இட்லிவடை பற்றிய கருத்து கணிப்பு

எல்லாவற்றை பற்றியும் கருத்து கணிப்பு நடத்தும் இட்லிவடை வலைப்பதிவைப் பற்றி ஒரு கருத்து கணிப்பு.

கருத்து சுதந்திரப்படி இதை நான் செய்தாலும் (நாங்கெல்லாம் கருத்து சுதந்திர காவலாளிங்கோங்க) இட்லிவடையின் தனி(அல்லது கூட்டு)மனித சுதந்திரத்தையும் மதிக்கின்றேன், இட்லிவடை இதை நீக்க கோரினால் பதிவு நீக்கப்படும்.

எத்தனை வாக்குகள் பதிவானது, எவ்வளவு வாக்குகள் எதெதற்கு என்பதில் ஒளிவு மறைவு எதுவும் இல்லை, கள்ள ஓட்டு போடுவது அவரவர்கள் திறமை, நல்ல ஓட்டு போடுவது அவரவர்கள் விருப்பம், எல்லாம் வெளிப்படை.

வலது பக்கத்தில் இருக்கு பாருங்க கருத்து கணிப்பு பட்டை, அதிலே போடுங்க உங்கள் ஓட்டை.

பின்குறிப்பு:
நாளை (01-12-2006) சிங்கப்பூர் நேரம்(SGT) நள்ளிரவு 12 மணி வரை வாக்குபதிவு நடைபெறும், அதன் பிறகு வாக்குப்பெட்டி மூடப்படும்.

இது ரொம்ப முக்கியம்

தமிழகத்தின் முதல் மூன்று அரசியல் பத்திரிக்கைகளில் வந்த செய்தி...

29-11-2006 ஜீனியர் விகடனின் அட்டைப்படம்




அதே இதழில் ஸ்பெசல் என்ற பகுதியில்




இன்னொரு முக்கியமான இதழான குமுதம் ரிப்போர்ட்டரின் அட்டை



கவர் ஸ்டோரி என்று எழுதப்பட்டது


இன்னொரு முக்கிய பத்திரிக்கையான நக்கீரனின் அட்டைப்படம்


வெளங்கிடும்.......

பெரியார் படத்திற்கு சில யோசனைகள் - இட்லிவடையை தொடர்ந்து

இட்லிவடை பெரியார் படத்திற்கு என சில யோசனைகள் கொடுத்த துக்ளக்கிலிருந்து எடுத்து போட்டுள்ளார், அதில் போட்ட பின்னூட்டம் சற்று பெரிதாகிவிட்டது, அதனால் பதிவாகவும் இங்கே...

இட்லிவடை இவ்வளவு தூரம் பெரியார் பட இயக்குனருக்கு எடுத்துகொடுத்துள்ளீர் என் பங்குக்கு நானும் எடுத்து தருகிறேன், இப்படியெல்லாம் காட்டுமிராண்டி மொழி என தமிழை திட்டிய பெரியார் அறிமுகப்படுத்தியது தான் இன்றைய தமிழ் அச்செழுத்து சீர்திருத்தம், தமிழ் என்ற இந்த காட்டுமிராண்டிகளின் மொழியில் அச்செழுத்து சீர்திருத்தத்தை பெரியார் அறிமுகப்படுத்துவதற்கு முன் "லை" இப்படி இருந்ததல்ல, அது எப்படி இருந்தது என்றால் பாலச்சந்தரின் "வானமே எல்லை" சுவரொட்டியையோ பழைய துக்ளக், கல்கியையோ பார்க்கவும்(கடந்த சில ஆண்டுகளாகத்தான் இவர்களும் பெரியார் உருவாக்கிய தமிழ் அச்செழுத்து சீர்த்திருத்தத்தை ஏற்றுகொண்டார்கள் என நினைக்கின்றேன்), பெரியார் கூற்றுப்படி நல்ல விடயங்களுக்காகவும் அச்சு நவீனத்துவத்துக்குமான மாற்றத்தை மொழியில் ஏற்காதவர்களின் மொழி காட்டுமிராண்டிகளின் மொழி "வானமே எல்லை" படம் வெளிவந்தபோது இந்த கூற்றுப்படி பாலச்சந்தர் காட்டுமிராண்டி, துக்ளக்கும் கல்கியும் நீண்ட நாட்களுக்கு இதை ஏற்காததால் அவர்களும் அவர்கள் எழுதிய தமிழும் காட்டுமிராண்டி, இதே மாதிரி நீங்கள் ஒரு பதிவிட்டபோதும் நான் இதே மாதிரி பெரியாரின் அச்செழுத்து சீர்திருத்தத்தை எழுதியிருந்தேன், உங்கள் பதிவின் செய்தி சேவையினால் அதை தேடி கண்டுபிடிக்கமுடியவில்லை, இந்த பதிவை குறித்து வைக்க வேண்டும், மீண்டும் இதே மாதிரி நீங்கள் பதிவிடுவீர் அப்போது எனக்கு CTL-C , CTL-V செய்தால் போதுமானதாக இருக்கும், புதிதாக தட்டச்ச தேவையில்லை...

பார்ப்பனீயம் ஊடுறுவிய, அதைஉள்வாங்கிய ஒரு சமூகத்தின் மொழி வெளிப்பாடு பெரியார் சொன்னது போலத்தான் இருக்கும், திருக்குறளுக்கு பிந்தைய காலகட்டத்தில் வெளியான தமிழிலக்கிய நூல்களில் பெரும்பாலானவை போர் பரணிகளும், அரசர்களுக்கு தட்டிய ஜால்ராக்களும், சைவ,வைணவ மதமென்று பார்ப்பனியத்துக்கு கூஜா தூக்கிய படைப்புகளாகவும் தானிருந்தன, பார்ப்பனீயம் ஊடுறுவிய, அதைஉள்வாங்கிய ஒரு சமூகத்தின் மொழி வெளிப்பாடு பிறகெப்படி இருக்கும்? அப்படித்தானிருக்கும்.? பார்ப்பனிய அதிகாரத்துவத்தை எதிர்க்கும் பெரியாரின் குரல் இப்படி தான் இருக்கும், கருத்தளவில் இப்படி எதிர்த்த இதே பெரியார் இதே தமிழ் மொழி நவீனத்துவமடையவேண்டுமென்று அச்செழுத்து சீர்திருத்தம் செய்திருக்கிறாரென்றால் அவர் தமிழ் மொழியை கேவலமாக நினைத்தவரா என்பது புரியும்...

அது சரி தமிழ் என்றால் பலர் உணர்ச்சிவயப்படவும் சிலர் எரிச்சலடையவும் காரணமென்ன?

தமிழ்- முகமூடி, குழலி பதிவுகளை முன்வைத்து என்ற பதிவில் எழுத்தாளர் மாலன் சொல்லியிருப்பதிலிருந்து சில வரிகள் கீழே...

மிகை உணர்ச்சிகளை நீக்கிவிட்டு வரலாற்றுக் கண் கொண்டு பார்த்தால், இரண்டு விஷயங்களை விளங்கிக் கொள்ள முடியும்:

1.தமிழ் அறிவு என்பது ஒரு சமநிலைச் சமூகத்திற்கான (egalitarian society) விழைவை நோக்கி இட்டுச் செல்லும் ஒன்று
2.தமிழ் உணர்வு என்பது அதிகாரத்திற்கெதிரான, குறிப்பாக -வலியார் சிலர் எளியோர் தமை வதை செய்குவதை- போர்க் குணத்தை அளிப்பது. (anti -establishment)

கம்பன், பாரதி, பாரதிதாசன், ஜீவா ஆகியோரிடம் காணப்படும் அதிகார எதிர்ப்பு நிலைகளுக்கும் ஒரு முக்கிய காரணியாக தமிழுணர்வு இருந்திருக்கிறது.

தமிழுக்கு ஐம்பெரும் காப்பியங்களைத் தந்த சமண பெளத்த சமயங்கள், ஒரு வித சமநிலைச் சமூகத்தை விரும்பின. நிறுவனமாக்கப்பட்ட அமைப்புக்கள் மூலம் கல்வி வழங்கல், வைதீக சமயங்கள் பெண்களுக்கு அளித்திருந்ததைவிட சற்று மேம்பட்ட நிலையை அளித்தல் இவை அவற்றின் இந்த விழைவுகளுக்கு உதாரணங்கள். ஆனால் அவை தங்களது தமிழ் ஆர்வத்தை உணர்வு நிலையில் வெளிப்படுத்திக் கொள்ளவில்லை. அறிவார்ந்த நிலையிலேயே வெளிப்படுத்திக் கொண்டன. தமிழர்களிடையே இந்த சமயங்கள் பெரும் செல்வாக்குப் பெற இயலாமல் போனதற்கு இதுவும் ஒரு காரணம்.

அரசியல் வரலாற்றின் வெளிச்சத்தில் பார்த்தால், களப்பிரர்களுக்கு எதிராக சைவர்களும், ஆங்கிலேயர்களுக்கு எதிராக பார்ப்பனர்களும், பார்ப்பனர்களுக்கு எதிராக பிற்படுத்தப்பட்ட சமூகத்தினரும், இன்று பிற்பட்டோருக்கு எதிராகத் தாழ்த்தப்பட்டவர்களும் எழுப்பும் கலக்க்குரலின் அடையாளமாகத் தமிழ் உணர்வு இருந்து வருகிறது.


அதுசரி இப்போது புரிந்திருக்குமே தமிழென்றால் சிலருக்கு உணர்ச்சிப்பெருக்கும், சிலருக்கு வயிற்றெரிச்சலும் உருவாவதன் காரணம்.

சரி இந்த பின்னூட்டத்தினால் ஏதோ நீர் புரிந்துகொள்வீரென்ற நம்பிக்கையெல்லாம் எனக்கு இல்லை, ஏனென்றால் இதே மாதிரி ஏற்கனவே ஒரு பதிவிலும் சொன்னது தானே இது, ஆனாலும் ஏன் எழுதுகிறேனென்றால் உம் மாதிரியான ஆட்கள் தொடர்ந்து இயங்கும் போது (எதற்கு எதிராக இயங்குகிறீர்கள் என்பது சொல்ல தேவையில்லை) எம் மாதிரியான ஆட்களும் தொடர்ந்து இயங்க வேண்டிய நிர்ப்பந்தம் உள்ளது.

பின்குறிப்பு:துக்ளக் 'சோ' எழுத அதை எடுத்து பதிவில் போடும் இட்லிவடை போன்றோர்களின் இது மாதிரியான சேவை நிச்சயம் தேவை, இப்படியெல்லாம் அவர்கள் கூறவில்லையென்றால் இந்த பதிவிற்கு வேலையில்லாமல் போயிருக்கும், பெரியார் தமிழை காட்டுமிராண்டி மொழி என்று சொன்னது மட்டுமே தெரிந்திருப்பவர்களுக்கு இந்த பதிவின் மூலம் ஒரு சிலருக்காவது பெரியாரின் தமிழ் அச்செழுத்து சீர்திருத்தம் பற்றிய தகவல்கள் தெரியவந்தால் அதற்கு முழு காரணம் 'சோ' மற்றும் இட்லிவடை....

இட்லிவடை தேவை உமது சேவை

பிற்சேர்க்கை


"லை" என்று எழுதியதால் தமிழ் எப்படி வளர்ந்தது என்று விளங்கவில்லை. என்று பின்னூட்டத்தில் கேட்டு பெரியாரை பற்றியும் அவரின் சேவையை பற்றியும் மேலும் அறியும் ஆர்வமுடன் முத்துக்குமரன் வினவியதிற்கான பதிலை பதிவிலும் சேர்க்கிறேன்.

மேலே உள்ள படம் "வானமே எல்லை" திரைப்படத்தின் விளம்பரப்படம் இருக்கும், அதில் "லை" என்ற எழுத்தை பாருங்கள் "ல"க்கு மேலே ஒரு சுழி, இரண்டையும் ஒரு 'S' சேர்த்திருக்கும், இப்படி லை,னை,ரை வரிசை எழுத்துக்களும் முன்பு புழக்கத்தில் இருந்தன.

,
அதே போல அருணாச்சலம் படத்தின் பெயரை அந்த "ணா"க்கு பதில் 'ண'க்கு கீழே ஒரு படகு மாதிரி வந்திருக்கும், இப்படியான எழுத்துக்கள் தமிழ் மொழி அச்சில் பயன்படுத்த மிகவும் சிரமமாக இருந்தது.

இது மாதிரியான எழுத்துக்களுக்கு கால் போட்டதாலும் முன்புறத்தில் கொம்பு போட்டதாலும் சில எழுத்துக்களை மீண்டும் வெவ்வேறு எழுத்துக்களை குறிக்க பயன்படுத்தலாம், இது தான் பெரியார் அறிமுகப்படுத்திய அச்செழுத்து சீர்திருத்தம், இதற்கு பின்பு அச்சில் தமிழ் எளிமையானது.

இட்லிவடையின் சேவை போலவே முத்துக்குமரன் புராணத்தின் சேவையும் எங்களுக்கு மிக்கத் தேவை.

நன்றி

வலைப்பதிவர் சந்திப்பும் பக்க விளைவுகளும்



வலைப்பதிவர்கள் மாநாடு நடத்தி கலந்து கொண்டு, ஆக்கப்பூர்வமான செயல்கள் செய்து இப்போது வருத்தத்தில் இருப்பவர்களுக்கு மேலே உள்ள படம்.


வேறு சிலருக்கு கீழே உள்ள படம்.







தமிழ்மணத்தில் கிண்டல்களை நகைச்சுவையாக எடுத்துக்கொண்டு ரசிக்க மாட்டேங்கிறாங்க, தொட்டாசினுங்கிங்க என்ற புலம்பல், கருத்து, எட்செட்ரா, எட்செட்ரா எல்லாம் இரண்டு நாட்களாக ஆங்காங்கே வருகின்றது(அதற்கு முன்பு அவ்வப்போது வருவது உண்டு, எவ்வெப்போதுனெல்லாம் கேட்கக்கூடாது அக்காங், எங்களுக்கு பெரச்சினைனா வரும் அவ்ளோதான்...) எனவே சம்பந்தப்பட்டவர்கள் மேலே உள்ள ஜெலுசிஸ் விசயத்தை நகைச்சுவையாக எடுத்துக்கொண்டு மேற்கண்ட புலம்பலை தவறு என்று நிரூபிக்க வேண்டுகின்றேன்.

நகைச்சுவையில் பல வகை உண்டு. மேற்கண்டது எந்த வகையில் வருகின்றது என்பதை பாஸ்டன் பாலாவின் இந்த பதிவில் படித்துவிட்டு சொல்லுங்க :-)

வர்ரட்டா... சீ யூ... பை...

பாப்பாபட்டி, கீரிப்பட்டி சமத்துவப் பெரியார்

உள்ளாட்சி தேர்தல் நெருங்கிய நேரத்தில் ஒரு அச்சம் மேலோங்கியது, சுழற்சி முறையில் தலித் மற்றும் பெண்கள் தொகுதி ஒதுக்கீடு பத்து ஆண்டுகளுக்கு மட்டுமே, அதன் பின் அந்த தொகுதி பொதுத்தொகுதியாக மாற்றப்படும், ஆனால் கடந்த பத்து ஆண்டுகளாக பாப்பாப்பட்டி, கீரிப்பட்டி, நாட்டார்மங்கலம், கொட்டக்கச்சியேந்தல் போன்ற பஞ்சாயத்துகள் தலித்களுக்காக ஒதுக்கப்பட்டிருந்தாலும் தேர்தல் நடப்பதும் உடனே தலைவர் ராஜினாமா செய்வதுமாக நாடகம் நடந்து கொண்டிருந்தது, பத்தாண்டுகளுக்கு பிறகு இந்த கிராம ஊராட்சிகள் பொதுத்தொகுதியாக்கப்பட்டால் ஆதிக்க சாதி வெறி வெற்றிபெற்றது போலாகும், மேலும் இது மாதிரியான ஆதிக்க சாதி வெறி மேலும் பல கிராமங்களில் தொடரும் என்ற அச்சமே அது, ஒரு முறை கிராமத்தின் வேட்பாளராக முன்மொழியப்பட்டு தேர்தலில் வெற்றி பெற்ற தலித் பதவியேற்று சில நாட்களில் அந்த கிராமத்தில் ஏற்பட்ட மின் அழுத்தத்தினால் சில வீடுகளில் இருந்த தொலைக்காட்சி பெட்டிகள் சேதமடைய "அய்யோ அவரை ராஜினாமா செய்ய சொல்லுங்கள், சாமி குத்தமாயிடுச்சி" என்று குரல்கள் எழுந்து ராஜினாமா நாடகமும் நடந்தேறியதாக பத்திரிக்கைகளில் படித்தேன், ஆனால் இந்த தொகுதிகளை பொதுத்தொகுதியாக்கமல் முதல்வர் கருணாநிதி மீண்டும் தலித் தொகுதியாகவே தொடர உத்தரவிட்டார், இது தொடர்பான என் நன்றியை பாப்பாபட்டி, கீரிப்பட்டி - முதல்வர் கலைஞருக்கு நன்றி என்ற பதிவில் தெரிவித்திருந்தேன்.

இந்த முறை தேர்தல் நடத்தி தேர்ந்தெடுக்கப்பட்ட தலித் ஊராட்சி தலைவர்கள் பதவியில் தொடரவைக்க அரசு கடும் முயற்சி எடுத்ததை ஊடகங்கள் வாயிலாக அறிந்தோம், குறிப்பாக இந்த தேர்தலுக்கு தடையாக இருந்த பலரையும் எல்லாவிதமான நடவடிக்கைகளையும் மேற்கொண்டு தடைகளை நீக்கி தேர்தல் சுமுகமாக நடைபெற வைத்தது மாவட்ட நிர்வாகம் , முதல்வர் கருணாநிதி இந்த தேர்தலில் அதிக கவனம் செலுத்தியதும் ஊடகங்கள் வாயிலாக அறிந்தோம்.

இந்த தலித் ஊராட்சி தலைவர்களுக்கு துப்பாக்கி ஏந்திய காவலர் பாதுகாப்பும் அளிக்கப்பட்டுள்ளது, இவர்களை சென்றவாரம் சென்னைக்கு அழைத்து "சமத்துவ பெருவிழா" என்று ஒரு பாராட்டுவிழாவும் நடந்தது, இதை வெறும் சாதாரண விழாவாக எண்ணமுடியாது, இந்த விழா சொல்லும் செய்தி இப்படியான பாப்பாப்படி, கீரிப்பட்டிகள் இனி தமிழகத்தில் உருவாக முடியாது, அப்படி உருவாக்க முயற்சித்தால் அதை அரசாங்கம் பார்த்துக்கொண்டிருக்காது என்று கூறும் விழாவாக எடுத்துக்கொள்ளலாம்.



இந்த விழாவில் விடுதலை சிறுத்தைகள் கட்சியின் தலைவர் திரு.தொல்.திருமா அவர்களால் முதல்வர் கருணாநிதிக்கு "சமத்துவப் பெரியார்" என்ற பட்டமும் வழங்கப்பட்டது.

இந்த உள்ளாட்சி தேர்தலில் தலித் தொகுதியாக மாற்றப்பட்ட திருச்சி திருவெரும்பூர் அருகிலுள்ள கூத்தப்பார் என்ற ஊராட்சியில் தலித்களால் மனுத்தாக்கலே செய்யமுடியவில்லை, வரும் டிசம்பர் மாதத்தில் நடக்கப்போகும் உள்ளாட்சி இடைத் தேர்தல் சுமுகமாக நடைபெற வேண்டுமென்பதற்கான எச்சரிக்கையாக இந்த விழா உதவும் என நம்புகிறேன்.

ஆதிக்க சாதி வெறிக்கு எதிரான இந்த வெற்றிக்கு காரணமான முதல்வர் கருணாநிதி அவர்களுக்கு மீண்டும் என் நன்றியை தெரிவிக்கின்றேன்.

மக்களின் ஆதிக்க சாதி வெறி மனம் மாறி இந்த தேர்தல் நடந்திருந்தால் முழு மகிழ்ச்சியடைந்திருக்கலாம், அரசாங்கத்தின் அழுத்தத்தினாலே நடந்திருக்கும் இந்த மாற்றம் முழு மகிழ்ச்சியை தரவில்லையென்றாலும் மக்களின் ஆதிக்க சாதி வெறி மன மாற்றத்திற்கு இன்னும் எத்தனை ஆண்டுகளாகுமோ?

பின்குறிப்பு:
இந்த நான்கு ஊராட்சிகளும் ஏற்கனவே பத்து ஆண்டுகள் தலித் தொகுதிகளாக இருந்தன, ஆதலால் இப்பொழுதே இவைகளை மீண்டும் பொதுதொகுதிகளாக மாற்ற வேண்டும், தலித் தொகுதிகளாக அவை தொடரக்கூடாது என்று என்று சில மனுக்கள் நீதிமன்றங்களிலே தாக்கல் செய்யப்பட்டு அந்த வழக்கு நடந்து கொண்டிருக்கிறது, இந்த நான்கு தொகுதிகளும் பொதுத்தொகுதிகள் ஆக்கப்பட்டால் வேறு எந்த நான்கு தொகுதிகள் தலித்களுக்கு ஒதுக்கப்படும் எண்று அரசாங்கத்திடம் நீதிமன்றம் கேட்டுள்ளது, பத்து ஆண்டுகளாக தலித்கள் இந்த ஊராட்சியின் தலைவராக செயல்பட முடியத போது அதற்காக நீதிமன்றம் செல்லாதவர்கள் இப்போது நீதிமன்றத்தின் கதவுகளை தட்டியுள்ளார்கள், இவர்களின் ஆதிக்க சாதிவெறி மனம் மாறுமா?

தமிழ்மணத்தில் சன்,ஜெயா செய்திகள்

லக்கிலுக்கின் உள்ளாட்சித் தேர்தல் - கண்டனப் பொதுக்கூட்டம் மற்றும் பத்ரியின் உள்ளாட்சித் தேர்தல் பொதுக்கூட்டம் பதிவை படிக்கும் போது சில இடங்களில் சன் மற்றும் ஜெயா செய்திகள் பார்ப்பது போல இருந்தது....லக்கியும் பத்ரியும் இப்படி சொல்வதற்காக என் மீது வருத்தம் வந்தாலும் வரலாம், ஆனால் பதிவுகளை படிக்கும் போது இப்படியானதொரு எண்ணம் எனக்கு வந்ததை மறுப்பதற்கில்லை.

பத்ரியின் பதிவிலிருந்து

பார்வையாளர்கள் பலதரப்பட்டனராக இருந்தனர். "மிடில் கிளாஸ் மைலாப்பூர் மாமாக்கள் கூட்டம்" என்று ஒதுக்கித் தள்ளிவிட முடியாது. மதிமுகவின் வைகோ, பாஜக இல.கணேசன் இருவரும் முதல் வரிசையில் உட்கார்ந்திருந்தனர். வைகோவின் தொண்டர்கள் பெரிய அளவில் இருந்தனர். வேறு சில அரசியல் தலைவர்களும் வந்திருந்தனர் என்று நினைக்கிறேன்.

லக்கிலுக்கின் பதிவிலிருந்து

பாரதிய வித்யா பவன் அரங்கினுள் நுழைந்ததுமே "தாம்ப்ராஸ்" மீட்டிங்குக்கு வந்துவிட்டோமோ அல்லது துக்ளக் ஆண்டு விழாவுக்கு வந்துவிட்டோமோ என்று சந்தேகம் ஏற்பட்டது. Audience அந்த ரேஞ்சில் இருந்தார்கள். பார்வையாளர்களில் நிறைய பேர் ரிட்டையர்டு கேசுகள். வெள்ளை முடியுடன் வெள்ளை வேட்டி, வெள்ளைச் சட்டை அணிந்து கையில் வாக்கிங் ஸ்டிக்குடன் வந்திருந்தார்கள். நெற்றியில் பட்டை அடித்த கோஷ்டியும், நாமம் போட்ட கோஷ்டியும் அதிகமாகத் தெரிந்தது.

ஜெயா மற்றும் சன் செய்திகள் பார்த்த மாதிரி இருக்கின்றதா? லக்கிலுக்கிற்கு ஏற்கனவே திமுக முத்திரை இருக்கின்றது, அதே சமயம் பத்ரியின் 2006 உள்ளாட்சி தேர்தல் வன்முறை தொடர்பான பதிவுகளையும் அவரின் பின்னூட்டங்களையும் படித்த போது அவர் ஒரு திசையில் சற்று சாய்ந்துள்ளதாகவே என்னளவில் தோன்றுகின்றது.

இந்த கூட்டம் தொடர்பான பத்திரிக்கை செய்தியையோ அல்லது இந்த இரு வலைப்பதிவர்களின் பதிவுகளை தவிர மற்ற வலைப்பதிவர்கள் பதிவை இன்னும் படிக்கவில்லை.

இந்த கூட்டத்தில் நான் கலந்து கொண்டிருந்தால் கூட்டத்தில் நான் கேட்க நினைத்த கேள்விகள் இங்கே



1. மாநில தேர்தல் ஆணையத்தின் கட்டுப்பாட்டில் இத்தேர்தல் நடக்காமல் மத்திய அரசின் கட்டுப்பாட்டில் நடக்க வேண்டுமென்று குறிப்பிடுவது கொஞ்சமே கொஞ்சம் மீதியிருக்கும் மாநில அதிகாரங்களையும் பறிப்பது போலாகாதா, மாநில தேர்தல் ஆணையும் தவறு செய்கிறது என்பதற்காக அதன் அதிகாரத்தை பிடுங்கி மத்திய தேர்தல் ஆணையத்திடம் அளித்தால் மத்திய தேர்தல் ஆணையமும் அதையே செய்தால் அதன் அதிகாரத்தை பிடுங்கி எதனிடம் அளிப்பது? இன்றைய மத்தியதேர்தல் அதிகாரிகள் பக்க சார்பில்லாமல் இருக்கிறார்கள், வருங்காலத்தில் பக்க சார்புள்ள அதிகாரங்கள் வந்தால் என்ன செய்யமுடியும்? அதற்கு பதிலாக மாநில தேர்தல் ஆணையத்திற்கு அரசியல் குறுக்கீடற்ற அதிகாரங்கள் வழங்கப்படுதல் வேண்டும் என்கிறேன் நான்.


2. மேயர், மற்றும் உள்ளாட்சி மன்ற தலைவர் தேர்தலுக்கு நேரடி தேர்தல்முறை வந்தால் வன்முறை குறையும் என்பது எப்படி சாத்தியம், 2001ல் மேயர் தேர்வுக்கு நேரடி தேர்தல் முறை இருந்தும் சென்னை மாநகராட்சி தேர்தலில் வன்முறை நடந்ததே.

3. மேயர், மற்றும் உள்ளாட்சி மன்ற தலைவர் தேர்தலுக்கு நேரடி தேர்தல்முறையின் மிகப்பெரிய குறைபாடாக உள்ளாட்சி மன்றத்தலைவர் ஒரு கட்சியாகவும் மற்றைய பெரும்பாலான உறுப்பினர்கள் பிற கட்சிகளாகவும் இருந்த நிலையில் நிறைய உள்ளாட்சி மன்றங்களில் எந்த ஆக்கப்பூர்வமான வேலையும் நடைபெறவில்லையே, கிட்டத்தட்ட எல்லா தீர்மாணங்களும் உள்ளாட்சி மன்றங்களில் தோற்கடிக்கப்படனவே, இந்த குறைபாட்டை நிவர்த்தி செய்ய என்ன ஆலோசனை கூறுகின்றீர்கள்

4. மேயர் மற்றும் உள்ளாட்சி மன்ற தலைவர் தேர்தலுக்கு நேரடி முறையில் தேர்ந்தெடுப்பது போலவே முதல்வர், பிரதமர் மற்றும் குடியரசுத்தலைவர் தேர்வு முறையும் நேரடி முறைக்க மாற்ற பரிந்துரைப்பீர்களா?

5. இது மாதிரியான ஒரு கூட்டம் 2001 உள்ளாட்சி தேர்தல் வன்முறையை கண்டித்து நடந்ததா? எனக்கு தெரிந்து நடக்கவில்லை...

கடைசி மற்றும் முக்கியமான கேள்வி

6. இந்த மாதிரியான தேர்தல் வன்முறையில் மக்களின் பங்கு என்ன? 2001ல் இப்படியான ஒரு தேர்தல் வன்முறை நடந்திருந்த போதும் மீண்டும் அது மாதிரியான தேர்தல் வன்முறை செய்ய எப்படி ஆளும் கட்சிக்கு தைரியம் வந்தது? ஒரு வேளை மக்களின் மறதி தான் இதற்கான காரணமோ? இந்த மாதிரியான வன்முறைகளுக்கு மக்கள் எப்படியான எதிர்வினையை காட்ட வேண்டும்? ஒரு வேளை 2001 தேர்தல் வன்முறையின் போதே இப்படியானதொரு கூட்டம் நடத்தி மக்களிடம் விழிப்புணர்வு ஏற்படுத்தியிருந்தால் 2006ல் இந்த ரீ-ப்ளே நடக்காமல் இருந்திருக்குமோ?

குழலியும் குசும்பனும் ஒன்றே

தமிழ்சசி, தமிழ்பார் என்பதில் இருவருடையதும் தமிழ் தமிழ் என்று ஆரம்பிப்பதால் இவர்கள் இருவரும் ஒன்றே என்ற லாஜிக்படி 'கு'ழலியும் 'கு'சும்பனும் ஒன்றே, இருவரின் பெயரும் 'கு' வன்னாவில் ஆரம்பிக்கிறது, இருவருடைய IPயும் எண்களாகவே இருக்கிறது மேலும் IP எண்களுக்கு இடையில் புள்ளி வேறு இருக்கின்றது, ஆகவே குசும்பனும் குழலியும் ஒன்றுதான் ஒன்றுதான் ஒன்றே தான்.

ஆப்படிச்சி கவுந்து போன இமேஜை எப்படியெல்லாம் தூக்கி நிறுத்த வேண்டியிருக்குது, ஒரே கல்லுல மூனு மாங்கா, இப்போ சரக்கு சப்ளைக்காரரும், வீரக்காரரும் ஏதோ ஆபாசமாக எழுதிய மாதிரி பேர் வாங்கிடுவாங்க, இவரையும் போட்டு தள்ளிய மாதிரி ஆனது, நடுநிலை முகமூடி கிழிந்து தொங்கிக்கொண்டிருப்பவர்கள் உஷாராக பின்னூட்டமளிக்கவும்.

கொலசாமிகளா இன்னைக்கி படையல் இங்கே.... என்சாய்.....

திமுக, பாமக வடமாவட்ட அரசியல்-2

திமுக, பாமக வடமாவட்ட அரசியல் என்ற சென்ற பதிவின் தொடர்ச்சி இங்கே...

சென்ற பதிவில் கூட்டணியில் பாமக, விடுதலை சிறுத்தைகளுக்கான அழுத்தம் பற்றி கூறியிருந்தேன், அந்த அழுத்தமென்னவென்றால் திமுகவிற்கு பாமகவை வெற்றிபெறவைப்பதைவிட பாமகவிற்கு திமுகவை வெற்றிபெற வைக்க வேண்டிய கட்டாயம் நிறைய உள்ளது, உதாரணத்திற்கு கடலூர் மாவட்டத்தில் பண்ருட்டியில் பாமக போட்டியிட்டது அதை சுற்றியுள்ள நெல்லிக்குப்பம், கடலூர், குறிஞ்சிப்பாடி தொகுதிகளிலெல்லாம் திமுக போட்டியிட்டது, பண்ருட்டியில் பாமக தோல்வியுற்றால் அது பாமகவின் தோல்வியாக மட்டுமே கருதப்படும், பண்ருட்டியில் பாமக தோல்வியுற்றால் கூட்டணி கட்சியான திமுகவின் பலம் கேள்விக்குள்ளாக்கப்படாது, ஆனால் நெல்லிக்குப்பம், கடலூர், குறிஞ்சிப்பாடி போன்ற தொகுதிகளில் திமுக தோல்வியுற்றால் அதை திமுகவின் பலம் குறைந்ததாகவோ, முழுக்க முழுக்க திமுகவின் தோல்வியாகவோ பார்க்கப்படாது, ஆனால் பாமக கூட்டணி வைத்தும் தோல்வியுற்றால் அந்த தோல்வியின் பெரும் பங்கு பாமகவை வந்து சேரும், அதனால் அடுத்த தேர்தல்களில் பாமகவின் bargaining power குறைந்துவிடும், இதே நிலை தான் விடுதலை சிறுத்தைகள் அமைப்பிற்கும், கடந்த தேர்தலில் தொல்.திருமா அவர்களின் பேட்டியை பார்த்தால் தெரிந்திருக்கும், நமது பலம் நமது கூட்டணி கட்சிகள் வெற்றிபெறுவதில் தான் இருக்கிறது, எனவே அதற்கு எந்த தொய்வும் வராமல் விடுதலை சிறுத்தைகள் பாடுபடவேண்டுமென்றார், சொந்த கட்சி தோற்றால் அவர்களின் சொந்த தோல்வி, அதில் திமுக, அதிமுகவிற்கு பங்குள்ளதாக சொல்லப்படாது, ஆனால் கூட்டணி கட்சிகள் தோல்வியுற்றால் அப்போதும் பாமக, விடுதலைசிறுத்தைகளின் பலம் குறைந்துவிட்டதாக சொல்லப்படும், இதனாலேயே கூட்டணியில் பாமக, விடுதலை சிறுத்தைகளுக்கு திமுக, அதிமுகவை விட அழுத்தம் அதிகம்.

திமுகவின் பலமும் பலவீனமும் அதன் மாவட்ட அளவிலான தலைவர்களே, அதாவது மாவட்ட செயலாளர்கள் மற்றும் மாவட்டத்தில் உள்ள செல்வாக்கான திமுக பிரமுகர்கள், வீரபாண்டி ஆறுமுகத்தை தாண்டி திமுகவின் தலைமையால் சேலம் மாவட்டத்தில் எந்த முடிவும் எடுக்க இயலாது, கோ.சி.மணி, துரைமுருகன், பிச்சாண்டி, ஐ.பெரியசாமி என ஒரு பெரிய பட்டியல் உண்டு, இவர்களின் மீது தலைமையால் பெரிய அளவில் எதையும் திணிக்க இயலாது, உதாரணமாக சரத்குமார் 1999ல் திமுக வேட்பாளராக மாவட்ட செயலாளரின் எதிர்ப்பையும் மீறி தலைமையால் அறிவிக்கப்பட்டார் ஆனால் சில ஆயிரம் வாக்குகள் வித்தியாசத்தில் தோல்வியடைந்தார், இதற்கு திமுகவினரின் உள்ளடி வேலையே என்று நேரடியாகவே குற்றம் சாட்டினார் சரத்குமார், அதைத் தொடர்ந்து சரத்குமாரை மேல்சபை உறுப்பினராக ஆக்கியது திமுக தலைமை, ஆனால் உள்ளடி வேலை செய்தவர்கள் மீது தலைமை பெரிய அளவில் எந்த நடவடிக்கையும் எடுக்கவில்லை அல்லது எடுக்க முடியவில்லை.

வடமாவட்டங்களில் பாமக அரசியலில் எதிர்கொள்வது இந்த தலைவர்களையும் அவர்களுடைய ஆதரவாளர்களையும் தான், உதாரணத்திற்கு திண்டிவனம், விழுப்புரம் பகுதியில் பொன்முடியை எதிர்த்து தீவிர அரசியல் செய்வது பாமக, வேலூர், தர்மபுரியில் எல்லாம் திமுக பாமக மோதல்கள் அதிகளவில் இருந்தாலும் சேலம் மாவட்டத்தில் மட்டும் பெரிய அளவிலான மோதல் இல்லாததற்கு காரணம் வீரபாண்டி ஆறுமுகத்திற்கும் பாமகவினருக்கும் உள்ள புரிந்துணர்வுகள், சேலம் மாவட்டத்தில் சட்டசபை தேர்தலில் 11 தொகுதிகளில் 10 தொகுதிகளை பாமக-திமுக கூட்டணி கைப்பற்றியதும் உள்ளடி வேலைகள் ஏதும் இல்லாததே.

கூட்டணியில் பாமகவிற்கான அழுத்தம் அதிகம் என்பதால் திமுகவை எதிர்த்து உள்ளடி வேலைகள் குறைவாக இருந்த போதும் பாமக கூட்டணி கட்சியை எதிர்த்து மாவட்ட திமுக ஏன் உள்ளடிகளில் இறங்கவேண்டுமென்று பார்த்தால் அதில் ஒரு முக்கியமான விடயம் அடங்கியுள்ளது, ஒரு முறை ஒரு தொகுதி பாமகவிடம் சென்று அவர்களும் அதை வென்று விட்டால் அடுத்த தேர்தலில் திமுக கூட்டணியில் இருந்தாலும் அதிமுக கூட்டணிக்கு சென்றாலும் பாமகவினர் சிட்டிங் தொகுதி என்று கூறி அதே தொகுதியை மீண்டும் மீண்டும் கேட்பார்கள், அந்த தொகுதிகளில் கொஞ்சம் கொஞ்சமாக பாமக வின் கை ஓங்கும், இப்படியாக பல தொகுதிகள் வடமாவட்டங்களில் உள்ளன, தொடர்ந்து பண்ருட்டி, விருத்தாசலம், ஆண்டிமடம், வந்தவாசி, திண்டிவனம், எடப்பாடி, தாராமங்கலம் என பல தொகுதிகளை அடையாளம் காணலாம், மாவட்ட திமுகவினர்கள் சிலரை பொறுத்தவரை கூட்டணிக்கட்சிக்கு தொகுதி என்றான பின் அது எப்படியும் திமுகவிற்கு இல்லை, அதனால் அது அதிமுகவிற்கு செல்வதும் பாமகவிற்கு செல்வதும் அவர்களை பொறுத்தவரை பெரிய விடயமில்லை, ஆனால் அந்த தொகுதியில் பாமக வென்றுவிட்டால் மீண்டும் அதே கூட்டணியானாலும் அதிமுக கூட்டணியானாலும் அதே தொகுதியை கேட்பார்கள், இதனால் அவர்களின் உள்ளூர் அரசியலுக்கு சவாலாக பாமக ஆட்கள் இருப்பார்கள் என்பதே, உதாரணமாக இன்றைக்கு பண்ருட்டி உள்ளூர் அரசியலில் பாமக வேல்முருகனை தவிர்க்க முடியாது, கூட்டணியில் இருந்தாலும் இவர் தோற்றிருந்தால் அடுத்த முறை இதே தொகுதியை கேட்பதற்கு பாமக தயங்கும், ஆனால் இதே தொகுதியில் தொடர்ந்து சில முறைகள் வெற்றிபெற்றுள்ளதால் வருங்காலத்திலும் எந்த கூட்டணியென்றாலும் பண்ருட்டி தொகுதியை பாமக கேட்கும், இது மாதிரியான காரணங்களே திமுகவின் உள்ளடிகளுக்கு காரணம்.

இப்படியான உள்ளடிகள் அதிமுக-பாமக கூட்டணியில் பெரும்பாலும் ஏன் ஏற்படுவதில்லை என்றால் அதிமுகவை பொறுத்தவரை இது மாதிரியான வலுவான தலைவர்கள் மாவட்ட அளவில் இல்லாமலிருப்பது, மேலும் அதிமுகவை பொறுத்தவரை உள்ளூர் அரசியலில் பாமகவினர் அச்சுருத்தலாக இருப்பதில்லை(ராசிபுரம், திண்டிவனம், சிதம்பரம் போன்ற ஒரு சில இடங்களை தவிர), மேலும் பாமகவின் வளர்ச்சி அதிமுகவை பெரும்பாலும் பாதிப்பதில்லை, அதிமுக தலைமையின் மீதிருக்கும் அதிகபட்ச பயம் எல்லாவற்றிற்கும் மேலாக அதிமுக தொண்டர்களிடம் திமுக எதிர்ப்பு என்பது இரத்தத்திலேயே ஊறியது, அதனால் கூட்டணிகட்சி போட்டியிட்டாலும் அதிமுகவினரை பொறுத்தவரை திமுகவினர் வெற்றிபெறக்கூடாது என்று வெறியோடு இயங்குவது, இவைகளே கீழ்மட்ட அளவில் பாமக-அதிமுக கூட்டணியினர் உறுத்தல்கள் இல்லாமல் இணைந்து செயல்பட முடிகின்றது.

மேல்மட்டத்தில் திமுக-பாமக தலைமையின் கருத்தியல்கள், கொள்கைகள் பெரும்பாலும் ஒத்திருப்பது, மேல்மட்டத்தில் இந்த கூட்டணி இயல்பாக தெரிந்தாலும் மாவட்ட, உள்ளூர் அரசியலில் மேற்கூறிய காரணங்களால் மாவட்ட அளவிலான தலைவர்கள், தொண்டர்கள் இணைந்து செயல்படும்போது நிறைய உறுத்தல்கள் உள்ளன, இதுவே "திமுகவில் கலைஞர் அன்பழகன் தவிர மற்றவர்கள் சரியில்லை, அதிமுகவில் ஜெயலலிதா, சசிகலா தவிர மற்றவர்கள் நல்லவர்கள், கூட்டணி கட்சிகளின் வெற்றிக்காக உயிரை கொடுத்து வேலைசெய்வார்கள் " என்று மருத்தவர் இராமதாசின் வார்த்தைகளாக பேட்டியில் வெளிவந்தது.

திமுக-பாமக தலைமைகள் இந்த கூட்டணி உடைபடாமல் தடுக்க வேண்டுமெனில் செய்யவேண்டியவைகள், மருத்துவர் இராமதாசின் ஆக்ரோசமான வார்த்தைகளுக்கான காரணங்களாக நான் நினைப்பது அடுத்த பதிவில்

திமுக, பாமக வடமாவட்ட அரசியல்

கடந்த உள்ளாட்சி தேர்தலில் ஏற்பட்ட திமுக-பாமக கூட்டணி நான்கு தொடர் தேர்தலுக்கு(ஐந்தாண்டுகளுக்கு) பிறகு அதே உள்ளாட்சி தேர்தலால் விரிசல் ஏற்பட்டுள்ளது, இந்த விரிசல் பற்றி வெகுசன அரசியல் பத்திரிக்கைகள் எழுதுவதைப் போல ஒரு பக்கத்தில் அடக்கினால் சரியான புரிதலை தருமா என்ற சந்தேகத்தில் சற்று விரிவாக எழுத முயற்சித்துள்ளேன்.

வடமாவட்ட அரசியலை தொடர்ந்து கூர்ந்து கவனித்து வருபவர்களுக்கு திமுக-பாமக கூட்டணி தொடர்ந்து நான்கு தேர்தல்களுக்கு தாங்கியதே ஆச்சரியகரமான விடயம் என்பார்கள், ஏனெனில் வடமாவட்ட அரசியல் அப்படியானது, தேர்தல் அலைகளையும் அசாதாரண சூழல்களையும் விடுத்து பார்த்தால் பொதுவாக வடமாவட்டங்கள் 1990க்கு முன் திமுகவை தேர்தல்களில் ஏமாற்றியதில்லை, எம்ஜிஆர் அவர்கள் திமுகவை பிளந்து அதிமுகவை உருவாக்கிய போது தென்மாவட்டங்களில் திமுக பாதிக்கப்பட்டு நிறைய இழப்பை சந்தித்த போதும் வடமாவட்டங்களில் திமுக பலமாகவே இருந்தது, இதற்கு முக்கிய காரணம் திமுகவிற்கு பலமான வாக்கு வங்கியாக இருந்த வன்னியர் சமுதாயம், அதே சமயம் தலித்களின் வாக்குகள் பெருமளவிற்கு அதிமுகவிற்கு சென்று கொண்டிருந்தது, காங்கிரசுக்கு வன்னியர்களிடமும் தலித்களிடமும் ஆதரவு இருந்தாலும் பல மாவட்ட அளவிலான தலைவர்கள் இவ்விரு சமுதாயத்தை சேர்ந்தவர்களாக இல்லை, ஆனால் 1984ல் வன்னியர் சங்கம் வடமாவட்டங்களில் ஒரு பலம்மிக்கதான எழுச்சி ஏற்பட்ட போது கிராம அளவில் திமுகவில் இருந்த பலர் வன்னியர் சங்கத்திற்கு நிறைய வேலை செய்தார்கள், 1987ல் வன்னியர் சங்கத்தின் சாலைமறியல் போராட்டத்தின் போதும் அதன் முன்பும் பிறகும் வடமாவட்டங்களில் திமுகவும் வன்னியர் சங்கமும் பல இடங்களில் மோதிக்கொண்டன, பொதுவாக ஒரு அமைப்போ கட்சியோ வலுவாக உருவாகும் போது அந்த அமைப்பும் ஆளுங்கட்சியும் தான் மோதிக்கொள்ளும், ஆனால் வடமாவட்டங்களில் அந்த காலகட்டத்தில் நடந்ததோ வன்னியர் சங்கமும் அந்த நேரத்தில் எதிர்கட்சியாக இருந்த திமுகவும் பல இடங்களில் மோதிக்கொண்டன.

பாமக என்ற அரசியல் கட்சி 1989ல் உருவாகி சில மாதங்களிலேயே 1989ல் நாடாளுமன்ற தேர்தலையும் சந்தித்தது, சென்னையிலிருந்து தஞ்சை வரை எப்போதுமே திமுகவின் கோட்டையாக இருக்கும், தஞ்சைக்கு தெற்கே கொஞ்சம் கொஞ்சமாக திமுகவிற்கு வலுகுறைந்து வந்து மதுரைக்கு தெற்கே அதிமுக பலமானதாக இருக்கும் 1989 நாடாளுமன்ற தேர்தலில் மொத்த தமிழகத்திலும் திமுக ஒரு இடம் கூட வெற்றி பெறவில்லை என்றபோதும் முதல் தேர்தலிலேயே பாமக 7%வாக்குகள் வாங்கியதும் வாக்குவித்தியாசம் அதிமுக-காங்கிரஸ் கூட்டணிக்கும் திமுகவிற்கும் இடையே வடமாவட்டங்களில் பல இடங்களில் ஒரு இலட்சத்திற்கும் மேல் இருந்ததற்கு காரணம் பெரும்பாலும் திமுகவிற்கும், கொஞ்சம் காங்கிரசுக்கும் வாக்களித்து வந்த வன்னிய சமுதாயத்தில் பலர் பாமகவிற்கு வாக்களித்தது, திமுகவின் பலமான வாக்குவங்கியாக இருந்த சமுதாயத்தின் வாக்குகளை எப்போது பாமக பிரித்ததோ அப்போதே ஆரம்பமாகிவிட்டது இரண்டு கட்சிகளுக்குமான போட்டி, அன்றிலிருந்து இன்றுவரை வடமாவட்டங்களில் திமுகவை மிதித்துதான் பாமக வளரமுடியும், பாமகவை மிதித்துதான் திமுக இருக்க முடியும் என்ற நிலை, வன்னிய சமுதாயத்தின் வாக்கு வங்கியில் சரிவு ஏற்பட்டவுடனேயே திமுகவிற்கு வடமாவட்டங்களில் முதலியார்(உடையார்) சமூகத்தின் ஆதரவு கொஞ்சம் கொஞ்சமாக அதிகரிக்க ஆரம்பித்தது( திமுகவின் ஏ.ஜி.சம்பத் கை இறங்கி பொன்முடி கை விழுப்புரம் மாவட்டத்தில் ஓங்கியது இந்த நேரத்தில் தான்), பாமக திமுகவின் வாக்கு வங்கியில் மட்டும் கைவைக்கவில்லை, காங்கிரசிலும் கைவைத்தது, தமிழகம் முழுவதும் ஓரளவிற்கு செல்வாக்காக பெரும்பாலும் எல்லா இடத்திலும் மூன்றாமிடத்தில் இருந்த காங்கிரஸ் பாமகவின் தோற்றத்திற்கு பின் வடமாவட்டங்களில் மூன்றாவது இடத்தை பாமகவிடம் இழந்தது, அதனால் காங்கிரஸ் கட்சிக்கு பெரும்பக்கபலமாக இருந்த ரெட்டியார் சமூகத்தினரும் திமுக பக்கம் சாய ஆரம்பித்தனர், இப்படியாக தொடர்ந்து திமுக வடமாவட்டங்களில் முதலிடத்தில் இருந்தாலும் அதன் வாக்கு வங்கிக்கு கடுமையான சரிவு ஏற்பட்டது முழுதும் சரியாகவில்லை, அதிமுகவிற்கும் இலேசான சரிவிருந்தாலும் அது வெளித்தெரியுமளவிற்கு பாதிப்பில்லை.

சென்ற ஆண்டு மே மாதத்தில் நான் எழுதிய மருத்துவர் இராமதாசுவின் மீதான சொல்லடிகள் - ஒரு அலசல்-2 என்ற பதிவிலிருந்து சிலவரிகளை இங்கே தருகிறேன்.

பாமக உருவானதால் பாதிக்கப்பட்ட கட்சிகள் திமுகவும், காங்கிரசும் தான். வன்னியர்களின் வாக்கு வங்கி திமுகவிடமும்,காங்கிரசிடமும் இருந்தது, ஆனால் பாமக கிட்டத்தட்ட மொத்தமாக அந்த வாக்குவங்கியை தன் பக்கம் திருப்பிக்கொண்டது திமுகவிற்கு அந்த கோபம் இன்னும் இருக்கின்றது, அதுவும் இல்லாமல் இட ஒதுக்கீட்டில் உயிரை கொடுத்து போராடியது வன்னிய இனம் ஆனால் இன்னும் 108 சாதியையும் பட்டியலில் இனைத்தது திமுக அரசாங்கம் அந்த கோபமும் கருணாநிதி அவர்கள் ராசதந்திரமாக நினைத்துக்கொண்டு 1996 தேர்தலிலே செய்த கூட்டணி துரோகமும் இன்றைக்கும் கூட திமுக பாமக விடையே chemistry work out ஆகாமல் இருக்கிறது. திமுக வை எதிர்க்கும் போது பாமகவினர் காட்டும் ஆவேசம், அதிமுக வை எதிர்க்கும் போது காட்டுவதைவிட பல மடங்கு அதிகம்.

2006 சட்டமன்ற தேர்தல் நேரத்தில் பதிவுகள் எழுதியிருந்தேன், அப்போது ஒரு அனானி கேட்டார் திமுக-பாமக கூட்டணி தேர்தலில் தோற்றால் என்ன காரணம் சொல்வீர்கள் என்றார், அப்போது பதிலளித்திருந்தேன் திமுக-பாமகவிடம் மேல்மட்ட அளவில் இருக்கும் ஒற்றுமை கீழ்மட்டங்களில் இல்லாததும் உள்ளடி வேலைகளும் தானென்று.

ஏன் திமுக-பாமக கூட்டணியில் மட்டும் இந்த உள்ளடி, இது ஏன் அதிமுக-பாமக கூட்டணியில் இல்லை என்பவர்களுக்கு இந்த உள்ளடி விடுதலை சிறுத்தைகள் - அதிமுக கூட்டணியின் போது நடக்கும், அது தான் கடந்த சட்டமன்ற தேர்தலில் நடந்ததும் கூட.

இந்த உள்ளடிகளில் ஏன் பாமகவும், விடுதலைசிறுத்தைகளும் அதிகம் பாதிக்கப்படுகிறது?

பாமக-விடுதலை சிறுத்தைகளுக்கு கூட்டணியில் உள்ள தேர்தல் அழுத்தம் பற்றிய சில அலசல்கள், பாமக திமுக நேரடியாக மோதும் உள்ளூர் அரசியல், சட்டமன்ற உள்ளாட்சி தேர்தல்களில் நடந்த சில உள்ளடிகள்,திமுகவில் கலைஞர் அன்பழகன் தவிர மற்றவர்கள் எல்லாம் மோசம், அதிமுகவில் ஜெயலலிதா, சசிகலா தவிர மற்றவங்கல்லாம் நல்லவங்க, அதிமுக தொண்டன் கூட்டணிக்காக உயிரைக்கொடுத்து வேலை செய்வான் என்று மருத்துவர் இராமதாசு சொன்னதன் பின்னனி, திமுக மாவட்டசெயலாளர்கள் மீதான பாமகவின் விமர்சனங்கள் பற்றிய அலசல்கள் வரும் பதிவுகளில்.

http://www.eci.gov.in/StatisticalReports/LS_1989/Vol_I_LS_89.pdf

பல்லாண்டு வாழ்க



உன் இருப்பே
சிலருக்கு எரிச்சல்

நீ இருக்கவேண்டும்
சிலரின் எரிச்சலுக்காகவேனும்

பில்லி சூனியம் வைத்து
கொல்லமுடிந்திருந்தால்
கொன்றிருப்பார்கள்
உன்னை!

சத்ருநாச யாகம் செய்து
கொல்லமுடிந்திருந்தால்
கொன்றிருப்பார்கள்
உன்னை!

அதிகாரம் கையிலிருந்திருந்தால்
அடித்தே
கொன்றிருப்பார்கள்
உன்னை!

எதுவுமே பலிக்கவில்லை
பாவம்
எண்ணுகிறார்கள் நீ
சாகவேண்டுமென

நீ சாகவேண்டுமென
நினைப்பவர்கள் சிலர்
நீ வாழவேண்டுமென
நினைப்பவர்களோ
சில கோடி

உன் இருப்பே
சிலருக்கு எரிச்சல்

அதற்காகவே
நீ
வாழ்க பல்லாண்டு

பின்குறிப்பு:
மனவிகார பின்னூட்டங்கள் வெளியிடப்படாது, அதற்கு வேறு இடம் பார்க்கவும்