விச்சுவின் கேள்விகளுக்கு பதில்

விச்சு அவருடைய பதிவில் நேர்காணல் - என் கேள்விக்கென்ன பதில் நேர்காணலுக்கான என்னுடைய பதில்கள் இங்கே

1. நமக்கு அரசியல் வாதிகள் தேவையா?

நிச்சயம் தேவை என்பது என் கருத்து, பதவியிலிருப்பவர்களுக்கு நல்ல சம்பளம் தரவேண்டும், அதே சமயம் தேர்தல் செலவுகள் மொத்தமும் குறைக்கப்பட வேண்டும், பணம் தேர்தலில் விளையாடக்கூடாது, தேர்தல் விளம்பரங்கள் கட்டுப்படுத்த வேண்டும்,எல்லோருக்கும் ஒரே மாதிரியான செலவில் தேர்தல் விளம்பரங்களை அரசாங்கமே அச்சடித்து தரவேண்டும் , ஊழல் செய்தால் மிகக்கடுமையான தண்டனை தரப்படவேண்டும், ஊழல்வாதிகளின் எல்லா சொத்துக்களும் பறிமுதல் செய்யப்படவேண்டும்.

2. ஈழம் தமிழ் நாட்டின் ஒரு மாவட்டமாக இருந்தால் எப்படி இருக்கும்

நன்றாகத்தானிருக்கும், வரலாற்றில் இதுவரை தமிழர்கள் ஒரு ஆளுமையின் கீழ் வந்ததில்லை, ஆனால் தற்போது தமிழையும் தமிழர்களின் மானத்தையும் ஓரளவு காப்பாற்றி வருவது அவர்கள் தான் ஈழமும் இங்கே இருந்தால் நிச்சயம் தமிழகத்தின் ஆதாரமான அதே சமயம் அவசியமற்ற பிரச்சினைகள் அங்கேயும் இருக்கும், தமிழகத்தின் மற்றொரு பகுதி என்பதை விட வேறெந்த சிறப்பம்சமும் இருக்காது என நினைக்கின்றேன்.

3. ஒரு நாள் இந்தியாவின் பிரதமராக ஆனால் என்ன செய்வீர்கள்? (வேண்டாமென்றால் அமெரிக்காவின் அதிபராக என்று வைத்துக்கொள்ளுங்கள்)

முதலில் வாழ்நாள் முழுவதும் நான் மட்டுமே பிரதமர் என்று சட்டத்திருத்தம் செய்து நிரந்தர பிரதமராவேன்.(நான் என்ன சோனியா காந்தியா, இல்லை மகாத்மா காந்தியா பிரதமர் பதவியை மற்றவர்களுக்குத்தர),

இப்போ நான் ஒரு நாள் பிரதமரல்ல, நிரந்தர பிரதமர் சரியா!

சற்று கடினம் தான் என்றாலும் ஓஷோ அவர்களின் கருத்தின்படி எல்லா குழந்தைகளையும் பிறந்த உடன் பொது காப்பகத்தில் விடவேண்டும், அங்கே யாருடைய குழந்தைகள் என பெற்றோருக்கும் யார் பெற்றோர்கள் என குழந்தைக்கும் தெரியாமல் வளர்க்கவேண்டும் என்பதற்கு ஏற்பாடு செய்வேன்,

அனைவருக்கும் உணவு உடை இருப்பிடத்திற்கு திட்டங்கள் தீட்டி செயல்படுத்தப்படவேண்டும்

மக்களுக்கும் ஊடகங்களுக்கும் கொடுக்கப்பட்டிருக்கும் அதிகப்படியான சுதந்திரத்தை கட்டுப்படுத்த வேண்டும்

தேவையின்றி வீம்புக்காக பணத்தை வாரியிறைத்து இராணுவத்தை நிறுத்தியிருக்கும் இடங்களிளெல்லாம் இப்போதிருக்கும் நாட்டுடன் இருக்க வேண்டுமா தனியாக பிரிந்து போக வேண்டுமா என்று நியாயமான கருத்துக்கணிப்பு நடத்தி முடிவு எப்படியிருந்தாலும் அதை செயல்படுத்துவேன், சில புற்றுநோய்களை குணப்படுத்த முடியாத போது வெட்டிவிடுவதுதான் மற்றைய இடங்களின் வளர்ச்சிக்கும் வாழ்வுக்கும் நன்று.


4. ஒருவரை அழித்தால் உலகம் நாளை முதல் மகிழ்ச்சியாக இருக்கும் என்றால் நீங்கள் யாரை அழிப்பீர்கள்.. ஏன்?

தற்போதைக்கு யாரும் அப்படியல்ல.

5. உங்களுக்கு மூன்று வரம் தருகிறது ஒரு தேவதை.. உங்களுக்கு என்று எதுவும் கேட்கக்கூடாது. என்ன கேட்பீர்கள்.

வரம்-1. சேகுவேரா மீண்டும் பிறந்து வரக்கேட்பேன்

வரம்-2. திரைப்படம் மற்றும் கிரிக்கெட் மாயையிலிருந்து மக்கள் மீளக்கேட்பேன்

வரம்-3. எல்லோரும் எல்லாவற்றையும் மறந்து இன்று புதிதாய் உலகம் பிறக்கக்கேட்பேன்

டோண்டுவின் பெயரில் பின்னூட்டம் - ஒரு பார்வை

வலைப்பதிவுகளில் டோண்டு அவர்கள் மிக கடுமையானதொரு பிரச்சினையை
சந்தித்துக்கொண்டுள்ளார், அவருக்கு ஆதரவாக பல பதிவுகள், பின்னூட்டங்கள்
எல்லாம் வந்துவிட்டன. அவரின் பெயரில் வேறொருவர் பின்னூட்டமிடுவது மிகவும்
கண்டிக்கத்தக்கது, எத்தனை கருத்துபிரச்சினையிருந்தாலும் அதை கருத்தால்
மட்டுமே எதிர்கொள்ளவேண்டும்.

தமிழ்மணம் வரும்முன் சில குழுமங்களிலும் சில ஃபாரம்களையும் படித்துள்ளேன்
பல இடங்களில் வாதம் விவாதமாகி பின் விதன்டாவாதமாகிவிடுகின்றது.
அது பின் ஆபாச வார்த்தைகளை வீசும் கேவலமான இடமாகிவிடுகின்றது
விளைவு அதிலிருந்து பலர் விலகுகின்றனர்.

இங்கு முதலில் தமிழ்மணத்தில் ஒரு விதமான ஆரோக்கியமான சூழ்நிலை
இருந்ததாகவே கருதினேன், பதிவிடுபவர்களும் பின்னூட்டமிடுபவர்களும்
ஒரு மனமுதிர்ச்சியிடன் கருத்துகளை எதிர்கொள்வதாகவே எமக்கு பட்டது

எனவே தான் எளிதில் மற்றவர்களால் தாக்கப்படகூடிய கருத்துகளை கூட
தைரியமாக கூறினேன், அதில் டோண்டுவின் ஊக்குவிப்பும் உண்டு

தமிழ்மணத்தினால் தான் எனக்கு எம்.கே.குமார்,ஈழநாதன்,அன்பு,தாஸீ(ஜோஸ்),விஜய்,ரமேஷ்,ஷாந்தன்,அருள், மூர்த்தி மற்றும் பல நண்பர்கள் கிடைத்தனர்


முத்து,கோ.கணேஷ் இந்த வயதில் இவ்வளவு எழுத்துதிறமையா என வியக்கவைத்தவர்கள், ஈழநாதனின்,சுந்தரமூர்த்தி,சுந்தரவடிவேல் மற்றும்
பலரின் பதிவுகளின் கருத்தாழம் வியக்கவைத்தது.

ஞானபீடத்தின் நகைச்சுவை பதிவுகளும் வீ.எம். எல்.எல்.தாஸீவின் நகைச்சுவையுடன்
கூடிய கருத்து பதிவுகளும், அல்வாசிட்டி விஜயின் பல பரிமாணங்களும் வியக்கவைத்தன என்பதில் வேறு கருத்தில்லை,

டோண்டு அவர்களின் வேலை அனுபவம் பதிவாக வெளிப்பட்டதும், மூர்த்தியின் அற்புதமான பல பதிவுகளும் ரசிகவ் ஞானியார் மற்றும் இப்னு,பஃக்ருத்தீன். கவிதைகளும்
காணக்கிடைக்காதவை, சந்திரவதனாவின் ஒவ்வொரு பதிவும் பாதுகாக்கப்பட வேண்டியவைகள், ரோசாவந்தின் வித்தியாசமான பார்வை ஒரு புது அனுபவம்,

மனுஷ்யபுத்திரனின் எழுத்தில் அதிகம் கவரப்பட்டவன், அவரும் வலைப்பதிகின்றார்
என்றறிந்தவுடம் மிக்க மகிழ்ச்சியடைந்தேன்.

இன்னும் பெயர் குறிப்பிட்டு சொல்லாத எத்தனை எத்தனையோ பதிவுகள் பதிவர்களின்
படைப்புகள் பாதுகாக்கப்படவேண்டியவை ஆனால் என்ன நடக்கின்றது இங்கே?

மாலன் போன்ற எழுத்தாளர்களையே மூட்டை கட்டி அனுப்பிவிட்டோம்,
ஏற்கனவே காஞ்சிபிலிம்ஸ் கடையை மூடிவிட்டார், என்ன ஏதென்று தெரியவில்லை,
தனிமடல் அனுப்பியும் பதிலில்லை, இங்கே டோண்டு மற்றும் சிலரின் பெயரில்
பின்னூட்டமிடுவதும், பின்னூட்டமிடுபவரை பலரும் வசை பாடுவதும் ஆபாசமாக
பேசுவதும் நல்ல ஆரோக்கியமான சூழ்நிலையை தருவதில்லை, இது தொடர்ந்தால்
பலரும் கடையை மூடிவிட்டு சென்றுவிடுவர்.


prejudice midsetல் உள்ளவர்களை விவாதம் செய்து யாரையும் மாற்றமுடியாது,
அவரவர்கள் கருத்தை எடுத்து வைப்போம், ஏற்றுக்கொள்பவர்கள் கொள்ளட்டும்
மறுப்பு தெரிவித்து விளக்கம் சொல்லமுடிந்தால் சொல்வோம் இல்லையென்றால்
அமைதியாக நம் வேலையைப்பார்த்துக்கொண்டு செல்வோம்.

நானும் மற்றொரு வலைப்பதிவரும் கடுமையாக கருத்து மோதல் செய்து கொண்டுள்ளோம், அவர் பதிவை நானும் என் பதிவை அவரும் நையாண்டி
செய்து கொண்டிருக்கின்றோம் ஆனால் எந்த இடத்திலும் நிதானமிழக்கவில்லை

எனவே அடுத்தவர்களின் பெயரில் பின்னூட்டமிடுபவர் சற்று சிந்திக்கவும்
வலைப்பூக்களின் ஆரோக்கியம் கெட்டுக்கொண்டுள்ளது,
அதை உடணடியாக சரிசெய்ய வேண்டும், இல்லையென்றால் காசி,மதி மற்றும்
இன்ன பலரின் நேரத்தையும் உழைப்பையும் சாப்பிட்டு வளர்ந்து வரும் தமிழ்மணம்
அதன் நோக்கத்தை விட்டு தவறிவிட நாம் காரணமாக இருக்கக்கூடாது.

நம்மில் எத்தனை பேருக்கு கண்டிக்க உரிமையிருக்கின்றது.
எத்தனைபேர்களின் உணர்வை முகத்தை காட்டிக்கொண்டும்,
முகத்தை மூடிக்கொண்டும், அனானிமசாகவும் பின்னூட்டங்களிலும்
வலைப்பதிவுகளிலும் கொச்சைப்படுத்துகின்றோம், காயப்படுத்துகின்றோம்.

ஒடுக்கப்பட்ட சமுதாயத்திற்காக பாடுபடும் ஒரு தலைவனின் வெளிநாடு
பயணத்தை கிண்டல் அடிக்கின்றோம், குறிப்பிட்ட சாதியை குறிவைத்து
தாக்குகின்றோம், பல தலைவர்,நடிகர்களின் பின்னால் அவர்கள் சொன்னால்
கேட்கக்கூடிய லட்சக்கணக்கான மக்களின்(நாம சொன்ன நம்ம வீட்டு நாய்குட்டி கூட கேட்காது) உணர்வை பின்னூட்டங்களிலும்
பதிவுகளிலும் கிழி கிழியென்று கிழிக்கவில்லையா?
உயிர்,பொருள் ஆவி கொடுத்து சொந்த மண்ணிற்காக போராட்டம் நடத்திக்கொண்டிருப்பவர்களை அவர்களிம் இதயத்தை கிழித்தெடுத்து தரையில்
போட்டு மிதிக்குமாறு பின்னூட்டமும் பதிவுமிடவில்லையா நாம்?
நமக்கு எந்த அளவிற்கு தட்டி கேட்க உரிமையுள்ளது? அதற்காக கேட்ககூடாது என
சொல்லவில்லை, கேட்கும்போது நம் மனசாட்சியையும் ஒரு முறை கேட்டுக்கொள்ளவேண்டும், அவரை கண்டிக்கும் நாம், அதே தவறை நாமும் செய்யக்கூடாது செய்ய மாட்டோம் என சொல்வோமா?

அவர் செய்யும் தவறு பெரிய அளவு, மற்ற பலர் செய்வது அதனினும் குறைந்த அளவு, அவ்வளவே...
தப்பு என்ன பனியன் சைசா ஸ்மால், மீடியம், லார்ஸ் என்பதற்கு
எல்லாமே எக்ஸ்ட்ரா லார்ஜ் தான்.(நன்றி - அன்னியன் திரைப்படம்)

ஒரு விபச்சாரி(பாலியல் தொழிலாளி)யின் மீது கல்லெறிந்தவர்களை
தவறே செய்யாதவர்கள் கல் எரியட்டும் என ஏசு கூறினாரே,
அந்த கூற்றை ஒரு முறை நாம் சிந்திப்போம்.

இந்த வலைப்பூக்களும் தமிழ்மணமும் நமக்கு கிடைத்த ஒரு
அருமையான ஊடகம், அதை வீணாக்கிவிட வேண்டாம் என்ற ஒரு ஆதங்கம் தான்

இந்த பதிவை கண்டபிறகாவது மற்றவர்கள் பெயரில் பின்னூட்டமிடுவதை
நிறுத்திவிட்டு ஆக்கப்பூர்வமாக, மற்றவர்களின் வயிற்றெரிச்சலை கொட்டிக்கொள்ளாத
வகையில் மற்றவர்களின் மனதிற்கும் ஆரோக்கியத்திற்கும் குந்தகம் விளைவிக்காத
வகையில் எதிர்ப்பை காட்டிக்கொள்ளட்டும், மற்றவர்கள் பதிவில் குழப்பம் ஏற்படுத்தாமல் இருக்குமாறு அவரை கேட்டுக்கொள்கின்றேன். இது தொடர்ந்தால்
தமிழ்மணத்திலிருந்து தொடர்ந்து பலர் விலகுவார்கள் என்பது கசப்பான உண்மை.

பின் குறிப்பு:
இந்த பதிவிடுவதினால் ஏற்படும் பின்விளைவுகள், குத்தப்படும் முத்திரை
அத்தனையும் அறிந்தே இந்த பதிவை இடுகின்றேன். அதைப்பற்றியெல்லாம்
கவலைப்படாமல் தான் இந்த பதிவிடுகின்றேன்.

மேல்மருவத்தூர் செவ்வாடையில் ஒரு சமயப்புரட்சி

எத்தனையோ ஆண்டுகள் மேல்மருவத்தூர் வழியாக சென்னை சென்றும் வந்தும் கொண்டிருந்தேன், ஆனால் ஒரு முறைகூட மேல்மருவத்தூர் ஆதிபராசக்தி
கோவிலினுள் சென்றதில்ல, யாம் ஒன்றும் கடவுள் நம்பிக்கையில்லாதவனல்ல,
ஆனாலும் ஒரு முறை கூட அங்கே செல்லவில்லை, கடந்த முறை தாயகம்
சென்றிருந்தபோது மேல்மருவத்தூர் கோவிலுக்கு செல்ல வேண்டியதாயிற்று.
Image hosted by Photobucket.com
அங்கே சென்றபிறகுதான் தெரிந்தது சத்தமில்லாமல் ஒரு சமயப்புரட்சி நடந்துள்ளதை கண்டுகொள்ள முடிந்தது.

முதலில் மேல்மருவத்தூர் கோவில் பிரபலமாக தொடங்கியது அருள்வாக்கு சொல்வதினால், சாதரணமாக இது மாதிரி அருள்வாக்கு சொல்வது என சில
கோவில்கள் பிரபலமாகும் சில ஆண்டுகளுக்குப்பின் இந்த மாதிரியான அருள்
வாக்கு கோவில்கள் பிரபலம் இழக்கும், ஆனாலும் மேல்மருவத்தூர் கோவிலுக்கு மட்டும் எந்த விதமான வரலாற்று பின்புலமில்லாமல், அவ்வப்போது சங்கராச்சாரியர் மற்றும் சில இந்து மத பெரியவர்களிடமிருந்து மேல்மருவத்தூர் கோவில் வேத,ஆகம விதிகளின் படி செயல்படவில்லை என தாக்குதல் வேறு,இத்தனையிருந்தும் எப்படி இத்தனை மக்கள் சாரி சாரியாக மாலை போட்டு விரதமிருந்து அம்மனை தரிசிக்கின்றனர் என்பது என்னுள் எழுந்த கேள்வி, அம்மனின் சக்தி கோவிலின் சக்தி என்ற விடயங்களுக்குள் நான் செல்லவிரும்பவில்லை, என் கேள்விகளுக்கான விடை கோவிலிலும் அதைத்தொடர்ந்து நான் கவனித்து
வந்த விடயங்களிலும் கிடைத்தது,
Image hosted by Photobucket.com
முதன்முதலில் அங்கே என்னை கவர்ந்தது கோவிலின் சுத்தம், மிக சுத்தமாக கோவில் பராமரிக்கப்பட்டு வருகின்றது, அதற்கு சிறிது நாள் முன்புதான் பல நூற்றுக்கணக்கான ஆண்டு வரலாறுடைய சிதம்பரம் நடராசர் கோவிலுக்கு சென்று அதன் சுத்தத்தை கண்டு மனம் நொந்துபோனேன், யாரேனும் இதற்கெல்லாம் அறநிலையத்துறைதான் காரணம் என கூறுமுன் ஒரு செய்தி சிதம்பரம் நடராசர் கோவில் இந்து அறநிலையத்துறையின் கட்டுப்பாட்டில் வரவில்லை.
Image hosted by Photobucket.com
அடுத்தபடியாக அங்கே தொண்டூழியம் செய்து கொண்டிருந்த செவ்வாடையணிந்த ஆண் பெண் ஊழியர்கள், மிக மரியாதையுடனும், கண்ணியத்துடன் பக்தர்களை நடத்தினர், பல பெரிய வரலாற்றுடைய ஆகம விதிகளின்படி நடப்பதாக சொல்லப்படும்
பெரிய பெரிய கோவில்களில் கூட பக்தர்களை எரிச்சலுடனும் மிகக்கடுமையாகவும், தன்மானத்தை உரசிபார்க்கும் வார்த்தைகளையும் அனுபவித்தவனுக்கு தொண்டூழியர்களின் அமைதியான அன்பான கணிவுடன் மரியாதையாக நடத்திய விதம் மனதை கவர்ந்துவிட்டது.

அடுத்ததாக வழிபாடுகள் புரியாத மொழியில் நடக்காமல், எல்லோருக்கும் புரிந்த எளிய நடையில் தமிழில் நடைபெற்றது,
இதே தமிழ்முறை மற்றும் அந்தந்த ஊரின் மொழியில் வழிபடுதான் ஒவ்வொரு ஊரிலும் உள்ள சக்தி பீடங்களில் நடைமுறையாக உள்ளது
Image hosted by Photobucket.com
மேல்மருவத்தூர் சக்தி பீடத்தில் எந்த விதமான சாதி வேறுபாடுகளையும் காணவில்லை,
யாரும் ஏற்றிவைக்கப்படவுமில்லை,யாரும் விலக்கிவைக்கப்படவுமில்லை அதன் பின் ஆர்வத்தோடு ஊரிலிருக்கும் சக்தி வழிபாட்டு மன்றத்திலிருக்கும் சிலரை சந்தித்து பேசியபோதும், கிட்டத்தட்ட அனைத்து ஊர்களிலும் இருக்கும் அத்தனை சக்தி வழிபாட்டு மன்றங்களும் பெண்களின் கட்டுப்பாட்டிலுள்ளது, மேல்மருவத்தூரில் வேத ஆகம விதிகளின் பெயரைச்சொல்லி பெண்களுக்கு எந்த கட்டுப்பாடும் விதிமுறைகளும்
விதிக்கப்படவில்லை, எங்கே பார்த்தாலும் ஏதாவது ஒரு விதியை சொல்லி விலக்கி வைக்கப்பட்ட பெண்கள் சுதந்திரமான ஒரு ஆண்மீகத்தேடலுக்கு வழி செய்தது
மேல்மருவத்தூர் சக்தி பீடம், மேலும் கோவிலில் தொண்டூழியம் சாதி வித்தியாசமின்றி யார் வேண்டுமானாலும் செய்யலாம் என்றதும் வியக்க வைத்த விடயம்.

சாதி வேறுபாடின்மையும் வேத, ஆகம விதிகளின் பெயரைச்சொல்லி பெண்களுக்கு கட்டுப்பாடு விதிக்காமையும், கோவிலின் சுத்தமும், தொண்டூழியர்களின் அன்பும் பணிவும் எல்லோருக்கும் புரியும் அவரவர்களின் தாய்மொழியில் வழிபாடும் நிச்சயமாக இந்து சமுதாயத்தில் செவ்வாடையில் ஒரு சமயபுரட்சியை ஏற்படுத்தியுள்ளது மேல்மருவத்தூர் சக்தி பீடம்.

இந்து சமயத்தின் மார்ட்டின் லூதர் தான் பங்காரு அடிகளார் என்று கூறுவதில் எனக்கு துளியும் தயக்கமில்லை

மேல்மருவத்தூர் சக்தி பீடத்தின் சமுதாயப்பணியைப்பற்றி நான் குறிப்பிடாததற்கு முக்கிய காரணம்
அவர்களின் சமுதாயப்பணியை சொல்வதல்ல பதிவின் நோக்கம் என்பதே.

படங்கள் உதவிக்கு நன்றி - http://www.omsakthi.org

சாதி ரீதியான இட ஒதுக்கீடு தேவையா?

நேரடியாக கேள்வியினுள் நுழையும் முன் நாம் சில விடயங்களை பார்ப்போம் நமது சமூகத்தில் சாதி எப்படி பேணப்பட்டு வருகின்றது? அதன் முக்கியத்துவம் என்ன?

தற்போது சாதிப்பற்றி சொல்லப்பட்டு வரும் கருத்தாக்கம் (தியரி)என்னவெனில்நீண்ட நெடும் காலங்களுக்கு முன் செய்த தொழிலினால் மக்களை பிரித்துஅவர்களுடைய சந்ததியினர் தொடர்ந்து அந்த தொழிலை செய்து வருகின்றனர்,இது தொழிலினால் சாதி வந்து பின் பிறப்பினால் என்ற கட்டத்தை அடைந்தது

மற்றொரு கருத்தாக்கம் (தியரி), கடவுளின் உடலின் பல பாகங்களிலிருந்து பிறந்ததாகவும் அதன் மூலம் அவர்கள் செய்யும் தொழில்கள் பிரிக்கப்பட்டதாகவும்,இது பிறப்பினால் சாதி வந்து சாதியினால் தொழில்கள் பிரிக்கப்பட்டு தற்போது தொழிலுக்கும் சாதிக்கும் தொடர்பில்லலயெனினும் பிறப்பினால் சாதி என்ற கட்டத்தை அடைந்தது

எந்த தியரி ஆனாலும் தற்போது பிறப்பினால் தான் சாதி என்ற கட்டத்தை நம் சமுதாயம் எட்டிவிட்டது.

இங்கே இட ஒதுக்கீடு என்பது மேட்டை வெட்டி பள்ளத்தில் போட்டு சமன் படுத்துவது,சின்ன கோட்டையும் பெரிய கோட்டையும் சமமாக்குகின்றோம் என்றுபெரிய கோட்டை அழிக்கின்றனர் என்கிற உதாரணங்களுக்குள் அடங்காது

அது மட்டுமின்றி பொருளாதார ஏற்றத்தாழ்வுகளும் சாதிய ஏற்றத்தாழ்வுகளும்வெவ்வேறு தளங்களில் உள்ள பிரச்சினைகள் இரண்டையும் ஒரே தளத்திலுள்ள பிரச்சினைகளாக காணக்கூடாது

இன்றைய(எந்த) காலக்கட்டத்தில் பொருளாதார உயர்வு என்பது சாதிய விழுமங்களில்மாற்றம் ஏற்படுத்துவதில்லை,

பிறக்கும் போது எல்லோரும் சமமான அறிவுடன் தான் தான் பிறக்கின்றனர், வளர்கின்ற காலத்தில் சமூக சூழ்நிலை, குடும்ப சூழ்நிலை, சுற்றுச்சூழல் , இன்ன பிறவும் சேர்ந்துதான் மாற்றம் ஏற்படுத்துகின்றன.

பத்து கிலோமீட்டர் தூரம் மிதிவண்டியிலே, நடந்தோ பள்ளிக்கூடம் வந்து பின் வீடு சென்று வயலில் சிறு வேலைகள் பார்த்தோ அல்லது வீட்டில் வேலைகள் பார்த்துவிட்டுதினம் அரை மணி நேரம் கூட வீட்டில் படிக்கமுடியாமல் இருக்கும் ஒரு மாணவன் 70 விழுக்காடு வாங்குவதற்கும் நகரத்திலே தரமான பள்ளியில் படித்து படிப்பை மட்டுமேவேலையாக கொண்டு படிக்கும் மாணவன் 90விழுக்காடு எடுப்பதாலும் 70 விழுக்காடு எடுத்த மாணவன் 90 விழுக்காடு எடுக்கும் மாணவனைவிட அறிவில் குறைந்தவன் என்று சொல்வது நியாயமாக இருக்குமா?

படிப்பதும் அதிக மதிப்பெண்கள் வாங்குவதும் வெறுமனே ஒரு மாணவனின் அறிவுத்திறனை கொண்டு மட்டும் வருவதில்லை, அவன் இருக்கும் சூழலும் இதில் பெறும் பங்காற்றுகின்றது. அதிக மதிப்பெண்கள் பெறுவதில் பொருளாதார வசதி இரண்டாமிடத்தில் தானிருக்கும் மிக முக்கியமான இடம் குடும்ப சூழல், மற்றும் சமூக சூழல் தான்.

தந்தை தான் செய்யும் வேலைக்காக குடித்துவிட்டு பின் அதே பழக்கமாகி வீட்டில் சண்டை சச்சரவுகளோடு நிம்மதியின்றி படிக்கும் மாணவன், சில மாணவர்கள் வீட்டில் பிரச்சினையில்லையென்றாலும் அவர்களை சுற்றியுள்ள இடங்களில் நடக்கும் பிரச்சினைகள்,இதெல்லாவற்றையும் விட காலம் காலமாக படிப்பு அவனுக்கு ஒதுக்கப்பட்டதல்ல,அது மற்ற சிலருக்காக, என்ற மனப்பாங்கிலிருக்கும் ஒரு சமூகத்திலிருந்து படித்து வருபவனின் மதிப்பெண்களும், காலம் காலமாக கல்வி, கேள்விகள் எமக்கு மட்டுமே சொந்தமென்று இருக்கும் ஒரு சமூகத்திலிருந்து படித்து வரும் மாணவன் எடுக்கும் மதிப்பெண்களும் ஒரே அளவீட்டில் வைத்து பார்க்க வேண்டுமென்பது எந்த விதத்தில் நியாயமென எனக்குப்புரியவில்லை.

ஒடுக்கப்பட்ட சமூகத்திலிருந்து முதல் தலைமுறை படிக்க வரும்போது எந்த ஒரு வழிகாட்டியும், வழிகாட்டுதலும் அவனுக்கு கிடைப்பதில்லை அவன் எத்தனை பொருளாதார வசதியுடனிருந்தாலும், அதே சமயம் காலம் காலமாக படித்த சமுதாயத்திலிருந்து வரும் ஒருவனுக்கு அவனுடைய மொத்த சமுதாயமும் வழிகாட்டியாக உள்ளது, இவர்கள் இருவரின் அறிவுத்திறனையும் அவர்கள் வாங்கிய மதிபெண்களை ஒரே தட்டில் வைத்து எடை போடுவது சரியென நான் நினைக்கவில்லை.

இவர்களை யார் அப்படியிருக்க சொன்னது என அடுத்த கேள்வி விழும்,

யார் அப்படி அவர்களை காலம் காலமாக இருக்க வைத்தது?

இந்த சமூகம் தானே?

அதற்கான பரிகாரத்தையும் இந்த சமூகம் தான் செய்ய வேண்டும்.

ஓஷோ அவர்களின் கருத்தின்படி எல்லா குழந்தைகளையும் பிறந்த உடன் பொது காப்பகத்தில் விடவேண்டும், அங்கே யாருடைய குழந்தைகள் என பெற்றோருக்கும்யார் பெற்றோர்கள் என குழந்தைக்கும் தெரியாமல் வளர்க்கவேண்டும், இந்த நிலையில்எந்த சாதி, எந்த மதத்தில் பிறந்த குழந்தையானாலும் ஒரே மாதிரியான சூழ்நிலை, ஒரே மாதிரியான கல்வி மற்றும் வழிகாட்டுதல் கிடைக்கும், இந்த நிலையில் இடஒதுக்கீடு என்பது தேவையில்லை, ஆனால் நமது சமூகம் இப்படி ஒரு சமமான நிலையை எல்லா குழந்தைகளுக்கும் வழங்குகின்றதா?

எனது கல்லூரியில் தாழ்த்தப்பட்டோருக்காக ஒதுக்கப்பட்ட இடத்தில் வந்தவர்களில் பலர், மற்ற இட ஒதுக்கீட்டிலும் O.C. பிரிவில் வந்தவர்களையும் விட அதிக மதிப்பெண்கள் பெற்றனர், ஒரே மாதிரியான கல்வி, ஒரே மாதிரியான விடுதி சூழல் ஒரே மாதிரியான சுற்றுச்சூழல் தான் இவர்களை இப்படி மதிப்பெண்கள் எடுக்க வைத்தது, இதே மாணவனுக்கு இட ஒதுக்கீடு முறை கூடாது என கூறி அவனுக்கு பொறியியல் இடம் கொடுக்காமல் இருந்திருந்தால் அது இந்த சமூகம் அவனுக்கு இழைத்த அநீதியல்லவா??

பளுதூக்கும் போட்டிகளில் எல்லா வீரர்களையும் ஒரே பிரிவில் மோத அனுமதிப்பதில்லை,45 கிலோ, 65 கிலோ, 75 கிலோ என பலபிரிவுகள் உள்ளன, ஆனால் எந்த பிரிவினில் முதலாவதாக வந்தாலும் தங்கப்பதக்கம் தான் தரப்படுகின்றன

இதில் 75கிலோ பிரிவில் நான்காவதாக வருபவர், 45 கிலோ பிரிவில் தங்கப்பதக்கம் வாங்கியவரைவிட நான் அதிக பளு தூக்கியுள்ளேன்ஆனால் அவருக்கு தங்கப்பதக்கம் கொடுத்துள்ளீர்களே என கேட்டால் நீங்கள் எப்படி நகைப்பீர்கள்? அது அவரது அறியாமையல்லவா?இதே வரைமுறைதான் சாதிரீதியிலான இட ஒதுக்கீட்டிற்கும் பொருந்தும்.

இதற்காக தற்போதுள்ள இட ஒதுக்கீடு முறையில் ஓட்டை இல்லை என சொல்ல வரவில்லை, ஒடுக்கப்பட்ட சமூகங்களிலிருந்து படித்து வெளிவரும் தலைமுறை நன்றாக படிக்கக்கூடிய ஒரு சூழலை தங்கள் வாரிசுகளுக்கு தந்துவிட்டு மீண்டும் அவர்களின் வாரிசுகள் இடஒதுக்கீட்டை பயன்படுத்தும் நிலை உள்ளது, இந்த ஓட்டையை மட்டும் அடைத்துவிட்டு இட ஒதுக்கீட்டை தொடரலாம்.... எது வரை தொடரலாம்?, ஆயிரக்கணக்கான ஆண்டுகளாக பிறப்பினால் இருக்கும் ஏற்றத்தாழ்வுகள், பிறப்பினால் ஏற்படுகின்ற சமூக உரிமை மறுப்புகள் அழியும் வரை, பொருளாதார அளவில் மட்டுமின்றி சமூக அளவிலும் எல்லோரும் சமம் என்ற நிலை வரும் வரை எல்லாருக்கும் சம உரிமை கிடைக்கும் வரை இது தொடரலாம்.

கலைஞருக்கு வேலையில்லையா?

முன்னாள் முதல்வர், முத்தமிழ் வித்தகர், எண்பத்தி மூன்று வயதிலும் முப்பத்திஎட்டு வயதிற்கான சுறுசுறுப்புடன் இருப்பவர் இன்று மெட்டி ஒலி என்கிற ஒரு தொலைக்காட்சி தொடரின் நிறைவு நாள் நிகழ்ச்சியில் கலந்து கொள்கின்றார்,






Image hosted by Photobucket.comImage hosted by Photobucket.com


கலைஞர் நிகழ்ச்சியில் கலந்து கொள்ளும் அளவிற்கு மெட்டி ஒலி நிறைவு நாள் நிகழ்ச்சி என்ன சமூகத்தின் முக்கிய நிகழ்ச்சியா? அல்லது மெட்டி ஒலி முடிவது என்ன வரலாற்றின் முக்கிய நிகழ்வா?

அல்லது மெட்டிஒலி நிறைவு நிகழ்ச்சியிலெல்லாம் கலந்து கொள்ளும் அளவிற்கு கலைஞர் ஓய்வாக உள்ளாரா?

இப்படியே போனால் கலைஞரை பின் வரும் நிகழ்ச்சிகளிலும் காணலாம்

செல்வி மெகா தொடரின் 50வது நாள் நிகழ்ச்சி

சமையல் சமையல் 50 வது நிகழ்ச்சி

கல்யாணமாலை ஆயிரமாவது நிகழ்ச்சி

இளமை புதுமை ஆயிரமாவது நிகழ்ச்சி

சந்திரமுகி நூறாவது நாள் விழா

கற்க கசடற் 50 வது நாள் விழா

கலைஞரிடம் அப்படியே தமிழ்மணத்தின் ஆயிரமாவது வலைப்பதிவர் நிகழ்ச்சிக்கு நேரம் கேட்டுப்பார்ப்போமே (நான் முன்னாள் பட்டியலிட்ட நிகழ்ச்சிகளை விட இது மிக மிக முக்கியமான நிகழ்ச்சி)





Image hosted by Photobucket.com
Image hosted by Photobucket.com


ஏற்கனவே நீங்கள் ஓய்வு பெற வேண்டுமென ஓ.பி.எஸ் முதல் வலைப்பதிவர்கள் வரை புலம்பிக்கொண்டுள்ளனர், இது மாதிரி நிகழ்ச்சிகளில் கலந்து கொள்வதைவிட்டுவிட்டு இன்னும் தமிழுக்கும் தமிழ்மண்ணுக்கும், தமிழர்களுக்கும் வரப்போகின்ற தேர்தலுக்கும் ஆக்கப்பூர்வமாக ஏதாவது செய்யலாமே...

வர வர எவனெல்லாம் வயசு, அனுபவ வித்தியாசமில்லாமல் கலைஞருக்கு அறிவுரை கூறுவது என்கிற விவஸ்தையில்லாமல் போய்விட்டது என நீங்கள் தலையில் அடித்துக்கொள்வது எனக்குத்தெரிகின்றது....

இருந்தாலும் நான் வலைப்பதிவன் அல்லவோ யாருக்கும் முளைக்காத கொம்பு எனக்கு முளைத்திருக்கின்றது அல்லவோ,

நான் யாரை வேண்டுமானாலும் தாக்கிப்பேசுவேன், எவருக்கு வேண்டுமானாலும் ஓய்வு எடுத்துக்கொள் என அறிவுரை கூறுவேன் அது எனது உரிமை... ஹா ஹா...

மருத்துவர் இராமதாசுவின் மீதான சொல்லடிகள் - 4

இதுவரை இந்த தலைப்பில் இதற்கு முந்தைய பதிவுகளுக்கான சுட்டிகள்

மருத்துவர் இராமதாசுவின் மீதான சொல்லடிகள் - ஒரு அலசல் - 1


மருத்துவர் இராமதாசுவின் மீதான சொல்லடிகள் - ஒரு அலசல் - 2


மருத்துவர் இராமதாசுவின் மீதான சொல்லடிகள் - ஒரு அலசல் - 3



நடிகர்களின் மீதான விமர்சனங்கள்
மற்ற சி(ப)ல அரசியல்வாதிகளைப்போல் குளிரூட்டப்பட்ட அறையிலே அமர்ந்து கொண்டு, பெரிய பணக்காரர்களோடும், தொழிலதிபர்கள், பண்ணையாளர்களின் ஆதரவோடும் அரசியல் செய்பவரல்ல மருத்துவர். செல்போனை தட்டினால் தேர்தல் செலவுக்கு கோடிக்கணக்கில் பணம் கொண்டு வந்து கொட்டப்படும் நிலையும் இல்லை, நீரிழிவு மற்றும் ஒவ்வாமை நோயால் பாதிக்கப்பட்டிருந்தாலும் இன்றைய அளவிலும் கிராமங்களில் தொடர்ந்து சுற்றுப்பயணம் மேற்கொண்டு வருபவர்தான் மருத்துவர்.

அப்படி சுற்றுப்பயணங்கள் சென்றபோது தமிழர்கள் முக்கியமாக இன்றைய இளைஞர்கள் திரைப்படம் என்ற மாயையில் விழுந்து கிடப்பது தெரியவந்தது, ஒரே ஒரு படிப்பகம் கூட இல்லாத குக்கிராமங்களில் கூட அரிதாரம் பூசும் பல நடிகர்களுக்கு ஆரத்தி எடுக்க ரசிகர்மன்றங்கள் இருந்தன, ஒவ்வொரு ஊரிலும் ரஜினி,விஜயகாந்த,கமல்,அஜீத்,விஜய் தற்போது சிம்பு மற்றும் தனுஷ் ரசிகர் மன்றங்கள் என குறைந்த பட்சம் 7 ரசிகர்மன்றங்கள் இருக்கும், அருண்குமார் மற்றும் இன்னும் பல நடிகர்களின் மன்றங்களை கணக்கில் சேர்க்கவில்லை.
இளைஞர்களின் வாழ்க்கை,பலம் இப்படி வீணாவதை எண்ணித்தான் திரைப்படங்களின் பெயரால் நடிகர்கள் நிசத்தில் போடும் வேடங்களை கலைக்க குரல் கொடுத்தார், அது மாதிரியே திரு.கருணாநிதி மற்றும் செல்வி.ஜெயலலிதாவே தொடப்பயந்த ரஜினி என்ற மாயையை உடைத்து அவரின் உண்மை பலத்தை நாட்டுக்கும் புரியவைத்தார்.

ரஜினிகாந்த் பற்றிய சுந்தரமூர்த்தியின் பதிவையும், விஜயகாந்த் பற்றிய எனது பதிவையும் கீழ்கண்ட சுட்டிகளில் படியுங்கள்


நிழல் யுத்தமும், நிஜ யுத்தமும்


விஜயகாந்தின் விஜயம் ஜெயமாகுமா?


இரண்டு காந்த்களும் இரண்டு மண்டபங்களும்


இந்த மூன்று பதிவுகளும் இவர்களின் முகமூடியை கிழித்தெரியும்...

இதற்குமேல் இந்த இருவரைப்பற்றியும் சொல்வதற்கு ஒன்றுமில்லை

மற்ற எந்த ஊடகத்தையும் விட திரைப்பட ஊடகம் அதிக வலிமை வாய்ந்தது, குழந்தைகளைக்கூட பாதிக்ககூடிய ஊடகம், அப்படிபோடு போடு பாடலை முழுவதுமாக பாடிக்காட்டும் குழந்தையையும், சித்தப்பா விஜய் அங்கிள் சவால் சொல்றாரு என 3 வயது குழந்தையும் கூறும் பொழுது இந்த திரைப்படங்கள் எந்த அளவு பாதிப்பை ஏற்படுத்துகின்றன என புரியவில்லையா? அந்த திரைப்படத்திலே சமூக பொறுப்போடும் தமிழ்ப்பற்றோடும் எடுங்கள் என கூறுவதில் என்ன தவறு?

கச்சத்தீவை ஏதேதோ காரணம் கூறி இலங்கையிடம் தாரைவார்த்தது இந்தியா, அதனால் இன்றும் மீனவர்கள் படும் துயரங்கள் எத்தனை எத்தனை, அந்த கச்சத்தீவை மீட்கப்போராடி கைதானவர்தான் மருத்துவர், ஈழத்தைப்பற்றி பேசினாலே ஏதோ தேசத்துரோக குற்றம் செய்தது போல விமர்சிக்கும் ஒரு அசாதாரண சூழ்நிலையிலும் இன்றுவரை ஈழப்போராட்டத்திற்கு தார்மீக ஆதரவளிப்பவர், புலிகளை ஆதரித்து பேசியதற்காக பொடாவில் வைகோ கைது செய்யப்பட்டபோதும் கூட, புலித்தலைவர் பிரபாகரனை கைது செய்து இந்தியா கொண்டுவரவேண்டும் என தீர்மானம் சட்டசபையிலே கொண்டுவரப்பட்டபோது அதை எதிர்க்க திமுக கூட பயந்து பின் வாங்கி நடுநிலை எனக்கூறியது, அப்போது பாமக சட்டமன்ற உறுப்பினர்கள் கருப்பு சட்டை அணிந்து தீர்மானத்தை எதிர்த்து ஈழத்தமிழர்களுக்கான தார்மீக ஆதரவை தெரிவித்தனர், தமிழ் பெயரைச்சொல்லி யாரும் தமிழகத்திலே அரசியல் செய்யமுடியாது, தமிழ்ப்பெயரைச்சொல்லி யாராலும் ஒரு வாக்குகூட கூடுதலாகப்பெறமுடியாது, அந்த காலம் மலையேறிவிட்டது, மருத்துவரின் போராட்டம் தமிழின்,தமிழினத்தின் மீதான பற்றுதலாலொழிய அரசியலால் அல்ல, ஆனால் அவரது தமிழ் போராட்டங்களை கொச்சை படுத்திக்கொண்டுள்ளனர் பலர், இதில் பலருக்கு கர்னாடகவிலிருந்தும் ஆந்திராவிலிருந்தும் வருபவர்கள் தமிழர்களை இரட்சிக்கப்போவதாக கனவு வேறு.

மருத்துவர் இராமதாசு மற்ற அரசியல்வாதிகளைப்போல அன்போடு ஆரத்தழுவுவதுபோல முதுகிலே கத்தியை இறக்குபவர் அல்லர், அடுக்கு மொழியிலே அழகுத்தமிழிலே நயமாக பேசும் அரசியல்வாதியல்ல, கேமராவின் முன்னால் மட்டுமல்லாமல் எல்லாரிடத்திலும் எல்லா இடத்திலும் நடிக்கும் மனிதர்களுக்கிடையில் மனதிற்கு பட்டதை நேரடியாக சொல்லும் குணம் படைத்தவர், ஆதரித்தால் பலமாக ஆதரிப்பதும் எதிர்த்தால் பலமாக எதிர்ப்பதும் இவரது இயல்பு, நாளை இவரோடு கூட்டணி வைத்தால் என்ன செய்வது, இவரை ஆதரித்தால் என்ன செய்வது என எண்ணி பசப்பு மொழிகள் பேசி கழுவுகின்ற மீனில் நழுவுகின்ற மீனாக செயல்படுபவர் அல்ல, இவருடைய பேச்சும்,செயல்களும் அதிரடியாக இருக்கும், இதுதான் இவருடைய மிகப்பெரிய பலம், மிகப்பெரிய பலவீனமும் கூட, இவருடைய இந்த அதிரடிப்பேச்சினால் தான் செல்வி.ஜெயலலிதாவும், திரு.கருணாநிதியும் மோதிப்பார்க்க பயந்த ரஜினியுடன் மோதி ரஜினிக்கு இருந்த மாய பலத்தினை உடைத்தெறிந்தவர், இது தமிழினம் மறுமொரு நடிகரால், வேற்று மாநிலத்தவரால் ஆளப்படாமல் தப்பித்தது, இது மருத்துவர் இராமதாசினால் அடைந்த மிகப்பெரிய பலன். அதிமுகவோடு கூட்டணியைப்பற்றி மருத்துவர் கூறிய கருத்துகள் எமக்கு மிக அதிர்ச்சியை தந்தன.இந்த பேச்சுதான் அவருடைய பலவீனம், ஒரு தேர்ந்த அரசியல்வதிக்கான அரசியல் தந்திரம் (நயவஞ்சகம்?) அவரிடமில்லை, மனதில் பட்டதை நேரம் காலம் தெரியாமல் பேசுவது அவருடைய பலவீனம்.


முக்கியமான கேள்விக்கு வருவோம்,

ஏன் பத்திரிக்கைகள் பா.ம.க. வையும் மருத்துவர் இராமதாசுவையும் கடுமையாக கண்மூடித்தனமாக தாக்குகின்றன....?
பத்தாம் வகுப்பு(மெட்ரிக்குலேசன்) மட்டுமே படித்த செல்வி.ஜெயலலிதாவை மாபெரும் படிப்பாளி, அறிவாளி போன்ற தோற்றத்தை உருவாக்கும் ஊடகங்கள் MBBS படித்த மருத்தவர் இராமதாசின் மீது ஏற்படுத்திய படிமம் நாம் அறிந்ததே, இதற்கான காரணத்தை ஆராய்ந்தால் நிறைய உண்மைகள் புரியும், இன்று பத்திரிக்கை ஊடகம் யார் கையில் இருக்கின்றது என அனைவரும் அறிந்ததே. தமிழ் ஊடகங்களும், ஆங்கில மற்றும் தேசிய ஊடகங்களும் முழுக்க முழுக்க உயர்சாதியினரின் கையில் இருக்கின்றது, குமுதம், விகடன், தினமலர், இந்து, இந்தியன் எக்ஸ்பிரஸ் என பெரும்பாலான ஊடகங்களும் உயர்சாதியினரின் கையில் உள்ளது, ஏற்கனவே திராவிட கட்சிகளினால் தமிழகத்திலே ராஜரிஷி என்ற பட்டம் பறி போய் கிடக்கின்றது அவர்களுக்கு, இந்த நிலையில் இது என்னடா பிற்படுத்தப்பட்ட இனத்திலிருந்து இன்னுமொரு தலைவர், அவர் பின்னால் பலமானதொரு மக்கள் சக்தி... இப்படியே இவரை விட்டால் தற்போது தம் கட்டுக்குள் அடங்காமல் இருக்கும் திராவிட கட்சிகளைப்போன்றதொரு பிரச்சினை பா.ம.க விடமும்.. இவர்களையும் வளரவிட்டால் இனி எந்த காலத்திலும் ராஜரிஷிப்பட்டம் என்பது கனவே என்ற எதார்த்தத்தை புரிந்து கொண்டன, எனவே இப்போதே அதன் வளர்ச்சியை கட்டுப்படுத்த வேண்டும் என்ற எண்ணத்தில் பத்திரிக்கைகள் வேறெவரையும் விட கண்மூடித்தனமாக பா.ம.கவின் மீதும் மருத்துவர் இராமதாசுவின் மீதும் தாக்குகின்றன.

இதில் ஓரளவு பத்திரிக்கைகள் வெற்றி கண்டுள்ளன.... வன்னிய இனம் தவிர்த்து மற்ற இனத்தினரின் பார்வை இந்த பத்திரிக்கைகளின் பொய்பிரச்சாரத்தால் மாறிக்கிடக்கின்றன.... ஏனெனில் பெரும்பாலானோர் பத்திரிக்கைகளின் வழியாகத்தான் பா.ம.க.வையும் மருத்துவர் இராமதாசுவையும் பார்க்கின்றனர், ஆனால் நாங்களெல்லாம் பாமக வினையும் மருத்துவர் இராமதாசுவையும் பத்திரிக்கை வழியாக பார்க்காமல் அருகிலிருந்து பார்க்கின்றோம்...

ஆனால் சிறிது சிறிதாக இந்த நிலை மாறிக்கொண்டு வருகின்றது, எப்போதும் பா.ம.கவையும் மருத்துவரையும் கடுமையாக தாக்கிக்கொண்டுவந்த குமுதமும் விகடனும் தற்போது கண்மூடித்தனமான போக்கை சிறிது மட்டுப்படுத்தியுள்ளன... ஆனால் தினமலர் இன்னும் கண்மூடித்தனமான தாக்குதலை பாமகவின் மீது தொடர்கின்றன...

மக்களின் பார்வையும் மாறிக்கொண்டுள்ளது, அவர்களுடைய முதல் சாய்ஸ் ஆக பாமக இல்லையென்றாலும் பா.ம.க வேண்டாமென்ற வெறுப்பு இல்லை.... பாமகவின் மீது உண்மையிலேயே வெறுப்பிருந்தால் கூட்டணியில் இருந்த போதிலும் மற்ற இனத்தவர்கள் வாக்களித்திருக்க மாட்டார்கள், ஆனால் உண்மை என்னவெனில் தேர்தலுக்கு தேர்தல் வன்னிய இனம் தவிர்த்த மற்ற வாக்கு வங்கிகளிலும் பாமக ஊடுறுவிக்கொண்டுள்ளது...

பிற அரசியல் தலைவர்களுக்கு மருத்துவரின் மீதான் மிகப்பெரிய எரிச்சல்களுக்கு காரணம்
எந்த வித அரசியல், பண பின்புலங்கள் இல்லாமல் பேச்சுத்திறமையில்லாமல், திரைப்பட பின்னனியில்லாமல் மக்களை கவர்ந்திழுக்கும் எந்த ஒரு அம்சமும் இல்லாமல் இருந்த போது எப்படி இவரின் பின்னால் எப்போதும் பின் வாங்காத, அவரை வெறுக்காத ஒரு மக்கள் சக்தி உள்ளது என்ற பொறாமை....

ஆனால் அவருடைய அற்பணிப்புதான் இதற்கெல்லாம் காரணம் என்ற உண்மை அறியாமல் (அல்லது அறிந்து கொள்ள விரும்பாமல்) உள்ளனர்


1987ல் வன்னியர் சங்க போராட்டத்தின் போது வன்னியர்கள் மீதும் வன்னிய கிராமங்களின் மீதும்
கடும் வன்முறைத்தாக்குதல்களை மேற்கொண்ட அரசாங்கத்தால் (எந்த அரசாங்கமாயினும்) இன்று அதே இனத்தின் மீதோ வன்னிய கிராமங்களின் மீதோ கை வைக்கமுடியுமா?? உண்மையென்னவென்றால் அது எந்த அரசாங்கமானாலும் யாராலும் இனி வன்னிய கிராமங்களின் மீது வன்முறையை கட்டவிழ்த்துவிட முடியாது...

குடிமக்களின் பாதுகாப்பு அரசாங்கத்தின் கையில் ஆனால் அதே அரசாங்கம் வன்முறை செய்யத்துனிந்தால் யார் காப்பது?? இனி அரச வன்முறை பிரச்சினை வன்னிய இனத்திற்கு இல்லை, ஆனால் அதே மாதிரியான பாதுகாப்பு மற்ற பலருக்கும் இல்லை... இந்த உண்மையை உணர்ந்த பலருக்கும் ஒரு இயலாமை, அது மருத்துவர் இராமதாசுவின் மீது வெறுப்பாக வெளிப்படுகின்றது...

எங்கேயோ பெரு நகரங்களில் வாழ்ந்து கொண்டு பா.ம.க. வின் கொடிக்கம்பத்தைக்கூட பார்த்திராமல் பத்திரிக்கைகளின் செய்திகளை வைத்து பா.ம.கவை எடை போடுபவர்கள் அல்ல நாங்கள், பா.ம.க வின் அருகில், மிக அருகிலிருந்து பார்த்துக்கொண்டிருக்கின்றோம்...

பொதுவாக சொல்லப்போனால் பா.ம.கவின் மீதும் இராமதாசுவின் மீதுமான மற்ற அரசியல் கட்சிகளை விமர்சிப்பது போல விமர்சிக்காமல் கண்மூடித்தனமாக மிகக்கடுமையான விமர்சனம் செய்வதற்கு காரணம் பொறாமை, இயலாமை, அறியாமை ஆகிய மூன்று ஆமைகள் தான்....

உதிரம் சிந்தி
உயிர் கொடுத்து
பெற்றதிந்த
பாதுகாப்பு

சொந்த நாட்டிலும்
சொந்த ஊரிலும்
சூறாவளியில்
மாட்டிய
வைக்கோல் போராய்
சுற்றி சுற்றி
அடிக்கப்பட்டபோது

சுதந்திரமும் இல்லை
இங்கே
மனித உரிமையும்
மாய்ந்து விட்டன
இங்கே

வாய் கிழிய
ஊலமிடும்
பத்திரிக்கைகளும்

இன்று
வாய் கிழிய
ஊலமிடும்
பத்திரிக்கைகளும்

அன்று
பதறித்துடித்தபோது
பதுங்கிவிட்டன

பத்திரிக்கை தர்மம்
தன்னை
பரணில் தூக்கிப்போட்டு

பத்திரிக்கை தர்மம்
தன்னை
பரணில் தூக்கிப்போட்டு

எப்போதடா வாய்ப்பு
கிடைக்கும்
வாய்ப்பூட்ட போடலாம்
என காத்திருக்கும்
கழுகுகளே
உம் வாயில் மொத்தமும்
மண் தான்...

பார்வைகள் மாறுகின்றன...
பார்ப்பவர்களும் மாறுகின்றனர்...

காலங்கள் மாறுகின்றன...
காட்சிகளும் மாறுகின்றன...

பார்வைகள் மாறி
பாராளும் காலம்
போய்...
பாராளும் காலத்தில்
பார்வைகள் மாறுகின்றன...

ஒரே இரவில்
உயர்வு தேட
நாங்கள் ஒன்றும்
அது... அல்ல

ஒரே இரவில்
காட்சி மாற
இது ஒன்றும்
கனவு தொழிற்சாலை
அல்ல

காலங்கள் மாறுகின்றன...
காட்சிகளும் மாறுகின்றன...

மொத்தமும் மாற
காத்திருக்கின்றோம்
நாங்கள்


அதுவரை வரும்
தீய்ந்த
வாசனைகளுக்கு
பதில் தர
அலுத்துப்போய்...

மொத்தமும் மாற
காத்திருக்கின்றோம்
நாங்கள்

உயிர் ஈந்து எங்களை வாழ வைத்த தியாகிகளின் பாதம் தொட்டு இந்த பதிவுகளை அவர்களுக்கு சமர்ப்பிக்கின்றேன்...


பிரேமானந்தாவுடன் ஒரு சந்திப்பு

இத்தனை நாள் வாழ்க்கையை எதிர்கொள்ள ஒரு பாதுகாப்பு அரணாக பெற்றோர்கள் இருந்தனர், இன்னும் எத்தனை நாள் இந்த பாதுகாப்பு அரணினுள்? இதுவரை அவர்கள் பாத்திகட்டி, வேலிபோட்டு,தண்ணீர் உரம் என பாய்ச்சி இந்த செடியை மரமாக்கிவிட்டனர்...

அடுத்து என்ன செய்வது? ஓரளவுக்கு எதிர்காலத்திட்டங்களை வைத்திருந்தாலும்
இன்னும் கல்லூரி இறுதியாண்டு தேர்வுமுடிவுகள் கூட வராத போது பார்ப்பவர்களிடமிருந்தெல்லாம்
இலவச அறிவுரைகள் வந்து கொண்டிருந்தன.....

இலவச அறிவுரைகளை ஏற்றுக்கொள்ளாவிட்டாலும் காதில் கேட்டுக்கொள்ளும்
அளவிற்காவது மனமுதிர்ச்சி அடைந்திருந்தேன் அப்போது,
இல்லையென்றால் இந்த நேரத்தில் என்னை எதிரிகளாக பார்ப்பவர்களின் கணக்கு
இன்னும் அதிகமாக இருந்திருக்கும்.

எப்போதுமே மோட்டார் சைக்கிளில் காரணமேயில்லாமல் ஒரு நீண்ட தூரப்பயனம்(50 - 100 கி.மீ.)
சென்று வருவது ஒரு விதமான கனவாகவே இருந்தது....

மோட்டார் சைக்கிளில் சுற்ற வேண்டுமென்ற ஆசைகளோடு திரிந்த போது
நண்பன் பஃப்ஸின் டி.வி.எஸ். 50 தான் அதை ஓரளவு தீர்த்து வைத்தது....

அந்த காலக்கட்டத்தில் ஒரு நாள் காலை ஒரு பழைய டி.வி.எஸ்.50 வாசலில் இருந்தது....

ஏதோ வேலையாக கடலூர் வந்த ஜெயிலர் மாமாவின் வண்டி பழுதடைந்துவிட்டதால்
அதை இங்கே விட்டுச்சென்றார்,

அப்பா 50 ரூ கொடுத்து வண்டியை பழுதுபார்த்து வண்டியை மாமாவிடம் கொடுத்துவிட்டு
வர சொன்னபோது மகிழ்ச்சிக்கு எல்லையே இல்லை... அட குறைந்தது பத்து பதினைந்து கிலோமீட்டர்கள் வண்டியில் போகலாமே என்று.


என்னைப்போலவே நண்பன் வர்மாவும் வீட்டிலிருந்தான் பொழுது போகாமல்
இலவச அறிவுரைகளைக்கேட்டுக்கொண்டு....

அவனையும் அழைத்துக்கொண்டு இருவரும் கேப்பர் மலையிலிருந்த
மத்திய சிறைச்சாலை நோக்கி எங்கள் மோட்டார் பயணத்தை துவங்கினோம்

திருப்பாப்புலியூர் தாண்டி வண்டிப்பாளையம் சாலையில் பயணிக்கும் போது
வண்டிக்கு மூச்சிரைப்பு வந்து உருமிக்கொண்டே நின்றுவிட்டது....

வண்டியில் பெட்ரோல் இல்லை.... மாற்றி மாற்றி வண்டியை தள்ளிக்கொண்டே
முருகன் கோவிலருகில் சில்லறையில் பெட்ரோல் விற்கும் ஒரு கடைக்கு சென்று
பெட்ரோல் கேட்டால் அரை லிட்டர் ரூ.17 என்றார்,
வண்டி பழுது பார்க்க ரூ.40 கொடுத்தது போக மீதம் ரூ.10 தான் இருந்தது.
வர்மாவிடம் ஒரு 10 ரூபாய் இருந்தது...
17 ரூபாய்க்கு பெட்ரோல் போட்டுவிட்டு திரும்பி பேருந்தில் எப்படி வருவது
எப்படியும் இரண்டு பேருக்கும் 12 ரூபாய் தேவைப்படும்...
மாமா எப்படியும் பணம் தருவார் தான், ஒரு வேளை அவர் இல்லையென்றால்?!
என்ற நினைப்போடே சரி 10 ரூபாய்க்கு மட்டும் பெட்ரோல்
கொடுங்கள் என கேட்டதற்கு முடியாது என்று கூறிவிட்டார்.

எங்களைப்போலவே படித்து முடித்துவிட்டு இலவச
அறிவுரைகளை கேட்டுக்கொண்டிருந்த குருவின் வீட்டிற்கு சென்று
அவனிடம் ஒரு 10 ரூபாய் வாங்கி பெட்ரோல் போட்டுக்கொண்டு
கேப்பர் மலையிலே ஏறத்தொடங்கினோம், இருவரையும் வைத்து
இழுத்துக்கொண்டு கேப்பர் மலையில் ஏறும் அளவுக்கு டி.வி.எஸ்.50க்கு
சக்தியில்லை... தள்ளிக்கொண்டே கடலூர் மத்திய சிறைச்சாலையை
அடைந்தோம்...

ஜெயிலர் மாமாவை பார்த்து வண்டியை ஒப்படைத்துவிட்டு
சிறையை சுற்றி பார்க்க வேண்டும் என்றேன்....

Image hosted by Photobucket.com

பழமலை(பெயர் மாற்றப்பட்டுள்ளது) என்ற கைதியை கூப்பிட்டு
சுற்றி காட்ட சொன்னார்....

பழமலை ஆயுள் தண்டனை பெற்ற கைதி, வெள்ளை சட்டை
வெள்ளை கால்சட்டையோடு எங்களை உள்ளே அழைத்துச்சென்றார்.

ஏற்கனவே நான் சிறு வயதில் ஒன்றிரண்டு முறை சிறையை சுற்றிப்பார்த்திருந்தாலும்
நண்பன் வர்மாவுக்கு அதுதான் முதல்முறை...

சிறையினுள் அப்படி ஒரு அமைதி, அங்கே ஆயிரம் கைதிகளுக்கு மேல்
இருக்கின்றனர் என்று எந்த ஒரு அடையாளமுமில்லை...

முதலில் சிறையின் சமையலறையை பார்த்தோம்....
மகாநதி படத்தில் காட்டப்பட்டது மாதிரியான சமையலறை...

சிறையில் எங்கெங்கு நோக்கினும் சுத்தம்...
மிக அழகாக சுத்தம் செய்யப்பட்டிருந்தது...
கழிப்பறைகளைத்தவிர

அந்த நேரத்தில் கையில் தடியோடு வெள்ளை தொப்பி,
சட்டை, கால்சட்டையோடு ஒருவர் கடந்து சென்றார்,
அவர்தான் ஆட்டோ சங்கர் வழக்கில் ஆயுள் தண்டனையடைந்த
பாபு... தற்போது அவர் மானிட்டர்...

சிறையில் பாரதி இருந்த அறை தற்போது நினைவிடமாகவும்
நூலகமாகவும் மாற்றப்பட்டிருந்தது....
ஆனால் நூலகம் பயன்படுத்தப்பட்டதற்கான தடயங்கள் இல்லை...

Image hosted by Photobucket.com

இங்கே தானே ஜான் டேவிட்டும் பிரேமானந்தாவும் இருக்கின்றனர்
என கேட்டோம்... அடுத்த பிளாக்கில் தான் ஜான் டேவிட் இருக்கிறார்
என கூறி... பின் சற்று தொலைவிலிருந்தே ஜான் டேவிட்டை காண்பித்தார்
டீ-சர்ட்டும் கால்சட்டையுமாக நின்றிருந்தார் ஜான் டேவிட்...கையில் புத்தகத்தோடு
யாரிடமோ பேசிக்கொண்டு.... பழமலை ஜான் டேவிட்டோடு பேசுகிறீர்களா
என்றதற்கு இல்லை அவரும் எங்களை மாதிரி சின்ன வயசு பையன் தான்
ஏதோ சூழ்நிலை, தவறு நடந்து இங்கிருக்கின்றார், அவரைப்பார்த்து பேசினால்
அவர் ஏதோ காட்சிப்பொருள் மாதிரி அவரைப்பார்த்து விட்டு போவது போல
மன வருத்தப்படுவார், அதானால் வேண்டாம், பிரேமானந்தாவை காட்டுங்கள்
என்றோம்...


எதிர்ப்படும் கைதிகளிடமும் சிறைக்காவலர்களிடமும் அய்யாவோட தங்கச்சி பசங்க
அய்யா ஜெயில சுத்திகாமிக்க சொன்னார் என்று அவருடைய செல்வாக்கி பறைசாற்றிக்கொண்டே பிரேமானந்தவின் அறைக்கு கூட்டி சென்றார்.

Image hosted by Photobucket.com

ஒரு சிறிய அறைக்குமுன் பழமலை நின்று இதான் சாமியாரின் அறை என கூறிவிட்டு

"சாமியாரே... உங்களை பார்க்க வந்திருக்காங்க" என குரல் கொடுத்தார்...

தமிழகத்தையே சில காலம் கலக்கி செய்திகளில் இடம் பிடித்திருந்த
உள்ளேயிருந்தாலும் வெளியே இருந்தாலும் சுலபமாக பார்க்க முடியாத
ஒரு மனிதரை(?!) மிக எளிதாக பார்க்க வந்திருக்கின்றோம்,
அதுவும் எங்களுக்காக அறையை விட்டு வெளியே வருகின்றார் என்ற
கர்வத்தோடு முதன் முதலில் நேரில் பார்க்கப்போகிறோம் என்ற ஆர்வத்தோடும்
எதிர்பார்ப்போடும் காத்திருந்த சில வினாடிகளில்
வெளியே வந்து எங்களைப்பார்த்து வணக்கம் சொன்னார்,
நாங்களும் பதிலுக்கு வணக்கம் கூறினோம்

நகைச்சுவை நடிகர் செந்திலை நேரில் பார்த்தது மாதிரி இருந்தது
பிரேமானந்தாவைப்பார்த்தது...

வெள்ளை வேட்டியுடன் மேலே எதுவும் அணியாமல் ஈரமாயிருந்த
தலைமுடியை வழித்து சீவி ஒரு சிறிய கொண்டை போட்டிருந்தார்.

புசு புசு வென சாயிபாபா மாதிரியான தலைமுடியுடனான பிரேமானந்தாவை
எதிர்பார்த்த எங்களுக்கு ஏமாற்றம் தான்...

"நம்ம அய்யாவோட தங்கச்சி பசங்க, உங்களை பாக்கனும்னு சொன்னாங்க" என பழமலை அறிமுகப்படித்திய பின்...

அவருடைய இடது கையை வலது தோளில் கட்டிக்கொண்டு வலது கையால் இடது தோளை தட்டிக்கொண்டே பேசினார்

"அப்படியா ராஜா... நல்லா இருக்கிங்ககளா ராஜா"

"நம்ம அய்யாவோட தங்கச்சி பசங்க, உங்களை பாக்கனும்னு சொன்னாங்க" என பழமலை அறிமுகப்படித்திய பின்...

"அப்படியா ராஜா... நல்லா இருக்கிங்ககளா ராஜா" என்றார் எங்கள் இருவரையும் பார்த்து

பெயர் படிப்பு அறிமுகங்களுக்குப்பின் எப்படி இருக்கிங்க என கேட்டதற்கு

"இப்போதான் ராஜா குளிச்சிட்டு வந்தேன், லெட்டர் எழுதலாம்னு உக்கார்ந்தேன்.."

சில வினாடிகள் இரு பக்கமும் அமைதி... என்ன பேசவேண்டுமெனத்தெரியவில்லை

பழமலைதான் ஆரம்பித்தார்...

"சாமியாரே பசங்க எதிர்காலத்தை உங்க ஞானதிருஷ்டியில் பார்த்து சொல்லுங்க"

உடனே பிரேம்ஸ் எனது நேற்றியில் குங்குமம் வைப்பது போல கட்டை விரலையும்
மற்ற நான்கு விரல்களால் தலையின் மேலும் கைவைத்து கண்களை மூடி சிறிது
நேரம் கழித்து எனக்கு பலன் சொல்ல ஆரம்பித்தார்

"ராஜா நீங்க ரொம்ப கோவக்காரரு... கோவத்தை கட்டுப்படுத்திக்குங்க,
நீங்க ரொம்ப நல்லா வருவீங்க.... எல்லாம் நல்லபடியாக இருக்கும் என்றார்"

"ங்கொக்காமக்க நீ கட்டுப்படுத்த வேண்டியதை கட்டுப்படுத்தாமதான் களித்தின்னுக்கிட்டிருக்க, எனக்கு சொல்றியோ" என்று மனதில் நினைத்தபடியே
"ம்...." என்றேன் ஆமோதிப்பது போல

இதே மாதிரி தலைமீது கைவைத்து கண்மூடி பலன் சொன்னது என் நண்பன் வர்மாவுக்கும் அரங்கேறியது....

"சரி ராஜா இப்போ என்ன வேலை செய்றீங்க "
"இப்போதான் படிச்சி முடிச்சிருக்கோம்... இனிதான் வேலைத்தேடனும்"
"அப்படியா ராஜா எப்படிப்பட்ட வேலையா தேடுறிங்க"
"கம்ப்யூட்டர் சைட் தான் டிரை பண்றோம்"
"அப்படியா ராஜா, ஸ்டார் ஹோட்டல்ல கம்ப்யூட்டர் செக்ஷன்ல வேலைக்கு போறதுனா சொல்லுங்க, நான் ஏற்பாடு செய்யறேன் ஏழாயிரம் எட்டாயிரம் தருவாங்க"

"பார்ப்போம்.... வேண்டுமென்றால் சொல்கிறோம்"

"அய்யாகிட்ட சொல்லுங்க.... எப்போ வேண்டுமானாலும் ஏற்பாடு செய்றேன் ராஜா
கோபத்தை மட்டும் கொறச்சிக்கங்க ராஜா"

"அடங்கொக்காமக்கா இப்படி மயக்குற மாதிரி உதார் உட்டதாலதான் எல்லாம் உன் காலடில விழுந்தாங்க" என மனதிற்குள் நினைத்துக்கொண்டே சாமியாரிடம் விடைபெற்றுக்கொண்டு வந்தேன்...

இதே பிரேமானந்தாவை சிவராத்திரியன்று திருவிழாப்போன்று வாயிலிருந்து
லிங்கம் எடுக்கும் நிகழ்ச்சியில் கும்பலோடு கும்பலாக குடும்பத்தோடு தரிசனம் செய்துவிட்டு வந்த மாமாவின் அதிகாரத்திலுள்ள சிறைக்கு வருவார் என்று
பிரேமானந்தாவின் ஞானதிருட்டிக்கும் தெரியவில்லை....

பக்தர்கள் குழுமத்தில் ஒரு ஓரமாக நின்று சில நிமிடங்கள் மட்டுமே
தாம் பார்த்துக்கொண்டிருக்கும் இதே சாமியார் இருபத்திநான்கு மணிநேரமும்
தம் அதிகாரத்திலுள்ள சிறைக்கே கைதியாக வரப்போகிறார் என மாமவும்
அன்று நினைத்ததில்லை...

"அக்கியூஸ்ட்டுங்க அதிகமாயிட்டாங்க, ஆனா அதுக்கேத்தமாதிரி பொலீசார் அதிகமா போடலை நாமளே ரெண்டு டூயூட்டியும் பார்க்கனும்" என்றா புலம்பிக்கொண்டிருந்த
வாயிலில் பாதுகாப்பிற்கிருந்த காவலர்

"என்ன தம்பி ஜெயில சுத்தி பார்த்திங்களா, இங்க பிரேமானந்தாவும்,ஜான் டேவிட்டும் தான் பேமஸ் அவங்களை பார்த்துட்டா ஜெயில முழுசும் பார்த்தமாதிரி" என்றவரிடம்
விடைபெற்றுக்கொண்டும் வீடு வந்து சேர்ந்தோம்....

தற்போது பிரேமானந்தாவை பார்த்தால் நிறைய பேசலாம்...

பிரேமானந்தா அதே சிறையிலிருந்தாலும் முன்பு பார்த்தமாதிரி எளிதாக பார்க்கமுடியாது.... ஜெயிலர் மாமா இறந்து மூன்று வருடமாகிவிட்டது...

ஆயா செஞ்ச பாயா - கவிஞன் கோந்துவாயன்

சில ஆண்டுகளுக்கு முன் தினம் ஒரு கவிதை குழுமத்தில் வெளியான கவிதைக்கு எதிர்வினையாக இதை எழுதி நட்பு வட்டத்தில் கடுமையாக விமர்சிக்கப்பட்ட கவிஞர் கோந்துவாயனின் ஒரு படைப்பு உங்கள் பார்வைக்காக....

ஆயா செஞ்ச
பாயா இல்ல
ஆத்தா செஞ்ச
ஆப்பம் இல்லை
என
அழுது புலம்பும்
சாப்ட்வேர் செல்வா

இனப்போராட்டத்திலே
உயிர்வாழுதலே
பிரச்சினையாகி
புலம்பெயர்ந்தாயா?

ஆயிரங்களிலே
அதிருப்தி அடைந்து
லட்சங்களிலே
லட்சியம்
கொண்டுதானே
புலம்பெயர்ந்தாய்

பின் ஏனிந்த
புலம்பல்?

குடிக்க கூழின்றி
கும்பி காய்ந்து
வாழ வழி தேடி
கைக்காசை
ஏஜென்டிடம் அழுது
சோற்றுக்காக வா
புலம் பெயர்ந்தாய்?

சொந்த
சுகத்துக்காகவும்
சொந்தங்களின்
சுகத்துக்காகவும்தானே
புலம் பெயர்ந்தாய்

பின் ஏனிந்த
புலம்பல்?

எவரெஸ்ட்டின்
உச்சியிலே
சூடாண உணவைக்கூட
சாப்பிடமுடியாமல்
நாடுகாக்கும்
திருமகனைப்போல
எதைகாக்க
புலம்பெயர்ந்தாய்?

நீதான் போகவேண்டுமென
உன்னை கட்டாயபடுத்தியா
ஆன்சைட் அனுப்பினர்?
நீ இல்லையென்றால்
ஆயிரம் பேர்
ஆன்சைட் போகத்தயார்
ஆனாலும்
என்.ஆர்.ஐ என்ற
பெருமைக்காக தானே
புலம் பெயர்ந்தாய்

பின் ஏனிந்த
புலம்பல்?

படித்ததற்கு
வேலையில்லையென
கூறிய காலம்
மலையேறி
மாமாங்கம்
ஆகிவிட்டதடா
சாப்ட்வேர் செல்வா

உன்கையை யாரும்
பிடித்திழுக்கவில்லையே
அங்கேயே இருமென
அங்கேபோகத்தான்
உனக்கு விசாவேண்டும்
திரும்பிவர அல்லவே...

இப்போதும்
காலம்
கெட்டுவிடவில்லை
ஆயா செஞ்ச
பாயாவும்
ஆத்தா செஞ்ச
ஆப்பமும்
உடனே கிடைக்குமடா
சாப்ட்வேர் செல்வா

நீ மனது வைத்தால்
அதை செய்யாமல்
ஆயா செஞ்ச
பாயாயில்லை
ஆத்தா செஞ்ச
ஆப்பமில்லை
என்றால்
பரிதாபம் வராமல்
எரிச்சல்தானடா வருகிறது
சாப்ட்வேர் செல்வா!

வர்ணபேதமும் வாழ்க்கை சுவாரசியமும்

வர்ண வேறுபாடுகள் இருக்க வேண்டும்; ஏற்றத் தாழ்வுகள் இருந்தால்தான் வாழ்க்கை
சுவாரசியமாக இருக்கும் என இராணி சீதை அரங்கில் விவேகானந்தரை சாட்சிக்கு அழைத்து
ஜெயகாந்தன் பேசியதாக படித்தபோது எனக்கு சில கேள்விகள் எழுந்தன.


(ஒரு வேளை ஜெயகாந்தன் இப்படி பேசவில்லையென்றால் இந்த கருத்தை
கொண்டிருப்பவர்களுக்கான கேள்வியாக எடுத்துக்கொள்ளவும்)


சில இடங்களில் ஜெயகாந்தனின் இந்தப்பேச்சுக்கு ஆதரவாக, இதில் உண்மை இருக்கின்றது
என்பதுபோல சில கருத்துக்கள் ஒலிக்கப்படுகின்றன.



''முதலில் ஏற்றத்தாழ்வு இருந்தால்தான் வாழ்வு சுவாரசியாமாக இருக்கும்'' என்பது
சத்தியமான உண்மை..., ஆனால் இதன் பொருள் எனக்கு ஏற்றமும் அடுத்தவனுக்கு தாழ்வும்
என்பதல்ல... எனக்கே ஏற்றமும் எனக்கே தாழ்வும் இருந்தால் தான் என் வாழ்வு
சுவாரசியமாக இருக்குமே ஒழிய எனக்கு ஏற்றம் மட்டுமேயும் அடுத்தவனுக்கு தாழ்வு
மட்டுமே இருந்தால் சத்தியமாக வாழ்வு சுவாரசியமாக இருக்காது...


உயர் சாதி என அழைக்கப்படும் சாதியில் பிறந்து அந்த சாதியில் பிறந்ததற்காக
சமூகத்தில் கொடுக்கப்படும் அத்தனை மரியாதைகளையும் சலுகைகளையும் அனுபவித்துவிட்டு
வர்ணவேறுபாடு இருந்தால் தான் வாழ்க்கை சுவாரசியாமாக இருக்கும் என கூறுபவர்கள்,
தாழ்த்தப்பட்ட அல்லது பிற்படுத்தப்பட்ட, மிக பிற்படுத்தப்பட்ட சாதியில் பிறந்து
பிறப்பால் இழிவுபடுத்தப்பட்டுக்கொண்டு வர்ணவேறுபாட்டு நம்பிக்கையினால் இந்த
சமூகத்தின் அசிங்கமாக பக்கங்களை அனுபவித்தும்,பார்த்துக்கொண்டிருக்கும் ஏதேனும் ஒரு
சாதியில் பிறந்து இதே வார்த்தைகளை ஜெயகாந்தனாலோ அல்லது வர்ணவேறுபாடுகள் இருந்தால்
மட்டுமே வாழ்க்கை சுவாரசியமாக இருக்கும் என்பதை நம்புகின்றவர்களாலோ சொல்ல முடியுமா?
சொல்லுவார்களா??


இங்கே வேண்டுமானால் ஒரு குறிப்பிட்ட சாதியிலே பிறந்ததற்காக பிறப்பால் சமூகத்தில்
மரியாதை கிடைக்கலாம், ஒரு நிறவெறி பிடித்த அமெரிக்கர் முன்போ அல்லது
ஆங்கிலேயர்முன்போ அல்லது வேறு இனத்தின் முன்போ வர்ணபேதமில்லாமல் இழிவு
படுத்தப்படுவார்கள், அந்த நிலையில் நிறபேதமிருந்தால் தான் வாழ்க்கை சுவாரசியமாக
இருக்கும் என்று அந்த நிறவெறி பிடித்த அமெரிக்கரோ அல்லது ஆங்கிலேயரோ அல்லது வேறு
இனத்தவரோ கூறினால் ஜெயகாந்தனாலோ அல்லது இந்த கருத்தில் உண்மை இருக்கின்றது என
கருதுபவர்களாலோ ஏற்றுக்கொள்ள முடியுமா??



ஒருவேளை ஏற்றத்தாழ்வுதான் சுவாரசியமானது என்பது தனக்கு ஏற்றமும்
மற்றவனுக்குத்தாழ்வும் என்பதாக புரிந்துகொள்ளப்பட்டவர்களை என்னவென்று
சொல்வது...


என்னிடம் உள்ள மிகப்பெரிய பிரச்சினையே பெரியோர்கள், கற்றவர்கள், படிப்பாளிகள்,
எழுத்தாளர்கள் உள்ள சபையிலே எனது வயது, அனுபவம் மற்றும் படிப்பை கணக்கில் கொண்டு
எந்த கருத்தையும் பேசமாட்டேன், எப்போதும் ஒரு பர்வையாளனாக மட்டுமே இருப்பேன்,


ஒரு வேளை ஜெயகாந்தனை நேரில் பார்த்தாலும் இந்த கேள்வியை நான் கேட்பது
சந்தேகமே... ஆதலால் வேறு யாரேனும் அவரிடம் கேட்க முடிந்து கேட்டால் நன்றாக
இருக்கும்...

இதெயெல்லாம் பார்க்கும் போதும் கேட்கும் போதும் தொல்.திருமாவின் "அடங்கமறு அத்துமீறு" என்ற முழக்கத்தில் எள்ளள்வும் தவறில்லை என எண்ணுகின்றேன்...

ஜல்லிக்கட்டு ஆட்டத்தில் நானும்...

ஒரு ஜல்லிக்கட்டு நடந்து கொண்டிருக்கும் நேரத்தில் தடுப்புகளுக்குப்பின் நின்று பாதுகாப்பாக ஆட்டத்தை பார்த்துக்கொண்டிருந்தேன், திடீரென நானும் ஜல்லிக்கட்டு காளைகளுக்கு இடையில் உள்ளே கிடக்கின்றேன், அப்போதுதான் தெரிந்தது என்னை ஆட்டத்தில் தூக்கிப்போட்டது மதிப்பிற்குரிய என் எதிரி(பின்ன நண்பர் என்றா சொல்ல முடியும்) எம்.கே.குமார், தப்பான ஆளை ஆட்டத்தில் தூக்கி போட்டுவிட்டார்

சரி பாதுகாப்பாக அப்படியே மறைந்து ஒதுங்கி நிற்கலாம், பிறகு அனைவரும் மறந்துவிடுவார்கள் என நினைத்தால் மற்றொரு மதிப்பிற்குரிய எதிரி மூர்த்தி ஓரமாக நின்றுகொண்டிருந்த என்னை மீண்டும் ஆட்டகளத்தின் மையத்திற்கு கொண்டுவந்துவிட்டார்.

கோபி,மற்றும் மூர்த்தியின் புத்தக பதிவை பார்த்தபின் என்ன எழுதுவது என சுத்தமாக புரியவில்லை, ஏனெனில் அப்படியே என் வாசிப்பும் அவர்களுடையதும் ஒரே மாதிரி உள்ளது.

ஆனால் எப்படி வாசிக்க ஆரம்பித்தேன் எது வாசிக்க தூண்டியது என்ற குழப்பத்திலிருக்கின்றேன், எனது பங்காளி பிரபாகரன் புத்திசாலி, அறிவாளி படித்தவர் என்று பலவிதங்களில் எங்களது குடும்பத்தில் மிகவும் புகழப்படும் மனிதர், அவர் எப்போதும் புத்தகமும்கையுமாகத்தான் அலைவார், ஒரு வேளை அவரது தாக்கம் தான் இந்த வாசிப்பு பழக்கமோ என எண்ணுகின்றேன்...


எப்போதுமே வாழ்க்கையை திரும்பி பார்ப்பது சுவாரசியமானது, எப்போது புத்தகம் வாசிக்க ஆரம்பித்தேன், ம்... 9வது படிக்கும்போதா? ம்... பாலகுமாரன் எழுத்தை(அவரின் எழுத்தின் மீது கடும் விமரிசனத்தை தற்போது கொண்டிருந்தாலும்) நண்பனின் அக்கா அறிமுகப்படித்தியதைத்தொடர்ந்து சில ஆண்டுகள் பாலகுமாரனின் எழுத்து என்னை ஆக்கிரமித்திருந்தது, சரி 9, வகுப்பிற்கு முன் புத்தகம் படிக்கவில்லையா என நினைத்துப்பார்க்கிறேன்...ஆ... இல்லை இல்லை 8ம் வகுப்பில் கோதண்டபானி சித்தப்பா வீட்டில் படித்த "ராஜபேரிகை","யவனராணி" போன்ற சரித்திர நாவல்கள் இன்றைய அளவிலும் சரித்திர நாவல்களின் மீதான ஆர்வத்துக்கு உரம் போட்டது

சரி எட்டாம் வகுப்பிற்கு முன்..ம்.. ஆறாம் வகுப்பிலிருந்து... சுபா,ராஜேஷ்குமார்,பு.த.,ராஜேந்திரகுமார்,பி.கே.பி என்ற எழுத்தாளர்களின் எழுத்தில் மூழ்கிக்கிடந்தேன், சரி... 5ம் வகுப்பு படிக்கும் போது ராணிமுத்து படித்தேன், இந்த வயசிலேயே ராணி முத்து படிக்கிறாயா? என சிலரிடம் திட்டு வாங்கிய அனுபவமும் உண்டு, சரி சரி அதற்குமுன் பூந்தளிர், பூந்தளிர் இலக்கியமன்றத்தில் அப்போது உறுப்பினரும் கூட வாண்டுமாமா கையெழுத்து போட்டிருந்த அந்த உறுப்பினர் அட்டையை இன்றும் பாதுகாத்து வருகின்றேன், சரி அதற்கும்முன் அதற்கு முன் என் வாழ்க்கையில் நடந்த சம்பவங்கள் அவ்வளவாக நினைவில்லை கிட்டத்தட்ட எனக்கு நினைவு தெரிந்த நாட்களிலிருந்து படித்து வருகின்றேன் அவ்வளவுதான்.

என் படிப்புக்காலம் 9வதிற்கு முன் பின் என இரண்டாக பிரிக்கலாம்,
9வதிற்கு முன் எனது தந்தை அவரது பள்ளிக்கு ஆசிரியர்கள் எல்லாம் சேர்ந்து வாங்கும் கல்கண்டு,முத்தாரம் எல்லாம் மொத்தமாக குறைந்த விலைக்கு வாங்கித்தருவார், அதை ஒரே நாளில் படித்து முடித்துவிட்டுத்தான் மறுவேலை, மிக சமீபத்தில் தான் அந்த நூற்றுக்கணக்கான கல்கண்டு,முத்தாரம்கள் தூக்கி எறியப்பட்டன.

எனது தந்தை அவருடைய அலுவலக நூலகத்திலிருந்து கொண்டுவந்து தந்த ஆபிரகாம் லிங்கனின் வாழ்க்கை வரலாறு தான் எனக்கு அரசியல் தலைவர்களின் மீதான ஆர்வத்தை தூண்டியது, கறுப்பின மக்களின் துயரங்களும் அதற்காக ஆபிரகாம் லிங்கன் பட்ட துயரங்களும்... போராடி வாழ்க்கையை வென்ற ஆபிரகாம் லிங்கனும் மிக நிச்சயமாக ஒரு பாதிப்பை தந்தனர்,

திங்கட்கிழமை நடைபெறும் வாரத்தேர்வுக்காக ஞாயிறு மாலை திரைப்படத்தை தியாகம் செய்வதும், நண்பர்கள் எல்லாம் புதிதாக வெளியான திரைப்படங்களை முதல்வாரத்திலேயே பார்த்துவிட்டு வந்து பெறுமையடிப்பதும் கதை சொல்வதுமாக இருக்கும் காலத்தில் அதே படத்தை 50 நாட்களுக்குபின் திரையில் முதல்முறை பார்க்கும் போது அது இரண்டாவது முறை பார்ப்பதுபோல இருப்பதுமே வாழ்க்கையின் துயரங்கள் என வாழ்ந்துகொண்டிருந்த எனக்கு துயரத்தின் மற்றொரு பரிமாணத்தை காண்பித்தது, அதனைத்தொடர்து வெறித்தனமாக சென்பகராமன்,நேதாஜி,வாஷிங்டன்,லெனின் வாழ்க்கை வரலாறுகள் படித்தேன்

9வதிற்குப்பின் பாலகுமாரன்,ஜெயகாந்தன், புதுமைப்பித்தன் படைப்புகள்(சு.ரா.,அ.மி., ஜெயமோகனெல்லாம் மிக சமீபத்தில்தான் படித்தேன்) அதே சமயம் தலைவர்களின் வாழ்க்கை வரலாறு, கல்கி, சாண்டில்யனின் வரலாற்று நூல்கள் என ஓடிக்கொண்டிருந்தது....

வந்ததய்யா கல்லூரிக்காலம்....

நக்கீரன்,ஜீ.வி.,குமுதம்,ஆ.வி. என வாசிப்புப்பழக்கம் மொத்தமாக சுருங்கியது, அதன் பின் வேலை தேடுதல்,வேலையில் இருத்திக்கொள்ளுதல், வேலையில் முன்னேற பாடுபடுதல் கல்லூரிக்காலத்திலிருந்து மொத்தமாக ஒரு 6 ஆண்டுகள் வாசிப்பு சுருங்கிவிட்டது...
ஆனால் இந்த காலக்கட்டத்தில் வரலாறு என்னை முழுமையாக ஆக்கிரமித்தது,எனது தங்கை வரலாற்றில் முதுகலை பட்டம் பெற்றவள், அவளது அத்தனை வரலாற்று புத்தகங்களையும் படித்து முடித்துவிட்டேன்... வரலாற்று புணை நாவல்களில் காரம்,மணம் சுவையோடு ஒரு விதமான முழு நீள மசாலா தமிழ் திரைப்படம் பார்த்த மாதிரி இருக்கும், ஆனால் வரலாறூ அப்படியே உள்ளது உள்ளபடி எந்த காரம் மணம் சுவையுமின்றி பச்சைக்கறி போலிருக்கும், ஆனால் அதில்தான் உண்மையும் இருக்கும், தமிழில் வரலாற்று புனைநாவல்கள் படிப்பதைவிட வரலாறு படிப்பதில்தான் மிக்க ஆர்வம், பல்லவர்கள்,படவேடுவை தலை நகராகக்கொண்டு ஆண்ட செங்கண்ணன், களப்பிரர்கள் ஆட்சி, இலங்கையின் மகா வம்சம், முகாலயர்கள் ஆட்சி வரலாற்றில் மிகவும் பிடித்தது, ஆர்வமில்லாதது ஐரோப்பிய வரலாறு...

பெங்களூரில் எனது அறைத்தோழன் முரளி, மற்றும் சங்கர் கல்கி,சாண்டில்யன் நாவல்களை
வாங்கிவந்த போது, மீண்டும் வாசிப்புப்பழக்கம் தொற்றிக்கொண்டது...

ஒரு மிகப்பெரிய பிரச்சினை எனக்கு என்னவென்றால் புத்தகங்கள் படித்தபின் கதை நன்றாக நினவில் இருக்கும் ஆனால் கதையின் பெயரோ ஆசிரியரோ நினைவிலிருப்பதில்லை,

நான் புத்தகம் படிப்பது வெறும் தகவலுக்காக இல்லை, எழுத்தின் சுவை எல்லாம் அறிந்து கொள்வது போன்ற ஒரு விருந்து சாப்பாடுத்தான் நான் எதிர்பார்ப்பது, ஆனால் ஆங்கில புத்தகங்களை படிக்கும்போது தகவல்களை திரட்டி அதை மாத்திரையாக முழுங்குவது போலிருந்ததே தவிர விருந்து சாப்பாடு போன்றிருந்ததில்லை... இதே உணர்வுதான் WAR and PEACE என்கிற நாவலையும் the capital படிக்கும்போதுமிருந்தது... ஆர்.கே.நாராயணனின் ஒரு சிறுகதை தொகுப்பு மற்றூம் மேலே கூறிய 2 ஆக 3 ஆங்கிலப்புத்தகங்கள் மட்டுமே படித்திருக்கின்றேன்....

தற்போது மிகப்பிரபலமான எழுத்தாளர்களின் படைப்புகளை விட வளர்ந்து வரும் எழுத்தாளர்களின் படைப்புகளையே விரும்பிப்படிக்கின்றேன். இது மாதிரி எழுத்தாளர்களின் நூல்கலை நண்பர் அருள்குமாரும்,வீரமணியும் எனக்கு அறிமுகப்படுத்துகின்றனர்,


தமிழகத்தில் இருக்கும் நூல்கள் மொத்தம் கிட்டத்தட்ட 50 இதில் சு.ச.,ஜெ.கா,அ.மி.,புதுமைப்பித்தன், கல்கி,சாண்டில்யன், பாலகுமாரன்,மேலாண்மை பொன்னுச்சாமி, வைரமுத்து,அறிவுமதி,நா.பா ஆகியோரின் படைப்புகளும் பல விகடன்,நக்கீரம் பிரசுர புத்தகங்களும் அடக்கம்

சில மாதங்களுக்கு முன் மீண்டும் படித்தது
சில நேரங்களில் சில மனிதர்கள் - ஜெ.கா.,
வேரில் பழுத்த பலா - சு.சமுத்திரம்
கடல் புறா - சாண்டில்யன்

சமீபத்தில் படித்தது ஆங்கிலப்புத்தகம்
ஒரு ஆராய்ச்சி சம்பந்தப்பட்ட ஆங்கிலப்புத்தகம் (பெயர் வேண்டாமே?!)


என் படுக்கையை சுற்றியுள்ள புத்தகங்கள்
ஒன்பது ரூபாய் நோட்டு - தங்கர் பச்சான்
துணையெழுத்து - எஸ்.ராமகிருஷ்ணன்
ஸீரோ டிகிரி - சாருநிவேதிதா
மனப்பத்தாயம் - யுக பாரதி
ஒற்றையிலையென - லீனா மணிமேகலை

கடன் கொடுத்திருக்கும் புத்தகங்கள்
மரப்பாச்சி,
மனுஷ்ய புத்திரனின் என் படுக்கையறையில் யாரோ ஒளிந்திருக்கிறார்கள் ,
மனசே ரிலாக்ஸ் ப்ளீஸ்
மற்றும் கல்லால்லானவன்

தினம் தினம் படிக்கும் புத்தகம்

கனவிலிருந்து போராட்டத்திற்கு - எர்னஸ்டோ சே குவேரா

தற்போது படித்துக்கொண்டிருப்பது
சிலுக்கு ஸ்மிதாவும் சுலைமான் ஹாஜியாரும் - களந்தை பீர்முகமது
இந்த நூற்றாண்டுச்சிறுகதைகள் - பாகம் 3,4
ஊமத்தம் பூக்கள் - ராஜேஷ்குமார்

படிக்க விரும்பும் புத்தகங்கள்
மூலதனம் - மொழிபெயர்ப்பு தியாகு
எக்ஸிஸ்டென்ஷியலிஸமும் பேன்ஸி பனியனும் - சாரு நிவேதிதா
விஷ்ணுபுரம் - ஜெயமோகன்
காடு - ஜெயமோகன்.
கூணன் தோப்பு - தோப்பில் முகமது மீரான்

மடியில் துள்ளும் மரணம் - ஜேம்ஸ் ஹாட்லி சேஸின் தமிழ் மொழிபெயர்ப்பு நாவல்
(தேடி தேடி அலுத்துவிட்டேன் இது வரை எங்கேயும் கிடைக்கவில்லை, யாரேனும் எங்கே கிடைக்கும் எனத்தெரிந்தால் சொல்லுங்களேன்)

சரி நம் பங்குக்கு யாரை ஆட்டத்தில் தூக்கிப்போடுவது...

லாடு லபக்கு தாஸீ
வீ.எம்.
சிறகுகள் பத்மபிரியா
அப்படிபோடு (உம் பேரு யின்னாபா)
புலிக்குட்டி
மற்றும் இதை படிக்கும் நீங்கள்

சூப்பர் ஸ்டார் ரஜினிகாந்த்

எப்பொழுதும் யாரையாவது விமர்சனம் செய்து எழுதியது சற்று அலுப்படைந்து விட்டதால்,
சிலரின் நல்ல பக்கங்களை எழுதலாம் என ஆரம்பித்துள்ளேன்

இந்த வரிசையில் மூன்றாவதாக நான் எழுதுவது சூப்பர் ஸ்டார் ரஜினிகாந்த்

ரஜினிகாந்தின் மீது எனக்கு பல விமர்சனங்கள் உண்டு ஆனால் அதையெல்லாம் விலக்கிவிட்டு
அவரிடத்தில் எனக்கு பிடித்த சில அம்சங்களை எழுதுகின்றேன்.

தமிழ் திரையுலகில் கதாநாயகனாக நடிப்பதற்கும் சில அழகுக்குறியீடுகள் இருந்தது
சிவப்பாக இருப்பது என்பதும் கதாநாயகன் எப்போதும் நல்லவனாகவே தோன்றுவது என்பதும்,
நடனத்திறமை, சிறந்த நடிப்புத்திறமை இருக்க வேண்டும் என்பதும் இருந்து வந்தது.
அதையெல்லாம் முறியடித்து தமிழ் திரையுலகில் கிட்டத்தட்ட 25 ஆண்டுகளாக ஒரு
வெற்றிகரமான கதாநாயகனாக திகழ்கின்றார் ரஜினி.

சிவப்பு என்கின்ற அழகுக்குறியீட்டை உடைத்து அவர் போட்ட பாதையில்தான்
விஜயகாந்திலிருந்து இன்றைய தனுஷ் வரை வெற்றிகரமாக நடைபயில முடிந்தது.







அப்போது இப்படி ஆரம்பித்து
தற்போது இப்படியுள்ளார்



திரையுலகம் என்பது ஒரு மாய உலகம் இங்கு தொடர்ந்து தனது படங்களை கொடுத்து
தனது இருப்பை தெரிவித்துக்கொண்டே இருக்க வேண்டும் இல்லையென்றால்
மக்கள் மட்டுமல்ல ரசிகர்களும் சேர்ந்தே மறந்து விடுவர்,
அப்படி மறக்கப்பட்டவர்களில் முதன்மையானவர் ராமராஜன்.

ஆனால் மூன்றாடுகளுக்கு பிறகு படம் கொடுத்தாலும் மறக்கப்படாமல் இருக்கின்றார் ரஜினி.

பழைய திரைப்படங்களில் கதாநாயகி டூயட் பாடுவதும், நடிப்பதும் மட்டுமே செய்தனர்,
கவர்ச்சியாட்டத்தை அதற்கென ஒரு பாடல்களில் ஆடும் நடிகைகள் இருந்தனர்,
ஆனால் தற்போது கதாநாயகிகளே கவர்ச்சிப்பாடல்களிலும் ஆடுகின்றனர்
இதேப்போல் பழைய கதாநாயகர்கள் படத்தில் நகைச்சுவை செய்ததில்லை(முழு நீள நகைச்சுவை படங்கள் தவிர),
இதை உடைத்து திரைப்படங்களில் கதாநாயகன் சில காட்சிகளில் நகைச்சுவை செய்வது என்பதை அறிமுகப்படுத்தியவர்
ரஜினி. இன்று இந்தப்பாதையில் விஜய்,கார்த்திக் மற்றும் பலர் நடைபோடுகின்றனர்.

கர்னாடகாவிலிருந்து வந்து தமிழ் திரையுலகில் ஒரு சிறிய வேடத்தில் அறிமுகமாகி
இன்று மிகப்பெரிய கதாநாயகனாக வளர்ந்திருப்பது மிகவும் பாராட்டவேண்டியது,
புது ஊரில் வேலைத்தேடி செல்வதே பல சிரமங்களைத்தரும் நிலையில்
தமிழ்த்திரையில் கால்பதித்தது மிகப்பெரிய செயல்தான்.

பல ஆண்டுகளுக்குமுன் தமிழகத்தின் சக்திவாய்ந்த ஒரு தலைவரிடம் மோதி
அதனால் பாதிப்படைந்து பின் அதிலிருந்து மீண்டு,
மீண்டும் தமிழ் கலையுலகில் இடம்பிடித்தது நிச்சயமாக
அவரது மனோதிடத்தினால்தான், அந்த மனோதிடம் எனக்கு மிகப்பிடித்தது.

பெரும்பாலான நடிகர்கள் சொந்த வாழ்க்கையில் தோல்வியடைந்ததை கண்டுள்ளோம்,
ஆனால் சொந்த வாழ்க்கையையும் திறம்பட நடத்தி வருபவர் ரஜினி.

ஒரு நடிகரை சில குறிப்பிட்ட காரணங்களுக்காக சில பிரிவினருக்கு பிடிக்கும்
ஆனால் ஒரு சிலர் மட்டுமே குழந்தைகள், நடுத்தரவயதினர், இளைஞர்கள், பெண்கள்
என பல பிரிவினருக்கும் பிடிக்கும், அதிலும் குறிப்பாக பெண்களுக்கு பிடித்தமான
நடிகராக இருப்பது சற்று கடிணம், இந்த விடயத்தில் ரஜினி வெற்றிபெற்றுள்ளார்.

பெண்களுக்கு பிடித்தமான நடிகர்களிடம் ஒரு சிறப்பம்சத்தை நான் கவணித்துள்ளேன்
அந்த நடிகர்களின் நடிப்பில்,அசைவில்,மேனரிசத்தில் பெண்மையின் சாயல்,நளினம் சற்று வெளிப்படும்,
கன்னட நடிகர் திரு.ராஜ்குமாரின் நடனம் மற்றும் பேச்சிலும்,எம்.ஜி.ஆர் மற்றும் ரஜினியின் நடையிலும் சில அசைவுகளிலும்
இதைக்கண்டுள்ளேன், இதேப்போல் நடிகர் பிரசாந்த் அவர்களின் பேச்சு,நடனம்,சண்டை மற்றும் அசைவுகளில்
ஒருவிதமான பெண்மையின் நளினம் நன்றாகவேத்தெரியும், இவருக்கு ஆண் ரசிகர்களை விட பெண் ரசிகர்கள்தான் அதிகம்.

முதல்வர் ஜெயலலிதாவை எதிர்த்து குரல் கொடுத்தாரே, அது சொந்த ஈகோவிற்கு கொடுத்தாரா
அல்லது வேறு எதற்கு கொடுத்தாரோ அது வேறு விடயம், அதுவும் ஜெயலலிதாவைப்போன்றே
சக்திவாய்ந்த ஒரு மனிதரை எதிர்த்து பல ஆண்டுகளுக்குமுன் பாதிப்படைந்திருந்தாலும்
அதைப்பற்றி கவலைப்படாமல் எதிர்த்தாரே அந்த தைரியம் பிடித்திருந்தது.

எனக்கு பிடித்த ரஜினிப்படங்கள் ஆறிலிருந்து அறுபதுவரை, முள்ளும் மலரும், தில்லுமுல்லு
தற்போதைய அவரின் படங்களைப்பற்றி சுத்தமாக தெரியாது.

ரஜினி ஒரு புரியாத புதிர்
அவர் கோமாளி வேடம் போடும் புத்திசாலியா?
இல்லை புத்திசாலி வேடம் போடும் கோமாளியா?
என்பது இதுவரை எனக்கு ஒரு புரியாத புதிராகவே உள்ளது

எனது முதலிரவு(கள்)

என்ன தமிழ்மணத்தில் தெரிகின்ற நாலு வரிகளை படித்துவிட்டு
அப்பீட் ஆகிடலாம் என பார்க்கின்றீரா, பதிவில் வந்த படியுங்கள்

----------------------------------------------------------------------------------------------------------
----------------------------------------------------------------------------------------------------------
----------------------------------------------------------------------------------------------------------
----------------------------------------------------------------------------------------------------------
----------------------------------------------------------------------------------------------------------
----------------------------------------------------------------------------------------------------------
----------------------------------------------------------------------------------------------------------

எனது முதல் முதலிரவு

எனது முதல் முதலிரவன்று என்ன நடந்தது என்று எணக்கு நினைவில்லை,
இருந்தாலும் இப்படித்தான் நடந்திருக்கும் என்ற அனுமானத்திலே
ஒன்று அய்யோ இந்த உலகத்தில் வந்து பிறந்துவிட்டோமே என்று
அழுது கொண்டிருந்திருப்பேன், இல்லையென்றால் தாயின் கத கதப்பில் சுகமாக
உறங்கிக்கொண்டுந்திருப்பேன், நான் தான் ஒரு இரண்டும் கெட்டானாயிற்றே...
இரண்டையும் சேர்ந்து செய்திருப்பின் எது எப்படியாயினும் எனது முதல் முதலிரவு
கடலூரிலே நடந்துவிட்டது

புத்தூரில் முதலிரவு

அந்த காலக்கட்டத்தில் சட்டையின் கழுத்துப்பட்டியை தாண்டி முடி வளர்த்திருப்பேன்
"பங்க் ஸ்டைல்" என அலம்பல் செய்து கொண்டிருந்தேன்.
+2 முடித்து புத்தூரில் உள்ள சீனுவாச சுப்புராய தொழில்நுட்பக்கல்லூரியிலே சேர்ந்தேன்
அப்போதிருந்த முதல்வருக்கும் எனது பெயர்தான்(குழலி அல்ல, எனது சொந்தப்பெயர்),
தொழில்நுட்பக்கல்லூரியிலே சேர்ந்தபோது முதல்வர் என்னைப்பார்த்து
என்ன இப்படி முடிவைத்து இருக்கிறாய்,
நீயெல்லாம் இங்க படிக்க வந்து என்ன செய்யப்போறியோ என்றார்,
கோபம் கோபமாக வந்தாலும் சாமி காணிக்கைக்கு முடிவைத்திருக்கின்றேன்
என புளுகிவிட்டு வந்துவிட்டேன், வகுப்பு ஆரம்பிக்க ஒரு வாரம் இருந்த நிலையில்
கூடவே இருந்த எனது தந்தை சாமி காணிக்கைக்கு முடிவைத்திருக்கின்றேன் என சொல்லிவிட்டாய்
எனவே மொட்டையடித்துக்கொண்டு போ என மொட்டை போட்டுவிட்டார்,
மறுநாள் வகுப்பு ஆரம்பம், முதல் நாள் இரவே விடுதிக்கு சென்றுவிட்டேன்,
உடன் என்னுடன் பள்ளியிலிருந்து வகுப்புத்தோழனாக இருந்து இங்கேயும் சேர்ந்திருந்த நண்பன்.
எனக்கு அப்போதிருந்த மனநிலையெல்லாம் நானும் 10 வது முடித்துவிட்டு
உடனே இந்த பாலிடெக்னிக்கில் சேர்ந்திருந்தால் நானும் இறுதியாண்டு படித்துக்கொண்டிருப்பேன்
ம்... இப்போ முதலாண்டு என்ற எரிச்சலில் வேறு இருந்தேன்.
அறைச்சாவியை வாங்கிக்கொண்டு பொருட்களையெல்லாம் வைத்துவிட்டு வெளியே வந்து நின்றபோது
ஒரு மூத்த மாணவர் வந்தார், அப்போது அவர் முதலாண்டு மாணவர்கள் விடுதியில் எப்படி இருக்கவேண்டும்
என கூறினார், லுங்கி(கைலி)யை மடித்து கட்டக்கூடாது, முழுக்கை சட்டையை மடித்து விடக்கூடாது,
மூத்த மாணவர்களை "ரூம்மேட்" எனத்தான் கூப்பிடவேண்டுமென.

இப்படியெல்லாம் பேசிக்கொண்டே அவரது அறைக்கு அழைத்துச்சென்றுவிட்டார்,
அங்கே சென்றவுடன் அவரது பேச்சின் தொனியே மாறிவிட்டது,
திடீரென்று ஓ.... பு.... என்ற நல்ல(?!) வார்த்தைகளால் அர்ச்சிக்க ஆரம்பித்துவிட்டார்,
அதுவரை அப்படி பட்ட வார்த்தைகளை திட்டுவதற்கு யாரும் பயன்படுத்தியில்லாததால்
சரக்கென்று கோபம் உச்சி மண்டைக்கு ஏறியது, அவரின் சட்டையைப்பிடித்து சுவற்றோடு அழுத்தி
மரியாதை கொடுத்தால் மரியாதை கிடைக்கும், இப்படி பேசினால் நடப்பதே வேறு என்று கூறிவிட்டு
தளபதி ஸ்டைலில் கைலியை மடித்து கட்டிவிட்டு ஒருவிதமான மிதப்பான நடையோடு
அறைக்கு வந்துவிட்டேன், அப்போது எனக்கு உட்கார்கின்ற இடத்தில் கால் கிலோ கறி கூட கிடையாது,
நானே அப்படியென்றால் நான் சட்டையைப்பிடித்த அந்த மூத்த மாணவர்
எப்படி இருந்திருப்பார் என எண்ணிக்கொள்ளுங்களேன்.
புத்தூரின் முதலிரவில் அறையில் தூங்கிக்கொண்டிருந்த பொழுது திடீரென என்னைச்சுற்றி சிலர் அமர்ந்திருந்தனர்,
என்னை தூக்கத்திலிருந்து எழுப்பி எல்லா வார்த்தைகளிலும் திட்டிக்கொண்டே மிரட்டினர்,
அறைகதவை திறந்துவிட்டது என் அறைத்தோழன் தான்.

முதலில் என்ன நடக்கின்றது எனப்புரியாமல் மலங்க மலங்க விழித்தேன்,
பின் மூத்த மாணவர்களின் மிரட்டல் எனப்புரிந்த உடன்.
அனைவரும் வெளியேபோங்கள் நான் தூங்க வேண்டும் என்றேன்,
ஏ.. நீ என்ன பெரிய இதா, அதா என மிரட்டினர்,
நாங்க அதை செய்வோம் இதை செய்வோம் என மிரட்டினர்,
நீங்க எது வேண்டுமானாலும் செய்து கொள்ளுங்கள் ஆனால் காலையில் செய்து கொள்ளுங்கள்
இப்போ எல்லாம் வெளியே போங்க என்று கூறிவிட்டு மீண்டும் தூங்கிவிட்டேன்,
அவர்களுக்கு நான் அப்படி பேசியது அதிர்சியாக இருந்திருக்கலாம்,
நான் அப்படி பேசியதன் பிண்ணனியை பிறகு தான் அறிந்து கொண்டணர் ஆனால்
எனக்கு தெரியுமே, புத்தூரிலே எனது பலமும் எனது சொந்தங்களின் பலமும்.
இப்படியாக ஒருவிதமான மிரட்டல், சவால் என கழிந்தது புத்தூரில் எனது முதலிரவு


காரைக்குடியில் முதலிரவு

அழகப்பா பொறியியல் கல்லூரியில் சேருவதற்காக இரவு11.30 மணிக்கு காரைக்குடி வந்திறங்கினேன்
எனது தந்தையோடு, ஒவ்வொரு தங்கும் விடுதியாக தேடி அலைந்து எங்கேயும் இடம் கிடைக்காமல்
திரிந்தோம், எனது தந்தையின் மடியில் வேறு கல்லூரியில் சேருவதற்கான பணம் கணத்துக்கொண்டிருந்தது.
எனவே மூன்று சக்கர வாகணம்(ஆட்டோ)கூட எடுக்காமல் முதல் பேருந்துக்காக காத்திருந்து கல்லூரி
வந்து சேர்ந்தபோது அதிகாலை மணி 3.00, கல்லூரியிலிருந்த முருக்கப்பா அரங்கத்தில் படுத்து கண் அயர்ந்தோம்
இப்படியாக காரைக்குடியில் என் முதலிரவு கழிந்தது

ஹைதரபாத்தில் முதலிரவு

பயிற்சிக்காக செகந்திரபாத் சென்று வாசவி காலணியில் அலுவலகத்திலிருந்து தந்திருந்த வீட்டில் தங்கினோம்
அருகிலிருந்த ஒரு கடையில் சென்று தேனீரும் 4 பிஸ்கட்களும் கேட்டோம் நானும் உடனிருந்த நண்பரும்
இரண்டு தேனீரோடு ஒரு தட்டு நிறைய(10+) பிஸ்கெட்டுகளை கொடுத்தார் பணியாளர்,
அய்யா நான் கேட்டது 4 பிஸ்கெட், நீங்கள் இத்தனை தந்திருக்கிறீரே என கேட்டபோது எவ்வளவு வேண்டுமோ அவ்வளவு
சாப்பிட்டுவிட்டு மீதியை வைத்துவிடுங்கள் என்றார், எங்களுக்கு ஒன்றும் புரியவில்லை, பிறகு 6 பிஸ்கெட்டுகள் சாப்பிட்டுவிட்டு மீதி வைத்தோம், அவர் 6 பிஸ்கெட்டிற்கும், இரண்டு தேனீருக்கு பணம் வாங்கிவிட்டு மீதி பிஸ்கெட்டுகளை பிஸ்கெட்டுகள் இருந்த கண்ணாடி குடுவையில் வைத்தபோது இருவரும் முழுதாக அதிர்ந்தோம்,
சில மெட்டீரியல் நகலெடுக்கவேண்டும் வா போகலாம் என்றார் உடனிருந்த நண்பர்,
முதன்முறையாக அந்த அலுவலக நண்பரோடு அப்போதுதான் பழகுகின்றேன்,
அப்போது மணி இரவு 11.30, காலையில் எடுத்துக்கொள்ளலாம் வாங்க சென்று உறங்குவோம் என்றேன்,
இல்லை இப்போதே எடுத்தால் தான் நாளை பயிற்ச்சி வகுப்பில் சவுகரியமாக இருக்கும் என்றார்,
அலைந்தோம் அலைந்தோம், கிட்டத்தட்ட செகந்திரபாத் முழுவதும் சுற்றினோம்,
ம்... கிடைக்கவில்லை, அலுப்பின் உச்சத்திற்கு சென்று அறைக்கு சென்று தூங்கினோம்



சிங்கப்பூரில் முதலிரவு

H1B நுழைவு அனுமதிச்சீட்டு வைத்து அமெரிக்கா செல்ல காத்து காத்து தோல்வியடைந்தபின்
திட்டப்பணி நிமித்தமாக 3 மாதங்களுக்கு அலுவலகத்திலிருந்து சிங்கப்பூர் அணுப்பினர்,
முதல் வெளிநாடு பயணம், சிங்கப்பூர் நிலப்பரப்பில் சிறிய நாடு எனத்தெரியும்,
இந்தியா போன்ற மிகப்பரந்த நிலப்பரப்பை கொண்ட நாட்டிலிருந்த வந்த எனக்கு
சிறிய நாடானா சிங்கப்பூர் குறைந்தது தமிழ்நாடு அளவாவது பரப்பளவில் இருக்கும் என எண்ணிணேன்
அந்த அளவு என்னுடைய புவியியல் அறிவு.

மற்ற அனைத்தையும் விட தங்குமிடம் பற்றிய கனவே எனக்கு சிங்கப்பூர் வந்தபோது இருந்தது.
ஆங்கிலத்திரைப்படங்களில் பார்த்தது போன்ற ஒரு பெரிய வீடு அதைச்சுற்றி தோட்டம் என ஒரு
வித கற்பனையில் இருந்தவனுக்கு கான்கிரீட் குவியல்களாக வானளாவிய கட்டிடங்களின் மத்தியில்
ப்ளாக்520ல் 11 ஆவது மாடியில் ஒரு வீட்டை காண்பித்து
இங்குதான் நான் தங்கவேண்டும் என்றபோது நான் ஏமாற்றத்தின் உச்சிக்கே சென்றேன்.

ஏமாற்றத்தோடு வீட்டை ஒழுங்குபடுத்தி படுத்தால் உறக்கம் வரவில்லை,
புத்தகம் படித்தேன்,ம்... உறக்கம் வருவேனா என்றது.
வீட்டின் வெளியில் வந்து பார்த்தால் வெஸ்ட்கோஸ்ட் சாலை தெரியும்,
இரவு 2 மணி ஆளில்லாத அந்த சாலையை தனியாக வேடிக்கை பார்த்த போது
ஒரு மோட்டார் சைக்கிள் ஓட்டி சிக்னலில் பச்சைவிளக்கு எரிவதற்காக நின்று கொண்டிருந்தார்,
அட நாம் அத்தனை போக்குவரத்து நெரிசல் இருக்கும் பெங்களூர் ஏர்போர்ட் சாலையில்
போக்குவரத்து காவலர் பார்க்கமுயாதபடி பேருந்தின் பக்கவாட்டில் ஒளிந்துகொண்டே மோட்டார் வண்டியில்
சிவப்பு விளக்கை தாண்டி வருவோம், இங்கேயோ யாருமே இல்லாத நேரத்திலும் சாலைவிதியை மதித்து நிற்கின்றாரே
என்ற ஆச்சரியத்தில் பெங்களூர் வந்து சில மாதங்கள் நானும் அதை கடைபிடித்தேன்.

கோலாலம்பூரில் முதலிரவு

மூன்று நாள் விடுமுறையில் சிங்கப்பூரிலிருந்து கோலாலம்பூர் சென்றோம்,
ஜென்டிங் சென்று சுற்றி பார்த்துவிட்டு இரவு கோலாலம்பூர் திரும்பினோம்
ஒவ்வொரு ஹோட்டலாகச்சென்று தங்க அறை கேட்டு ஏமாந்து திரும்பினோம்.
மணி இரவு 12.00 தாண்டி விட்டது, என்னோடு வந்தவர்களை சாப்பிட அனுப்பிவிட்டு
நான் மீண்டும் அறை தேடும் வேட்டையில் இறங்கினேன், ஒவ்வொரு இடமாக அலைந்துவிட்டு
திரும்பியபோது ஒருவர் வந்து "வாட் டூ யூ வாண்ட் சார்" என்றார், எனக்கு தெரிந்த ஆங்கிலத்தில்
தங்குவதற்கு அறை வேண்டும் என்றேன், "ஓ சாரி, ஐ தாட் யூ ஆர் லுக்கிங் கேர்ள்" என்றார்
அடப்பாவி என் முகத்தை பார்த்தால் அப்படியா தெரிகின்றது,
அதுவும் இல்லாமல் வாழ்நாளில் முதன் முதலில் இப்படி ஒருவர் கேட்டதும் அதிர்ச்சியின் உச்சிக்கே சென்றுவிட்டேன்,
பிறகு அலைந்து திரிந்து ஒரு விடுதிக்கு சென்றோம், தமிழர் விடுதிதான், அங்கே அறை கேட்டபோது
அந்த அம்மணி சாரி சார் உங்களுக்கு இந்த விடுதி சரிவராது, உங்களுக்கு பிடிக்காது என்றார்,
எதை வைத்து அப்படி சொன்னார் என புரியவில்லை?
பரவாயில்லை காலையில் கிளம்பிவிடுவோம் என்றோம்,
சரி முதலில் அறையைச்சென்று பாருங்கள் என்றார், பார்த்தபின் தான் புரிந்தது ஏன் அப்படி சொன்னாரென்று
மூன்று கட்டில்கள் இரண்டு ஒன்றன் மீது ஒன்று, அறைமுழுவதும் ஒரு வகையான நாற்றம்,
காலையிலிருந்து அலைச்சல், அறைத்தேடி தேடி உடலும் மனமும் சோர்ந்து போயிருந்தது, எனவே பரவாயில்லை
என்று ஒத்துக்கொண்டோம் குளிர்சாதன வசதியோடு கூடிய அறையை 65RM க்கு கொடுத்தார்,
ரூம் பிரஷ்னர் அடிக்கின்றேன் என்று மல்லிகை மணமுடைய ஒரு ஸ்பிரேயை தெளித்தார்,
மல்லிகை மணம் எனக்கு எதிரி, உடனே தலைவலி வந்துவிடும், வந்துவிட்டது தலைவலியோடு
தூங்காமல் மூட்டைப்பூச்சி கடிகளுக்கிடையில் இனிதே எனது கோலாலம்பூர் முதலிரவு கழிந்தது

அதுசரி முதலிரவுனா யின்னாபா? மொத நாள் ராத்திரிதானே, அதான் ஒவ்வொரு ஊருலயும் என்னோட மொத நாள் ராத்திரிய பத்தி விலாவரியா சொன்னேன், கரீக்டா

புரட்சித்தலைவி செல்வி. ஜெயலலிதா

எப்பொழுதும் யாரையாவது விமர்சனம் செய்து எழுதியது சற்று அலுப்படைந்து விட்டதால்,
சிலரின் நல்ல பக்கங்களை எழுதலாம் என ஆரம்பித்துள்ளேன்

இந்த வரிசையில் இரண்டாவதாக நான் எழுதுவது முதல்வர் செல்வி.ஜெயலலிதா.







குடும்பமில்லை, தலைமுறைக்கும் சொத்து சேர்க்கவேண்டுமென்ற அவசியமில்லை,
கண்மூடித்தனமாக பின்பற்றவும், காலில் விழவும் பல ஆயிரம் பேர் உள்ளனர்,
இவர் சொல்வதை வேதவாக்காக எடுத்து செயல்பட லட்சக்கணக்கில் தொண்டர்கள்,
இவர் மட்டும் நேர்மையாக, சரியான ஆட்சி புரிந்திருந்தால் இவர்தான் தமிழகத்தின் நிரந்தர முதல்வர்,
ஏன் இந்தியாவையே ஆளத்தகுதி படைத்தவர் என்ற ஒரு ஏக்கம் எனக்கு எப்போதும் உண்டு செல்வி.ஜெயலலிதாவைப்பற்றி

நடிகையாக தொடங்கி 1984ல் அ.தி.மு.கவின் கொள்கை பரப்பு செயலாலராக கடலூர் கூட்டத்தில் அரசியலுக்கு அறிமுகமாகி முதல்வராக வளர்ந்தவர் செல்வி.ஜெயலலிதா.








திரையுலகில் அவர் நடிக்க வந்ததே விருப்பமில்லாமல் தான்,

தன் குடும்பத்தின் பொருளாதார வறுமையை போக்கத்தான் அவர் நடிக்க வந்தார்,

அதை முன்பு (அரசியலுக்கு வரும்முன் ) சில பேட்டிகளிலும் கூறியுள்ளார்.

அவருடைய சில பழைய சில பேட்டிகள் சில பத்திரிக்கைகளில் மீள் பதிவு செய்யப்பட்டன

செல்வி.ஜெயலலிதா நடிகையாக இருந்த போது நடந்த சில சம்பவங்களை படித்தபோது ஆச்சரியத்தின் உச்சிக்கே சென்றேன்.

திரையுலகில் அந்த காலகட்டத்தில் கதாநாயகனி ஆதிக்கமே(இப்பொழுது மட்டுமென்ன அதேதானே!), திரைப்படங்களில் நடிப்பு மட்டுமின்றி, கதாநாயகி, பிண்ணணி பாடகர், இசை அமைப்பாளர், பாடலாசிரியர் என அத்தனையும் அவர்களின் தேர்வுதான், அவர்களின் தயவிருந்தால் மட்டுமே திரையுலகில் இருக்கமுடியும் என்ற சூழ்நிலை.

இந்த சூழ்நிலையில் படப்பிடிப்பு தளங்களில் கதாநாயகர்கள் வரும் போது
அனைவரும் எழுந்து நின்று வணக்கம் கூறி (போலி?!)மரியாதை செலுத்துவர்,
ஆனால் இந்த கதையெல்லாம் செல்வி.ஜெயலலிதாவிடம் நடக்காது,
கதாநாயகர்கள் வந்தாலும் சரி, போனாலும் சரி அவர் அவர் வேலையை பார்த்துக்கொண்டிருப்பர்,
இதைப்பற்றி ஒரு நாள் கேட்டதற்கு அவர்களைப்போல் நானும் இங்கே வேலைதான் செய்து கொண்டிருக்கின்றேன்,
எனக்கு எந்த அவசியமும்மில்லை என்றார், இதை என்னால் திமிர்த்தனமாக பார்க்கமுடியவில்லை,
செல்வி ஜெயலலிதா அவர்களின் தன்னம்பிக்கையாகவும், அவருடைய தைரியத்தையும் பெண்ணடிமைக்கு எதிரான
மனப்பாங்கையும் தான் காண்கின்றேன்.







மேஜர்.சந்திரகாந்த் என்ற திரைப்படத்தில் அவர் நடித்த காட்சிகளெல்லாம் இன்னும் கண் முன்னால் நிற்கின்றது,
அப்படி ஒரு அற்புதமான நடிப்பைத்தந்தார் செல்வி.ஜெயலலிதா.

செல்வி.ஜெயலலிதாவிற்கு நடிப்பு திரையில் மட்டுமே கை வந்த கலை,
நிஜத்தில் அல்ல, எதையும் பூசி மெழுகாமல் ஆதரிப்பதோ எதிர்ப்போதோ முகத்திற்கு நேராக செய்பவர் பேசுபவர்,
விமர்சனத்தைப்பற்றி கவலைப்படமால் செயல்படுபவர்.

நடிகையாக இருந்தாலும் எத்தனைத்திருமனங்கள் செய்து கொண்டாலும் நிறைவேறாத காதல் அனுபவங்களை
யாரும் பேட்டியில் சொல்வதில்லை, எங்கே தமது பெயர் கெட்டுவிடுமோ என்கிற பயத்தில்
ஆனால் கடந்த காலங்களில் அவர் அளித்த ஒரு பேட்டியில் அவருக்கு பதின்ம வயதில் இருந்த இன்பாக்சுவேஷன்
பற்றி கூறி இருந்தார், இதெல்லாம் அவரின் தைரியத்திற்கும், பெண்விடுதலை முற்போக்கு எண்ணத்திற்குமான் சான்று.

எம்.ஜி.ஆர் அவர்கள் இறந்தபோது சில அதிமுக தலைவர்கள் ஜெயலலிதாவிற்கு ஆதரவளித்து கட்சியை கைப்பற்ற முனைந்தனர்,
ஆனால் ஆதரவளித்தவர்களெல்லாம் முதலில் கட்சியைக்கைப்பற்றி பின் ஜெயலலிதாவை விலக்கிவிடலாம் என நினைத்தனர்,
ஆனால் இந்த ஆட்டமெல்லாம் செல்வி.ஜெயலலிதாவிடம் எடுபடவில்லை, கட்சி செல்வியின் முழுக்கட்டுப்பாட்டிற்குள் வந்தது.

அரசியல் சாணக்கியர், இராஜ தந்திரி என்ற பெயர்களோடு பல ஆண்டுகளாக தமிழக அரசியலில் கோலோச்சுபவர்
கலைஞர், ஆனால் இவருடைய எந்த தந்திரமும், சாணக்கியத்தனமும் செல்வி.ஜெயலலிதாவின் வியூகங்களுக்கு முன் எடுபடவில்லை.

1996 தேர்தலில் மிகக்கடுமையான தோல்வி, செல்வியே பர்கூரில் தோல்வியுற்றார்,
தமிழகத்தில் பா.ஜ.க. வோடு கூட்டணி வைக்க பயந்து கொண்டிருந்த சமயத்தில்
பா.ஜ.க. வோடும் கூட்டணி ஏற்படுத்தியவர், பா.ஜ.கவிற்கு தமிழகத்தில் முகவரி கொடுத்தவர் இவர்தான்.
அவ்வளவு ஏன் வாஜ்பேயியை தமிழக கிராம மக்களுக்கு அறிமுகப்படுத்தியவரே இவர்தான்.
1998 தேர்தலில் வெற்றி மிதப்பில் தேர்தலை சந்தித்த திமுக-தாமக விற்கு மரண அடி கொடுத்தது
செல்வி.ஜெயலலிதாவின் கூட்டணி வியூகம்தான்,
பா.ம.கவின் பலத்தை சரியாக கணிக்காமல் ஒரு நாடாளுமன்றத்தொகுதிதான் தர முடியும் கண்ணாமூச்சி காட்டிய
திமுகவிடமிருந்து பா.ம.க வைப்பிரித்து 5 தொகுதிகள் கொடுத்தார், பாஜக மற்றும் மதிமுக வை சேர்த்து மாபெரும்
கூட்டணியை உருவாக்கி வெற்றிபெற்றாரென்றால் அவரது அரசியல் சாணக்கியம்தான் காரணம். (இந்தத்தேர்தலின் போது எனது கல்லூரி நண்பர்களோடு நடந்த விவாதங்கள் கருத்துக்கணிப்புகள் எல்லாம் ஒரு தனிப்பதிவு போடுமளவு மிக சுவாரசியமானவை ), மாபெரும் தோல்வியிலிருந்து மீண்ட ஃபீனிக்ஸ் பறவைத்தான் செல்வி.

செல்வி. ஜெயலலிதாவை நம்பி கெட்டோரில்லை, நம்பாமல் கெட்டவர்கள் தான் உண்டு.
விசுவாசிகளுக்கு எப்போதும் நல்லது செய்பவர் செல்வி.
இல்லையன்றால் ஓ.பி.எஸ் முதல்வராகமுடியமா?

முதல்வராக ஏற்றிவிட்டப்பின் ஏற்றிவிட்டவரின் முதுகில் குத்தியதைத்தான் இந்த வரலாறு கண்டுள்ளது
எஸ்.ஆர்.பொம்மையிலிருந்து தற்போது முதல்வராக பதவியேற்ற உமாபாரதியின் ஆதரவாளர் வரை,
ஆனால் ஓ.பி.எஸ். என்ற விசுவாசியை தேர்ந்தெடுத்தது அவரின் மிகப்பெரிய அரசியல் சாணக்கியத்தனம்.








எத்தனை ஆண்டுகளாகத்தான் நட்பிற்கு இலக்கணமாக குசேலர்-கண்ணண்,
துரியோதனன் - கர்ணன், கோப்பெருஞ்சோழன் - பிசிராந்தையார் என்பது,
இனி ஜெயலலிதா-சசிகலா என்று கூறலாம்,
அந்த அளவுக்கு நட்புக்கு முக்கியத்துவம் தருபவர்.
சில பத்திரிக்கையாளர்களிலிருந்து பல அரசியல்வாதிகள் வரை
அனைவரும் 1996 தோல்விக்குப்பின் எல்லாவற்றிற்கும் காரணம் சசிதான் நானில்லை
என அறிக்கைவிட்டுவிட்டு அவரை ஒதுக்குங்கள் என்றனர்,
ஆனால் அவர் எந்த காலத்திலும் நட்பை விலக்கவில்லை.

தி.மு.க வில் அந்தந்த பகுதியிலே பல குறுநில மன்னர்களின் ஆதிக்கம்,
விழுப்புரத்திலே பொன்முடி, சேலத்திலே வீரபாண்டி ஆறுமுகம்,
வேலூரிலே துரை.முருகன், தூத்துக்குடியிலே என்.பெரியசாமி கும்பகோணத்திலே
கோ.சி.மணி மற்றும் பலர், இங்கெல்லாம் கிட்டத்தட்ட தி.மு.க இவர்களின்
கட்டுப்பாட்டில்தான், இந்த கதையெல்லாம் அதிமுகவில் இல்லை,
அங்கே அம்மாதான் எல்லாம் மற்றவர்களெல்லாம் சும்மா.

யாரை அவர் கட்சியில் சேர்த்தாலும் விலக்கினாலும் யாருக்கு தேர்தலில் போட்டியிட
வாய்ப்பளித்தாலும் அளிக்கவில்லையென்றாலும் எந்த முனகலும் வராது,
ஆனால் திமுகவில் கும்மிடிப்பூண்டி வேணுக்கு இடைத்தேர்தலில் வாய்ப்பளிக்காததால்
நடந்த உள்குத்து வேலைகள் அனைவரும் அறிந்ததே.

கட்சியை கட்டுப்பாட்டுடன் வைத்திருப்பதில் என்னை மிகவும் கவர்ந்தவர் செல்வி தான்.
தான் மட்டுமே சாப்பிடவேண்டுமென்ற என்னமில்லாமல் எல்லோரையும், அதுவும்
கடைசி கட்டத்தொண்டன் வரை சாப்பிட அனுமதிப்பவர் செல்வி தான்.
அதுதான் திமுக கடைசிகட்டத்தொண்டர்கள் விரக்தியிலும் அதிமுக தொண்டர்கள் பசையோடு இருக்கவும் காரணம்

யாராலும் கைவைக்கமுடியாது என்கிற எண்ணத்திலிருந்த
காஞ்சி சங்கராச்சாரியரை கைது செய்தபோது அவரின் தைரியத்தின் மீதிருந்த மதிப்பு மேலும் அதிகரித்தது.

இதைவிட பெரிய ஆச்சரியம் காஞ்சி, கும்மிடிப்பூண்டி இடைத்தேர்தலில் வெற்றி பெற்றது

கோவையிலே முஸ்லீம் மதத்தீவிரவதிகளை கட்டுக்குள் வைத்திருந்ததெல்லாம் நிச்சயமாக பாராட்டப்படவேண்டிய விடயம்.

எல்லாவற்றுக்கும் மேலாக தொட்டில் குழந்தைகள் திட்டத்தை உலகிலேயே முதன் முதலில் உருவாக்கி
பெண் குழந்தைகளை அனாதைகளாக்கமல் தடுத்தாரே அது தான் எப்போதும் அவரிடம் எனக்கு பிடித்தவிடயம்.

அரசியல் கட்சிகளின் பலத்தை மிகச்சரியாக கணக்கிட்டு சரியான முறையிலே கூட்டணி சேர்த்து தேர்தல் களம் காணும்
செல்வி.ஜெயலலிதாவின் அரசியல் தந்திரம் வெற்றிபெறுகின்றதா அல்லது செல்வி ஜெயலலிதா அறிமுகப்படுத்திய
கூட்டணி கூட்டல் கழித்தல்களை பின்பற்றி கூட்டணி பலத்தோடு(கூட்டணியை தேர்தல் வரை வைத்து)
இருக்கும் கலைஞரின் சாணக்கியம் வெற்றிபெறுகின்றதா என வரும் சட்டமன்ற பொதுத்தேர்தலில் பார்ப்போம்.

சட்டத்தின் பிடியிலிருந்து தப்பிக்க

தற்பொழுது தமிழ்மணத்தில் எங்கெங்கு நோக்கினும் சட்டப்பிரச்சினைகள், இதிலிருந்து தப்பிக்க என்னிடம் சில யோசனைகள் (அய்யா மக்களே தமிழ்மணம் என ஒரு அடையாளத்திற்குத்தான் கூறினேன்,வேண்டுமென்றால் வலைப்பதிவர்களின்குழுவில் என மாற்றிக்கொள்ளலாம் உடனே டின் கட்டிவிடாதீர்கள்)

யாரைப்பற்றியாவது எழுத வேண்டுமென்றால் பின் வருமாறு குறிப்பிடலாம்.

போட்டுத்தாக்குன மேரியுமாச்சி, சட்ட பெரச்சினையும் இல்லாத மேரியாச்சி

குழலி - குழலி (கொயலி) (நம்ம பேரை கூட போட்டு கலாசுப்பா ஒன்னும் பெரச்சினையில்ல)

மாய 'வர' த்தான் - மாய 'போவ' த்தான்

'ர'ஜினி 'ராம்' கி - 'க'ஜினி 'சீதா' கி

'அல்வா' சிட்டி 'விஜய்' - 'ஜாங்கிரி' சிட்டி 'அஜீத்'

'அல்வா' சிட்டி 'சம்' மி - 'ஜாங்கிரி' சிட்டி 'கூட்டல்' மி

விசி 'தா' - விசி 'தராதே'

வீ.எம் - VM ( நீங்க தமில் வீ.எம் நாஞ் சொன்னது இங்கிலிபிசு VM)

என்றென்றும் அன்புடன் பாலா - என்றென்றும் அன்புடன் 'மில்க்'லா

முகமூடி - முகமூடி (ஆமா அவுரே மொகமூடிதானே போட்டுக்குனு கீராரு)

பி.கே.எஸ் - அய்யோ நான் பம்மல் கே சம்மந்தத்தை சொன்னேன்பா

எம்.கே.குமார் - எம்.கே.கொமாரு

எல்லாம் டெய்லிமலர் - வீக்லி மலர்ல துணுக்குமூட்டை படிச்ச எபெக்ட் தலீவா.

சும்மா ஒரு தமாசுக்குத்தான் டின் கட்டிடாதிங்க ஹி ஹி

காப்பிரைட் இல்ல தலீவா இது ஓப்பன் ஸோர்சாக்கும்

அன்னை சோனியா

எப்பொழுதும் யாரையாவது விமர்சனம் செய்து எழுதியது சற்று அலுப்படைந்து விட்டதால்,
சிலரின் நல்ல பக்கங்களை எழுதலாம் என ஆரம்பித்துள்ளேன்







முதலில் நான் எழுத நினைத்தது காங்கிரஸ் இயக்கத்தின் தலைவி திருமதி.சோனியாவைப்பற்றி

நேற்று சரியென்று நாம் நினைத்தது இன்று தவறாகத்தோன்றலாம்,
நேற்று தவறென்று நாம் நினைத்தது இன்று சரியாகத்தோன்றலாம்,

இதெல்லாம் மனமுதிர்ச்சியாலும் நமது பார்வை விசாலமாவதாலும் என எண்ணுகின்றேன்

அப்படி தவறு என சில காலங்களுக்கு முன் நினைத்து இன்று சரியாகத்தோன்றுவது திருமதி.சோனியாவைப்பற்றிய
எனது எண்ணங்கள்

முதன்முதலில் சோனியா அரசியலுக்கு வந்தபோது இவருக்கு என்ன தகுதியிருக்கு
எதற்காக இவர் அரசியலுக்கு வந்தார்,
இந்தியாவில் பிரதமராக இந்தியாவில் பிறந்த ஒரு இந்தியருக்குகூட தகுதியில்லையா என எண்ணிணேன்

இவர் முதன்முதலாக பாராளுமன்ற உறுப்பினருக்கான தேர்தலில் நின்றபோது
எப்படியாவது இவர் இரண்டு தொகுதிகளிலும் தோற்க வேண்டும் என ஆசைப்பட்டேன்.
அப்போது நான் தீவிர பா.ஜ.க. ஆதரவாளனும் கூட

சோனியா அவர்கள் காங்கிரஸ் தலைமை ஏற்றது சற்று அதிரடியாக இருந்தது என்றாலும்
அது தேவையான ஒரு பிரவேசம் என்பதை தற்போது உணர்கின்றேன்.

திரு.நரசிம்மராவிற்கு பிறகு திரு.சீத்தாராம் கேசரியின் தலைமையில் காங்கிரஸ் கிட்டத்தட்ட
மூர்ச்சையான நிலையிலிருந்தபோது அவரிடமிருந்து காங்கிரசின் தலைமைப்பதவியை கைப்பற்றினார்,

அப்போது கூட அரசியலில் பழம் தின்று கொட்டை போட்ட நரசிம்மராவ் மற்றும் சீத்தாரம் கேசரி
போன்றவர்களாலேயே காப்பாற்றமுடியாத காங்கிரசை இவர் எப்படி தூக்கி நிறுத்தப்போகிறார்?
அதுவும் வெளிநாட்டுக்காரர் என்ற கடுமையான விமர்சனத்தை எதிர்த்து எப்படி அரசியல்
செய்து முன்னேறப்போகின்றார் என்றொரு எண்ணமும் இருந்தது,
அதுமட்டுமின்றி அந்த காலக்கட்டத்தில் திரு.வாஜ்பாயி அவர்களுக்கு ஜென்டில்மேன் என்கின்ற
இமேஜ் வேறு பலமாக இருந்தது,இதையெல்லாம் மீறி என்ன செய்யப்போகின்றார் என்கிற ஆர்வமும் இருந்தது.

முதலில் காங்கிரசிலிருந்து வெளியேறிய தலைகளை காங்கிரசிற்குள் மீண்டும் கொண்டுவரச்செய்தார்,
காங்கிரசிலிரிந்து வெளியேறியிருந்த திரு.அர்ஜீன்சிங்,திரு.மூப்பனார் இன்னும் பலர் மீண்டும் காங்கிரசிற்கு வந்து பலம் சேர்த்தனர்,
ஆகா என்ன இது என்னமோ நடக்கின்றது என சற்று வியந்தேன்,
காங்கிரசின் மிகப்பெரிய பலவீனம் குழு அரசியல்,
மாவட்டத்திலிருந்து மாநிலத்திலிருந்து இந்திய அளவில் கட்சியினுள்ளேயே குழு அரசியல் நடந்து கொண்டிருந்தது,
நரசிம்மராவ் தலைவரெனில் அவருக்கு எதிராக பல குழுக்கள், சீத்தாராம் கேசரியிருந்தால் அவருக்கு எதிராக குழு அரசியல்,
ஆனால் திருமதி.சோனியா தலைமை ஏற்றப்பின் குறைந்த பட்சம் தலைமைக்கு எதிராக இருந்த குழு அரசியல் முடிவுக்கு வந்தது.


அதன்பின் தொடர்ந்து பல மாநிலங்களுக்கு சுற்றுப்பயணம் மேற்கொண்டு கொஞ்சம் கொஞ்சமாக சுற்றுப்பயணம் மேற்கொண்டார்,
முதலில் நேரடியாக மத்திய ஆட்சிக்கு குறி வைக்காமல், மீண்டும் பல மாநிலங்களில் காங்கிரசை அரியனையேறச்செய்ய முயற்சிகள் மேற்கொண்டார், எப்போதுமே கூட்டணி விடயத்தில் காங்கிரஸ் பெரியண்ணன் மனப்பாங்கோடுதான் செயல்படும்,
அந்த நிலையை மாற்றி மாநிலங்களில் விட்டுக்கொடுத்தல் மனப்பாண்மையோடு கூட்டணி சேர்ந்து
பல மாநிலங்களில் ஆட்சியை கைப்பற்றியது காங்கிரஸ்,
இதற்கு சோனியாவின் அரசியல் தந்திரம் மட்டுமே காரணம் என்றால் அது மிகையாகாது.


ஆளும் கட்சியாக இருந்து நரசிம்மராவின் காலத்திற்குப்பின் கிட்டத்தட்ட தொன்னூறு பாராளுமன்ற உறுப்பினர்களை மட்டுமே
கொண்டு நொண்டியடித்துக்கொண்டிருந்தது காங்கிரஸ் கட்சி, அதன் பின் சோனியாவின் தலைமையிலே காங்கிரஸ் கட்சி 1998ல் தேர்தலை சந்தித்தது, அப்போது நூற்றிருபதுக்கும் மேற்பட்ட பாராளுமன்ற உறுப்பினர்களைக்கொண்டு நொண்டியடித்தது,
எதிர்கட்சித்தலைவராக சோனியா என்ன செய்யப்போகின்றார்? அதுவும் அரசியலிலே நீண்ட நெடும் காலமாக இருக்கும்
திரு.வாஜ்பேயி, திரு.அத்வானி, திரு.அத்வானி என்ற இரு பெரும் தலைவர்கள் இருந்த அவையிலே எப்படி இவர் தனக்கென ஒரு இடம் பிடிக்கப்போகின்றார் என எண்ணியிருந்தேன், எனது எதிர்பார்ப்பை பொய்யாக்கும் விதமாக அவையிலே சிலம்பம் ஆடிவிட்டார், ஒவ்வொரு பிரச்சினையையும் அவர் முன்வைத்து வாதம் புரிந்தது மட்டுமல்ல ஒவ்வொரு முறையும் அவை சோனியாவின் கட்டுக்குள்தான் இருந்தது. எனக்கு தெரிந்தவரை அவரின் பாராளுமன்ற பேச்சுகளிலே சிறந்தது வாஜ்பேயி அரசின் மீதான நம்பிக்கை இல்லாத்தீர்மானத்தின் மீதான பேச்சுதான்.

அதன் பிறகு மீண்டும் 2004ல் தேர்தல், பாஜக தனிப்பெரும்பான்மையுடன் ஆட்சியமைக்கும் என்ற கருத்துக்கணிப்பு ஒவ்வொரு கட்ட தேர்தலிம் குறைந்து கடைசியில் பாஜக தனிப்பெரும் கட்சியாக மட்டுமே வரும், கூட்டணியோடு கூட அதற்கு பெரும்பான்மை கிடைக்காது என்றனர், தேர்தல் முடிவுகள் வழக்கம் போல கருத்துக்கணிப்புக்கெதிராக காங்கிரஸ் கூட்டணி வெற்றி பெற்றது மட்டுமின்றி காங்கிரஸ் தனிப்பெரும் கட்சியாக வெற்றி பெற்றது, இதற்கு முழு முதற்காரணம் சோனியாவின் அரசியல் தந்திரமும் உழைப்பும் மட்டுமே.

சோனியாவின் கூட்டணி வியூகம், இந்தியா ஒளிர்கின்றது என்கிற சக்தி வாய்ந்த விளம்பர ஆயுதத்தை அவர்களுக்கு எதிராகவே பயண்படுத்தியது இதெல்லாம்தான் நொண்டியடித்துக்கொண்டிருந்த காங்கிரசை மீண்டும் அரியணையேற வைத்தது.







அடுத்ததாக பிரதமர் பதவியேற்பு, அனைவரும் சோனியாதான் பிரதமராக பதவியேற்கப்போகின்றார் என்ற எண்ணத்திலிருந்தனர்,
அப்போது தான் பதவியேற்கப்போவதில்லை, திரு.மன்மோகன்சிங் அவர்களை பிரதமராக்க முன் மொழியப்போகின்றேன் என்ற போதும் அதைத்தொடர்ந்து காங்கிரஸ் பாராளுமன்ற கூட்டத்தில் சோனியாதான் பிரதமராகவேண்டும் என அரங்கேறிய விடயங்களும்
அவர்து வீட்டின் முன் காங்கிரஸ் தொண்டர்களின் போராட்டமும் மிகப்பெரிய நாடகமாகத்தான் தோன்றியது.

ஆனால் எனது எதிர்பார்ப்பை(மட்டுமா?!) முழுமையாக முறியடித்து(?!) திரு.மன்மோகன்சிங்கை பிரதமராக முன் மொழிந்து குடுயரசுத்தலைவரிடம் மனு கொடுத்துவிட்டு வெளியில் வந்தபோது செய்தியாளர்கள் சூழ்ந்தனர், அப்போது மன்மோகன்சிங்கை முன்னிருத்தி தான் ஒரு இரண்டாம் கட்டத்தலைவர் போல் ஒதுங்கி நின்றாரே அந்த கணம் அவர்மீதிருந்த அத்தனை விமர்சனங்கள் அத்தனையும் விலகி என்னளவில் அவர் தற்போதிருக்கும் எந்த தலைவர்களுடனும் ஒப்பிட முடியாத உயரத்திற்கு சென்றுவிட்டார்.

சட்டப்படியாக அவர் இந்தியாவின் பிரதமர் பதவியேற்கத்தடையில்லை, தார்மீகப்படியாக பார்த்தாலும் அவர் தலைமை ஏற்றுள்ள கூட்டணிதான் வெற்றிபெற்றுள்ளது, கூட்டணித்தலைவர்களும் அவர் பிரதமராவதை எதிர்க்கவில்லை, உலகின் மிகப்பெரிய சனநாயக நாட்டின் வருங்கால வல்லரசின் அதிகாரம்மிக்க பிரதமர் பதவிகிடைத்த போது வேண்டாமென்றாரே இந்த மனப்பாங்கை தேசப்பிதா காந்திக்குப்பிறகு சோனியாவிடம் மட்டுமே கண்டேன்.








என்னையெல்லாம் உகாண்டா அல்லது ஏதேனும் ஒரு நாட்டில் அது எந்த நாடாக இருந்தாலும் சரி பிரதமர் பதவி கிடைத்தால் அதுவும் ஒரே ஒரு நாள் கிடைத்தால் கூட ஏற்றுக்கொள்வேன்.

வெற்றிபெற்ற கட்சியின் அரசியல்தலைவர்தான் பிரதமராக இருக்கவேண்டும் என்கிற ஒரு எழுதப்படாத மரபை உடைத்தவர் சோனியா, அரசியலையும் பிரதமர் பதவியையும் பிரித்து ஒரு சிறந்த முன்மாதிரியை உருவாக்கினார் திருமதி.சோனியா காந்தி.









இன்னும் எத்தனை எத்தனை ஆச்சரியங்களை தரப்போகிறார் சோனியா என பார்ப்போம்

தினமலரில் வெளியான வாசகர்கடிதத்திற்கான மறுப்பு

நான் இங்கு எந்தத்திருமணமுறையையும் விமர்சிக்கவில்லை,
அது எனது எண்ணமும் இல்லை,
என்னை பொறுத்தவரை அவரவர்கள் நம்பிக்கை அவரவர்களுக்கு,
ஆதலால் சமூக வாழ்வுக்கு குந்தகம் விளைவிக்காதவரை
அவர்களின் நம்பிக்கையை விமர்சனம் செய்வது தவறு என்கிற நம்பிக்கை உள்ளவன்,
எனவே இக்கட்டுரை யாரையும் புண்படுத்தும் நோக்கில எழுதவில்லை,
சில உள்ளக்குமுறல்களைத்தான் எடுத்துரைத்துள்ளேன்.

இது உங்கள் இடம் என்றொரு பகுதி தினமலரில்,

இது மக்கள் குரலை ஒலிப்பதற்கு பதில்
தொடர்ந்து சில அரசியல் கட்சிகளயும், சிலரின் நம்பிக்கைகளையும் விமர்சிக்குமிடமாக உள்ளது.

இன்று தினமலரின் இது உங்கள் இடம் பகுதியில் "யார் பேசுவது சுயமரியாதைப்பற்றி" என்ற தலைப்பில் எழுதிய ஒரு வாசகர் சுயமரியாதைத்திருமணம் மற்றும் புலால் உண்பவர்களை விமர்சித்துள்ளார்
சுட்டி இதோ http://www.dinamalar.com/2005june06/ithu.asp
சுயமரியாதை திருமணம் பற்றி சொல்ல வந்ததைப்பற்றி சரியாக சொல்லாமல் யாரையோ கேவலப்படுத்த நினைத்து சுயமரியாதைத்திருமணம் செய்பவர்களையும், அசைவ உணவுப்பழக்கம் உள்ளவர்களையும் கேவலப்படுத்தும் விதத்தில் எழுதியுள்ளார்.

அந்த வாசகரின் கடிதத்திலிருந்து சில வரிகளும் அதற்கான என் மறுப்புகளும் இங்கே

// இந்துக்களின் ஒவ்வொரு சடங்கு சம்பிரதாய விஷயங்களுக்கும் ஒரு பொருள் உண்டு,//

அது என்ன பொருள்?

சதி, விதவைகளை மொட்டையடித்தால்,
தீட்டான(?!) பெண்கள் வீட்டை விட்டு தள்ளியிருக்கவேண்டும்,
வேலைக்கு செல்லும் பெண்கள் எல்லாம் ஒழுக்கம் கெட்டவர்கள்,
ஒவ்வொரு சடங்கிலும்,சம்பிரதாயத்திலும் பெண்ணடிமத்தனம்,
ஒரு சிலரைக்காப்பாற்றும் அக்கரை,
இன்னும் பல, இப்படியாக எத்தனை எத்தனை மூடநம்பிக்கைகள்



//சைவ சாப்பாட்டிற்கு பதிலாக மனிதரை தவிர, மற்ற உயிர்களை எல்லாம் கறியாக்கி படையல்...//

ஒவ்வெருவருக்கும் ஒரு உணவுமுறைபழக்கம்,
அதைப்பழித்திருப்பது நிச்சயமாக தவறு,
இரத்தமும் சதையுமாக இருந்தால் தான் அது உயிரா?
நீங்கள் உணவுக்காக, நெற்பயிர்களையும்,
மற்ற தாவரங்களையும் கொலை செய்யவில்லையா?
இதெல்லாம் உயிர் எனத்தெரியவில்லையா?
(சைவ உணவு பழக்கமுடையவர்களின் மீதான விமர்சனமாக இதை வைக்கவில்லை, அந்த வாசகரின் தவறான புரிதலுக்கான எதிர் வினையாகத்தான் வைக்கின்றேன்)

மனுதர்மம்,பெண் அடிமை அது இது என்று
மனிதர்களை கொன்று கறியாக்கி தின்பதைவிட
இது எவ்வளவோ மேல்.

//இப்படி இந்து திருமண சடங்குமுறைகளுக்கு அவமரியாதை செய்து
திருமணம் செய்வது தான் சுயமரியாதையென்றால்,
அப்படிபட்ட திருமணம் மூலம் மணமக்களுக்கு
பிறக்கும் குழந்தைகள் உதாரண புருஷர்களாக இருப்பாரா? உதவாக்கரைகளாக இருப்பாரா?//

பிறப்புக்கும் உதாரண புருஷனாவதற்கும் என்ன சம்மந்தம்??
இன்னும் எத்தனை நாள்தான் பிறப்பால் உயர்வு தாழ்வு பேசுவார் இவர் போன்றவர்கள்?

//வேதபாராயணத்திற்கு பதிலாக அரசியல் விமர்சங்கள்;
இல்லறம் பற்றி பேச வேண்டிய இடத்தில் இரட்டை அர்த்த வசனங்கள்//

இந்த வாசகர் எத்தனை சுயமரியாதைத்திருமணத்தில்
கலந்து கொண்டுள்ளார்,
எந்த சுய மரியாதை திருமணங்களில் இரட்டை அர்த்த வசனங்கள் பேசப்படுகின்றது என சொல்ல முடியுமா?

சுயமரியாதைத்திருமணங்களில் இரட்டை அர்த்தமுடைய பேச்சுகள் பேசப்படுகின்றன என்ற தவறான் தவலை தருகின்றார்

சடங்குமுறைத்திருமணங்களின் போது ஓதப்படும் சில சமஸ்கிருத மந்திரங்களும்
அதன் விளக்கங்களும் கீழே இடம் பெறும்

"ஸ்த்ரீனாஞ்ச பதிதேவானாம்
தஷ்ஸ்ருஹா அனுகூலதா தத்பந்துஹீ
அனுமுருத்யஸ்யஸ்ஸ நித்யம் தத்வத தாரணம்
சம்மார்ஜன அனுரே பாப்யாம்
க்ரஹ மண்டல வர்த்தனாஹி ஆதமானும்
பூஷ்ஹேஸ்யதா?"

இதன் விளக்கம்
கைப்பிடித்த நொடியிலிருந்து அவன்தான் உணக்கு தெய்வம்
அவனைவிட்டு வெளியே நீ எங்கும் போகக்கூடாது,
வென்னீர்போடு,கால்பிடி,கைபிடி... தூங்கினால் விசிறிவிடு
இப்படி செய்வதால் தான் அவன் மூளையில் குடியேற முடியும்

இது பெண்ணடிமை போற்றுவது இல்லையா??

இந்த கட்டுரையில் இதற்கு மேல் சில பாலுறவு சம்பந்தப்பட்ட வார்த்தைகள் இடம் பெறும், படிக்க விருப்பமில்லாதவர்கள் தயவு செய்து இதற்கு மேல் படிக்க வேண்டாம் என தாழ்மையுடன் கேட்டுக்கொள்கின்றேன்.

"தாம்பூஷன் சிவதாமம் ஏவயஸ்வ
யஸ்யாம் பீஜம் மனுஷ்யா பவந்த்தீ
யான ஊரு உஷதி விஸ்ரயாதை
யஸ்யா முஷந்தஹா ப்ரஷரே பஷேபம்..."

அப்படி என்ன சொல்கிறது இந்த மந்த்ரம்?
நான் அவளை கட்டிப்பிடிப்பேன்.
அப்போது எங்களது அந்தரங்க பாகங்களை
சரியாக பொருந்த செய்யுமாறு...
தேவதைகளே நீங்கள் உதவ வேண்டும்

"விஷ்ணுர் யோனி கர்ப்பயது
தொஷ்டா ரூபாணி பீசமிது
ஆசிஞ்சாது ப்ரஜபதி
தாதா கர்ப்பந்தாது..."

இதன் அர்த்தம் பெண்ணானவளின் அந்தரங்க பாகம் மூன்று பகுதிகளாக பிரிக்கப்படிருக்கின்றது,

யோனி,மத்யமம்,உபஸ்தம் என மூன்றாக பிரிக்கப்படிருக்கும் இதன் ஒவ்வொரு பகுதியிலும் ஒரு தேவதை உட்கார்ந்திருக்கின்றது.

அதாவது விஷ்ணு,தொஷ்டா,தாதா ஆகிய தேவதைகள் இம் மூன்று பாகங்களிலும் உட்கார்ந்திருக்கிறார்கள்,

இவர்கள்தான்(?!) ஆணும் பெண்ணும் தேகசம்பந்தம் கொள்ளும் போது எல்லாம் சரியாக நடக்கின்றதா என்பதை கண்காணிக்கிறார்கள்

இதெல்லாம் இரட்டை அர்த்தம் அல்ல, ஒரே அர்த்தம் தான்

இந்த மாதிரியான மந்திரங்கள் புனிதமான திருமணச்சடங்குகளில் ஓதப்பட வேண்டும் என்று எண்ணுகின்றாரா?


தினமலர் இது போன்ற வாசகர்களின் கடிதத்தை வெளியிடுவது, தினமலரின் மீதான கொஞ்சம் மிச்சமிருக்கும் மரியதையும் போய்விடுகின்றது.

சுட்டிக்கு நன்றி - தினமலர்,

மந்த்ரங்கள் மற்றும் அதன் விளக்கங்கள் உதவிக்கு

நன்றி - நக்கீரன் மற்றும் அக்னிஹோத்ரம் ராமானுஜ தாத்தாச்சாரியர்

தினமலரில் வெளியான வாசகர்கடிதத்திற்கான மறுப்பு

நான் இங்கு எந்தத்திருமணமுறையையும் விமர்சிக்கவில்லை,
அது எனது எண்ணமும் இல்லை,
என்னை பொறுத்தவரை அவரவர்கள் நம்பிக்கை அவரவர்களுக்கு,
ஆதலால் சமூக வாழ்வுக்கு குந்தகம் விளைவிக்காதவரை
அவர்களின் நம்பிக்கையை விமர்சனம் செய்வது தவறு என்கிற நம்பிக்கை உள்ளவன்,
எனவே இக்கட்டுரை யாரையும் புண்படுத்தும் நோக்கில எழுதவில்லை,
சில உள்ளக்குமுறல்களைத்தான் எடுத்துரைத்துள்ளேன்.

இது உங்கள் இடம் என்றொரு பகுதி தினமலரில்,

இது மக்கள் குரலை ஒலிப்பதற்கு பதில்
தொடர்ந்து சில அரசியல் கட்சிகளயும், சிலரின் நம்பிக்கைகளையும் விமர்சிக்குமிடமாக உள்ளது.

இன்று தினமலரின் இது உங்கள் இடம் பகுதியில் "யார் பேசுவது சுயமரியாதைப்பற்றி" என்ற தலைப்பில் எழுதிய ஒரு வாசகர் சுயமரியாதைத்திருமணம் மற்றும் புலால் உண்பவர்களை விமர்சித்துள்ளார்
சுட்டி இதோ http://www.dinamalar.com/2005june06/ithu.asp
சுயமரியாதை திருமணம் பற்றி சொல்ல வந்ததைப்பற்றி சரியாக சொல்லாமல் யாரையோ கேவலப்படுத்த நினைத்து சுயமரியாதைத்திருமணம் செய்பவர்களையும், அசைவ உணவுப்பழக்கம் உள்ளவர்களையும் கேவலப்படுத்தும் விதத்தில் எழுதியுள்ளார்.

அந்த வாசகரின் கடிதத்திலிருந்து சில வரிகளும் அதற்கான என் மறுப்புகளும் இங்கே

// இந்துக்களின் ஒவ்வொரு சடங்கு சம்பிரதாய விஷயங்களுக்கும் ஒரு பொருள் உண்டு,//

அது என்ன பொருள்?

சதி, விதவைகளை மொட்டையடித்தால்,
தீட்டான(?!) பெண்கள் வீட்டை விட்டு தள்ளியிருக்கவேண்டும்,
வேலைக்கு செல்லும் பெண்கள் எல்லாம் ஒழுக்கம் கெட்டவர்கள்,
ஒவ்வொரு சடங்கிலும்,சம்பிரதாயத்திலும் பெணடிமத்தனம்,
ஒரு சிலரைக்காப்பாற்றும் அக்கரை,
இன்னும் பல, இப்படியாக எத்தனை எத்தனை மூடநம்பிக்கைகள்



//சைவ சாப்பாட்டிற்கு பதிலாக மனிதரை தவிர, மற்ற உயிர்களை எல்லாம் கறியாக்கி படையல்...//

ஒவ்வெருவருக்கும் ஒரு உணவுமுறைபழக்கம்,
அதைப்பழித்திருப்பது நிச்சயமாக தவறு,
இரத்தமும் சதையுமாக இருந்தால் தான் அது உயிரா?
நீங்கள் உணவுக்காக, நெற்பயிர்களையும்,
மற்ற தாவரங்களையும் கொலை செய்யவில்லையா?
இதெல்லாம் உயிர் எனத்தெரியவில்லையா?
(சைவ உணவு பழக்கமுடையவர்களின் மீதான விமர்சனமாக இதை வைக்கவில்லை, அந்த வாசகரின் தவறான புரிதலுக்கான எதிர் வினையாகத்தான் வைக்கின்றேன்)

மனுதர்மம்,பெண் அடிமை அது இது என்று
மனிதர்களை கொன்று கறியாக்கி தின்பதைவிட
இது எவ்வளவோ மேல்.

//இப்படி இந்து திருமண சடங்குமுறைகளுக்கு அவமரியாதை செய்து
திருமணம் செய்வது தான் சுயமரியாதையென்றால்,
அப்படிபட்ட திருமணம் மூலம் மணமக்களுக்கு
பிறக்கும் குழந்தைகள் உதாரண புருஷர்களாக இருப்பாரா? உதவாக்கரைகளாக இருப்பாரா?//

பிறப்புக்கும் உதாரண புருஷனாவதற்கும் என்ன சம்மந்தம்??
இன்னும் எத்தனை நாள்தான் பிறப்பால் உயர்வு தாழ்வு பேசுவார் இவர் போன்றவர்கள்?

//வேதபாராயணத்திற்கு பதிலாக அரசியல் விமர்சங்கள்;
இல்லறம் பற்றி பேச வேண்டிய இடத்தில் இரட்டை அர்த்த வசனங்கள்//

இந்த வாசகர் எத்தனை சுயமரியாதைத்திருமணத்தில்
கலந்து கொண்டுள்ளார்,
எந்த சுய மரியாதை திருமணங்களில் இரட்டை அர்த்த வசனங்கள் பேசப்படுகின்றது என சொல்ல முடியுமா?

சுயமரியாதைத்திருமணங்களில் இரட்டை அர்த்தமுடைய பேச்சுகள் பேசப்படுகின்றன என்று கூறுவதால் சடங்குமுறைத்திருமணங்களின் போது ஓதப்படும் சில சமஸ்கிருத மந்திரங்களும்
அதன் விளக்கங்களும் கீழே இடம் பெறும்

"ஸ்த்ரீனாஞ்ச பதிதேவானாம்
தஷ்ஸ்ருஹா அனுகூலதா தத்பந்துஹீ
அனுமுருத்யஸ்யஸ்ஸ நித்யம் தத்வத தாரணம்
சம்மார்ஜன அனுரே பாப்யாம்
க்ரஹ மண்டல வர்த்தனாஹி ஆதமானும்
பூஷ்ஹேஸ்யதா?"

இதன் விளக்கம்
கைப்பிடித்த நொடியிலிருந்து அவன்தான் உணக்கு தெய்வம்
அவனைவிட்டு வெளியே நீ எங்கும் போகக்கூடாது,
வென்னீர்போடு,கால்பிடி,கைபிடி... தூங்கினால் விசிறிவிடு
இப்படி செய்வதால் தான் அவன் மூளையில் குடியேற முடியும்

இது பெண்ணடிமை போற்றுவது இல்லையா??

இந்த கட்டுரையில் இதற்கு மேல் சில பாலுறவு சம்பந்தப்பட்ட வார்த்தைகள் இடம் பெறும், படிக்க விருப்பமில்லாதவர்கள் தயவு செய்து இதற்கு மேல் படிக்க வேண்டாம் என தாழ்மையுடன் கேட்டுக்கொள்கின்றேன்.

"தாம்பூஷன் சிவதாமம் ஏவயஸ்வ
யஸ்யாம் பீஜம் மனுஷ்யா பவந்த்தீ
யான ஊரு உஷதி விஸ்ரயாதை
யஸ்யா முஷந்தஹா ப்ரஷரே பஷேபம்..."

அப்படி என்ன சொல்கிறது இந்த மந்த்ரம்?
நான் அவளை கட்டிப்பிடிப்பேன்.
அப்போது எங்களது அந்தரங்க பாகங்களை
சரியாக பொருந்த செய்யுமாறு...
தேவதைகளே நீங்கள் உதவ வேண்டும்

"விஷ்ணுர் யோனி கர்ப்பயது
தொஷ்டா ரூபாணி பீசமிது
ஆசிஞ்சாது ப்ரஜபதி
தாதா கர்ப்பந்தாது..."

இதன் அர்த்தம் பெண்ணானவளின் அந்தரங்க பாகம் மூன்று பகுதிகளாக பிரிக்கப்படிருக்கின்றது,

யோனி,மத்யமம்,உபஸ்தம் என மூன்றாக பிரிக்கப்படிருக்கும் இதன் ஒவ்வொரு பகுதியிலும் ஒரு தேவதை உட்கார்ந்திருக்கின்றது.

அதாவது விஷ்ணு,தொஷ்டா,தாதா ஆகிய தேவதைகள் இம் மூன்று பாகங்களிலும் உட்கார்ந்திருக்கிறார்கள்,

இவர்கள்தான்(?!) ஆணும் பெண்ணும் தேகசம்பந்தம் கொள்ளும் போது எல்லாம் சரியாக நடக்கின்றதா என்பதை கண்காணிக்கிறார்கள்

இதெல்லாம் இரட்டை அர்த்தம் அல்ல, ஒரே அர்த்தம் தான்

இந்த மாதிரியான மந்திரங்கள் புனிதமான திருமணச்சடங்குகளில் ஓதப்பட வேண்டும் என்று எண்ணுகின்றாரா?


தினமலர் இது போன்ற வாசகர்களின் கடிதத்தை வெளியிடுவது, தினமலரின் மீதான கொஞ்சம் மிச்சமிருக்கும் மரியதையும் போய்விடுகின்றது.

சுட்டிக்கு நன்றி - தினமலர்,

மந்த்ரங்கள் மற்றும் அதன் விளக்கங்கள் உதவிக்கு

நன்றி - நக்கீரன் மற்றும் அக்னிஹோத்ரம் ராமானுஜ தாத்தாச்சாரியர்

நக்கீரன் புலனாய்வு இதழ்









நக்கீரன் புலனாய்வு இதழ்,

பதினெட்டாம் ஆண்டில் வெற்றி நடை போட்டுக்கொண்டிருக்கும்

இந்த இதழிற்கும்

இதன் ஆசிரியர் திரு நக்கீரன் கோபாலுக்கும்

வாழ்த்துக்கள்.

நக்கீரன் இதழ் எப்பொழுதுமே
எதிர் கட்சியாகத்தான் செயல்படும்,

அது தி.மு.க ஆட்சியிலிருந்தாலும் சரி

அ.தி.மு.க ஆட்சியிலிருந்தாலும்,

நக்கீரனின் புலனாய்வு செய்திகள் எமக்கு

எப்போதும் ஆச்சரியத்தை அளிக்கக்கூடியது.







இவர் இப்படித்தானிருப்பார்
என்பது தெரிந்ததே நக்கீரனால்தான்

யாராலும் கண்டுபிடிக்க முடியாத, தொடர்பு கொள்ள முடியாமல்
இருந்த வீரப்பனிடமிருந்து பேட்டியெடுத்து வெளியிட்டது அதன் முதல் மாபெரும் வெற்றி.

முந்திரிக்காட்டில் பதுங்கியிருந்த தடை செய்யப்பட்ட இயக்கமான தமிழர் விடுதலைப்படையின் தலைவர் இளவரசனிடம் பேட்டி எடுத்து வெளியிட்டது









அடித்த ஸ்கூப்களிலே
முக்கியமான ஸ்கூப் இவருடையது தான்


திரு.சங்கரராமன் அவர்கள் காஞ்சிபுரத்திலே வரதராஜ பெருமாள் சன்னிதியிலேயே வெட்டிக்கொலை செய்யப்பட்டபோது எந்த ஒரு பத்திரிக்கையும் ஒரு கிசு கிசு வாகக்கூட மடத்தை கை காட்டாத போது, நக்கீரன் தான் இந்தக்கொலையில் மடத்தின் தொடர்பை கேள்விக்குள்ளாக்கியது, அது மட்டுமின்றி சங்கராச்சாரியார் அவர்களிடம் நேரடியாக இந்த கொலை பற்றி பேட்டி கண்டபோது, எனக்கு தெரியாது, ஆனால் சங்கரராமன் எனக்கு தந்த தொல்லைகளை பார்த்து என் மேல் பாசம் வைத்திருக்கும் யாரேனும் செய்தால் நான் எப்படி பொறுப்பேற்க முடியும் என அவர் பேட்டியில் கூறியபோது ஒரு கோடு,இரண்டு கோடு, மூன்று கோடு என பல கோடுகளை வரைந்தனர், பிறகு இந்த வழக்கில் ஜெயேந்திரர்,விஜயேந்திரர் என பலர் கைது செய்யப்பட்டனர்













திரு.ஆலடி அருணா வெட்டிக்கொலை செய்யப்பட்ட போது, பல பத்திரிக்கைகளும் திரு.கட்டதுரையின் கொலைக்கு பழிக்குப்பழியாக இந்த கொலை நடந்தது என்று தகவல் தந்து கொண்டிருந்தபோது பொறியியல் கல்லூரித்தொழில்போட்டியினால் தான் இந்த கொலை நடந்தது என எஸ்.ஏ.ராஜா வின் மீது முதன் முதலில் கைக்காட்டியது நக்கீரன் தான், இவரும் பிறகு காவல்துறையால் கைது செய்யப்பட்டார்.
எஸ்.ஏ.ராஜா, திருநெல்வேலி மாவட்டத்திலே பல கல்விக்கூடங்கள் நடத்தி வரும் பிரபலம்.







தமிழகத்தை கலக்கிய இரு பெண்கள்



கஞ்சா வழக்கில் செரீனா கைது செய்யப்பட்ட போதும், சீட்டிங் வழக்கில் ஜெயலட்சுமி கைது செய்யப்பட்டபோதும் ஏதோ இது தினம் நடக்கும் சம்பவங்களில் ஒன்று என்று எண்ணியிருந்த்தபோது கைதின் பின் புலங்களை முதலில் அம்பலப்படுத்தியது நக்கீரன் தான்.


இது போல எண்ணிலடங்கா உதாரணங்கள், கொலை வழக்குகள் மட்டுமல்ல
அரசாங்க அதிகாரிகள்,அரசியல்வாதிகள்,கான்டிராக்ட் ஊழல்கள் என கிட்டத்தட்ட எல்லா ஊழல்களையும் பெரும்பாலும் முதலில் அம்பலப்படுத்தியது நக்கீரன் தான்

பத்திரிக்கைகளின் மீது நடத்தப்பட்ட தாக்குதல்களிலேயே மிக அதிகமாக பாதிக்கப்பட்டது நக்கீரன் தான், ஒரு பத்திரிக்கை ஒரு சிரிப்பு வெளியிட்டதற்காக ஒரே ஒரு நாள் அதன் ஆசிரியர் கைது செய்யப்படதை இன்று வரை பத்திரிக்கை சுதந்திரத்தில் மிகவும் பாதிக்கப்பட்டதாக சொல்லிக்கொண்டுள்ளது, பொடாவினில் பல மாதங்கள் சிறையிலே, பல முறை நக்கீரன் அச்சகத்தின் மீது நடத்தப்பட்ட தாக்குதல்கள்,பாதிப்படைந்த பதிப்பாளர் திரு.கணேசனின் இறப்பு, ஊழல்களை அம்பலப்படுத்திய பெரம்பலூர் நிருபர் கொலை, இன்னும் பற்பல ஊர்களில் நக்கீரன் நிருபர்கள் மீது தாக்குதல் என ஒரு அடக்குமுறையை எதிர்த்து போராட்டத்தையே நடத்திக்கொண்டுள்ளது நக்கீரனும் அதன் ஆசிரியர் கோபாலும். பொடாவிலே நக்கீரன் கோபால் சிறையிலிருந்த போதும் எந்த பத்திரிக்கையும் கடுமையாக போராடவில்லை, பெயருக்கு ஒரு கண்டன ஆர்பாட்டம், ஒரு கையெழுத்து வேட்டை நடத்திவிட்டு அமைதியாகிவிட்டன.

ஆனால் அத்தனை போராட்டங்களையும் மனவலிமையோடு சந்தித்து இன்றும் ஒரு வெற்றிகரமான பத்திரிக்கையாக வந்து கொண்டுள்ளது,

ஒரு சில அரசியல் இதழ்களைப்போல் அட்டையை உரித்துவிட்டால் எல்லா வாரமும் அதே செய்திகளை தாங்கிக்கொண்டுள்ள (தி.மு.க, கலைஞர் மீது தாக்குதல், பா.ம.க.,ம.தி.மு.க வை மாவட்ட கட்சி என கிண்டல் செய்தல், பாஜக மற்றும் மடங்களுக்கு ஜால்ரா போடுதல், ஒவ்வொரு வாரமும் அதே கேள்வி அதே பதில்கள், கிறுக்குத்தனமாக எதையாவது எழுதுவிட்டு, தான் ஒரு கிறுக்கன் என சொல்லிக்கொள்தல் - புரிகின்றதா யார் என?) பத்திரிக்கை போலன்றி நக்கீரனின் ஒவ்வொரு இதழ் வெளியீடும் ஒரு களப்போராட்டம் தான்.

ஆனாலும் நக்கீரனுக்கு பத்திரிக்கை உலகில் ஒரு பெரிய இடம் மற்றும் பெயர் இல்லை? ஏன் ?

எது இதற்கு காரணம் சாதியா? பணமா? அல்லது சற்று தரம் குறைந்த காகிதத்தில் வண்ணமயமாக பதிப்பிக்காததா?

படங்கள் உதவி - நக்கீரன்

நன்றி - நக்கீரன்