப்பாடுகளும் அதே சமயம் தேவையான சுதந்திரமும் அளிக்கப்பட்டு வளர்க்கப்பட்டவன் நான், அதன் நல்ல பலனை முழுமையாக தற்போது அனுபவிக்கின்றேன், அட இதை சிலர் அடிமை மனோபாவம்னு கூட சொல்லலாம் எனக்கு இதனால் நட்டமில்லை என்பதைவிட இலாபம் தான் அதிகம், அதனால் எனக்கு ஒரு பிரச்சினையுமில்லை.

வலைப்பதிவுகள் இன்றைய நிலையில் ஒரு மாற்று ஊடகமாக வளர ஆரம்பித்துள்ளது இன்னும் இது மாற்று ஊடகமாக முழுவதும் வளரவில்லை, தொடக்க நிலையில் தான் உள்ளது. ஆனால் இதன் வளர்ச்சிக்கு நிச்சயம் தமிழ்மணம் உதவியுள்ளது என்பது மறுக்க முடியாத உண்மை, இருந்தாலும் எப்போதுமே எனக்கு கட்டுபாடுகளற்ற, அளவற்ற சுதந்திரத்தில் நம்பிக்கை இல்லாமல் இருந்தாலும் வலைப்பதிவுகளின் தனித்துவமே அதன் சுதந்திரம் மட்டுமே...

கடந்த சில நாட்களாக தமிழ்மணத்தில் காசியின் அறிவிப்பை தொடர்ந்து நடைபெறும் நிகழ்ச்சிகள் என்னை அதிர்ச்சிக்குள்ளாக்கியிருக்கின்றன, காசி பந்தாடப்படும் விதம் சத்தியமாக என்னளவில் ஏற்புடையதில்லை, என் பதிவு நீக்கப்பட்டிருந்தால் காசிக்கு ஒரு தனி மடல் என் பதிவு நீக்கப்பட்டிருக்கின்றதே, தவறுதலாக நீக்கிவிட்டீர்களா? சொல்ல முடிந்த காரணம் இருந்தால் சொல்லலாம் என்ற ஒரு தனி மடல் மட்டுமே அனுப்புவேன், அதைத் தாண்டி எதையும் கேட்க எனக்கு தார்மீக உரிமையும் இல்லை, சட்டப்பூர்வ உரிமையும் இல்லை, சத்தியமாக நக்கல் அடிக்கவோ, கிண்டல் அடிக்கவோ என் மனசாட்சி இடம் தராது காசி என்ற தனிமனிதனின் உழைப்பையும் தமிழ்மண நிர்வாகிகளின் உழைப்பையும் பயன் படுத்தி இத்தனை இணைய தொடர்புகளை ஏற்படுத்திக்கொண்டு பின் கிண்டலடிப்பதும் நக்கலடிப்பதும், காசியை குற்றவாளி கூண்டில் ஏற்றுவதும் காசி மீது ஏவப்படும் ஒரு வன்முறையாகத் தான் இதை பார்க்கின்றேன், காசியின் முடிவில் முரண்பட்டால் கருத்தும்,ஆலோசனையும் சொல்வது நிச்சயம் தவறில்லை, அது தேவையான ஒன்றும் கூட, ஆனால் கேலியும் கிண்டலும் மனோகரா வசனம் பேசுவதும்... ஆண்டவா காசி நிலையில் நான் இருந்திருந்தால் ?? எனக்கு எக்காலத்திலும் வேண்டாம்பா இந்த நிலமை.

எந்த வித தார்மீக உரிமையும், சட்ட உரிமையும் இல்லாத போதும், சமூகத்தில் படித்த, ஓரளவு நல்ல பொருளாதார நிலையில் இருக்கும் இங்கேயே இப்படியான தாக்குதல் என்றால் நிச்சயமாக தங்கர் நடிகர் சங்கத்திலிருந்து உயிரோடு வெளிவந்ததும், குஷ்பு இன்னமும் தமிழகத்தில் இருப்பதும் மிக ஆச்சரியமான விடயம் தான்.

.ஜினி படம் பாக்கலையோ

Image hosted by Photobucket.com

Image hosted by Photobucket.com

இயக்குனர் இராமநாராயணன்:
.த்தி அண்ணே, அடுத்த படம் ஒரு குதிரைய வச்சி எடுக்க போறேன் .ஜினி சார் கால்ஷீட் கிடைக்குமா?

ஒன்னே ஒன்னு சொல்லிக்கிறேன் "டேக் இட் ஈசி பாலிசி"

இன்னும் ஒன்னு சொல்லிகிறேன் "ஒவ்வொரு வினைக்கும் எதிர்வினை உண்டு"

இன்னும் ஒன்னே ஒன்னு சொல்லிகிறேன் அடுத்த பதிவு குழலி பக்கங்களின் நூறாவது பதிவு

சிதம்பரத்தில் ஒரு குரங்கு சாமி

சென்ற முறை ஊருக்கு போயிருந்த போது சிதம்பரம் நடராசர் கோவிலில் அமர்ந்திருந்த போது என் கைத்தொலைபேசியில் எடுத்த படம்.

Image hosted by Photobucket.com
வெறும் காத்து தாங்க வருது!



Image hosted by Photobucket.com
இது ஆகறதில்லை, வேறெடம் பார்க்க வேண்டியது தான்


Image hosted by Photobucket.com
கல்லு போட்டா காக்காவிற்கு மட்டும் தான் தண்ணி வரும் போல, தமிழ்நாட்டுக்கும், குரங்குக்கும் தண்ணி வரவே வராது போல

கோயிலும் கும்பாபிஷேகமும்

இ.இசாக் அவர்களின் பதிவில் வெளியான கட்டுரை, அவர் பதிவில் பின்னூட்ட முடியாததாலும் இந்த கட்டுரையை சேமிக்க வேண்டுமென்பதாலும் என் பதிவில் இடுகின்றேன்.

நன்றி இ.இசாக்
--------------------------------------------------------------------------------------------
'இந்தியாடுடே'யில்
தமிழச்சி மார்புகள்
கண்ணீரால் போர்த்தினேன்.
- அறிவுமதி, கடைசி மழைத்துளி நூலில்.

நவநாகரீக போதையில் இயல்பு வாழ்விலிருந்து விலகி தள்ளாடிக் கொண்டிருக்கும் 'மேட்டுகுடி' பெண்களில் சிலரைத் தேர்வு செய்து, அவர்களை தனிமையில் அழைத்து சென்று 'கருத்துகணிப்பு' என்ற பெயரில் இதழியல் அயோக்கியத்தனத்தை அரங்கேற்றி, இவர்கள் எதிர்பார்க்கிற நோக்கமுடைய நடவடிக்கைகளை உடைய பெண்களின் கருத்துகளையும் சேர்த்து அதை, அனைத்து தமிழ்ப் பெண்களுக்கான பொது கருத்தாக்கி முகப்புக்கதை விட்டிருக்கிறது. பேரா.அ.மார்க்ஸ் அவர்களால் மலம் துடைக்கப்பட்ட 'இந்தியாடுடே' என்னும் இதழ்.

இன்றைய சமூகத்தில் பெரும்பகுதி மக்களுக்கு நேரத்திற்கு வயிற்றுப்பசியைத் தீர்த்துக் கொள்ளவே வசதி வாய்ப்பற்ற சூழ்நிலை நிலவுகிறது. இக்கொடுமைகளைப்பற்றிய எந்த ய்வையோ, தீர்வையோ முன்வைக்க முடியாத இந்த வழு வழு மஞ்சள் பத்திரிக்கையை பார்க்கிற போது தந்தை பெரியார், ''இந்நாட்டில் பத்திரிக்கை உலகம் ஒரு கேடுகெட்ட உலகமாக இருக்கிறது, அவனவன் சாதிக்காக, பணம் சம்பாதிப்பதற்காக பத்திரிக்கை நடத்தும் நிலையாக இருக்கிறது.'' என்று 'விடுதலை' தொடங்கும் போது சொன்னதும், ''மற்ற நாட்டிலே பத்திரிக்கைகள் என்றால் மக்களை உயர்த்துவதற்குரிய ஒரு சாதனமாக இருக்கிறது; னால் நம் நாட்டிலோ- மக்களை முன்னுக்கு வரவிடாமல் தடுக்கும் சாதனமாகப் பார்ப்பனர்கள் பத்திரிக்கைகளைப் பயன்படுத்துகிறார்கள்,'' என்று பெரும்பான்மை பத்திரிக்கைகள் பற்றி சொன்னதும் நம் நினைவுக்கு வருகின்றன. தினசரி வாழ்வில் பெண் சமூகம் எதிர்கொள்ளும் அடக்குமுறை, ஒடுக்குமுறை, அரசதிகார வர்க்கம் நிகழ்த்தும் வன்முறை இவை அவற்றைப்பற்றியும் தீர்க்கமான கருத்துகளைச் சொல்லும் துணிவோ, நேர்மையோ இந்தியாடுடேவுக்கு இல்லாமல் போனதில் வியப்பேதும் இல்லை. காரணம் நோக்கம் விழிப்புணர்வல்ல; வியாபாரம். பார்க்க - இந்தியாடுடே ஆசிரியரிடமிருந்து பகுதியில் (அக்டோபர் 6-12,2005) 'அந்த இதழ் முழுமையாக விற்றுத் தீர்ந்தது' எனும் வரி.

வயிற்றுப் பசியில் வாடிக்கொண்டிருக்கும் சமூகத்தில் 'உடல்பசி' பற்றியான ய்வும், அதுவும் இளம்பெண்களின் செக்ஸ் சிந்தனை பற்றிய கண்டுபிடிப்பும் எந்த அளவிற்கு இன்றைய தேவையாக இருக்கிறதென்பது என்னைப் போன்ற சிற்றறிவாளனக்கு பிடிபடாத பிரச்சனையாக இருக்கிறது. இதற்கு சமூக புரட்சிக்காக களம் இறங்கியுள்ள சிந்தனையாளர்களே விளக்கமளிக்க வேண்டும். செக்ஸ¤ம், இளம்பெண்களும் என்பது பற்றி இந்தியாவின் மூலை முடுக்குகளிலெல்லாம் நடத்தப்பட்ட 'இந்தியாடுடே'யின் 'நியாயமான' ஆய்வு முறையைப் பற்றிய கருத்துகளைப் பேசுகிற களமோ, நேரமோ இதுவல்ல என்பதால் நேரடியாக பிரச்சனையையும், பிரச்சினையாளர்களைப் பற்றியும் பார்ப்போம்.

பிரபலமான ஊடகம் நடத்திய நாடகத்தில் பெண்ணிய விடுதலைக்கான வாழ்நாள் சேவையாற்றிவரும் குஷ்பு எப்படி வந்தார், அவரின் புரட்சி பொங்கும் கருத்துக்கு செக்ஸ் அறிவற்ற தமிழ்ப்பெண்கள் ஏன் எதிராக இருக்கிறார்கள்?

பல திரைப்படங்களில் இயக்குநர்களின் சொல்லுக்கு கட்டுப்பட்டு தயாரிப்பாளர்களின் காசுக்காக தாராளமாக கலைப்பணியாற்றிய குஷ்பு செய்த சேவையை மெச்சி தமிழகத்தின் மாத்தூரைச் சேர்ந்த இளைஞர்கள் 1993 ண்டில் கோயில் கட்டினார்கள். தமிழக ரசிக மனசுக்குள் நீங்காத இடத்தைப் பிடித்துவிட குஷ்பு செய்த 'கொள்கைப்பூர்வமான' செயல்கள் நாடே அறியும். தொடர்ந்து படவாய்ப்புகளைப் பெறவும், வருமானத்தைப் பெருக்கிக் கொள்ளவும் திரையுலகில் குஷ்பு கொடுத்த 'உணர்ச்சிகுரல்கள்' ஊரறிந்த ரகசியம். இப்படி இப்படியாக தன்னை தமிழகத்தின் தவிர்க்கமுடியாத 'சக்தி'யாக கட்டமைத்துக் கொண்டதாக கருதிக் கொண்டு மிதப்பில் மிதந்து வந்தார்.

நான்கு நிருபர்கள் தன்னை தேடிவந்து கருத்து கேட்டுவிட்டாலும், மூன்று இதழ்களின் அட்டையில் வண்ணப்படத்துடன் செய்தி வெளியாகிவிட்டாலும், இரண்டு தொலைக்காட்சி நிகழ்ச்சிகளில் முகம் காட்டி விட்டாலும், தாந்தான் இன்றைய தமிழகத்தின் முதல்நிலை நபர் என கருதிக்கொண்டு திரையுலக பிரபலங்கள் செய்கிற 'லூட்டி' அறிவாளி உலகத்தால் சகித்துக்கொள்ள முடியாததாக இருந்து வந்த நிலையில், அதே அடிப்படையில் ஊடகங்கள் அடிக்கடி பிரபலப்படுத்தி விட்ட குஷ்புவும் சமீபகாலமாக செயல்பட்டு வந்தார்.

கலைச்சேவை என்கிற பெயரில் துபாய், லண்டன், சிங்கப்பூர் என அழைத்துச் சென்று 'காட்சி சேவை'' செய்த நடிகர் சங்க நிர்வாகிகளை நோக்கி சுண்டு விரல் நீட்டவும் தெம்பற்ற குஷ்பு, தனது திரைப்பட தயாரிப்புப்பணியில் இடையூறாக செயல்பட்ட நடிகையைப் பற்றி தங்கர்பச்சான் சொன்னதாக வெளியான கருத்தைக் கண்டு, 'தெளிவு'ற்று கொதித்தெழுந்தார். இந்த மாபெரும் குற்றத்திற்கு' நேரில் வந்து மன்னிப்பு கேட்கும்வரை படப்பிடிப்புகளுக்கு ஒத்துழைப்பளிப்பதில்லை என தினசரி கூலி பெறும் திரை ஊழியர்களின் வாழ்க்கையைப் பற்றிச் சிறிதும் கவலையில்லாமல் புரட்சிகரமான முடிவை நடிகர் சங்கம் எடுக்கக் காரணமாக இருந்தவர், நடிகர் சங்கம் வந்து மன்னிப்பு கேட்ட பின்னும்( மன்னிப்பு கேட்க வந்த சூழலில் இவரும் இவரின் சகாக்களும், இன்னபிற அள்ளக்கைகளும் நடந்து கொண்ட நாகரீக.. செயல்கள் வேறு ) 'நாங்கள் மன்னிக்க மாட்டோம்' என நீதி நியாயம் மிக்க தனது கருத்தை ஊடகங்களில் பதிவு செய்தார்.

பெண் விடுதலைக்கான குஷ்புவின் இந்த போராட்ட வாழ்வே 'இந்தியா டுடே' இதழின் பார்வையில் இளம்பெண்களின் நாகரீக வாழ்வு பற்றிய, எதிர்கால போக்குபற்றிய 'தெளிவான', தொலைநோக்கு பார்வையுடனான' கருத்தைச் சொல்லுகிற தகுதிமிக்கவராக தெரியவைத்திருக்கிறது. துணிவும் சமூகப்பார்வையும் மிக்க சமூக விஞ்ஞானியான குஷ்புவின் கருத்தைத் தாங்கி வருவதே 'இந்தியா டுடே'யின் கொள்கைக்கும், சமூகசேவைக்கும் சிறப்பு சேர்ப்பதாக இருக்கும் எனக்கருதி குஷ்புவின் கருத்தோடு 'செக்ஸ் & இளம் பெண்கள் ஒரு பிரத்யோக சர்வே'(செப்.28,2005) என்னும் முகப்புக்கதையை வெளியிட்டது.

இந்தியா டுடே இதழின் 'முகப்புக்கதை'க்குப் பின் 'தமிழ்முரசு' மாலை நாளிதழின் கருத்தும், அதை தொடர்ந்து 'தினத்தந்தி' செய்தியாளரின் வினாவுக்கு குஷ்பு அளித்த விடையும் தமிழக சமூகநல பார்வையாளர்களிடையே மிகப் பெரிய சலசலப்பை ஏற்படுத்தி விட்டது. இக்கருத்துக்கு முதன்மையாக அரசியல் கட்சிகளான பா.ம.க., விடுதலைச் சிறுத்தைகள் தங்களது எதிர்ப்பினை தமிழ்ச் சமூகத்தின் முன் பதிவு செய்தன. தொடர்ந்து பல பகுதிகளில் இயங்கும் சமூக அமைப்புகள் தங்களது எதிர்ப்பினை பதிவு செய்தன. 'நமது சொந்த விருப்பத்தைப் பொறுத்தவரை, நாம் ஒருநாள் கூட போரிட விரும்பவில்லை, னால் சூழ்நிலைகள் நம்மை போரிடும் படி கட்டாயப்படுத்தினால், நம்மால் இறுதிவரை போரிட முடியும்' என்று மாவோ சொன்னதைப் போல இந்த எதிர்ப்பு போராட்டம் மக்கள் மயப்பட்டு தொடரத் தொடங்கிவிட்டது.

செக்ஸ் பற்றி சொன்னதாக வெளியான கருத்துக்கு எதிராக தமிழ்ப் பெண்கள் அணித்திரண்டு இருப்பதன் மூலம் 'பிரபல போதை'யில் மிதப்பவர்கள் எதையும் சொல்லிவிடலாம், தமிழக மக்கள் கண்டுக் கொள்ள மாட்டார்கள் என்கிற மாயை உடைந்து விட்டது. இனி 'புகழ் போதையில் நெப்போலிய வீரத்தோடு' உளறுகிற அவலம் அரங்கேறாது திரையுலக மோகம் தமிழரிடையே குறைந்து மாய பிம்பம் உடைந்து வருகிறது என்கிற நம் நம்பிக்கைக்கு உறுதி சேர்க்கும் வகையில், குஷ்புவுக்கு கோயில் கட்டியவர்களே, 'குஷ்பு தமிழ்நாட்டு கலாச்சாரத்தைப் பற்றி தெரியாதிருந்திருக்கிறார்... தமிழ்மக்களின் சார்பாக முதல் கண்டணத்தைத் தெரிவித்துக் கொள்கிறோம்' என குஷ்புவுக்கு எதிராக தங்களது கருத்தை பதிவு செய்துவரும் சூழலில், சிந்தனையாளர்கள் என்கிற போர்வையில் சிலர் குஷ்புவின் கருத்தின் முழுபரினாமத்தையும் முன்வைத்து விவாதித்து விடையளிக்கிற துணிவற்று அவரின் இந்தியாடுடே கருத்தை மட்டும் 'செதுக்கி சீர் செய்து' பெண் விடுதலைக்கான கலகக்குரலாகப் புனிதப்படுத்தி கும்பாபிஷேகம் நடத்தி வருகிறார்கள்.

இதையும் 'இந்தியா டுடே' இதழே முகப்புக்கதையாக்கி, 'திருமணத்திற்கு முன்பு செக்ஸ் கொள்ளாத எத்தனை பேர் இருக்கிறார்கள் என்று காட்டுங்கள் பார்க்கலாம்?' என்ற குஷ்புவின் 'தினத்தந்தி' கேள்வியை கூர்தீட்டி மீண்டும் தமிழ்ச்சமூகத்தின் மீது வீசியிருக்கிறது. தான் கட்டமைக்க முனைந்த கருத்தியலுக்கு எதிராக நிற்கிறார்கள் என்பதால் 'கலாச்சார காவலர்களாக மருத்துவர் ச.ராமதாசு, தொல்.திருமாவலவன் உள்ளிட்டவர்கள் அடாவடி செய்கிறார்கள் என கண்டித்திருக்கிறது இந்தியா டுடே. ''கருத்தியல் காவலர் குழு''வின் ஆதரவோடு.

தான் ஊடகங்களில் பதிவு செய்த கருத்துகளைப் பற்றிய தெளிவை முழுமையாக குஷ்புவே பெறாத நிலையில், குஷ்புவை நவீன பெண்ணுரிமைக் கருத்தாளராக கட்டியெழுப்ப முனைகிற சில 'அறிவுஜீவி'களை பார்க்கிற போது சிரிக்கக்கூட முடியவில்லை, இவர்களின் புத்தி சராசரி ரசிக மனோபாவத்திற்கும் கீழாக போய்விட்டதென்று.இப்படியான ரசிகமனோபாவம் ஒட்டுமொத்த தமிழ்ச்சமூகத்தையும் இழிவு செய்வதாகவும், மக்களை வழிகெடுப்பதாகவும் இருப்பதால் அவற்றைக் கண்டிக்கவேண்டிய கடமை நமக்கிருக்கிறது.

'கற்பு' என்கிற சொல்லாடலின் மீதும், அதை சார்ந்து தமிழ்ச்சமூகம் முன்வைக்கிற கட்டுபாடுகள், பண்பாட்டுக்கூறுகள் பெண்களுக்கானதாக மட்டுமாக இருப்பதைப் பற்றியும் நமக்கு கடுமையான கண்டனமும், கற்பு என்று ஒன்றிருந்தால் அதை ண், பெண் இருபாலருக்கும் பொது என வைக்கவேண்டும் என்ற கருத்தும் உண்டு.

ஆனால் குஷ்பு சொன்னதாக வெளியான செய்திகளிலும், அதற்கு தரவாக அறிவுஜீவிகள் வெளியிடும் கருத்திலும் ஆணாதிக்கச் சிந்தனையை எதிர்க்கிறோம் என்கிற பெயரில் தவறு செய்கிற ண்களை கண்டித்து அவனை ஒழுங்கு செய்வது அல்லது அவனின் போக்குகளை சமூகத்திற்கு அடையாளம் காட்டி தண்டனை பெறச் செய்வது என்ற நிலையிலிருந்து வெளியேறி, ஆண் தவறு செய்தால் அதைப்போல இரு மடங்கு தவறை பெண் செய்வது இப்படியான செயல்தான் பெண்ணடிமை தனத்தை ஒழிப்பதற்கான மிகப்பெரிய யுதம் என்கிற நிலையை முன்னிருத்தவதாகவே உள்ளது. இந்த நிலைப்பாட்டுக்கு பெரியார்- 'ண்கள் இரண்டு ஆசைநாயகிகளை வைத்தால் நீங்களும் நான்கு ஆசை நாயகன்களை வைத்துக்கொள்ளுங்கள்' என்று ஆண்வர்க்கத்தை ஒழுங்கமைப்பதற்கான போராட்ட உத்தியாக சொன்ன கருத்தை பெண்களுக்கான பொது விதியாக நிறுவ முற்படுகிற சிந்தனையாள கணவான்களின் பாசிச எதிர்ப்பு நிலை எந்த 'புள்ளி'யில் போய் நிற்கிறது என்பதை யோசிக்க வேண்டி இருக்கிறது.

சாதாரண தமிழ்ப் பெண்கள் எதிர் கொள்ளக்கூடிய அன்றாட சிக்கல்களைப் பற்றிய தெளிவான பார்வையோ, தீர்வுக்கான கருத்தோ இல்லாத குஷ்புவின் பாலியல் பற்றியான சிந்தனையை ஒரு சமூகவியலாளரின் கருத்தாகக் கருதச் செய்த அற்புத சக்தி எது என்பதை பெண்ணியவாதிகள் விளக்கினாலே வெளிச்சம்.

சிந்தனை சிங்கங்களின் பார்வையில் ஒடுக்கப்பட்ட மக்களின் தலைவர்களின் எழுச்சி என்பதும், சமூக ஒழுக்கத்திற்கான கருத்தென்பதும் பாசிச வடிவமாகத் தெரிகிறது. தமிழ்ப்பாதுகாப்பு இயக்கத்தின் திட்டம் மற்றும் கோரிக்கை குறித்து விரிவாக அறிந்திருந்தாலும், அவ்வியக்கம் முன்னெடுக்கும் சில போராட்டங்களை மட்டும் குறிவைத்துக் கேலி செய்து தனது சாதித்திமிரை பறை சாற்றிக்கொண்ட பார்ப்பன ஏடுகளைப் போல, குஷ்புவுக்கு எதிரான கருத்துகளை திரித்து வரித்து பெண்ணியக்கித்திற்கு எதிரானவர்களாக முத்திரை குத்துகிற பெண்ணியவாதி!??களின் நோக்கமும், திட்டமும் என்னவென்பது புரியவில்லை.

குஷ்பு கருத்தை எதிர்ப்பவர்களுக்கு எதிராக கருத்துகளை பதிவு செய்கிறோம் என்ற பெயரில் ஒழுங்கற்ற சமூகத்தை கட்டமைக்க முற்படுகிறதோடு மட்டுமல்லாமல், போலியான பெண்ணுரிமை செயலான ஆபாச வாழ்வை பெண்களுக்கு போதிக்கிற நவீன சிந்தனையாளர்களின் போக்கு கண்டிக்கத்தக்கதாகவும், வியப்பளிப்பதாகவும் உள்ளது.

'உடைக் கட்டுப்பாட்டுக்கு தரவு தரும் பெரும்பான்மை மனோபாவமே கண்டிக்கத்தக்கது' என கருத்து சொல்கிற ரவிக்குமார் தன்னைச் சார்ந்த பெண்களுக்கு எந்த அளவு கருத்தியல் அறிவை, பாலியல் சுதந்தரத்தை கற்றுத்தந்திருக்கிறார் என்பதை சமூகத்திற்கு அறியத்தரவேண்டும். தனக்கெதிரான கருத்துடையவர்களுக்கு மிகுந்த சகிப்புத்தன்மையோடு 'மொட்டைக்கடுதாசி' எழுதும் உரிமையை தந்தவர் என்பதையும் மறந்துவிட முடியாது.

''கற்பு என்பதையே எதிர்த்தவர்கள், இன்று நேர் எதிர் நிலை எடுக்கிறார்கள்'' என கொதித்தெழும் கனிமொழிக்கு இப்பிரச்சனையில் எதிராளிகளின் முழுமையான கருத்துகளைக் கூர்ந்து கவனிக்கும் வாய்ப்பை பெற்றிருக்க முடியாது தான். டைக் கட்டுபாடுகளுக்கு எதிரான கருத்துகளை ஆணித்தரமாக பதிவு செய்யும் போது (ஆனந்த விகடன்) அடக்கமாக சுடிதார் அணிந்து இன்னும் துப்பட்டாவை இழுத்துப்போர்த்தி காட்சியளிக்கிற கணிமொழியின் ஆலோசனைகள் அந்நியருக்குதான் என்பது புரிகிறது. ''புரட்சிக்கவிஞரின் கவிதைகள் எதுவும் என்னை கவர்ந்ததில்லை என்றதோடு யார் ஆரியர்? இல்லாத விசயத்திற்கு ஏன் போராட வேண்டும்?! (நந்தன் - 2002) என முழுபூசணிக்காயை சேற்றில் மறைத்தவர்தானே கவிஞர் கனிமொழி.

குஷ்புவின் - 'இந்தியா டுடே' கருத்துக்கான எதிர்ப்பாக மட்டுமே இப்போராட்டத்தை திசை திருப்ப முயலும் சிந்தனையாள, நுண்ணறிவு பேர்வழிகள் நாளிதழில் குஷ்பு வெளியிட்ட தமிழ்ப் பெண்களின் ஒழுக்கம் குறித்தான வினாவை முழுமையாக புறக்கணிப்பது என்ன வகை சனநாயகம், இப்படி ஒரு கருத்தை இருட்டடிப்பு செய்ததோடு மட்டுமல்லாமல் 'தமிழ் பெண்களைக் குறித்து குறிப்பிட்டு எந்த கருத்தையும் சொல்லாத குஷ்பு' என குஷ்புவைப் புனிதப்படுத்துகிற அயோக்கியத்தனத்தை கருத்துலகில் அரங்கேற்றுவது சிந்தனையாளர்களின் நியாமற்ற நிலைப்பாட்டினையே நமக்கு புலப்படுத்துகிறது.

'இந்த போராட்டம் தேவையற்றது. மேலும் குஷ்புவை மும்பைக்கு ஓடச் சொல்வது சனநாயக விரோதக் கொள்கை' என புதுக்கருத்தியல் பாதுகாவலராகியிருக்கும் சனநாயக மாதர் சங்கத் தலைவி உ.வாசுகி, திரைப்படங்களில் மெட்டுக்களுக்கு வார்த்தைகளில் வக்கிரம் கலந்து எழுதிய கவிஞர்கள் மீது பாய்ந்து குதறியது ஏன்? ஆபாச சுவரொட்டிகளுக்கு எதிராக ஆர்பரித்தவர் நடிகை முன்மொழியும் ஆபாச வாழ்வை மட்டும் வழி மொழியலாமா?.இவருடைய சனநாயக பார்வை எந்த எல்லைக்குள் சுருங்குகிறதென்பதை ஆராயவேண்டியிருக்கிறது.

அன்பு, பாசம், நம்பிக்கை இவற்றின் அடிப்படையில் நியாயம் ஒழுக்கம் இவற்றால் கட்டமைக்கபடுவதே குடும்பம், அப்படியான கட்டமைப்பை இருபாலருக்கும் போதித்து வாழ்விப்பதால் மட்டுமே சமூகம் சீர்பெறும் என்பதை அறிவாளிகள் அறியாமலே போய்விட்டது ஏன்?

சமீபகாலமாக சனநாயக போராளியாக உயிர்பெற்றிருக்கும், கவிஞர் மனுஷ்ய புத்திரன் ''மக்களின் கடுமையான பிரச்சனைகள் எதற்கும் முகம் கொடுக்கத் திராணியற்ற நிலையில் ஊடகங்களுக்குத் தீனி போட்டு தம்மை நிலை நிறுத்திக்கொள்ள பாலியியல் சார்ந்த பிரச்சனைகளை இந்தக் கட்சிகள் முன்னெடுக்கின்றன'' என திருவாய் திறந்திருக்கிறார். சமூகப் பிரச்சனைகள் எதையும் தெளிவாகவும், வெளிப்படையாகவும் விவாதிக்கிற தெம்பற்ற சூட்சமம் கற்ற கவிஞரான இவர், பாலியல் குறித்த பிரச்சனையை தமிழ்ச்சூழலில் தொடங்கி வைத்த 'இந்தியா டுடே' , குஷ்பு பற்றி எந்த கருத்தையையும் சொல்லாமல் இருப்பதிலிருந்தே, இவருக்குள் ஒளிந்திருந்த கருத்தியல் பாசிசம் வெளிப்பட்டு விட்டது என்பதை உணரலாம்.

''சாதரண மனிதருடைய நாணயம், ஒழுக்கம், நேர்மை என்பதெல்லாம் நூற்றுக்குத் தொன்னூறு அவனவனுடைய லட்சியத்தையும் தேவையையும் பொறுத்ததாகும்'' என்றார் பெரியார். குழு மனப்பான்மையோடு தனக்கு பிடிக்காதவர்கள் எதிர்க்கிறார்கள் அல்லது எதிரான கருத்தை முன் வைத்திருக்கிறார்கள் என்பதற்காகவே அவர்கள் எதிர்க்கிற கருத்தின் ஆழ அகலங்களை செறிவு படுத்தி திரித்து களப்பணியாற்றக்கூடிய அறிவாளி சமூகம் பெரியாரின் இந்தக் கூற்றை கவனித்த தாக தெரியவில்லை.

மனித உரிமை ஆர்வலராக அறியப்பட்ட வழக்கறிஞர் ரஜினி 'ஆண்களை தலைவராக கொண்ட கட்சிகள் தங்களது சொந்த தாயத்திற்காக குஷ்பு என்ற பெண்ணிற்கு எதிராக பெண்களையே தூண்டி விடுகிறார்கள்' என்று போராட்டக் களத்தில் இறங்கியுள்ள தமிழ்ப்பெண்களை அரசியல் ஆண்களின் கைப்பாவையாக, தலையாட்டி பொம்மைகளாக பொருள்படுத்தி இழிவு செய்கிறார். அதோடு 'குஷ்புவின் கருத்தைத் திரித்துச்சொன்ன அரசியல் தலைவர்கள் மீது வழக்கு போடுவதற்காக ஒத்த கருத்துடைய பெண் வழக்கறிஞர்களை அணி திரட்டுகிறேன்' என்று தனது மனித உரிமை உணர்வு எந்த எஜமான விசுவாசத்திற்குள் பதுங்குகிறது என்பதையும் தெளிவு படுத்துகிறார். 'சமதர்மம் என்றால் மனிதனின் நடத்தைக்கும், எண்ணத்திற்கும், நற்றொண்டிற்கும்தான் மதிப்பு இருக்க வேண்டுமேயொழிய, அந்தஸ்திற்கும், பதவிக்கும் மதிப்பு இருக்கக்கூடாது' என்ற பெரியாரின் சிந்தனை வாதத்திற்குக்கூட வழக்கறிஞருக்கு தெரியவில்லை.

சிந்தனையாளர்களாகவும், பெண்ணுரிமைவாதிகளாகவும், மனித உரிமை ஆர்வலர்களாகவும் தன்னை சமூகத்தில் காட்டிக் கொண்டவர்கள் இந்த பட்டங்களையெல்லாம் தக்க வைத்துக்கொள்வதற்கான உச்சக்கட்டப் பணியாக இப்போதைக்கு குஷ்புவை ஆதரிப்பதை கையில் எடுத்திருக்கிறார்கள், அதுவும் வழு வழு மஞ்சள் பத்திரிக்கையான 'இந்தியா டுடே'வை களமாக பயன்படுத்திக் கொள்வது நகைச்சுவையான சமூக விழிப்புணர்வு பணி.

தமிழ்த் தேசியத்தையும், தமிழ்த் தேசியம் பேசுவோரையும் சிறுமைப்படுத்தி - தமிழ்ச் சூழலில் வளர்ந்து வரும் தமிழ்த் தேசியச் சிந்தனையை சிதைக்கிற முயற்சியாக தீவிரவாதிகள், பயங்கரவாதிகள், சாதியவாதிகள் என அவதூறுக் கருத்துகளை தமிழ்த் தேசியர்கள் மீது வீசிய இந்த சிந்தனையாளர்கள், அவர்களை பெண்ணுரிமைக்கு எதிரானவர்கள், ஆணாதிக்க சிந்தனையாளர்கள் என்கிற அதிரடி முத்திரையோடு பாசிச சிந்தனையாளர்களாக அடையாளப்படுத்த முற்படுகிறார்கள். அவற்றிற்கு பார்ப்பனீய மற்றும் பார்ப்பனீயத்தின் கூறுகளை உள்வாங்கிக் கொண்ட இதழ்களும்ஆசியும்,ஆதரவும் வழங்கி வருகின்றன. குறிப்பாக குஷ்புவின் பெண்ணிய புரட்சிகர சிந்தனைகளை உயர்த்திப் பிடிக்க முற்படுபவர்கள் ''பெரியாரை'' துணைக்கழைத்துக்கொண்டு திரிகிறார்கள். தமிழ்ச்சூழலில் எந்த பிரச்சனையையும் பெரியாரை வைத்தே விவாதிக்கிற நிலை வளர்ந்திருப்பது மகிழ்ச்சியாகவே இருக்கிறது. இருப்பினும் அவரவர் சிந்தனைக்கேற்ப - பெரியாரின் கருத்தை நீட்டி, சுருக்கி, வெட்டி ஒட்டி பயன்படுத்துகிற போக்கு மிகவும் பத்தானதாகவும், உள் நோக்கம் கொண்டதாகவும் உள்ளதென்பதை உணரவேண்டும்.

இதே அடிப்படையில் விருந்தினர் பக்கத்தில் நிமிட சிந்தனையில் சமூகத்தை புரட்டிப்போடும் நெம்புகோல் கருத்துகளைப் பதிவு செய்யும் வாஸந்திக்கு பெரியார் சொன்ன மத அடிப்படைவாதம், சாதிய சிக்கல்கள் குறித்தான கருத்துகள் குறித்த எந்த சிந்தனையும் இல்லை. ஆனால் பெண்ணியம் குறித்து சில கருத்துகளை மட்டும் தனக்கு சாதகமானதாக பயன்படுத்திக் கொள்கிறார். பெரியாரைக் கொண்டே அவரின் சிந்தனைகளை அடியொட்டி இயங்குபவர்களை இடிக்கிற வேலை இது.

பெண்ணுரிமைப் போராளியாக குஷ்புவை கட்டியெழுப்புவதற்காக வாஸந்தி அவருக்கேயுரிய பாணியில் கருத்து திரிபுகளையும், நேர்மையற்ற விமர்சனத்தையும் இந்தியா டுடேயில் பதிவு செய்கிறார். 'தேசியம் என்பதே ஒரு கற்பிதம் என்று விவாதிக்கப்படுகிற இந்தக் காலத்தில், தமிழ்த் தேசியம் என்பது மற்றொரு கற்பிதம். பயங்கர விளைவுகளைக்கொண்ட கற்பிதம்.' என கருதளிக்கிற இவர், மொழி, இனம், பண்பாடு எந்த நியாயமான எல்லைகள்ளாலும் கட்டப்படாத இந்திய தேசியத்திற்கு எதிராக எந்த கருத்தையும் அரச அதிகார மையத்தை நோக்கி ஏன் சொல்லவில்லை. 'இந் நாட்டிற்குத் திராவிட தேசியம் தான் தேவையே ஒழிய, டெல்லித் தேசியமோ, அய்க்கிய மாகாணத் தேசியமோ, மற்ற வடநாட்டுத் தேசியமோ தேவையில்லை.' என்று பெரியார் சொன்ன கருத்து வாஸந்திக்கு வசதியாக மறந்து போனது.

பெண்ணுரிமை என்பது ஆண்களின் மீது காழ்ப்புணர்வோடு கருத்துகளை வீசுவது என்பதையே தனது அளவுகோலாக கொண்டிருக்கும் வாஸந்தி, '' தமிழ்ச் சமூகத்தின் மானம், மரியாதை, கௌரவம் எல்லாமே பெண்ணின் யோனியில் பதுங்கியிருப்பதான அசைக்க முடியாத நமபிக்கை கொண்ட படை அது.' என குஷ்புவின் ஒழுங்கீன கருத்தை கண்டிக்கிறவர்களை சாடுகிறார். 'பெண் முன்னேற்றத்தில் இட ஒதுக்கீடு பெரிதாக எதுவும் மாற்றத்தை தந்துவிடாது.' என கல்கியில் நம்புகிற இவர், எல்லோருக்குமானதாக வீரியம் பெற்றிருக்கும் யோனியில் பெண் விடுதலைக்கான அத்தனை அறிகுறிகளும் ஒளிந்திருப்பதாக நம்புகிறாரோ?. பெண் சமூக முன்னேற்றத்திற்கு எதிரான எத்தனையோ நடைமுறை சிக்கல்களையெல்லாம் விட்டுவிட்டு பாலுணர்வு சார்ந்த உரிமைக்காக போராடுவதையே பெண்ணுரிமைக்கான புனிதப்போராக முன்னெடுக்கிறார். இது போன்ற அடைப்படையும், சமூகநோக்குமற்ற முச்சந்தி சிந்தனைகளை தமிழச்சிகள் தொடப்பக்கட்டை அளவுக்கு கூட மதிக்க மாட்டார்கள் என்பது வாஸந்தியே அறிந்த அம்பலம்.

இவரின் அரைவேக்காட்டு அறிவுரைகளை தமிழச்சிகள் தலையில் கட்டுவதற்கும், குஷ்புவின் கருத்தை புனிதப்படுத்தி மகாகும்பாபிஷேகம் நடத்திடவும் சங்க இலக்கிய பாடல்களையும், பெரியாரின் சிந்தனைகளையும் துணைக்கழைக்கிறார். 'திருமணம் என்பது சட்டபூர்வமான ஒரு விபச்சாரமே' என்னும் பெரியாரின் கருத்தைச் சொல்லி பெரியாரின் ஆச்சர்யமான நவீனச் சிந்தனைக் கருத்துகள் பகுத்தறிவு பாசறையில் வளர்ந்தவர்கள் அல்லது வழித்தோன்றல்கள் என்று சொல்லிக்கொள்ளும் இந்த தலைவர்களை இன்னமும் நெளியவைக்கும் என்பதில் சந்தேகமில்லை என்கிறார்.

திருமணம் செய்துக்கொள்வது பற்றி பெரியார் சொல்லியுள்ள இன்னொரு கருத்தான 'வீடு கட்டிக்கொள்வதும், திருமணம் செய்து கொள்வதும் மனித சமுதாயத்தின் உரிமையானதும், அவசியமானதும், தேவையானதுமான காரியமாகும். எந்த மனிதனுக்கும் தங்குவதற்கு ஒரு குடிசை- அதாவது வீடு தேவை. அது போல் தன் வாழ்க்கைக்கு ஒரு துணைதேவை. இவையிரண்டு மில்லாவிட்டால் நல் வாழ்வு ஆகாது' என்பது வாஸந்தி வகையறாக்கள் திருமணம் குறித்து முன்வைக்கும் கருத்துகளுக்கு சரியான சாட்டையடியாக உள்ளதை அறிவாளிகள் அறிவார்கள், இதனை தமிழர்களும் தெளிவாக உணர்வார்கள்.

திருமணம் செய்துக் கொள்ளும் போதும், 'நாம் கட்டிக்கொள்ள போகும் ஆண், பெண் ஒழுக்கமானவர்களா என்று பார்த்தால் போதும்.' என்றே அறிவுருத்துகிற பெரியார் அதன்படி திருமண வாழ்வை ஏற்று தன் வாழ்வில் பின்பற்றியும் வந்தார் என்பது குறிப்பிடத்தக்கது. பக்தி என்பது தனி சொத்து, ஒழுக்கம் என்பது பொது சொத்து. ஒரு மனிதனுக்கு ஒழுக்கம் என்பது மிக முக்கியமான ஒன்றாகவே அறிவுருத்துகிற பெரியாரின் பெயரால், குஷ்பு போன்ற அரைகுறை பெண்ணியவாதிகள் முன்வைக்கும் ஒழுங்கீனங்களை உயர்த்தி பிடிப்பதும், ஆதரிப்பதும் கேளிக்குரிய செயலாக உள்ளது.

'உலகில் மனித வர்க்கத்திற்கு அடிமைத் தத்துவம் ஒழிய வேண்டுமானால் பெண்ணுலகை அடிமையாகக் கருதி நடத்தும் அகம்பாவமும், கொடுமையும் ஒழிய வேண்டும். திராவிடர் கழகத்தின் கொள்கை மனிதன் மனிதனாக வாழ வேண்டும் என்பதே.' என பெரியார் தெளிவாக கூறியிருக்கிறார். பெண்ணடிமை தனத்தை ஒழிக்கிறேனென்று ஒழுங்கீனங்களைப் போதித்து மனிதத் தன்மையிலிருந்து சமூகத்தை விலகிச்செல்ல வைப்பதும், காட்டுமிராண்டி தனத்தை உயர்த்தி பிடிப்பதும் புரட்சி என்கிறவர்களின் நோக்கம் என்ன.?

அறிஞர்கள், சிந்தனையாளர்கள், சமூகநல விரும்பிகள் மனித உரிமை காவலர்கள் என ஒரு அறிவுஜீவிப் பட்டாளத்தையே கூட்டி குஷ்புவின் ஆபாசக் கருத்துகளுக்கு கும்பாபிஷேகம் நடத்திய 'இந்தியா டுடே'வின் ஈனச்செயல்களுக்கு கொஞ்சமும் குறைவில்லாமல் ஞாநி, மாலன் போன்றவர்கள் அவரவர்களின் இதழில் தனித்தனியே பூசையே நடத்தி குஷ்புவின் சிந்தனையை புனிதப் படுத்தி இருப்பது தமிழ்ச் சமூகதிருத்தத்தில் இவர்களுக்கு இருக்கின்ற அக்கறையும் எல்லையும் எது என்பதை நமக்குப் புலப்படுத்துகிறது.

''சீர்திருத்தம் என்பது தேவையற்றதை நீக்கி, தேவையுள்ளதை மட்டும் வைத்துக் கொள்ளுதலேயாகும்'' என்ற பெரியாரின் சிந்தனைக்கு சிறிதும் பொருந்தாத பாலுணர்வு சுதந்திரம் என்பதை பெண்விடுதலைக்கான சமூக மாற்றமாக முன் வைக்கின்ற மாற்றுச் சிந்தனையாளார்கள் ஆணாதிக்க பெரும்பான்மைவாதம், மதவாத அடிப்படையிலான கட்டமைப்பு, சமூக நடப்புமுறைகள் இவற்றால் பெண் சமூகத்திற்கு நிகழுகிற, நிகழவுள்ள அநீதிகளுக்கு எந்த வகையில் அது தீர்வாகுமென்பதை இன்று வரை தெளிவுபடுத்தவில்லை. அவர்களின் குடும்பத்தாருக்கு இதை அறிவுருத்தி நடைமுறை படுத்தியுள்ளார்களா என்பதையும் பதிவு செய்யவில்லை.

திருமணத்திற்கு முன்பு உடலுறவு என்பது தமிழ் தொன்மம் சார்ந்த விஷயம் என்றும் பாலியல் கருத்துகள் தனிமனித உரிமை இவற்றில் யாரும் தலையிடக்கூடாதென்றும் திசைகளில் கருத்தெழுதுகிற மாலன் பாலியல் கருத்துகளை ஒட்டுமொத்த தமிழ்ச்சமூகத்தின் மீது எந்த அடிப்படை உரிமையில் குஷ்புவும் இந்தியா டுடேவும் திணிக்கிறார்கள் என்பதை தெளிவுபடுத்தாமல் இவற்றை எதிர்ப்பவர்களை கலாச்சார நாட்டாமைகள் என சாடுகிறார். இப்போராட்ட உணர்வை ஊதி பெரிதுபடுத்தி காட்டிவரும் தமிழ் முரசு, சன் தொலைக்காட்சி குறித்து வாயைத்திறக்காத நேர்மையை என்னவென்று சொல்ல. காதல் காமம் பற்றிய பெரியாரின் சிந்தனைகளை விரிவாக மேற்கோள் காட்டிவாதிடுகிற மாலன் தன் வீட்டுப் பெண்களுக்கு எந்தவகை சிந்தனையை ஊட்டிவளர்ந்திருக்கிறார், பிள்ளையார் பற்றிய பெரியாரின் கருத்துகளையெல்லாம குப்பையில் போட்டுவிட்டு ஒரு குதூகலமான உணர்வோடு பிள்ளையார் சதுர்த்திக்கு கொழுக்கட்டை செய்து வருகிற விருந்தினர்களுக்கு பரிமாறுகிற பக்குவத்தைத் தானே தன் வீட்டில் வளர்த்தெடுத்திருக்கிறார். .இப்படி தன் வீட்டுப் பெண்களெல்லாம் பூட்டி வைக்கப் பட்ட பொக்கிஷங்களாக பாதுகாக்க வேண்டுமென்று விரும்புகின்ற இவர், திருமணத்திற்கு முன்பான உறவு பாலுறவுகளில் முழுசுதந்திரம் போன்ற கருத்தியலுக்கு வக்காலத்து வாங்குவது வேடிக்கையாக இருக்கின்றது.

''பாய்ஸ்'' திரைப்படத்தில் ஆபாசம் மேலோங்கி இருப்பதாக சுஜாதாவிடமும் சங்கரிடமும் மல்லுக்கட்டிய ஞாநி, நாகரீகத்தின் உச்சகட்டத்தில் நின்று தனது 'தீம்தரிகிட' வில் குப்பைத் தொட்டி படத்தை வரைந்து அதில் சுஜாதா சங்கரின் படங்களைப் பொறித்து இங்கே அனைவரும் எச்சில் துப்பலாம் என்று தனது எதிர்ப்பைப் பதிவு செய்ததோடு விருத்தாச்சலம் போன்ற ஊர்களுக்குப் பறந்து சென்று 'பாய்ஸ்'க்கு எதிரான கருத்துகளைப் பரப்பிய பத்திரிக்கையாளரான இவர் குஷ்பூவின் கருத்துகளை ரசிக மனோபாவத்தோடு அங்கீகரித்து ஒரு பக்த உணர்வோடு ஆதரித்து கருத்துகளை வெளியிடுவது தமிழ் சமூகத்தை முட்டாளாக்குகிற முயற்சியே அல்லாமல் வேறெதுவாக இருக்க முடியும்?. எந்த ஒரு கருத்தியலுக்கும் எதிர்ப்போ, ஆதரவோ எதுவாக இருந்தாலும் பிறவி அறிவுசீவிகளான நாங்களே எழுதிக் கிழிக்கவேண்டும், என்கிற அதிகப்பிரசங்கித்தனமே, மருத்துவர் இராமதாசு, தொல்.திருமாவளவன் ஆகியோரை கிண்டலடிக்க வைக்கிறது.

பறை, மாத்தம்மா குறும்படங்களின் மூலம் தமிழ்ச்சூழலில் அறிமுகமாகி தனது நேர்மையற்ற சமூகப் பார்வையை 'யாரோ'வின் தரவோடு நிலை நிறுத்திக்கொள்ள போராடிக்கொண்டிருக்கும் போராளி தொகுப்பு வெளியிடவும், உதவி இயக்குநராக பணியாற்றவும் மேற்கொள்ள வேண்டிய லாபிகள் எவ்வளவோ காத்திருக்க பரபரப்பாக இயங்குகிற லீனாமணிமேகலை, 'தமிழ்நாட்டில் வேலை இல்லாத சிலர் கலாச்சார காவலர்களாக மாறிக்கிட்டிருக்கிறாங்க... பரபரப்புக்காக எதிர்ப்பவர்களை எல்லோரும் சேர்ந்து எதிர்க்கவேண்டும். குஷ்பு சொன்னதில் என்ன தப்பு இருக்கு?' என புரட்சிகர கருத்துகளை பதிவுசெய்கிறார்.

இப்படி பெண்ணுரிமை பற்றி முழுமையான புரிதலற்றவர்கள் கருத்தியல் காவலர்களாக களம் இறங்கி குஷ்பாம்பிகைக்கு பாத பூசை நடத்திக்கொண்டிருக்கும் சூழலில்.. சுயவிளக்கமளிப்பதாக வணிக இதழ்களில் அழகழகான வண்ணப்படங்களுடன் காட்சியளிக்கும் அம்பாள் அப்படி சொல்லவில்லை இப்படி சொல்லவில்லை..என பதுங்கியதோடு.. என் பிறந்த நாளை கொண்டாட முடியவில்லை, என் மகள் பிறந்த நாளைக் கொண்டாட முடியவில்லை என புலம்பியிருப்பதின் மூலம் தனது பகட்டுவாழ்வை காப்பாற்றிக்கொள்ள முயற்சித்து கருத்தியல் காவலர்கள் முகத்தில் கரியை பூசி சி வழங்கியிருக்கிறார்.

பாலியல் உணர்வு, அன்பு, பாசம் இவற்றை சம அளவில் ஒழுங்கமைத்து அவற்றின் அடியொற்றி வாழ்வதன் மூலமே மனித வாழ்க்கை இறுதிவரை சிறப்பானதாகவும் சோர்வற்றதாகவும் இருக்க முடியும் என்பதை உணர்ந்து தான் தோன்றித்தனமாக வாழ்ந்த மேலைநாட்டவர்கள் தனது வாழ்க்கை முறையில் மாற்றங்களைச் செய்து கொண்டிருக்கும் இன்றைய சூழலில், பார்ப்பனர்கள் மதத்தின் பெயரால் தமிழச்சிகளின் மீது திணித்த தேவதாசி முறையை இன்று படிப்பாளிகள் மாற்றம் என்கிற பெயரில் தமிழச்சிகளுக்குப் போதிக்கின்றார்கள்.

அதையும் சூத்திர பட்டம் ஒழியும் வரை போராடுவேன் என்று வாழ்நாள் முழுவதும் கருத்துரைத்த பெரியாரின் பெயராலயே சூத்திர வாழ்க்கைக்கு அழைப்பு விடுக்கும் 'அறிவுஜீவி' அயோக்கியர்களை தமிழ்ச் சமூகம் அடையாளம் கண்டு புறக்கணிக்க வேண்டும். அதற்காக அறிவாளர்கள் பணியாற்ற முன் வரவேண்டும்.

'நாம் ஒழுங்கமைப்பதற்காகப் பாடுபடுவோம். இன்னும் ஒழுங்கமைப்பதற்காகப் பாடுபடுவோம். மீண்டும் ஒழுங்கமைப்பதற்காகப் பாடுபடுவோம். எல்லாவிதமான சோதனைகள் இருந்த போதிலும் எதிர்காலம் நமதே.' என்று சொன்ன இலெனின் கருத்தை மனதில் கொண்டு 'பகுத்தறிவிற்கும் தன்மானத்திற்கும் முரண்பட்ட எதையும் நீக்க வேண்டும்' என்ற பெரியாரின் நோக்கத்தோடு கருத்தியல் காவலர்களின் போலியான முற்போக்குச் சிந்தனைகளை அடையாளம் காட்டும் நம்மை ஊடகங்களின் மூலம் அவமானப்படுத்துவார்கள் என்றாலும் கூட 'மானத்தைப் பற்றிக் கவலைப்படாத மக்களிடத்தில் நல்ல பெயர் வாங்க வேண்டுமென்ற கவலை எனக்கு சிறிதுமில்லை.' என்கிற பெரியாரின் சிந்தனையையே நம்முடைய சிந்தனையாகக் கொள்ள வேண்டும்.

பின் குறிப்பு
கீற்று வில் வந்த கோவி.லெனினின் கட்டுரையின் சுட்டிகள் இங்கே அவசியமாகின்றது

வெள்ளத்தனைய மலர் நீட்டம்!

பெரியாரைப் பிழையாமை

நன்றி
http://karuppupaiyan.blogspot.com
http://iishaq.blogspot.com


வடிவேல் பேசுவது மாதிரி படிக்கவும்.
வேணாம் வேணாம் இந்தியாடுடே பாவம், குஷ்பு பாவம், வேணாம் அறிவுஜீவிங்க பாவம், வேணாம் பாசிச எதிர்ப்பு கணவான்கள் பாவம், வேணாம் கனிமொழி பாவம், வேணாம் உ.வாசுகி பாவம், வேணாம் ரஜினி பாவம், வேணாம் வேணாம் வாஸந்தி பாவம், வேணாம் ஞாநி பாவம் வேணாம் லீனாமணிமேகலை பாவம், வேணாம் வேணாம் புது பெரியாரிஸ்ட்ங்க பாவமோ பாவம், மொத்தத்துல டோட்டல் டேமேஜ்

தே.மு.தி.க. வில் பண்ருட்டியார்

பண்ருட்டியார் என அழைக்கப்படும் பண்ருட்டி இராமச்சந்திரன் அவர்கள் எம்.ஜி.இராமச்சந்திரனின் அமைச்சரவையில் அமைச்சராக இருந்தவர், எம்.ஜி.ஆரின் நெருக்கமான வட்டத்தில் இருந்தவர், எம்.ஜி.ஆரின் அரசியல் மற்றும் ஆட்சி முடிவுகளில் ஓரளவிற்கு முக்கிய காரணியாக இருந்தவர்,பொருளாதாரநிலையில் கீழிருந்த ஒரு குடும்பத்திலிருந்து அண்ணாமலைப் பல்கலைக்கழகத்தில் பொறியியல் B.E.(Hons.) பட்டப்படிப்பு படித்தவர், நாகரீகமான அரசியல்வாதியெனப் பெயரெடுத்தவர்.

Image hosted by Photobucket.com

இன்றைக்கும் பண்ருட்டித் தொகுதியில் ஓரளவிற்கு செல்வாக்கோடு வலம்வரும் அரசியல்வாதி,
பண்ருட்டித் தொகுதி முழுக்க முழுக்க கிராமங்கள் அடங்கிய தொகுதி, சாதாரணமாக ஊரும் வயலும், தோப்பும் தனித்தனியாக இருக்கும், ஆனால் பண்ருட்டித் தொகுதி கிராமங்கள் முந்திரித் தோப்பினுள் இருக்கும். முந்திரித் தோப்பின் நடுவில் செம்மண் மற்றும் தார் சாலையில் இன்றைக்கும் நகர பேருந்துகள் சென்று வந்து கொண்டிருப்பதுதான் பண்ருட்டியார் இன்றும் தொகுதியில் ஓரளவிற்கு செல்வாக்காக இருப்பதற்கான காரணம்.

எம்.ஜி.ஆரின் மறைவிற்குபின் 1989ல் சுயேச்சையாக போட்டியிட்டு (இரண்டாமிடம்)தோல்வியடைந்து பின் 1991ல் பா.ம.க. சார்பில் போட்டியிட்டு பா.ம.க.வின் சட்டமன்ற கணக்கை யானை மீதேறிச்சென்று துவக்கியவர் பண்ருட்டியார், 2001ல் மீண்டும் சுயேச்சையாக போட்டியிட்டார், கடும் போராட்டத்தில் பா.ம.க.வின் தி.வேல்முருகனிடம் தொகுதியை பறிகொடுத்த அவரால் மூன்றாமிடத்தையே பிடிக்கமுடிந்தது, பா.ம.க.வில் மருத்துவர் இராமதாசுக்கு அடுத்து இரண்டாமிடத்திலிருந்தவர் பா.ம.க.விலேயே தொடர்ந்திருந்தால் மத்திய அமைச்சராகியிருப்பார்.

Image hosted by Photobucket.com

சில நாட்களுக்கு முன் வரை கிட்டத்தட்ட அரசியல் துறவறம் சென்ற நிலையிலிருந்தார் பண்ருட்டியார், இதோ மீண்டும் தே.மு.தி.க. வில் சேர்ந்து பண்ருட்டி வட்டார அரசியலை சூடாக்கியுள்ளார்.தே.மு.தி.க.வினர் தற்போது பண்ருட்டி தொகுதியை நிச்சய வெற்றி தொகுதியாக கணக்கெடுப்பர், பண்ருட்டியாரின் வருகை தே.மு.தி.க விற்கு எந்த அளவிற்கு வெற்றி தரும் என்று கூற முடியாவிட்டாலும் தே.மு.தி.க. விற்கு பிணைத்தொகை பறிபோகாமல் இருக்கும் இரண்டாவது தொகுதி (விசயகாந்த் போட்டியிடுவது முதல் தொகுதி) யாக பண்ருட்டி இருக்கும் என்பதில் சந்தேகமில்லை.

பண்ருட்டி தொகுதியின் தற்போதைய கட்சிகளின் பலத்தில் முதலிடத்தை தி.மு.க.வும் சிறிய அளவு வித்தியாசத்தில் பா.ம.க. இரண்டாமிடத்திலும் அதற்கடுத்ததாக அ.தி.மு.க.வும் விடுதலைசிறுத்தைகளும் சமபலத்தில் இருக்கின்றனர், இதற்கடுத்த நிலையில் பண்ருட்டியார் சொந்த பலத்திலுள்ளார்.

தற்போதைய பண்ருட்டி தொகுதி சட்டமன்ற உறுப்பினர் தி.வேல்முருகனும் (பா.ம.க.) பண்ருட்டியாரும் ஒரே கிராமத்தை சேர்ந்தவர்கள், ஒரு வகையில் உறவினர்களும் கூட, தி.வேல்முருகன் அதிரடி அரசியல்வாதி மற்றும் இளைஞர் எதற்கும் நேரடியாக களத்தில் இறங்கி போராடுபவர், பா.ம.க.வின் ரஜினியுடனான மோதலின் போது பண்ருட்டி பகுதியில் பல ரஜினி மன்றங்கள் கலைக்கப்பட காரணமாக இருந்தவர், தற்போதைய நிலையில் இளைஞர்கள் பலர் இவரின் பலமாக உள்ளனர், நிறைய நல்லது செய்து நல்ல ச.ம.உ. என்று பெயரெடுக்கவில்லையென்றாலும் கெட்ட பெயர் எடுக்காததும் ஒரு வகையில் இவருக்கு பலம்தான், மேலும் தொகுதியில் அனைவரோடும் தொடர்பிலிருப்பவர்.

பண்ருட்டியாரின் பலமாக இருப்பவர்கள் அவர்காலத்து நண்பர்கள், எல்லோரும் நடுத்தரவயதினர், பண்ருட்டியார் இளைஞர்கள் பலத்தில் குறைவாக இருந்தார், விசயகாந்த் மன்றத்தினர் எல்லோரும் இளைஞர்கள் இதில் முக்கியமான விடயம் பெரும்பாலானோர் முதல்முறையாக வாக்களிக்க இருப்பவர்கள் ஆனால் இவர்களின் எண்ணிக்கை மற்ற கட்சிகளுடன் பொருத்தி பார்க்கும் போது மிகக் குறைவானதே.

வரும் சட்டமன்ற தேர்தலில் கூட்டணியில் பண்ருட்டி தொகுதி பா.ம.க.விற்கு என்பதானது ஏறக்குறைய முடிவான விடயம், இந்த முறையும் தி.வேல்முருகனே போட்டியிடுவார் என எதிர்பார்க்கப்படுகின்றது. இதற்கு முந்தைய தேர்தல் முடிவுகளை பார்க்கும் போது பண்ருட்டியார் சுயேச்சையாக போட்டியிட்ட போது வெற்றிபெற்றதில்லை, ஏதேனும் ஒரு கட்சி பலத்துடன் போட்டியிட்டபோது தான் வெற்றி பெற்றுள்ளார், இதையெல்லாம் பார்க்கும்போது பண்ருட்டியாரை வைத்து தே.மு.தி.க. சட்டமன்ற உறுப்பினர் கணக்கைத் துவக்கும் என்பது நடக்காத விடயம் போலத் தோன்றுகின்றது.

ஒருவேளை அதிமுக வோடு தேமுதிக கூட்டணி வைத்தால் அதிமுக பண்ருட்டி தொகுதியை விட்டுத்தருமா என்பது சந்தேகமே, பாஜக கூட்டணியில் புதுக்கோட்டை தொகுதியை திருநாவுக்கரசருக்காக தராமல் இருந்தவர் தான் செல்வி.ஜெயலலிதா, இதே நிலை பண்ருட்டியாருக்கும் ஏற்படலாம், எப்படி பார்த்தாலும் பண்ருட்டியாரின் அரசியல் கணக்கு எந்த அளவிற்கு எடுபடும் என்பதில் பலத்த சந்தேகமே மிஞ்சுகின்றது.

பண்ருட்டியார் தே.மு.தி.க.வில் இணைந்ததால் பிணைத்தொகை பறிபோகாத தொகுதிகளில் ஒன்றை அதிகப்படுத்தியுள்ளது அந்த கட்சி, ஆனால் இத்தனை நாள் சட்டமன்ற உறுப்பினர் கனவில் மிதந்த மன்ற நிர்வாகிகளுக்கு பெரிய ஏமாற்றமே மிஞ்சியுள்ளது, இது மாதிரி தே.மு.தி.க.வில் ஆங்காங்கே அரசியலில் காணாமல் போனவர்களை சேர்த்தால் தே.மு.தி.க.விற்கு பெரிய எதிர்காலமோ, வெற்றியோ கிடைத்துவிடும் என்று சொல்லமுடியாது ஆனால் கனவிலிருக்கும் மன்றநிர்வாகிகளுக்கு பலத்த ஏமாற்றமே மிஞ்சும், மன்ற பலமும் ஆட்டம் காணும் என்பது நிதர்சனமான உண்மை.

தே.மு.தி.கவினால் பண்ருட்டியாருக்கு இலாபம் என்பதை விட பண்ருட்டியாரால் தேமுதிகவிற்கு இலாபம் என்பதுதான் தற்போதைய நிலை...

பின் குறிப்பு:
பண்ருட்டியார் தே.மு.தி.க.வில் சேர்ந்த போதே இந்த பதிவை எழுதினேன், இப்போது தான் பதிவிட முடிந்தது.

பழைய கலாச்சார காவலர்களும் மாற்றங்களும்

எவையெல்லாம் பொதுவாக உயர் கலாச்சாரம் என உருவகப்படுத்தப்பட்டு வந்ததோ அதெல்லாம் பிறரால் கை கொள்ளப்படும் போது அதே உயர் கலாச்சாரம் என உருவகிக்கப்பட்டு வந்த விடயம் தாழ்த்தப்படுகின்றது,

புத்தமதம் உயிர் கொல்லாமையை வலியுறுத்திய அதே சமயம் புத்தமதம் உணவு பழக்கத்தில் அசைவ உணவை கட்டுப்படுத்தாத காலகட்டம் அது, புத்தமதத்தின் உயிர் கொல்லாமை மிக உயரியதாக கருதப்பட்டு வந்த நேரத்தில் அசைவம் புசிப்பதைவிட்டு சைவ உணவு உட்கொள்ளும் பழக்கம் உயரியதாக உருவகப்படுத்தப்பட்டது என்று அக்னிகோத்ரம் தாத்தாச்சாரி அவர்கள் எங்கே செல்கிறது இந்து மதம் என்ற தொடரில் கூறிப்பிட்டுள்ளார்.

குடிப்பழக்கம் ஒரு சமூக நோய் எனவும், அதிலிருந்து மக்கள், முக்கியமாக அடித்தட்டு மக்கள் வெளிவர வேண்டும் என வலியுறுத்தி போராடினால் அதும் கூட கேலியாக்கப்படுகின்றது/மறைக்கப்படுகின்றது, அது மட்டுமின்றி தற்போது அது தனி மனித சுதந்திரம் அதில் என்ன தவறு என தாங்கிப்பிடிக்கின்றனர், இத்தனை காலமும் கீழ் கலாச்சாரமாகவும் ஒழுக்ககேடாகவும் கருதப்பட்டு வந்த குடி பிரச்சினையை இந்த தலைவர்கள் கையில் எடுத்தவுடன் திடீரென தனி மனித சுதந்திரம் என பிதற்ற ஆரம்பிக்கின்றனர் சிலர், ஆனால் இதே குடியை விட்டு வெளிவரவேண்டுமென காந்தியிலிருந்து,ராஜாஜி மற்றும் பலர் போராடியபோது வராத தனிமனித சுதந்திரம் இப்போது இந்த தலைவர்கள் கையில் எடுத்தவுடன் வருகின்றது.


சில பல ஆண்டுகளுக்கு முன் கைம்பெண் திருமணமும் மறு மணங்களும் மிக சாதாரணமாக இருந்த இந்த சமூகத்தில் திருமணம் ஒரு முறை தான் என பரப்பி அது உயர் கலாச்சாரமாகவும் மறு மணங்கள் வழக்கமாக இருந்த சமூகத்தை "அறுத்து கட்டிய சாதி" என்றும் "கட்டுகழுத்தி" என்றும் ஏளனம் பேசி உயர் கலாச்சாரம் என்றால் எத்தனை சிறிய வயதில் கணவன் இறந்திருந்தாலும் மறு மணம் செய்துகொள்ளாமல் இருப்பதுவேயாகும் அதுவே தியாகம் என்று உருவகப்படுத்தியது இதற்கு ஊடகங்களும் கதைகள்,கட்டுரைகள், புராணக்கதைகள் என்ற பெயரில் இதை தாங்கிபிடித்தன(இதை முதலில் இலக்கிய உலகில் உடைத்தெறிந்தவர் ஜெயகாந்தன் தான்) முறையான திருமண பாலியல் உறவுகளுக்கு தரப்பட்ட ஏளன பெயர்கள் தான் அறுத்துகட்டுற சாதி,கட்டுக்கழுத்தி. இன்று முறையற்ற பாலியல் உறவுகளை கூட தனி மனித சுதந்திரம் என்று கூறி வக்காலத்து வாங்குகின்றன இதே ஊடகங்களும் மற்ற சிலரும்.

இந்த இடித்தலுக்கும் உரைத்தலுக்கும் பெரியாரை வேறு துணைக்கிழுக்கின்றனர், 50 ஆண்டுகாலமாக அழைக்கப்படாத பெரியாரை, பெரியார் கூறிய பெண்ணிய கருத்துகளை இத்தனை ஆண்டுகளாக ஆதரிக்காமல், இத்தனை ஆண்டுகளாக கேலி கிண்டல் பேசிவிட்டு தற்போது இந்த தலைவர்களை தாக்க மட்டும் துணைக்கழைக்கின்றனர் இத்தனை காலம் கலாச்சார காவலர்களாக இருந்தவர்கள்.

இவர்களுக்கு பிரச்சினை பெண்ணியம் பற்றியும் அல்ல, கருத்து சுதந்திரம் பற்றியும் அல்ல, அந்த தலைவர்களின் மீது சாணியெறிய வேண்டுமென்பது மட்டுமே.

இதை பாதி எழுதி முடித்திருந்த சமயத்தில் திண்ணையில் மாதவி ஸ்ரீபிரியாவின் சீரழிக்கும் சினிமா, மற்றும் தொலைகாட்சி நிகழ்ச்சிகள் என்ற கட்டுரையை படிக்க நேர்ந்தது, கிட்டத்தட்ட என் கருத்தை ஒத்திருந்ததால் இங்கே அதன் சுட்டி http://www.thinnai.com/pl1006052.html

இத்தனை காலம் கோலோச்சியிருந்த கலாச்சார காவலர்களின் குரல் பலவீனமாவதும், அவர்களின் வேடதார சட்டை கழற்றப்படுவதும், புதிய கலாச்சார காவலர்கள் தோன்றியிருப்பதும் எனக்கு மகிழ்ச்சியே...

தம் ஆயுதத்தை எதிரியை தேர்ந்தெடுக்கவிடுபவன் புத்திசாலியல்ல, பழைய கலாச்சார காவலர்களின் ஆயுதத்தை புதிய கலாச்சார காவலர்கள் முடிவு செய்கிறார்கள் என்பது பழைய கலாச்சார காவலர்களின் முதல் தோல்வி...

பழைய கலாச்சார காவலர்களின் இந்த தோல்வி எனக்கு மகிழ்ச்சியே, தொடரட்டும் இந்த தோல்வி, அவர்கள் முழுத் தோல்வி அடையும் வரை புதிய கலாச்சார காவலர்களின் வெற்றி அவசியமாக இருக்கின்றது.

வன்முறை என்பது வெறும் இரத்தத்தின் தெறிப்பா?!

//ஒவ்வொரு சமூகத்திலும் ஒரு சில ஊடகங்கள் மூலம் அரசியலதிகாரம் கைப்பற்றப்படுகிறது. இது வன்முறையற்றதாக இருக்கிறது என்ற ஒரு காரணத்துக்காகவே இதனை ஆதரிக்கவும் நான் (தனிப்பட்ட முறையில்) செய்கிறேன்.//

http://www.thinnai.com/pl0930053.html திண்ணை இணைய இதழில் சின்னக்கருப்பன் அவர்கள் கலாச்சார புரட்சியாளர்களும் கலாச்சார காவலர்களும் என்ற தலைப்பில் எழுதிய கட்டுரையில் இடம் பெற்ற சில வரிகள், அந்த கட்டுரையின் மற்ற வரிகளுக்குள் போக விரும்பவில்லை, மேற்குறிப்பிட்ட வரிகளில் கட்டுரையாளர் உடல் சார்ந்ததாக குறிப்பிடுகிறார் என்று புரிந்து கொண்டுள்ளேன். மேற்கண்ட வரிகளில் என் புரிதல் தவறெனில் திருத்திக்கொள்கின்றேன்.

வன்முறை என்பது உடல் சார்ந்தது மட்டுமே என்பது போன்ற கருத்துகள் பலரிடமும் பரவியுள்ளன.

வன்முறை என்பதன் அளவுகோல் உடலளவில் துன்பப்படுத்துவது மட்டுமே என்ற கருத்தை என்னளவில் ஏற்றுக்கொள்ள இயலவில்லை, வன்முறை என்பது உடல் சார்ந்தது மட்டுமல்ல, வன்முறைகளின் வடிவம் பல, அதில் உடல் சார்ந்த வன்முறையும் ஒன்று, ஆனால் பலர் உடல் சார்ந்ததை தவிர மற்றவைகள் வன்முறை என்ற வரையரையில் கொண்டுவரவில்லை.

தீண்டாமை, இரட்டை குவளை முறைகள் வன்முறையில்லையா?, இங்கே இரத்தமில்லை, யாரும் உடலளவில் யாரையும் காயப்படுத்துவதில்லை(சாதிக் கலவரம் வேறு) அதற்காக இந்த தீண்டாமை வன்முறையல்ல என்று கொள்ள முடியுமா?

ஊடகங்கள் ஒரு குறிப்பிட்ட சிலர் மீது குறிவைத்து நடத்தும் தாக்குதல்கள், பொது மக்களிடம் குறிப்பிட்ட சிலரை பற்றி தவறான உருவகத்தை பதியவைக்க வேண்டும் என்று பத்திரிக்கை தர்மத்தை மீறி வெளியிடும் தவறான தகவல்கள் அதனால் ஏற்படும் சேதம் ஊடகங்களின் வன்முறையல்லவா? நேர்மையற்ற முறையில் ஒரு சில ஊடகங்கள் மூலம் அரசியலதிகாரம் கைப்பற்றப்படுவது ஊடகங்கள் சமுதாயத்தின் மீது நடத்தும் வன்முறையல்லவா, இங்கேயும் கூட கத்தியில்லை, இரத்தமில்லை உடலளவில் துன்பமில்லை, அதற்காக இது ஊடக வன்முறையல்ல என்று உருவகித்துக் கொள்ள இயலுமா?

சனாதானம்,மனு நீதி என்ற பெயரில் கடவுள் குடி கொண்டிருக்கும் கோவில்களிலும் கூட உரிமைகளை மறுப்பது என்பது வன்முறையல்லவா? இங்கும் கூட கத்தி, இரத்தமில்லை தான், அதற்காக இது வன்முறையல்லவா?

கருத்து சுதந்திரம் என்ற பெயரில் நேர்மையற்ற முறையில் விமர்சிப்பதும், தீய கருத்துகளை சொல்லி பலரை மனதளவில்,உணர்ச்சிகளை காயப்படுத்துவதும் வன்முறை என்ற அளவீட்டில் அடங்காதவையா?

மொழி திணிப்பு, மொழிகளை நீச மொழி என்பது, தாய்மொழியில் கோவில் குடமுழக்கு நடத்தினால் பாவம் என்பதெல்லாம் மொழிகளின் மீது நடத்தப்படும் மொழி வன்முறையில்லையா? இங்கும் கூடத்தான் உடல் சார்ந்த துன்பப்படுத்துதல் இல்லை.

இராசதந்திரம் என்ற பெயரில் இழைக்கப்படும் துரோகங்கள் எல்லாம் வன்முறையல்லவா? இரத்தம் தெறிக்காமல் இருப்பினும்.

வியாபார தந்திரம் என்ற பெயரில் நேர்மையற்ற முறையில் சந்தையை கைப்பற்றுதலில் கூட உடல் காயப்படுவதில்லை தான், ஆதலால் இது வன்முறையல்ல என்றாகிவிடுமா?

வன்முறை என்பது வெறுமனே உடல் சார்ந்தது என்று மட்டும் சுருக்கிவிடாதீர்கள், வன்முறையின் ஒரு வடிவம் தான் உடல் சார்ந்த துன்பம், மேற்குறிப்பிட்டது போன்ற வேறு பல வடிவங்களும் வன்முறைக்கு உள்ளன.