ஈழத்தமிழர் பிரச்சினை மீண்டும் ஒரு தீக்குளிப்பு

‍‍இலங்கைத் தமிழர் பிரச்னைக்காக‌ இன்னொரு இளைஞர் தீக்குளிப்பு. என்ற செய்தியை தொடர்ந்து சென்னைக்கு தொடர்பு கொண்ட விசாரித்த போது திண்டுக்கல் மாவட்டம் வத்தலக்குண்டுவை சேர்ந்த ரவி என்ற விடுதலை சிறுத்தைகள் அமைப்பை சேர்ந்தவர் தீக்குளித்தது உண்மையென்றும் இவர் மாணவர் என்றும் தெரியவந்துள்ளது.

ஒரு முத்துகுமார் போதும், வேண்டாமே மீண்டும் மீண்டும் இந்த தீக்குளிப்புகள், மிகுந்த துயரத்தை தருகின்றது. முத்துகுமார் தந்த துயரமே தாங்கவில்லை இப்போது ரவியுமா?

தலைவர்களும் தொண்டர்களும் வெவரமாத்தானே இருக்கானுங்க முத்துகுமரா


முத்துக்குமரா போயும் போயும் இந்த ஈன தமிழினத்துக்காக உயிர்விட்டாயே, ஏதோ உணர்ச்சிவசப்பட்டு தெளிவில்லாமல் லூசுத்தனமாக எரித்துக்கொண்டாய் என்று திட்டிக்கொண்டே தான் உன் கடிதத்தை படிக்க ஆரம்பித்தேன், பாதி படிக்கையிலேயே தெரிந்து போனது நீ தெளிவில்லாமல் எரித்துக்கொள்ளவில்லை, அரசியல், சமூகம் உலக வரலாறு என அத்தனையும் தெரிந்தே இருந்திருக்கிறாய் என்று.

தலைவன் கேட்கிறான் நான் ஆட்சி இழந்தால் நாளையே தமிழீழம் கிடைத்துவிடுமா என்று, தொண்டன் கேட்கிறான் நான் பதிவு போட்டா நாளைக்கே தமிழீழம் கிடைக்குமா என்று, நாளையே தமிழீழம் கிடைக்குமென்றால் நான் கத்திக்கொண்டே இருக்க தயார் என்கிறான், இப்படிபட்ட வெவரமான தலைவனும் அந்த தலைவனுக்கேற்ற வெவரமான தொண்டனும் வாழ்கிற நாட்டில் உனக்கு மட்டும் ஏனடா இப்படி கேட்க தோன்றவில்லை, இந்த தலைவனும் தொண்டனும் நாளை கேட்பார்கள் நீ செத்து போனதால் தமிழீழம் கிடைத்துவிட்டதா என்று?

மத்தியில் ஆட்சியின் பங்களியாக இருந்து கொண்டே எல்லா கேபினேட் முடிவுகளுக்கும் தலையாட்டி கொண்டு இங்கே வந்து அறிக்கையில் சத்தத்தையும் பேட்டிகளில் உணர்ச்சி கூச்சல் போடும் தலைவர்கள் தான் தமிழை பாதுகாக்க போகிறாராம் மீனுக்கு வாலும் பாம்புக்கு தலையும் காண்பிக்கும் தமிழ் பாதுகாவலர். எவ்வளவு வெவரமா இருக்காங்க பாருடா முத்துகுமரா.

எந்த தியாகத்துக்கும் தகுதியான இனம் அல்லடா இந்த மானம் கெட்ட தமிழினம். உன்னை ஓரிருநாளில் புதைச்சிருவாங்க, அப்புறம் அடுத்த வருசம் எவனாவது நினைவு வைத்திருந்தால் பாஸ்போர்ட் சைஸ் புகைப்படத்தோட ஒரு நினைவு அஞ்சலி வரும், அதுக்கு பின் அதுவும் நின்னு போயிரும்....

ஆனால் உன்னை போன்ற உணர்வாளர்கள் ஆயிரத்தில் ஒருவன் தானடா, உன்னை போன்ற உணர்வோடு ஆழ்ந்த அறிவும் எழுத்தாளுமையும் உடையவர்கள் இலட்சத்தில் ஒருத்தன் தானடா, அடையாளத்திற்காக தமிழை பயன்படுத்தி அதில் பணத்தையும், புகழையும் அறுவடை செய்யும் தலைவர்களும், எழுத்தாள தொண்டர்களும் உள்ள கூட்டத்தில் உன் போன்றவன் கோடியில் ஒருவன் தானடா? ஏன்டா போய்விட்டாய்?

உன் மரண செய்தியை கூட மழுங்கடித்தது கலைஞர் டிவி, ஹிந்து வோ செய்தியாக கூட போடவில்லை, மற்றவர்களும் லேசாக காண்பித்தன. போதும்டா முத்துகுமரா போய்ட்டு வா... ஆனால் ஒன்று எந்த தியாகத்துக்கும் தகுதியான இனம் அல்லடா இந்த மானம் கெட்ட தமிழினம்.

முத்துகுமாரின் கடைசி கடிதம் "விதியே விதியே என்செய் நினைத்திட்டாய் என் தமிழ் சாதியை... " படிக்க இங்கே செல்லுங்கள்

கெஞ்சி பிழைக்கும் தமிழினத்துக்கு குடியரசு தினம் ஒரு கேடா?

இம்மாதிரியான ஒரு நிலை தமிழினத்துக்கு எப்போதும் வந்ததில்லை, இதற்கு முன் எத்தனையோ சோதனைகள் வந்திருந்த போதும் அந்த நேரத்தில் இனப்போராட்டங்கள் நடத்த முடியுமென்ற நம்பிக்கையும் தன்னலமில்லா தலைமையும் இருந்தன.

நம் முன் இன்று இரண்டு முக்கிய விசயங்கள், இந்தியாவில் தமிழகத்தின் பங்கென்ன? தமிழகத்தில் தமிழ் இன அரசியல் எப்படியுள்ளது?

தமிழனனின் கச்சத்தீவு நிலங்களும் உடைமைகளும் இந்திய அரசினால் இலங்கைக்கு தாரை வார்க்கப்பட்டது மட்டுமின்றி தேவிகுளம்,பீர்மேடு, கோலார், சித்தூர், திருப்பதி என கர்நாடகா, கேரளா, ஆந்திரம் என சுற்றியுள்ள அனைத்து பிற தேசிய இன மாநிலங்களுக்கும் இந்திய அரசால் வழங்கப்பட்டுள்ளது.

நிலம் மட்டுமின்றி நீர் ஆதாரங்களும் இயற்கை அளித்த நிலக்கரி தமிழ்நிலத்தின் தாது வளங்களும் இந்தியாவினால் சுரண்டப்படுகிறது.அன்று கச்சத்தீவு தாரை வார்க்கப்பட்ட போதும் இந்திய அரசிடம் கெஞ்சல், இன்று தமிழினம் அழிக்க உதவிசெய்யாதே என்றும் வெறும் கெஞ்சல்.

தண்ணீருக்கு கெஞ்சல், மீனவர்களை கொல்வதை தடுக்க கெஞ்சல், பெரியாறு அணைக்கு கெஞ்சல், கண்ணகி கோவில் வழிபாட்டுரிமைக்கு கெஞ்சல்,கெஞ்சுவதும், பிச்சையெடுப்பதும், கோரிக்கை வைத்துமே ஒரு தமிழ் தேசிய இனம் வாழும் இலட்சணத்துக்கு குடியரசும் சனநாயகமும் தான் ஒரு கேடா?

இதற்கு முன்பு இந்திய அரசில் எந்த வலுவும் பிடியுமில்லாமல் இருந்த நிலை, ஆனால் எந்த தேசிய கட்சிக்கும் பெரும்பாண்மை இல்லாத காரணத்தால் இப்போது இந்திய அரசின் உச்சிகுடுமியே தமிழகத்தின் கையில், ஆனால் ஈழத்தமிழர்களின் மீது நடத்தப்படும் இன அழிப்பை தடுக்க இந்திய தலைமைக்கு எந்த அழுத்தத்தையும் தர சுயநல தமிழக தலைமைகள் தயாராக இல்லை.முன்பு தமிழினம் அழிவை எதிர்நோக்கிய போதெல்லாம் குறைந்தது போராடமுடியுமென்றும் அதற்கான போர்வாளாக தமிழின தலைமைகள் இருக்கும் என்ற நம்பிக்கை இருந்தது, ஆனால் இன்றோ தமிழின தலைமைகள் துரு பிடித்த போர்வாள்களாக பயனற்று உள்ளன. தம்மால் முடிந்த ஒரு அழுத்தத்தை தம் தயவால் இருக்கும் அரசுக்கு தமிழினத்துக்காக தரமுடியாத சுயநல தலைமைகள்.

தமிழினத்துக்கு எதிரான தலைமைகளும் கட்சியும் எப்போதும் ஏதோ ஒரு பெயரில் இருக்கவே செய்யும், அதை எதிர்க்க சுயநலமில்லா, புள்ளை குட்டிகளின் பதவிக்காக கோமணத்தையும் கழற்றி தராத, அதிகாரத்துக்காக தம் இனத்தை அழிவை தடுக்காத தலைமையை தேர்ந்தெடுப்போம், துரு பிடித்த போர்வாள்களை தூக்கி எறிவோம்.

அடப்போய்யா லூசு குடியரசு தின சிறப்பு நிகழ்ச்சிகள்னு நாலு படம் போட்டிருக்காங்க, நடிகைகளின் சிறப்பு பேட்டிகள் டிவியில் அதை பார்ப்போமான்னா இல்லாம சும்மா கத்திக்கினு.... வந்தே மாதரம்....

ஈழத்தமிழனா? புலிகள் அழிந்து போகட்டும் - கருணாநிதியின் கடுப்பு

நாளை ஈழம் உருவாகுமென்றால் ஆட்சியையே இழக்க தயாரென்று மற்றுமொரு காமெடியை ஆரம்பித்து வைத்துள்ளார் தமிழின தலைவர்(?) மு.கருணாநிதி.

இதற்கு முன் இரு முறை ஆட்சியை கருணாநிதி ஏன் இழந்தார் என்பதை நாக.இளங்கோவன் அவர்கள் தெளிவாக விளக்கியுள்ளார் இங்கே

தமிழின உணர்வாளர்களிலிருந்து எல்லோருக்கும் கலைஞரின் அமைதியை கண்டு ஆச்சரியமும் ஆவேசமும் குழப்பமும் அடைந்துள்ளார்கள், ஈழப்போராட்டத்தின் பிரச்சினைகளுக்கு முதல்வர் கருணாநிதி இப்போது புதிய கண்டுபிடிப்பாக சொல்லிக்கொண்டிருப்பது பிற போராளி இயக்கங்களுடனான புலிகளின் மோதல் என்றும் அதையே கிளிப்பிள்ளை போல பல உடன்பிறப்புகள் நம்புவதும் கருணாநிதிக்கும் திமுகவிற்கு இவர்கள் வாழ்க்கைப்பட்டவர்கள்(நன்றி அறிவுமதி) என்று மீண்டும் மீண்டும் நிரூபிக்கிறார்கள்.

இதற்கும் மேல் யாராவது உண்ணாநிலை போராட்டம், போராட்டம் என்றால் அய்யகோ... ஆரிய சதியை பாரீர் என்று போலி கூச்சல் வேறு.

தயாநிதி மாறனுக்கு கேபினேட் மந்திரி பதவி வாங்குவதற்கும், டிஆர்ஸ் சந்திரசேகருக்கு அளிக்கப்பட்ட கப்பல் போக்குவரத்து துறையை அடம்பிடித்து மீண்டும் வாங்கிய கருணாநிதிக்கு ஈழத்திற்காக சோனியாவிடம் ஒரு துரும்பை கூட தூக்கி போடமுடியாததன் காரணம் என்ன? கருணாநிதியால் முடியது என உடன்பிறப்புகள் தொடர்ந்து நினைக்கலாம், ஆனால் கருணாநிதி யின் புலிகளின் மீதான "ஈகோ" ஈழத்தமிழருக்காக எதையுமே செய்ய நினைக்கவில்லை என்பதே காரணம்.

கருணாநிதி எந்த காலத்திலும் ராஜீவ்காந்தி கொலைக்கு முன்பு பின்பு என எக்காலத்திலும் விடுதலைபுலிகளுக்கு ஆதரவாக இருந்ததில்லை, ஏனெனில் விடுதலைப்புலிகளின் காட் ஃபாதராக திகழ்ந்தது எம்ஜிஆர் அவர்கள். மேலும் இன்றைக்கும் ஈழத்தமிழர்களின் குறிப்பாக புலி ஆதரவு பகுதியில் எம்ஜிஆர் தான் ஹீரோ, அங்கே கலைஞர் வெறும் ஜீரோ தான்.

80களின் மத்தியில் ஈழத்தமிழ் போராளி இயக்கங்களுக்காக கருணாநிதி திரட்டியபோது(இதுவும் கூட எம்ஜிஆருக்கு போட்டியாக)கருணாநிதியிடமிருந்து நிதி பெறக்கூடாது என பிரபாகரனுக்கு எம்ஜிஆர் தெரிவித்தார்.

போராளிகள் தமிழகத்தில் இருந்த காலகட்டங்களில் எத்தனையோ தலைவர்களோடு பழகிய புலிகள் கருணாநிதியுடன் எந்த நெருக்கத்திலும் இருந்ததில்லை.

எம்ஜிஆருக்கு புலிகள் செல்லபிள்ளைகள் என்றால் கருணாநிதியின் செல்லபிள்ளைகள் டெலோ, இந்த டெலோ இப்போது இருக்குமிடம் தெரியாமல் உள்ளது, ஈழப்போராளிகள் எம்ஜிஆரா கருணாநிதியா என்றால் கருணாநிதி பக்கம் என்ற அமிர்தலிங்கத்தை கொலை செய்தது புலிகள் என்பதாலும் தற்போது ஈழத்தமிழர்கள் அழிவு என்றால் அதில் புலிகளும் சேர்ந்ததே என்பதுமே கருணாநிதியின் கனத்த மவுனத்தின் பிண்ணனி காரணங்கள்.

புலிகள் சரியா தவறா என்பதை விட புலிகளை அழிக்கிறோமென மொத்த ஈழத்தமிழர்களையும் அழிக்கும் சிங்கள, இந்திய அரசாங்கங்களுக்கும், தன் ஈகோவிற்காக ஈழத்தமிழினமே அழிந்தாலும் பரவாயில்லை புலிகள் அழிந்து போகட்டும் என அமைதிகாக்கும் தமிழின தலைவர்(?) கருணாநிதியும் காரணமே.

தன் இனத்திற்காக அதன் மேன்மைக்காக, அதன் சுதந்திரத்திற்காக உயிரையும் தர தயாரக உள்ள, தந்த தமிழர்கள் எங்கே? தன் சொந்த ஈகோவிற்காக தமிழீழ இனமே அழிந்தாலும் பரவாயில்லை என இருக்கும் தமிழினதலைவர் எங்கே.

பார்பனியத்திற்கு எதிர்ப்பு, ஜெயலலிதாவுக்கு எதிர்ப்பு என்று கூறி அரசு, அதிகாரம், தொழில்,மகன், மகள், சொந்தம் பந்தமென எல்லாவற்றிற்காகவும் மேலும் சொந்த ஈகோவுக்காகவும் தம் இனத்தை அழிக்கும் செயலுக்கு உடைந்தையாக உள்ள தலைமை வேண்டுமா?

தமிழின உணர்வாளர்களே அடையாளம் காண்பீர்கள் புதிய தமிழின தலைமைய, தன் இனத்திற்காக தம் உயிரை தர தயாராகும், இளைய தலைமையாக இருக்கட்டும். தன் புள்ளைகுட்டிகளின் மந்திரி பதவிக்காக எம் இனத்தை அடகு வைக்காத தலைமையாக இருக்கட்டும்.

ராஜீவ்காந்தி சிலைக்கு செருப்பு மாலை, உடைக்கப்பட்ட புனித பிம்பம்

தமிழகத்திலே உயிரிழந்த ஒரே காரணத்திற்காக யாராலும் விமர்சிக்கப்படாத புனித பிம்பமாக திகழ்ந்து கொண்டிருக்கிறார் ராஜீவ்காந்தி.

ராஜீவ்காந்தியின் எழவுக்கு பின் எந்த அரசியல்வாதியாலும் எந்த பத்திரிக்கையாலும் விமர்சிக்கப்படாதது மட்டுமின்றி ராஜீவ்காந்தி மரணத்தை வைத்து தமிழர்கள் மத்தியில் ஒரு குற்ற உணர்ச்சியும் ஊட்டப்பட்டது.

தமிழக மக்களுக்கு செக்கசெவேலென எவனாவது இருந்தால் அவனை நல்லவனாகவும் புனிதனாகவும் கருதும் கேவலம் உண்டு, ராஜீவ்காந்தி செக்கச்செவேல் என்று இருப்பதலாயே நல்லவரோ புனிதரோ அல்ல, சீக்கியர்களை காங்கிரஸ்காரர்கள் கொன்று குவித்த போது மரம் விழுந்தால் சில அதிர்வுகள் இருக்கத்தான் செய்யும் என்று சீக்கியர்களின் மீதான கொலைகளை நியாயப்படுத்தியவர்தான் ராஜீவ்காந்தி.

குசு குசு என்று பலராலும் ஓரிருவரால் ஓங்கியும் விமர்சிக்கப்பட்டு கொண்டிருந்த ராஜீவ்காந்தியின் புனித பிம்பத்தை வெளிப்படையாக செருப்பு மாலை போட்டு உடைத்திருக்கிறார்கள் விடுதலை சிறுத்தைகள். இதை ராஜீவுக்கு செய்யப்பட்ட அவமரியாதை என்பதை விட, ராஜீவ் மரணத்தின் பெயரால் தமிழர்களிடையே கட்டமைக்கப்பட்டிருக்கும் புனித பிம்பத்தையும், எண்ணத்தையும் மவுனத்தையும் உடைக்கும் நிகழ்ச்சியே, இந்த செருப்புமாலை நிகழ்ச்சி பெரியார் பிள்ளையாரை செருப்பால் அடித்த அதே அதிர்ச்சி வைத்தியத்துக்கு இணையானதே என்று கருதுகிறேன்.

ராஜீவ்காந்தி மரணத்தை பற்றிய விவாதத்தை மே 21, 1991இல் சோனியா அறுத்த தாலியில் இருந்து ஆரம்பிக்க கூடாது, ஈழத்தமிழ்போராளிகளை சுற்றி வளைத்து கையெழுத்து வாங்கியதிலிருந்து (அ)ஹிம்சை நாடான இந்தியராணுவம் ஈழத்தில் அறுத்த தாலிகளின் எண்ணிக்கையிலிருந்தும் தான் ஆரம்பிக்க வேண்டும். ராஜீவ்காந்தியின் மரணம் பற்றி மீண்டும் ஒரு விவாதமும் கட்டுடைப்பும் நடத்த பட வேண்டும்.

இங்கே பதவிக்காக வேட்டி துண்டு என்று மட்டுமல்ல கோமணத்தையே கழற்றி தந்திருக்கும் கட்சிகளின் மத்தியின் தொல்.திருமாவின் போராட்டங்கள் புதிய நம்பிக்கை அளிக்கின்றன.

கட்சத்தீவு மீட்பு - உச்சநீதிமன்ற நோட்டிஸ் - நன்றி செல்வி.ஜெயலலிதா


கச்சத்தீவை இலங்கையிடமிருந்து மீட்கும் நடவடிக்கைக்காக மத்திய அரசிற்கு நோட்டிஸ் அனுப்பியுள்ளது, முன்னாள் முதல்வர் செல்வி.ஜெயலலிதா இது தொடர்பான வழக்கை உச்சநீதிமன்றத்தில் தொடர்ந்த வழக்கிலே இம்மாதிரியான நடவடிக்கையை உச்சநீதிமன்றம் எடுத்துள்ளது...

கச்சத்தீவின் ஒப்பந்த நடைமுறைகளை இலங்கை அரசு சரியாக பின்பற்றாததினால் உலக நீதிமன்றத்தின் படியேறி கச்சத்தீவை திரும்பவும் பெறும் வாய்ப்பிருந்தாலும் தமிழனை கொல்லும் இலங்கை அரசுக்கு பொருளுதவி, இராணுவ உதவிகளும் மட்டுமின்றி ஆட்காட்டி வேலையையும் செய்து வரும் தமிழர் விரோத மத்திய அரசு(அதில் பங்களித்துக்கொண்டிருக்கும் தமிழர் கட்சிகளையூம் சேர்த்ததே மத்திய அரசு) கச்சத்தீவை மீட்கும் எந்த முயற்சியையும் எடுக்குமா என்பது சந்தேகமே...

இலங்கை பத்திரிக்கையில் வெளிவந்துள்ள இந்த செய்தி இன்னும் எந்த இந்திய ஊடகங்களிலும் தமிழ் ஊடகங்களிலும் வெளிவராதது இந்த பிரச்சினையில் எவ்வளவு அலட்சியமாக இந்திய தமிழ் ஊடகங்கள் நடந்து கொள்கிறது என்பது தெளிவாகிறது.

மீனவன் செத்தாலும் ஈழத்தவன் செத்தாலும் இந்திய அரசு எந்த நடவடிக்கையும் எடுக்காது.... தமிழர்களின் நிலத்தை தமிழர்களை இந்தியர்கள் இலங்கைக்கு வாரிவழங்கியதிலிருந்தே தமிழ்மண்ணின் மீதான இந்தியர்களின் எண்ணம் புரிந்ததே

இந்த பிரச்சினையை உச்சநீதிமன்றம் எடுத்து சென்ற முன்னாள் முதல்வர் ஜெயலலிதாவிற்கும் மத்திய அரசிற்கு கட்சத்தீவை மீட்கும் நடவடிக்கைக்காக நோட்டிஸ் அனுப்பிய உச்ச நீதிமன்றத்திற்கும் நன்றி

அடுத்த என்கவுண்டர் நக்சலைட் சுந்தரமூர்த்தியா?


வழக்கம் போல அடுத்த என்கவுண்டருக்கு ஒத்திகை நடக்கிறதோ என்ற சந்தேகம் இந்த வார ஜூவி யில் வெள்ளத்துரையும் வெடிக்கும் சர்ச்சையும்... ''சுடப்போறாங்க சுந்தரமூர்த்தியை!'' என்ற கட்டுரையை படிக்கும் போது தோன்றுகிறது.


சுந்தரமூர்த்தி, சுமார் 18 ஆண்டுகள் தலைமறைவுக் குற்றவாளியாக இருந்து 2006-ம் ஆண்டு திருப்பூரில் கைது செய்யப் பட்ட நக்சலைட்...



டி.எஸ்.பி வெள்ளைத்துரை, அய்யோத்திகுப்பம் வீரமணியை என்கவுண்டர் செய்ததிலிருந்து வீரப்பன் கொலை வரை வெள்ளைத்துரையின் கை இருப்பது தெரிந்தது, இப்போது வெள்ளைத்துரை சுந்தரமூர்த்தியின் பாதுகாப்பு எஸ்கார்ட்டாக செல்வது மிகுந்த சந்தேகத்திற்குரியது மட்டுமல்லாமல் அந்த பேட்டியில் "இதே சுந்தரமூர்த்தி தப்பிக்க முயற்சிசெஞ்சு, என்கவுன்ட்டர் செய்யறதுக்கான சூழ்நிலை அமைஞ்சா, கண்டிப்பா சுடுவேன்!'' என்று வெள்ளைத்துரை சொல்லியிருப்பதும் என்கவுண்டர் சந்தேகத்தை அதிகப்படுத்தியிருக்கிறது.


நக்சலைட்டுகள் ரவுடிகள் போன்றவர்கள் அல்ல, அவர்கள் அரசியல் கைதிகள், அவர்கள் அரசியல் கைதிகளாக நடத்தப்பட வேண்டியவர்கள், அவர்கள் ரவுடிகளை போன்றவர்கள் அல்ல...


நக்சலைட்டுகள் உருவாகக்கூடாதென்றால் அதற்கான சமூக, பொருளாதார, அரசியல் சூழலை உருவாக்க வேண்டும், அடக்குமுறையும் துப்பாக்கிகள் தூக்குவதும் நிச்சயம் எந்த பலனையும் தருவதில்லை...


என்கவுண்டர்கள் எப்போதும் ஆதரிக்கப்படக்கூடாதவைகள்....


என்கவுண்டர்கள் நடந்தன, என்கவுண்டர்கள் நடக்கின்றன, என்கவுண்டர்கள் நடக்கும், ஆனால் ரவுடிகள் பிறந்து இறந்து கொண்டேயிருப்பார்கள், இறந்து பிறந்து கொண்டே இருப்பார்கள், எந்த என்கவுண்டர்களும் ரவுடிகளின் பிறப்பை தடுப்பதில்லை.


ரவுடிகளை சரியான முறையில் கைது செய்யமுடியததை, சரியான முறையில் வழக்கு நடத்தமுடியாததை, சரியான முறையில் தண்டனை வாங்கித்தரமுடியாததை, சரியான சிறை தண்டனை சூழல் அமைக்க முடியாததை எல்லாம் கண்டிக்க முடியாது அதனால் அரசு துப்பாக்கி தூக்குவதையும் கண்டிக்க முடியாது எனலாம், ஆனால் நியாயமான போராட்டங்களையும் கூட அடக்க போலீஸ் ஸ்டேசன் என்றால் என்ன என்றே தெரியதவர்களுக்கும் கூட நள்ளிரவு கைதுகளை அரசாங்கத்தால் உணர வைக்க முடிந்தது, பத்திரிக்கையாளனை பொடாவில் போட முடிந்தது, போராட்டத்தை அடக்க சாதிக்கலவரத்தை தூண்டமுடிந்தது.


நமக்கு பிடிக்காதவர்கள் பாதிக்கப்படுகிறார்கள் என்பதற்காக அரசாங்க அத்துமீறல்களை நாம் கைதட்டி வரவேற்றால், அரசாங்கத்திற்கு பிடிக்காத அரசாங்கத்தால் சமாளிக்க முடியாத நபர்களின் நியாயமான பிரச்சினைகளுக்காக போராடுபவர்களை நோக்கி(அது நீங்களாக கூட இருக்கலாம்) அதே முறையற்ற அரசாங்க அத்து மீறல்கள் திரும்பும்போது நம்மால் ஒன்றும் செய்ய இயலாது.


இது தொடர்பான என் முந்தைய பதிவு "முட்டைரவி இன்னுமொரு என்கவுண்டர்"

தயவு செய்து போரை நிறுத்தாதீர்கள்

கிளிநொச்சி விழுந்துவிட்டது, தயவு செய்து போரை நிறுத்தாதீர்கள் மிச்ச சொச்ச தமிழனையும் அழிச்சி முடிச்சிடுங்க...

உலக தமிழினத்தின் ஒரே தலைவருக்கும், தமிழ்பாதுகாவலருக்கும் இன்னுமொரு தர்ம சங்கடம் வரக்கூடாது...

தயவு செய்து போரை நிறுத்தாதீர்கள் மிச்ச சொச்ச தமிழனையும் அழிச்சி முடிச்சிடுங்க...