கற்பு பற்றி பெரியார்

ஒழுக்கங்கெட்டத் தனத்திற்கு ஒருதலைக் கற்பே காரணமாகும்.... கீற்று இணையதளத்திலிருந்து


இந்து மதம் என்றும் இந்துக்கள் என்றும் நம்மைச் சொல்லிக் கொண்டு, இந்து மதம் சாஸ்திர புராண சம்பந்தமான விஷயங்களைத் தமிழர் தலையில் சுமத்துவதும், தமிழர்கள் அதற்குக் கட்டுப்படுவதும் நியாயமா? இந்து மதப் புராணங்களில் ‘கற்பு'க்கு லட்சணம் ஒரு பெண் (நளாயினி), தனது புருஷன் குஷ்டரோகியாய் இருந்து கொண்டு தாசி வீட்டுக்குப் போக வேண்டுமென்று சொன்னாலும், அவனைக் கழுவி எடுத்துக் கூடையில் வைத்துத் தலையில் தூக்கிக் கொண்டு போய் தாசி வீட்டில் வைத்து, விடிந்த பிறகு மறுபடியும் தாசி வீட்டிலிருந்து தன் வீட்டிற்குத் தூக்கிவர வேண்டுமென்று சொல்லப்பட்டிருக்கிறது. இந்து மதத்தை வலியுறுத்துகிற ஒருவன், தன் மகளுக்கு இப்படிப்பட்ட புருஷன் அமைந்து அவன் தன் பெண்ஜாதியை இப்படிச் செய்ய வேண்டுமென்று சொல்லுவானானால், ஒப்புக்கொள்ளுவானா?...

ஆண், பெண் கூட்டு வாழ்க்கையில் இப்போது வழங்கி வரும் கருத்தமைந்த ‘கற்பு' என்னும் வார்த்தையே அவசியமற்றது என்றும், அது வாழ்க்கை இன்பத்திற்குக் கேடு பயக்கின்றதே ஒழிய, அதனால் நன்மை இல்லை என்றும் சொல்லுவேன். இன்று வழங்கும் ‘கற்பு' பெண்களுக்கு மாத்திரமே ஒழிய ஆண்களுக்கு இல்லை. அது, பெண்களை நிர்ப்பந்திப்பது போல் ஆண்களை நிர்ப்பந்திப்பதில்லை. சமுதாயத்தில் ஒழுக்க ஈனம் ஏற்பட்டதற்குக் காரணம், இந்த ஒருதலைக் கற்பேயாகும். பெண்கள் அடிமையாக்கப்பட்டதற்கும் இந்த ஒரு தலைக் கற்பே காரணமாகும். இந்த ஒரு தலைக்கற்பு உள்ளவரை, சமுதாயம் சீர்படப் போவதில்லை என்பதே எனது உறுதி.

ஆண்களின் ஒழுக்க ஈனமான நடத்தைகளை இந்துமதக் கடவுள், சமயம், சாத்திரம், புராணம் ஆகியவை ஒப்புக் கொள்ளுகின்றனவா இல்லையா என்று கேட்கிறேன். இவை கூடாது என்று சொல்லுகிற ஒரு தமிழன், தன்னை இந்து மதத்தைச் சார்ந்தவன் என்று சொல்லிக் கொள்ள முடியுமா? இப்படிச் சொல்லுவதன் மூலம் ஆண்களைப் போலவே பெண்களும் ஒழுக்க ஈனமாக இருக்க வேண்டுமென்று போதிப்பதாகக் கொள்ளக்கூடாது. பெண்களைப் போலவே ஆண்களும், ஒழுக்கமாக இருக்கச் செய்வதற்கு என்னென்ன செய்யவேண்டுமோ அவற்றை எல்லாம் சட்டமோ, சமுதாயமோ செய்ய வேண்டும். செய்யாவிட்டால், சில பெண்களாவது முன் வந்து அதற்கு என்ன செய்ய வேண்டுமோ அவற்றைச் செய்யத் துணிவதாகவாவது காட்ட வேண்டும். உரிமையில்தான் சுதந்திர உணர்ச்சி இருக்கிறது. அது இல்லாத இடத்தில் அடிமை உணர்ச்சிதான் இருக்கிறது. அதனாலேயே நமது பெண்கள் அடிமைகளானார்கள். அப்பெண்களின் வயிற்றில் பிறந்த நாம் அடிமை வாழ்வு வாழ்கிறோம்...

அநேகம் பேர்களுக்குச் சேர்க்கையால்தான் பிள்ளைப் பேறு கர்ப்பம் உண்டாகின்றது என்பதுகூடத் தெரியாது. ‘ஏதோ கடவுள் கொடுக்கிறார். கடவுள் வயிற்றில் கொண்டு விடுகிறார். கடவுளே வளர்க்கிறார். கடவுளே பெற்ற பின்பும் நோய் உண்டாக்குகிறார். கடவுளே சாகடிக்கிறார்' என்று கருதிக் கொண்டு, இது விஷயங்களில் மிருகங்களைவிட கேவலமாய் நடந்து கொள்ளுகிறார்கள். சேர்க்கை விஷயம் அது சம்பந்தமான உடல்கூறு ஆகியவைகளைப் பற்றித் தெரிவது, வெகு கேவலமாக இங்கு பேசப்படுகிறது. கதைகளில், புராணங்களில் நாடகத்தில் பச்சை பச்சையாய்க் கேட்கிறபோதும், பார்க்கிறபோதும் ஆனந்தக் கூத்தாடுகிறோம்.

அந்தக் கலைகளை நமது ஆண் - பெண் இருபாலருமே ஓர் அளவுக்காவது தெரிந்து இருக்க வேண்டும். அது தெரிந்து கொள்ளாமல் வெறும் மிருகப் பிராயமாய் இருப்பதாலேயே அநேக நோய், சாவு, ஊனம், மனச்சஞ்சலம், பொருந்தா வாழ்வு ஆகியவை பெருகுகின்றன. குழந்தைகள் பெறுவதில் கர்ப்ப காலத்தில் எப்படி இருக்க வேண்டும், குழந்தை பிறந்த பிறகு எப்படி இருக்க வேண்டும், எத்தனை நாள் பொறுத்து மறுபடியும் கர்ப்பம் தரிக்க இடம் கொடுக்க வேண்டும் என்பவைகளையாவது ஒவ்வொரு பெண்ணும் தெரிந்திருக்க வேண்டும்.

சேர்க்கையில் எப்படி இருக்க வேண்டும் என்பது தெரியாமல் நடந்து கொண்டு நோய் வந்தால், அதற்குப் ‘பொம்பளை நோவு' என்று சொல்லிவிடுகிறார்கள். இதில் ஒரு விசேஷம் என்னவென்றால், பெண்களுக்கு அது சம்பந்தமான நோய் வந்தாலும், பெண்கள் அதையும் ‘பொம்பளை வியாதி' என்றுதான் சொல்லுகிறார்கள். இது, பெண்கள் சமூகத்திற்கே இழிவான காரியமாகும்.

ஆண் - பெண் தன்மை, உடல்கூறு, சேர்க்கை விளக்கம், கர்ப்பம், பிள்ளைப்பேறு ஆகியவைகளைப் பற்றிச் சர்க்கார், அத்தருணம் நெருங்கிய பிள்ளைகளுக்கு கற்றுக் கொடுக்க வேண்டும். அல்லது மேல் வகுப்புக்குப் பாடமாகவாவது வைக்க வேண்டும். இவை நன்றாக மக்கள் அறிந்தால், இக்காரியங்களில் ஒழுக்கத் தவறுதல்கூட ஏற்படாது என்பது எனது அபிப்பிராயம். சின்ன தவறுதல் கூட ஏற்படாது என்பது எனது அபிப்பிராயம். இன்ன இன்ன பதார்த்தம் சாப்பிட்டால், உடலுக்கு ஒத்துக்கொள்ளாது, நோய்வரும் என்று கருதினால், எப்படிச் சாப்பிடாமல் விட்டுவிடுகிறானோ, அதுபோல் இன்ன மாதிரி நடந்தால் கேடுவரும் என்று தெரிந்தால், அதைச் செய்யாமல் தப்பித்துக் கொள்வான். அப்படிக்கில்லாமல் எப்படி நடந்து கொள்ள வேண்டுமென்று தெரியாமல், இஷ்டப்படி நடந்து கொண்டு வந்த வினையைக் கடவுள் செயல் என்று சொன்னால் மனிதனுக்கும் மிருகத்திற்கும் என்ன வித்தியாசம்?

(காஞ்சிபுரத்தில் 16.6.1940 அன்று நடைபெற்ற திருமண விழாவில் ஆற்றிய உரை)

சிறுகதை - வளர்சிதை மாற்றம் (மீள்கதை)

தமிழோவியம் தீபாவளி மலரில் வெளிவந்த எனது சிறுகதை, இந்த சிறுகதைக்கு முதலில் நான் வைத்திருந்த பெயர் தேவர்களும் கால்களும், அதையும் விட வளர்சிதை மாற்றம் என்ற பெயர் இன்னும் பொருத்தமாக இருக்கலாம்...



வில்லின் ஒரு முனையையும் மற்றொரு முனையையும் இணைக்கும் நாணைப்போல அந்த கிராமமுமில்லா நகரமுமில்லா நகரின் ஒரு முனையையும் மற்றொரு முனையையும் இணைக்கும் அந்த இரட்டை சாலை தரையில் கால்படாமல் மிதந்து கொண்டிருக்கும் தேவர்கள் வாழும் கல்லூரி சாலை, பல்கலைகழகம், கலைக்கல்லூரி, பொறியியல்கல்லூரி, பாலிடெக்னிக், மேலாண்மை கல்லூரி, உடற்பயிற்சி கல்லூரி என அந்த சாலையின் வலப்புறம் முழுதும் கல்லூரிகள், இடப்புறமோ விடுதிகளோடு, மரணவிலாஸ், மெரைன், ப்ளைட் என்று ஆங்காங்கே சில பெட்டிகடைகள் டீ கடைகளோடு, அந்த இரட்டை சாலையின் மையத்தில் உள்ள குழல் விளக்கு கம்பங்கள் மாணவர்களின் குறி பார்த்து எறியும் திறமையின் மௌன சாட்சிகளாய் , மாலை முழுதும் தேவர்களும் தேவதைகளும் மரங்களின் அடியில் பல பிரச்சினைகளை அலசியபடி 'அப்புறம்' 'அப்புறம்' என்ற அர்த்தம் பொதிந்த பேச்சுகளோடும் சிரிப்புகளோடும் கடலை போடும் அழகே அந்த சாலையின் அழகின் ரகசியம்.

நேற்று வரை ஃபைவ் லேம்ப்ஸ், பிள்ளையார்பட்டி, குன்றக்குடி, ராம்நகர் என பேசிக்கொண்டிருந்தவர்கள் GRE நுழைவுத்தேர்வுக்கான புத்தகம் வாங்கிய உடனே கலிபோர்னியாவும்,நியூயார்க்கும் அவர்களின் வாயில் புகுந்து வந்தன, இது தான் கடைசி வருடம் என ஒவ்வொரு வெள்ளிகிழமையும் சவேரா சென்று பீர் அடித்துவிட்டு சிக்கன்-65 வர தாமதமானதற்கு பார் பணியாளரிடம் சண்டை போட்டு இராத்திரி முழுவதும் 'முஸ்தபா முஸ்தபா டோண்ட் ஒர்ரி முஸ்தபா' என பாடி கத்தி அழுது களைத்து அதே சவரா உணவகத்திற்கு மறு நாள் மதிய உணவிற்கு தோழியோடு செல்லும் போது சீக்கிரம் சிக்கன்-65 கொண்டு வந்த பணியாளனை எரிச்சலாக பார்த்து மூன்று மணி நேரம் மதிய உணவு உண்ணும் போதாவது காதலை சொல்ல வேண்டுமென்ற கனவோடு தூங்கிக்கொண்டு சிலர், 'செமி கிராக் ஹாஸ்டல்' என மாணவிகள் செல்லமாக அழைக்கும் 'செமி சர்க்கிள் ஹாஸ்டலின்' ஒவ்வொரு அறையிலும் ஒவ்வொருவரும் கனவுலகிலிருக்க விடுதியின் உணவுக்கூடம் காலையில் சோம்பல் முறித்துக்கொண்டிருந்தது திடீரென அதிர்ந்தது கணேஷின் குரலால்.

"டேய் சின்ன பையா காலையிலே அங்கே என்னடா கரைச்சல் " ஆறுமுகம் என்கிற சமையலரின் சத்தத்திற்கு ஓடி வருகிறான் சின்னபையன் என்கிற உதவியாளன்

"கணேஷ் சார், இட்லி நல்லா இல்லைனு சத்தம் போடுறாரு அண்ணே"

"அவருக்கு இதே வேலையாயிடுச்சி, நெதம் நெதம் மெஸ்ல கரைச்சல் குடுத்துகிட்டு, நீ போயி 115ல மெஸ் ரெப் இருப்பாரு கூட்டிகினு வா"

"மெஸ் ரெப்பு சார், ரெப்பு சார்"

இன்னும் 10 மாதம் கழித்து பிரிய போகிற சோகத்தை நேற்றே பிழிந்து மானிட்டர் மப்பில் அழுது படுத்திய காட்ஸ் (இங்க பலருக்கும் சொந்த பெயர் மறந்து பட்ட பெயர் தான் கூப்பிட) காலைபரப்பி தூங்கிக்கிடக்க, தலை பாரத்தோடு கதவை திறந்தான் மெஸ் ரெப்,

"என்னடா காலையிலே..."

"சார் கணேஷ் மெஸ்ல சத்தம் போடுறாரு"

"யாரு கட்டை கணேஷா?"

"ஆமாம் சார்"

"என்னவாம்"

"இட்லி நல்லாயில்லையாம், ஆறுமுகம் அண்ணன் உங்களை கூப்பிட்டு வர சொன்னாரு"

"சரி நீ போ, நான் வரேன்"

சத்தம் போட்டு கொண்டிருந்த கட்டை கணேஷை சமாதானப்படுத்திய படி

"கட்டை என்னடா பிரச்சனை?"

"இட்லியை பாருடா, கல்லு மாதிரி இருக்கு, மனுஷன் சாப்பிடுவானா இதை?"

"சரி கொஞ்சம் இரு நான் குக் கிட்ட பேசறன்"

"என்னத்த பேசற இதைத்தான் ஒரு மாசமா பேசுற, மெஸ் ரெப் எலக்ஷன்ல நின்னப்ப என்ன சொல்லி ஜெயிச்ச நீ, மெனு மாத்துறன்னு சொன்னியே, மெனு மாத்தினயா?"

"ஏற்கனவே வார்டன் கிட்ட பேசிட்டேன், சீக்கிரம் மாத்திடலாம்"

"என்ன சீக்கிரமா மாத்திடலாம், இவ்ளோ நாள் என்ன பண்ண, வார்டனுக்கு பயந்துகிட்டயா, ஜால்ரா?"

"கட்டை வேண்டாம், சும்மா பிரச்சினை பண்ணனும்னு பேசறியா, மெஸ் எலக்ஷன்ல நீ தோத்ததை மனசுல வச்சிகிட்டு தெனம் மெஸ்ல பிரச்சினை பண்றியா?"

"யாரு பிரச்சினை பண்றது, மெனு மாத்துறேன் மாத்துறேன்னு சொன்னியே மொதல்ல அதை செய், மெனு என்னனு பசங்ககிட்ட டிஸ்கஸ் பண்ணியா? உன் இஸ்டத்துக்கு மெனு மாத்தலாம்னு நெனக்கிறியா? காமன் ஹால் மீட்டிங் போடு நான் அங்க பேசிக்கிறேன்?"

"டேய் யாரு சொன்னா என் இஸ்டத்துக்கு மெனு மாத்துறேன்னு, சரி விடு, இன்னிக்கு நைட் மீட்டிங் போட்டுடலாம்"

"நைட் பசங்க இருக்க மாட்டாங்க இப்பவே போடு"

"பசங்க நிறைய பேரு தூங்கறாங்க, இப்போ கூப்பிட்டா எவனும் வரமாட்டான்"

"அப்போ மதியம் போடு"

"சரி மதியம் காமன் ஹால் மீட்டிங்ல பேசலாம், இப்போ சத்தம் போடாம சாப்பிட்டு போ வேற இட்லி வாங்கிக்க"

"வேற இட்லி வாங்க எங்களுக்கு தெரியும் நீ போ"

மதியம் உணவு முடிந்து கொஞ்சம் கொஞ்சமாக காமன் ஹால் என்கிற தொலைகாட்சி அறையில் விடுதி மாணவர்கள் கூட்டம் சேர்ந்தது.

"பேரன்பு கொண்ட பெரியோர்களே, தாய்மார்களே, இங்கே நாம் கூடியிருப்பது நம் மெஸ் மெனுவைப் பற்றி டிஸ்கஸ் செய்ய" காட்ஸ் பேசிக்கொண்டிருக்கும் போதே தலையில் இலேசாக தட்டி

"டேய் காட்ஸ், போ போய் உட்காரு" மெஸ்ரெப்

"பப்ஸ் கொஞ்சம் செக் பண்ணு பசங்க இன்னும் வராங்களானு, மீட்டிங் ஆரம்பிக்கலாம்" மெஸ்ரெப்

"ஓகே மச்சி நீ ஸ்டார் பண்ணு" பப்ஸ்

"ப்ரெண்ட்ஸ், இந்த இயர் நாம மெஸ் மெனு மாத்தனும்னு வார்டன் கிட்ட பேசினேன்"

"மெஸ் சாப்பாடு கேவலமா இருக்கு, குவாலிட்டி சுத்தமா நல்லா இல்லை" கட்டை கணேஷ்

"அதுவும் பேசிட்டேன் வார்டன்கிட்ட"

"ஆனா ஒன்னும் புண்ணியமில்லையே, நீ எப்பவுமே வார்டனுக்கு ஜால்ரா அடி" கணேஷ்

"கணேஷ், நீ எதுக்கு இப்போ தேவையில்லாம பிரச்சினை பண்ற, என்ன ஜால்ரா அடிக்கிறாங்க, இங்க பேசிக்கிட்டு இருக்கோமில்ல"

"இங்க பாரு நீ மெஸ்ரெப்பு ஆயி ஒரு மாசமாச்சி, என்ன கிழிச்ச" கணேஷ்

"டேய் கட்டை நீ போன வருசம் மெஸ் ரெப்பா இருந்து என்ன புடுங்கின?" பப்ஸ்

"பப்ஸ், கொஞ்சம் பேசாம இரு, கணேஷ் அடாவடியா பேசாத மொதல்ல மெனுவை டிஸ்கஸ் செய்வோம், அப்புறம் ஃபுட் குவாலிட்டி பத்தி வார்டன் கிட்ட பேசினேன், குவாலிட்டி இன்கிரீஸ் செஞ்சாலும், மெனு மாத்தினாலும் கண்டிப்பா மெஸ் பில் கூடும்னு சொன்னாரு"

"கூடட்டுமே, காமன் ஷேரிங் தானே, நாம கட்டுவோம்"

"எவ்ளோ கூடும்? " பாயிண்ட் பிரபு

"எப்படியும் இரு நூறு ரூபாய் மாசத்துக்கு கூடும் " மெஸ்ரெப்

"இருக்கட்டுமே, இரு நூறு தானே கூடும், நல்ல சாப்பாடு வேணும், அவ்ளோதான்" கணேஷ்

"என்ன சொல்றீங்க" மற்றவர்களையும் பார்த்து கேட்டான் மெஸ் ரெப்

"பரவாயில்லை நூறு,இரு நூறு ஜாஸ்தி வந்தாலும் நாங்க கட்டுறோம்" என பல குரல்கள் எழுந்தன

"மச்சி, அப்படியே மாசம் ரெண்டு தடவை சிக்கன் போட சொல்லுடா"

"சரி சொல்றேன்"

மெஸ் மெனுவை இறுதி செய்துவிட்டு கூட்டம் கலைந்தது.

அறை எண் 115ல் மெஸ்ரெப்பின் மந்திராலோசனை கூட்டத்தில்

"மச்சி, கட்டை கணேஷ் ஓவரா போறான்" காட்ஸ்

"அவன் தோத்த கடுப்புல ரொம்ப பிரச்சினை பண்றான், அவனை தட்டி வைக்கனும்" பப்ஸ்

"நீங்க ரெண்டு பேரும் சும்மா இருக்க மாட்டிங்களா? இங்க பாரு டிபார்ட்மெண்ட் செகரட்ரி நம்ம கேங், ஜென்ரல் ரெப்பும் நாம தான், NSS செக்ரட்டரியும் நாம தான், கல்சுரல் பங்ஷன் நடத்தனும், ஸ்போர்ட்ஸ் மீட் நடத்தனும், கேம்ப் நடத்தனும், இதுல கட்டை கேங் கிட்ட சண்டை போட்டா இதையே சாக்கா வச்சி எதையும் நடத்த விடாம மேனேஜ்மன்ட் செய்துடுவாங்க, ஏற்கனவே எப்படிடா இந்த கல்ச்சுரல்சை நிறுத்தறதுனு காலேஜ்ல எதிர்பார்த்துக்கிட்டு இருக்காங்க, அதனால கொஞ்சம் பொறுமையா போங்க"

"ஆமா நீ இப்படியே பருப்பு மாதிரி பேசு, அப்புறம் ஒருத்தவனும் நம்மள மதிக்க மாட்டான்" காட்ஸ்

கதவை தட்டி உள்ளே வந்தான் பாயிண்ட் பிரபு.

"வாடா பாயிண்ட்டு என்ன இந்த பக்கம்" மெஸ்ரெப்பு

"சும்மா தான் பாக்கலாம்னு வந்தேன்"

"என்ன பாயிண்ட்டு காலேஜ் முடிஞ்சி டெய்லி கடலை தானாமே" காட்ஸ்

"ஹா ஹா..."

"இல்ல எதுனா டவுட் கேட்பாங்க சொல்லி தருவேன்"

"டேய் பாயிண்ட்டு கிட்ட மெஷின் டிசைன் டவுட் கேளுங்கடா, பாயிண்ட் பாயிண்டா அடிப்பான் பாரு"

"பாயிண்ட்டு அது நம்ம பெரிசு ஆளு, அதனால பார்த்து கடலை போடு"

"எப்ப இங்க வந்தாலும் இப்படியே ஓட்டுறிங்க, சரி நான் அப்புறம் வரேன்" பாயிண்ட்

மந்திராலோசனை அப்படியே கடலை போடுவதையும், கலிபோர்னியாவில் இந்தியர்கள் அதிகம் வாழ்கின்றனர் எனவே அங்கே போவதன் சாதக பாதகங்களையும் இடையிடையே கட்டை கணேஷ் கேங்கை தட்டுவதையும் பற்றி பேசி சில மணி நேரம் கழித்து மரணவிலாசில் டீ குடித்து மாலை உலாவை ஆரம்பித்தனர்.

"பப்ஸ், வண்டியெடுத்துக்கிட்டு வா, சும்மா ஒரு ரைட் போகலாம்"

இரு சக்கர வாகனத்தில் ஏறியபடி

"பிள்ளையார் பட்டியா?" பப்ஸ்

"இல்ல மச்சி கண்டனூர் பக்கம் போ, எப்பவும் பிள்ளையார் பட்டியே போனா போர் அடிக்கும்"

கண்டனூரையும் தாண்டி வண்டி சென்று கொண்டிருக்க இருள் கவிழ்ந்த நேரத்தில்.

"பப்ஸ் வண்டியை நிறுத்து, சைட்ல இருக்கே அந்த பாருக்கு போ"

"உனக்கு என்ன வேணும்?"

"எனக்கு பீர் மட்டும் போதும், உனக்கு"

"ஒரு எம்சி கட்டிங், மிக்சர் வாங்கிக்க, நல்ல வேளை காட்ஸ் கடலை போட போயிட்டான், அவன் வந்திருந்தா அவ்ளோதான் இன்னைக்கும் அழுது இம்சையை பண்ணிடுவான்"

"ஹா ஹா... "

கடையினுள் நுழைந்து கடைபணியாளனிடம்

"ஒரு கல்யாணி பீர், ஒரு எம்சி கட்டிங் குடுங்க" பப்ஸ்

கடைபணியாளன் திரும்பிய அந்த நொடியில் இருவரும் அதிர்ந்தனர், பணியாளனாக பாயிண்ட் பிரபு

"டேய் பாயிண்ட், இங்க என்னடா பண்ற"

"அது அது..."

"டேய் நீ என்ன என்ன பண்ற இங்க"

" தப்பா நெனச்சிக்காதிங்க, ஒரு நிமிஷம் இருங்க, சரக்கு தரேன்"

"டேய் அது இருக்கட்டும் என்ன செய்ற இங்க இப்போ நீ"

"மணி தம்பி, கடைய கொஞ்சம் பாத்துக்கோ ஒரு அஞ்சு நிமிஷத்துல வரேன்" பாயிண்ட் பிரபு சரக்கை எடுத்துக்கொண்டு பப்ஸையும் மெஸ் ரெப்பையும் அழைத்தான்

" வாங்க இந்த பக்கமா, உள்ள பார் கிடையாது, பின்னாடி அந்த கட்டடத்துல உக்காருவோம்" ... பாயிண்ட் பிரபு

"என்னடா பாயிண்ட், இங்க என்ன பண்ற அத சொல்லு" பப்ஸ்

"பார்ட்டைமா வேலை செய்றண்டா"

"ஏன்?"

"தினம் 10ரூவா தருவாங்க, அப்புறம் இந்த பணம் என் படிப்புக்கும் உதவியா இருக்கு, வீட்டுலருந்து வாங்குற பண பாரத்தை கொஞ்சம் கொறைக்கலாம்னு தான்"

"அதான் ஏன் டா"

"நான் உங்கள மாதிரி பணக்கார பசங்க இல்ல"

"டேய் நாங்க எங்கடா பணக்கார பசங்க, நாங்க மாச சம்பளம் வாங்குற மிடில் கிளாஸ் பேமிலி தான்டா"

"இல்லடா, நான் இங்க படிக்கறதே ஸ்காலர்ஷிப்ல தான், நம்ம காலேஸ் கவர்மென்ட் காலேஜ், அதனால் ஃபீஸ் கம்மி, இல்லைனா எனக்கெல்லாம் எஞ்சினியரிங்லாம் கனவு தான் டா. ஊருல கூட ஸ்கூல் நேரம் போக மீதி நேரம் லாட்டரி டிக்கெட் விப்பேன், நாங்க ரொம்ப ஏழை ஃபேமிலிடா இப்ப கூட அஞ்சு வட்டிக்கு கடன் வாங்கித்தான் படிக்கிறேன் டா"

"அதுக்காக..."

"நீங்க தெனம் சாப்பாடு நல்லா இல்லை சாப்பாடு நல்லா இல்லைனு மெஸ் தொட்டியில கொட்டுறிங்களே, அந்த சாப்பாடுதான் நான் இத்தனை வருஷத்தில சாப்புடுற நல்ல சாப்பாடு, மதியம் மெஸ் மெனு மாத்துற மீட்டிங்ல கூட நெறய பசங்க சொன்னாங்க, நூறு இரு நூறு பெரிய காசில்லை, சாப்பாடு நல்லா இருக்கனும்னு, எனக்கு நூறு இரு நூறு பெரிய காசுடா, நான் ஒரு ஒரு நூறு ரூபாய்க்கும் மாசம் அஞ்சு ரூபா வட்டி கட்டனும்"

"அடப்பாவி மீட்டிங்ல சொல்ல வேண்டியது தானே" மெஸ்ரெப்

"இல்ல, அங்கேயே ஆளுக்காளு இது பெரிய காசா அப்படினு பேசினாங்க, நான் அப்படியே அப்போஸ் செஞ்சாலும் என்னை விரோதியா பாப்பானுங்க, இல்லனா எல்லா காரணத்தையும் நான் சொல்லனும், அதான் நான் மீட்டிங்ல சொல்லை, அப்புறம் உன் ரூமுக்கு வந்தேன் சொல்லலாம்னு, உங்க கேங்கே அங்க இருந்து கலாட்டா செஞ்சிங்க, அதான் சொல்லலை, வந்துட்டேன், நீங்களும் என்னை பத்தி யாருக்கிட்டயும் சொல்லிடாதிங்கடா"

"சரி நாங்க யார்கிட்டயும் சொல்லலை, மெஸ் பில்லும் ஏறாது, கவலைப்படாதே" மெஸ்ரெப்

கனவு உலகின் மற்றொரு பரிமாணம் தெரிய வர அது வரை தரை காலில் படாமல் மிதந்த இரண்டு தேவர்களின் கால்களும் தரைக்கு இறங்கியது.

பத்ம வியூகத்தில் அரவாணன், அடிக்கும் அபிமன்யூக்கள்

அகில இந்திய மருத்தவ கழகத்தின் தன்னாட்சி உரிமையில் தலையிடுகின்றார் அமைச்சர், அதனால் அகில இந்திய மருத்துவ கழகத்தில் அமைச்சருக்குள்ள அதிகாரத்தை நீக்கிவிட்டு அதை குடியரசு தலைவர் எடுத்துக்கொள்ள வேண்டுமாம், அதாவது அகில இந்திய மருத்துவ கழகம் என்ன வேண்டுமானாலும் செய்யலாம், இந்தியாவுக்கே அதாவது 100 கோடிக்கும் மேற்பட்ட மக்களின் சுகாதாரத்துறை அமைச்சர், ஆயிரக்கணக்கான அரசு மருத்துவமனைகளின் அமைச்சர் அகில இந்திய மருத்துவ கழகத்தின் தன்னாட்சி உரிமையில் தலையிடக்கூடாதாம், ஆனால் அந்த அமைச்சகத்திலிருந்து வரும் நிதியுதவி மட்டும் வேண்டுமாம், தன்னாட்சி உரிமையில் தலையிடக்கூடாது என்று கூறும் அத்தனை புனிதமான அகில இந்திய மருத்துவ கழகத்தில் தான் தேவையற்ற வேலை நிறுத்தத்தில் இறங்கிய (உயர்சாதி) உயிர் காக்கும் பணியில் இருந்த வேலை செய்யாத மருத்துவர்களுக்கு சம்பளம் வேண்டுமாம்? அவர்களுக்கு சம்பளம் தரவிருந்தார் இயக்குனர், அதில் தலையிட்டு தடுத்தார் அமைச்சர்,

போராட்டகாலத்தில் சம்பளம் தர வேண்டுமென கோரும் இந்த வேலை நிறுத்தத்தில் இந்த மருத்துவர்கள் ஏன் இறங்கினர்? அவர்களுடைய சம்பளம் குறைக்கப்பட்டதா, அவர்களுடைய சேமநலநிதி(PF)யில் கை வைக்கப்பட்டதா? அவர்களுடைய விடுப்பை பயன்படுத்தாமல் சம்பளமாக்கும் ஈட்டிய விடுப்பு நிறுத்தப்பட்டதா? ஓய்வு பெறுபவர்கள் வீடு கட்டவும், பிள்ளைகளுக்கு படிக்கவும், திருமணம் செய்யவும் நம்பியிருந்த அவர்களுடைய சேமநலநிதி கிராஜீவிட்டி யில் பாதி பணம் சேமிப்பு பத்திரமாக ஆறு ஆண்டு கழித்து பெற்று கொள்ளுங்கள் என கொடுக்கப்பட்டதா? தங்கள் பாதி அவர்களுடைய கோரிக்கைகளுக்காக அரசாங்கத்திடம் பேச்சுவார்த்தை நடத்தினார்களா? அதற்கான நேரம் அரசாங்கத்திற்கு கொடுக்கப்பட்டதா? அட பொதுப்பிரச்சினைக்காக போராடுகிறார்கள் என்றாலும் கூட இதற்கு முன் இத்தனை ஆண்டுகளாக எந்த பொது பிரச்சினையிலும் வராத ஆர்வம் இதில் வந்திவிட்டது இந்த மருத்துவர்களுக்கு, இதெல்லாம் பச்சை ஆதிக்க சாதி வெறி ஏறி இடஒதுக்கீட்டுக்கு எதிராக நடத்திய போராட்டத்திற்கு சம்பளம் தர தயாராக இருந்தாராம் இயக்குனர், அதை தடுத்தாராம் அமைச்சர்.

இது நாள் வரை சாதியின் பெயரால் ஒடுக்கி பிறரை அறியாமையில் வைத்திருந்து அதன் மூலம் அவர்களின் இடங்களை பிடித்துக்கொண்டு இருந்த இடத்தில் சமூக நீதிக்காக கொண்டுவரப்பட்ட இட ஒதுக்கீட்டை , பரம்பரை பரம்பரையாக தாம் அனுபவித்து வந்தது தொடரமுடியாமல் போகிறதே என்ற எரிச்சலில் மேற்கொண்ட போராட்டம் இது, நியாயப்படி பார்த்தால் உயிர் காக்கும் இந்த மருத்துவர்களின் மீது டெஸ்மா பாய்ந்திருக்க வேண்டும்( தமிழக அரசு ஊழியர்களின் வேலை நீக்கத்தை எதிர்த்து விட்டு இங்கே எப்படி ஆதரிக்கின்றீர் என்பவர்கள் இதற்கு முந்தைய பத்தியை மீண்டும் ஒரு முறை படிக்கவும்).

அகில இந்திய மருத்துவ கழகம் சுகாதாரத்துறையின் கீழ் வருகின்றது ஆனால் அதில் அதன் அமைச்சருக்கு அதிகாரம் இருக்க கூடாதாம், நேரடியாக குடியரசு தலைவரின் கீழ் வரவேண்டும் என்று கையெழுத்து வேட்டை நடத்துகிறார்களாம், ஏற்கனவே குடியரசு தலைவர் பெயருக்கு வகிக்கும் பல அதிகாரமற்ற பதவிகளில் இதுவும் சேர்ந்துவிட்டால் அகில இந்திய மருத்துவ கழகத்தின் தன்னாட்சி, தன் இச்சையான ஆட்சியாகிவிடுமல்லவா அதற்காகத்தான் இந்த கையெழுத்து வேட்டை, தன் இச்சையான ஆட்சியாகவிட்டால் யாருக்கு வேண்டுமானாலும் சம்பளம் தரலாம், யாருக்கு வேண்டுமானாலும் வேலை தரலாம் இந்த புனித நிறுவனத்தில்.

இடஒதுக்கீட்டு விடயத்தில் தங்கள் சாதி வெறியை காண்பித்து கரி பூசிக்கொண்ட புனித பத்திரிக்கைகள் தற்போது அன்புமணிக்கு எதிரான போரை தொடங்கியுள்ளன, இந்த அன்புமணி தான் இடஒதுக்கீட்டுக்கு எதிராக மருத்துவர்கள் மேற்கொண்ட போராட்டத்திற்கு நடவடிக்கை எடுத்தவர், காலம் காலமாக அகில இந்திய கழகத்தின் தன் இச்சையான ஆட்சியின் அடித்தளத்தையே ஆட செய்பவர், மருத்துவர்களின் வேலை நிறுத்தத்தின் போது அன்புமணியே நேரடியாக நோயாளிகளை பரிசோதனை செய்து தேவைப்பட்டால் தானே நேரில் களத்தில் இறங்குவேன் என்று செயல்பாடு, இதனால் மருத்துவர்களின் போராட்டத்திற்க்கு ஏற்பட்ட ஆதரவு பின்னடைவு, எல்லாவற்றிற்கும் மேலாக இடஒதுக்கீட்டின் முழு ஆதரவு கட்சியை சேர்ந்தவர், இதற்காகத் தான் அகில இந்திய மருத்துவ கழகத்தின் தன் இச்சையான ஆட்சிக்காக சிலர் பிரதமரை சந்திக்கப்போகின்றனராம், தினம் தினம் அன்புமணிக்கு எதிராக தங்கள் ஆதிக்க சாதிவெறி முகத்தை சில பத்திரிக்கைகள் காண்பித்து அன்புமணிக்கு எதிரான பத்ம வியூகத்தை வகுக்கின்றன.

இந்திய இராணுவத்தை(?!) இலங்கைக்கு அனுப்பி விடுதலைப்புலிகளின் தலைவர் பிரபாகரனை கைது செய்து வரவேண்டுமென்று ஜெயலலிதா அரசு சட்டசபையில் தீர்மாணம் கொண்டுவந்த போது திமுக எந்த எதிர்ப்பும் காண்பிக்காமல் நடுநிலை வகித்த போது கறுப்பு சட்டை அணிந்து சட்டமன்றத்தில் தீர்மாணத்தை எதிர்த்து எதிர்ப்பை அதிகாரப்பூர்வமாக பதிவு செய்த பாமக ஈழத்தமிழருக்கான அடையாள ஆர்பாட்டத்தில் அரசியல் காரணங்களினால் பாமக அதிகாரப்பூர்வமாக கலந்துகொள்ளாது(அதிகாரப்பூர்வமற்று பல பாமகவினர் கலந்துகொண்டனர்) என்று அறிவித்த போது அரசில் இருப்பதால் தானே இப்படியான நிர்பந்தங்கள் இதற்கு அரசில் பங்கேற்காமலே இருந்திருக்கலாம் என்ற என் எண்ணத்தையும் அதிருப்தியையும் சிலருடன் பகிர்ந்து கொண்டேன், ஆனால் இப்படி முறுக்கி கொண்டால் இழப்பு யாருக்கு என்பது இப்போது புரிந்துவிட்டது, அதிகாரத்தில் இல்லாமலிருந்தால் அகில இந்திய கழகத்தில் நடைபெறுவது போன்ற சாதி வெறி அக்கிரமங்களை எதிர்த்து அடையாள கண்டன போராட்டம் மட்டுமே நடத்திக் கொண்டிருந்திருக்க முடியும், ஆனால் அனுபவிப்பவர்கள் அனுபவித்துக் கொண்டே இருந்திருப்பர், வேறு ஒன்றும் செய்திருக்க முடியாது.

இடஒதுக்கீட்டிற்காகவும், ஒடுக்கப்பட்டவர்களின் ஓலக்குரலுக்கும் ஒடுக்கப்பட்டவர்களின் உரிமைக்காகவும் சமூக நீதிக்காகவும் நடந்த, நடக்கும் போராட்டங்களுக்கும் ஒடுக்குபவர்களின் ஊளைக்குரலுக்கும் இடஒதுக்கீட்டிற்கு எதிரான சமூகநீதிக்கெதிரான போராட்டத்திற்கும் வித்தியாசம் உண்டு, அகில இந்திய மருத்துவ கழக மருத்துவர்கள் நடத்திய இடஒதுக்கீட்டிற்கெதிரான போராட்டம் எந்த வர்க்கத்தில் வருகிறது என்பதை நீங்களே முடிவு செய்து கொள்ளுங்கள், அந்த வித்தியாசம் தெரியவில்லையென்றால் அவர்களுக்காக என்னால் பரிதாபம் மட்டுமே படமுடியும்.

அகில இந்திய கழகத்தின் இயக்குனர் வேணுகாபல் ராஜினாமா மிரட்டல் வேறு விடுக்கின்றார், மிரட்டல் என்ன மிரட்டல் ராஜினாமா செய்வதென்றால் செய்துவிட்டு போக வேண்டியது தானே (வேணுகோபால் ராஜினாமா செய்யவேண்டுமென அகில இந்திய மருத்துவ கழகத்திலேயே கையெழுத்து வேட்டை நடக்கின்றதாம்) ஏற்கனவே இந்த பதிவில் சொன்னது போல புழுத்துப்போன வீச்சங்களை எதிர்த்து அரவாணன்கள் உரக்க சமூகநீதிக் குரல் எழுப்புவதால் அரவாணன்கள் மீதே அபிமன்யூக்களின் தாக்குதல். பீடங்கள் உடைந்து அரவாணன்கள் எழுந்து கொண்டிருக்கும் காலம் இது, அபிமன்யூக்கள் புரிந்து கொள்ளவில்லையென்றால் அரவாணன்களிடம் மாட்டி அடிபட நேரிடும்.

பின்குறிப்பு
இத்தனை நாளும் தன் இச்சையான ஆட்சியாக செயல்பட்டுக்கொண்டிருக்கும் பாண்டிச்சேரி ஜிப்மர் மருத்துவமனையிலும் இதே மாதிரியான நிலையே...

அரசியலில் சாதி - குழப்பமும் உரத்த சிந்தனையும்

ஒடுக்கிறவர்கள் எப்போதும் வித்தியாசங்களெல்லாம் ஒன்றுமில்லை. நாமெல்லாரும் ஒன்றுதான் என மொழிவதும் ஒடுக்கப்படுகிறவர்கள் இல்லை இல்லை வித்தியாசங்களும் வேறுபாடுகளும் நிறைந்த உலகம் இது.நாங்கள் வித்தியாசமானவர்கள் என அரற்றுவதும் இன்றும் நடைபெறும் நிகழ்வுகள். அமெரிக்க கறுப்பர்கள் தாங்கள் பேசும் எபோனிக்ஸ் என்பது ஆங்கிலமல்ல தனிமொழி என்று வாதிடுவதும் கிளின்டன் தலையிட்டு எபோனிக்ஸ் எனத் தனிமொழி கிடையாது.அதுவும் ஆங்கிலம்தான் என ஆணையிட்டதும் சமீபத்தில் நடந்த கதை.



ஒடுக்கப்படுகிறவர்கள் தங்கள் வித்தியாசங்களை நிறுவுவதன் மூலமாகவே அதனடிப்படையில் உரிமைகளைக் கோரமுடிகிறது. ஒடுக்குபவர்கள் இந்த வித்தியாசங்களை மறுப்பதன் மூலமாகவே எல்லாருக்குமான மொத்த விடுதலை பற்றிய பெருங்கதையாடலின் மறுபக்கமாக எல்லோரையும் பிரதிநிதித்துவப்படுத்தும் உரி்மையை ஒடுக்குகிற சக்தி பெற்றுக்கொள்கிறது.

அ.மார்க்ஸ் எழுதிய கட்டுரையிலிருந்து....



அ.மார்க்ஸ்ன் எழுத்திலிருந்து நாம் புரிந்து கொளவேண்டியது உண்மையில் சமமில்லாத போது எல்லாம் சமம், எல்லாம் ஒன்றுதான் என்று பொதுமை படுத்தும் போது உண்மையில் தாழ் நிலையில் இருப்பவர்களுக்கு துரோகம் இழைக்கிறோம், இது தான் இன்றைய நிலையில் சாதி எங்கேப்பா இருக்கின்றது? எல்லோரும் சமமாகத்தானே இருக்கின்றோம் என்று நாம் பொதுமை படுத்தும்போது உண்மையிலேயே சாதியால் பாதிக்கப்படுபவர்களுக்கு துரோகமிழைக்கிறோம்.

சாதி என்பதே அரசாங்கம் கொடுக்கும் சாதிச்சான்றிதழில் தான் வருகின்றது என்று பேசுவதையும் பள்ளிவரை சாதி என்று இருப்பதே தெரியாமல் சாதி சான்றிதழ் வாங்கி ஒருவன் மேல் படிப்பு படிக்க செல்லும் போது தான் சாதி என்று தெரிய வருகின்றது என்று சொல்லும் போதும் இது எத்தனை போலித்தனமானது என்று புரியும்.

கோழியும், ஆடும் சாப்பிடுபவர்கள் மூன்று தெரு தள்ளி இருக்கும் அக்ரகாரத்தில் பிறந்திருந்தால் சைவ உணவுக்காரராகவும் அதே இந்த பக்கம் மூன்று தெரு தள்ளி தலித் சேரியில் பிறந்திருந்தால் கோழியையும் ஆட்டையும் சாப்பிட்டுவிட்டு, சாப்பிடாமல் விலக்கி வைத்திருக்கும் மாட்டையும் சாப்பிட்டிருப்பார்கள், ஒருவன் சோற்றில் இல்லாத மீன் அடுத்தவன் சோற்றில் வருவதெப்படி? ஆடு கோழி சாப்பிட்டு மாட்டை விலக்குவது ஏன்? மாடு சாப்பிட்டால் குடும்பம் விருத்திக்கு வராது என்று பூசி மெழுகி சொல்வதும், தலித் தான் மாட்டுகறி சாப்பிடுவார்கள் என்று (தலித்தென்றெல்லாம் கூட சொல்ல மாட்டார்கள் நேரடியாக சாதிப்பெயரை சொல்லித்தான் சொல்லுவார்கள்)


ஒரே ஊர், ஒரே மதம், ஒரே மொழி தாய் மொழியாக இருக்கும் போது சிலருக்கு ஸ்ரீனிவாஸ் என்றிருக்கும் பெயர் மற்ற சிலருக்கு சீனுவாசன் என்று மாறியதன் மர்மம் என்ன?

ஒரே ஊர், ஒரே மதம், ஒரே மொழி தாய் மொழியாக இருக்கும் போது வீட்டில் பேசுவதற்கும் வெளியில் பேசுவதற்கும் உள்ள வழங்கு மொழி வித்தியாசத்தின் மூலம் என்ன?

ஒரே ஊர், ஒரே மதம், ஒரே மொழியாக இருக்கும் போது வேட்டியும், சேலையும் கட்டும் முறை அகத்துக்கும், வீட்டுக்கும் மாறியிருக்கிறதே அதற்கு காரணம் ஏழை பணக்காரன் என்கிற வர்க்க பேதமா?

எல்லாம் ஒன்றாக இருக்கும் போது ஆவணி அவிட்டத்திற்கு சிலர் மட்டும் விடுமுறை எடுத்து சடங்குகள் செய்வது எந்த வகைக்கு?



இவர் சொந்தகாரங்களாம் கழிவறை கழுபவர்களாகவும், நகரசுத்தி தொழிலாளிகளாகவும், அவர் சொந்தகாரர்கள் எல்லாம் தறி நெய்பவர்களாகவும், இன்னொருவர் சொந்தகாரர்கள் எல்லாம் விவசாயிகளாகவும், அதெப்படி முடிவெட்டுபவர்கள் எல்லாம் அவருக்கு மட்டுமே ஒரு விதத்திலே சொந்தக்காரங்களாக இருக்காங்களே ஏன் இவருக்கு சொந்தகாரங்களாக இல்லை?

கோவிலின் கருவறையில் ஏன் எல்லோராலும் நுழைந்து சாமியை அர்ச்சனை செய்ய முடியவில்லை?(நாத்திகர் கலைஞர் புண்ணியத்தில் இப்போது சட்டப்படி செய்யலாம், ஆனால் சமூகப்படி?), இந்த சாமிக்கு படைக்கும் சாராயமும் ஆடு,கோழி பலியிடலும் ஏன் மற்ற சாமிகளுக்கு செய்யமுடியவில்லை, எல்லோரும் ஒன்றுதான் என்ற போது எல்லோரும் ஆர்ச்சகராகலாம் என்ற உடனே சிலரை உச்ச நீதிமன்றம் நோக்கி ஓட வைத்தது ஏன்?


இங்கே என்ன உணவு பழக்கம் என்ன என்பதை தீர்மானிப்பதே சாதியாக இருக்கும் போது, பெயர்களின் எழுத்துகளை சாதி தீர்மானிக்கின்ற போது, எப்படி சிலருக்கு முக்கியமான பண்டிகையாக சடங்காக இருப்பதில் மற்றவர்களுக்கு தொடர்பேயில்லாததற்கு பிண்ணனியில் சாதி இருக்கும் போது சாதியின் இருப்பையே உணராமல் பள்ளி முடிக்கும் வரை காத்திருந்து விட்டு பின் சாதி சான்றிதழை வைத்து தான் சாதி தெரிந்து கொண்டால் அது அந்த மாணவனின் அறியாமை அல்லது இதெல்லாம் சமூக நடைமுறை, விதி என்று தவறாக நினைத்திருக்க வேண்டும், அந்த நிலையில் அந்த அளவிற்கு யோசிக்கும் அளவிற்கு முதிர்ச்சி இருக்குமா என நினைத்தால் கொஞ்சம் சந்தேகம் தான், ஆனால் மாணவப்பருவத்தை தாண்டிய பிறகும் பல விடயங்கள் பலரால் எடுத்து காட்டிய பிறகும் பல படித்த பிறகும் பலவற்றை நேரடியாக கண்டு அனுபவித்த பிறகும் சாதி எங்கிருக்கு? சே.. இந்த சாதி இருப்பதே அரசாங்கம் தரும் சாதி சான்றிதழால் தான் மேலும் இந்த அரசியல்வாதிகள் தான் சாதியை வாழவைப்பதே இல்லையென்றால் சாதியே இருக்காது (அரசியல்வாதி என்கிற இனம் வந்ததே 1947க்கு பிறகு தானே அதற்கு ஆனால் சாதியின் இருப்பு எத்தனை ஆயிரம் ஆண்டுகளாக இருக்கின்றது?) என்று பேசுவதன் காரணம்.

திருமணப்பத்திரிக்கையில் சாதிப்பெயர் இல்லையென்றவுடன் எப்படியாவது சாதிதெரிந்து கொள்ள வேண்டுமென்று
"தம்பி வீட்டில் பார்த்து வைத்த பெண் தானே",
"நீங்க பிள்ளையா? முதலியாரா?"
இந்த கேள்விகளெல்லாம் எதற்கு?
அதான் மணமக்கள் பெயர், அப்பா அம்மா பெயர், இடம், நேரம், தேதி எல்லாம் பத்திரிக்கையில் இருக்கின்றதே, ஏன் அந்த பத்திரிக்கையில் இல்லாத சாதி பற்றிய கேள்வி? காரணம் திருமணத்திற்கு வரலாமா? வந்தாலும் சாப்பிட கை நனைக்கலாமா? நனைத்தாலும் தாம்பூலம் எடுக்கலாமா?

அய்யோ இத்தனை நாள் இவங்க அவங்கனு நினைச்சி பழகினோமே அப்போ அவங்களா இருக்குமோ என்ற பதட்டமும் இந்த கேள்விகள் கேட்க வைத்தன என்பது புரியாமல் அடேடே
இப்போ ஏன் இங்கே இப்படி சாதி இருக்கே சாதி இருக்கேனு பேசறாங்க என்று பேசினால் அதற்கு காரணம்

1) அறியாமை அல்லது இன்னமும் உயர் நிலை மாணவப்பருவத்திலிருந்து வெளிவராமல் இருப்பது!

அல்லது

2)சாதி ஏற்ற தாழ்வுகளே இல்லையென்று பேசுவதன் மூலம் தற்போதுள்ள உண்மை நிலவரத்தினை மறைப்பது, அதன் மூலம் சாதி மறையாமல் இருக்க வைப்பது

அல்லது

3)சாதியின் இருப்பிற்கு காரணத்தை அரசியல்வாதிகளின் மீதும் அரசாங்கத்தின் மீதும் தூக்கி போட்டுவிட்டு அதற்கு காரணமான தான்/நான்/நம்/தம் சமூகம் இதற்கு காரணமில்லையென்று தெரிந்தோ தெரியாமலோ கூறிக்கொண்டே சாதியின் இருப்பிற்கான காரணங்களை மறைப்பது

அல்லது

4)அப்படியெல்லாம் ஒன்றுமில்லைப்பா ஒன்றுமில்லைப்பா என்று கூறுவதன் மூலம் சாதிய ஏற்ற தாழ்வுகளை அப்படியே இருக்கும் நிலையிலேயே இருக்க வைப்பது அதனால் இத்தனை காலமும் அனுபவித்து வந்தது பறி போகாமல் இருக்க வேண்டியதற்கான போர் தந்திரம்.

அல்லது

5)சமூகமும் ஊடகங்களும் உருவாக்கியுள்ள சாதியைப் பற்றி பேசுவதே பாவம் என்ற சமத்துவபுர ஜென்டில் மேன்\உமேன் மனப்பான்மை.


உணவு பழக்கத்திலிருந்து, பெயரில் உள்ள எழுத்துக்களிலிருந்து, செய்யும் தொழிலிலிருந்து, பேச்சு வழக்கிலிருந்து, கோவிலுக்குள் நுழைவதிலிருந்து, செய்யும் தொழிலிலிருந்து திருமணத்தில் கை நனைப்பது வரை தீர்மானிக்கும் சாதியின் தாக்கம் பற்றி எந்தவித குழப்பமும், உரத்த சிந்தனையும், அருவெறுப்பும் இல்லாமல், எந்த வித கோபமும்மில்லாமல் தாண்டிப்போகும் போது அரசியலில் சாதி என்று வரும் போது மட்டும் குழப்பமும் உரத்த சிந்தனையும், அரசியலில் சாதியென்றாலே அருவெறுப்பும் அசூயையும் அடைகிறோமே?

அரசியலில் சாதியிருப்பதால், சாதியின் ஆணி வேர் அரசியல் அல்ல, சாதியின் எத்தனையோ தாக்கங்களின் வெளிப்பாடுகளில் இதுவும் ஒன்று, சமூகத்தின் மற்ற எந்த தாக்கத்தின் வெளிப்பாட்டையும் கேள்விக்குட்படுத்தாமல் அதே சமயத்தில் அரசியலில் உள்ள சாதியின் தாக்கத்தை கேள்விக்குட்படுத்துகிறோம்.... ஏன்? ஏன்? நான் இப்படி கேட்பதாலேயே சமூகத்தில் இத்தனை இடங்களில் உள்ள சாதி அரசியலிலும் இருந்துவிட்டு போகட்டுமே அதை ஏன் கேள்வி கேட்க வேண்டும் என்பதல்ல என் எண்ணம்....

வரும் பதிவுகளில் தொடர்ந்து பேசுவேன்

அரசியலில் சாதி பாகம்-2

புதுப்பேட்டை - பின் நவீனத்துவம்

புதுப்பேட்டை - திரைப்பட விமர்சனம்

சில ஆண்டுகளுக்கு முன் வட சென்னையில் ஒரு இராத்திரியில் அய்யப்ப சாமிகளின் கன்னி பூசை "சாமியே சரணம் அய்யப்பா" என்ற முழக்கங்களோடு களைகட்டியிருந்தது, நாற்பதுக்கும் மேற்பட்டோர் பயங்கர ஆயுதங்களுடன் திடீரென அந்த கூட்டத்தினுள் புகுந்தனர் முதல் முறை சபரிமலைக்கு செல்லும் கன்னி சாமி ஒருவரை குறிவைத்து பாய்ந்தனர், ஐந்துக்கும் மேற்பட்டோர் கன்னி சாமியின் தலைக்கு வைத்த குறிவைத்தனர் அவரின் முதுகில் வெட்டு வாங்கி கத்தி முதுகிலேயே தொங்க ஓடி ஒளிந்தார், எல்லாம் முடிந்து பார்த்தபோது இருவர் ஆயுதங்களால் குதறப்பட்டு உயிரிழந்திருந்தனர், ஆனால் குறி வைக்கப்படிருந்த தலை தப்பிவிட்டார், அன்று தப்பியவர் சென்ற ஆட்சியிலும் இந்த ஆட்சியிலும் சட்ட மன்ற உறுப்பினர் என செட்டிலாகிவிட்டார் எதிரிகள் அத்தனை எளிதில் இனி ஸ்கெட்ச் போடமுடியாது, என்கவுன்டர் பயமும் இருக்காது, யார் கண்டது அடுத்த ஆட்சியில் அமைச்சராகக் கூட ஆகலாம், எதிர்கட்சியாக இருக்கும் போதும் யாரையோ குளிர்விக்க முதல்வரையே சட்டசபையில் கை ஓங்கிக்கொண்டு சென்றார், புதுப்பேட்டை படம் பார்க்கும் போது இவர் ஞாபகமும் பல முன்னாள் இன்னாள் அமைச்சர்கள் ஞாபகமும் வருவதை நிச்சயம் தவிர்க்க முடியாது.


"அக்கா அக்கா உன் தம்பி என்ன மாதிரி வரணும்னு நீ நெனக்கிற?'
"மாமா மாதிரி இஞ்சினியராவோ, இல்ல டாக்டராவோ வரணும்டா நீ! "
"உனக்கு பேராசைதான், 'தீ...சாரதீ' 'சாரதி' விஜய் மாதிரி தான் வருவேன்"

ஆறாவது படிக்கும் தம்பிக்கும் அவன் அக்காவுக்கும் நிஜத்தில் நடந்த உரையாடல்.



பொதுவாக தாதாப்படங்கள் என்றாலே எனக்கு கடும் வெறுப்பு ஏற்படுவதுண்டு, இந்த மாதிரியான படங்கள் தாதாவை மிக நல்லவராகவும், கருணை மிக்கவராகவும் காண்பிப்பார்கள், திரைப்படங்கள் கடும் தாக்கத்தை ஏற்படுத்தும் இளவயதினர் (15-21வயது) இந்த மாதிரியான படங்களினால் வழிதவறும் வாய்ப்பு மிக அதிகமாக இருக்கின்றது, மேலும் இது மாதிரியான படங்கள் (நாயகன், ரெட், தளபதி, மேலும் பல…) தாதாக்களின் மீதான ஒழுக்க குறியீட்டை உரசிப்பார்க்கின்றன, இதனால் தாதாத்தனம் செய்வது தவறில்லை என்பது மாதிரியான தோற்றத்தை உருவாக்கும்.

இதை புரட்டி போட்ட படம் புதுப்பேட்டை, தாயை இழந்து தந்தையினால் கொலைவெறியில் துரத்தப்பட்டு பிச்சை எடுக்கும் தனுஷ் கொஞ்சம் கொஞ்சமாக எப்படி கொடூரமான தாதாவாகின்றார் அதன் பின் என்ன ஆகின்றார், நிறைய சிரத்தை எடுத்திருக்கின்றார், படம் முழுக்க இரத்தம் என்ற போதும் ஒரு தாதா தொழிலுக்கு பின்னால் இருக்கும் ஆபத்துகளை மிக உண்மையாக படம் முழுக்க காண்பித்துள்ளார், மேலும் தாதாக்கள் எல்லாம் நல்லவர்களாகவும், கருணையுள்ளம் கொண்டவர்களாகவும் பார்த்து பழகிப்போன தமிழ் திரையுலகில், தாதாக்களின் கொடூர குணத்தை வெளிச்சம் போட்டு காட்டியுள்ள படம் புதுப்பேட்டை, தாயை கொலை செய்த தந்தையை நயவஞ்சகமாக கொலை செய்வதும், நண்பனின் தங்கையின் திருமணத்திற்கு தாலியெடுத்து கொடுக்க போய், அவருக்கே சட்டென்று தாலிகட்டுவதும், தனக்கு சொல்லி கொடுத்த குரு பிணமாக கிடக்கும் போது முதலிரவு கொண்டாடுவதும், தல தல என உருகும் தாதா படங்களிடையில் இந்த கதாநாயகன் துதிபாடல் இல்லாமல் "நீ குழந்தை டா" என்றும் தாதாவான பிறகும் தனுஷ் அடி வாங்குவதும், தன் உயிருக்கு பயந்து நடுங்குவதும், கூட்டத்தில் தனுஷை ஆளாளுக்கு மிரட்டுவதும் தமிழ் படங்களின் தாதா இமேஜ்ஜிற்கு கிடைத்த அடி.

தனுஷ் மாதிரியான ஒல்லிப்பிச்சானுக்கு தாதா வேடம் எப்படி பொறுந்தும், அதுவும் தனுஷிடம் ஒரே அடி வாங்கி அடிபட்டவன் சாவது நகைச்சுவையாகிப்போகும் என்ற போதும், தனுஷிடம் அடிவாங்கி சாகும் தாதாவின் தம்பி ஒரு நோயாளி போன்ற அந்த இருமல் காட்சி சித்தரிப்பு அந்த காட்சியை நம்பும்படியாக்குவதில் இயக்குனரின் திறமை பளிச்சிடுகின்றது, “தினம் தினம் கழுத்துக்கு மேலே தலை இருக்கிறதா என்று தொட்டு தொட்டு பார்த்துக்கிட்டே இருக்க முடியுமா?” என்ற வசனங்கள் நிதர்சனத்தை கண் முன் நிறுத்துகின்றது, சோனியா அகர்வால் தனுஷிடம் பேசும் வசனங்களில் பின்நவீனத்துவ(?!) டச் இருந்தாலும் கூர்மையான வசனங்கள்.

கட்சி தலைவராக வரும் தமிழ்வாணனும் தேன்மொழி அவரின் பெண்ணின் பெயராக குறிப்பிடுவதும் தமிழகத் தலைவர் ஒருவரை கண்முன் நிறுத்த செய்யும் (இப்போதைக்கு அவரை மட்டும் தான் என்ன வேண்டுமானாலும் கேலிசெய்யலாம்! ) தனுஷுக்கு தொழில் நுணுக்கங்கள் கற்று கொடுக்கும் காட்சிகளில் இயக்குனரின் உழைப்பு தெரிகின்றது, படம் முழுக்க வன்முறையை வீரமாக காண்பித்து கடைசியில் வன்முறை வேண்டாமென்று அறிவுரை சொல்லும் படங்களுக்கு மத்தியில் படம் முழுக்க தாதாத்தொழிலின் கொடூரத்தை காண்பித்தது புதுப்பேட்டை, அந்த கடைசிகாட்சி மட்டும் இல்லையென்றால் (அதை படத்திலேயே பார்த்துக்கொள்ளுங்களேன்) படம் முழுக்க இரத்த வாடை அடித்தாலும் இந்த படம் பார்க்கும் இளவயதினர் வன்முறை பாதையில் திரும்புவதற்கு சற்று தயங்க வைக்கும் படம் என்பதில் சந்தேகமில்லை (அளவுக்கதிகமான வன்முறை காட்சிகள் இருப்பதால் சிறு குழந்தைகள் பார்ப்பதற்கு ஏற்றதில்லை) , பாடல்கள் எதுவும் நினைவில் இல்லை, தனுஷிலிருந்து அத்தனை நடிகர்களின் நடிப்பும் அற்புதம், திரைப்படம் பார்க்கும் உணர்வில்லாமல் ஏதோ நிசத்தை காண்பது போல.

புதுப்பேட்டை பின் நவீனத்துவம்.

survival of the fittest சரிதான் மிருக இனத்திலும், மிருகமாக இருக்கும் மனிதர்களிடத்திலும்...

மன்னித்துவிடு என்னை!



என்ன மயிருக்கு
வந்தாய் இங்கே?

உயிர் பிழைக்கவா?
பிழைப்பததெற்கு
திறந்தவெளி கழிப்பிடத்திற்கும்
திறந்தவெளி சிறைக்குமா?

பேருந்தில் பெண்களை
கருக்கியவனும்
பெஸ்ட் பேக்கரியை
எரித்தவனும்
பெயிலில் சுதந்திரமாய்
சுற்றி வர
ஆறுமணி ரோல்காலுக்கு
ஆஜராக வேண்டிய
கண்டிஷன் பெயிலுக்கா
கடல் தாண்டி
வந்தாய்?

தொப்புள்கொடி உறவா?
அட பைத்தியமே...
சகோதரனை அனுப்பி
கற்பழிக்க செய்தவனிடம்
என்ன மயிரை
எதிர்பார்க்கிறாய்?

தார்மீக ஆதரவுமா?
சனியனே நான்
தேசதுரோகி பட்டம்
வாங்க வேண்டுமா!

சாய்ந்து கொள்ள தோளும்
ஆதரவு குரலும் தேடி
மானத்தோடு வாழ
பக்கத்திடம் பங்காளியிடமென
படகேறி வராமல்
உன் உயிர்போனாலும்
உன் தன்மானமாவது
மிஞ்சும் எனக்கும் குற்ற
உணர்ச்சி இருக்காது

நீ செத்துப் போனால்
உனக்காக ஒரு துளி
கண்ணீர் சிந்துவேன்
அதுவும் கூட
இரகசியமாக!

மன்னித்து விடு
என்னை!



நன்றி
தினமலர்

தமிழகத்துக்கு இலங்கை தமிழ் அகதிகள் வருகை

தேன்கூடு இன்றைய வலைபதிவர்

ஆகா தேன்கூடு இன்றைய வலைபதிவரில் நம்மள கண்டுக்கிட்டாங்கய்யா....



கடலூர்க்காரரான குழலி தற்போது பணி நிமித்தம் சிங்கப்பூரில் வசித்து வருகிறார். நகைச்சுவை, இலக்கியம், அரசியல், திரைப்படம், சமூகம் என இவரது பதிவுகள் பலரசமானவை.ஆனாலும் தமிழ் வலைப்பூ உலகின் அறிவிக்கப்படாத பாட்டாளி மக்கள் கட்சியின் கொள்கை பரப்பு செயலாளராக அறியப்படுபவர். வெகுஜன ஊடகங்கள் பா.ம.க.வை குறி வைத்து தாக்குவதாகக் கூறி, அந்தக் கட்சியின் நிறுவனர் மருத்துவர் ராமதாசின் கொள்கைகளை நியாயப்படுத்தி இவர் எழுதிய தொடர் பதிவுகள் ஒரு கால கட்டத்தில் அனைவராலும் விரும்பிப் படிக்கப்பட்டது.


"கருத்து சுதந்திரம்னா உங்களுக்கு பிடிக்காதவங்களுக்கு பிடிக்காதவர்கள் என்ன சொன்னாலும் அது கருத்து சுதந்திரம்" என்ற கருத்து கொண்டிருக்கிறார்.

சேகுவாராவைப் பற்றியும் எழுதுவார், சாரு நிவேதித்தா பற்றியும் எழுதுவார். சமயத்தில் கோபமாகவும் பதிவுகள் வரும்.
ஓராண்டிற்கும் மேலாகத் தமிழ்ப் பதிவுகளில் ஆர்வமுடன் பங்கேற்று வரும் குழலியின் பதிவுகள், ஒரு மிக்ஸ் பகோரா என்றே சொல்லலாம்! படிக்க:குழலி பக்கங்கள்


//"கருத்து சுதந்திரம்னா உங்களுக்கு பிடிக்காதவங்களுக்கு பிடிக்காதவர்கள் என்ன சொன்னாலும் அது கருத்து சுதந்திரம்" என்ற கருத்து கொண்டிருக்கிறார்.//

இந்த வரிகளுக்கு சொந்தக்காரர் நம்ம அண்ணாசாமி, நம்ம பதிவினோட வலது பக்கத்தில் பாருங்க, நம்ம அண்ணாசாமியும் அப்பாவியும் பேசியிருப்பது தெரியும் :-) அது என்னமோ புடிச்சிருந்ததாலே பக்கதுல போட்டுக்கிட்டன்.

நம்மள கண்டுக்கிட்ட தேன்கூடுக்கு நன்றி....

ஜாதியற்ற சமுதாயம் வேண்டுமென்று.....

ஜாதியற்ற சமுதாயம் வேண்டுமென்று சொல்லும் நீங்கள், ஜாதி அடிப்படையிலான இட ஒதுக்கீட்டுக்கு எதிரான மருத்துவ மாணவர்கள் டாக்டர்கள் போராட்டத்தை ஆதரிப்பதுதானே நியாயம்?

அருணகிரி ராமநாதன், மின்னஞ்சல்

இட ஒதுக்கீடு கோட்பாடு ஜாதி ஒழிப்புக்கான வழிமுறையும் அல்ல. ஜாதியை நீடிப்பதற்கான வழியும் அல்ல. ஜாதி அடிப்படையில் சமூகத்தில் இருந்து வரும் ஏற்றத்தாழ்வுகளை சமன் செய்வதற்கான ஒரு ஏற்பாடு. எனவே ஜாதி ஒழிப்பாளர்கள் அதை எதிர்க்க வேண்டியதில்லை.

போராட்டம் நடத்திய டெல்லி மருத்துவ மாணவர்களும் டாக்டர்களும் ஜாதி ஒழிப்பாளர்கள் அல்ல. இட ஒதுக்கீடு வந்துவிட்டால் தாங்களெல்லாம் செருப்பு தைக்கவும் ஷீ பாலீஷ் போடவும் மாடு மேய்க்கவும் போக வேண்டி வரும் என்று கோபமாகவும் கிண்டலாகவும் சொன்னார்கள். அதாவது அந்த வேலைகளுக்கு ஏற்கனவே இவர்கள் இட ஒதுக்கீடு அளித்துவிட்டார்கள். அதைச் செய்பவர்கள் அதையே செய்து கொண்டிருக்கட்டும் என்ற மேல் சாதி மனப்பான்மை அருவெறுப்பாக இருக்கிறது.

அதே போல ஏழை- பணக்காரன் வாதத்தைக் காட்டி ஜாதி அடிப்படையிலான இட ஒதுக்கீட்டை எதிர்ப்பதும் தந்திரமானது. இப்போது ஏழைகளைப் பற்றிக் கவலைப்படும் இவர்கள், இதுவரை பணக்காரர்களுக்கென்றே இட ஒதுக்கீடு செய்யப்பட்டிருக்கும் தனியாரின் டொனேஷன் கல்லூரிகளுக்கு எதிராக ஒரு போராட்டமும் செய்ததில்லை.

மிச்சத்தை தீம்தரிகிடவில் மனிதனின் பதில்களில் படிக்கவும்

தேர்தல் 2006 - சிங்கப்பூரிலிருந்து சிலுக்குவார்பட்டி

இது ஒரு தற்பெருமை பதிவு, தம்பட்டம் அடிக்கும் பதிவு...

அப்பாடி ஒரு வழியாக தேர்தல் முடிந்து அரசும் அமைந்துவிட்டது, அடேய் அடேய் விட்டா என்னது எம்.ஜி.ஆர் அமெரிக்காலருந்து ஆப்பரேசன் முடிச்சி வந்துட்டாரானு கேப்ப

போலிருக்கேனு யாரோ கலாய்க்கிறார்ங்கப்பா.... அது சரி நல்லா எலிக்சன் வந்தாலும் வந்துச்சி ஒரே கலாய்ச்சல் தான் தமிழ்மணத்துல, தேர்தல் 2006 னு ஒரு வகைப்படுத்தும் வாய்ப்பை

குடுத்த தமிழ்மணத்துக்கு நன்றினு சொல்லிகிறேன், அப்பாலிக்கா எலிக்சன் கமிசன் சைட்டும், தினமலரும் படுத்துக்கிச்சா அன்னிக்கு இட்லி வடை தான் எலிக்சன் அப்டேட்டு சொல்லி

காப்பாத்துனாரு.

அட இதுல என்னன நம்ம வலைப்பதிவு மக்கள் கருத்துகணிப்பு போட்டாங்க பாருங்க அட்றா சக்கை அட்றா சக்கை கலக்கிப்புட்டாங்க, முந்தைய தேர்தல் வாங்கிய வாக்குகள்,

தொகுதியின் தற்போதைய நிலமை, வேட்பாளர்கள் பலம் பலவீனம் என அக்கு வேற ஆணி வேற அலசிட்டாங்கோ, அட நம்ம அச்சு ஊடகத்தில கூட குமுதம் சொம்மானாச்சிக்கும்

திமுக கூட்டணி 36% அதிமுக கூட்டணி 42% விஜயகாந்த் 13%னு போட்டுக்கினே போச்சி ஆனா என்ன கணக்குல இப்பிடி போட்டுச்சினு கடசி வரிக்கும் சொல்லலை, ஆனா நம்ம

வலைப்பதிவர்கள் போட்டாங்க பாருங்க எல்லாத்தையும் கணக்கு செஞ்சி கலக்கிட்டாங்க, சசி, அப்படிப்போடு, இப்னு, ஜோ, நயனம், சிங்.செயக்குமார், ரஜினி ராம்கி அப்புறம் இந்த குழலி, இன்னும் பலர் கருத்து கணிப்பு போட்டாங்க, ஆனா எல்லோருமே தெளிவா எந்த கணக்குல இப்படி ஒரு முடிவுக்கு வந்தாங்க அப்படினு தெளிவா ஆதாரத்தோடா சொன்னாங்க ஆனா

அதுக்கு இன்னா நக்கலு இன்னா குசும்பு, ஒரு ஊருல இறங்கி பெட்ரோல் போட்டாங்களாம் அதுனால அந்த ஊருக்கு கருத்து கணிப்பு எழுதுனாங்களாம், ஒரு ஊருல எறங்கி மூச்சா போனாங்களாம் ஒடனே கருத்து கணிப்பு எழுதுனாங்களாம்... ஹா ஹா... போற போக்குல மூஞ்சில எச்சி துப்புனாங்க... அடேய் அடேய் அதெல்லாம் அங்கதம் டோய் இது புரியாம பேசுறானாம் கருத்து சொதந்திரம்னா கிலோ என்னா வெலனு கேக்குறானுங்க... அப்படினு நீங்க சவுண்டு வுடுறது கேக்குதுங்கோ!

1998, 1999, 2001 தேர்தல்களில் தேர்தல் முடிவுக்கு மிக நெருக்கமாக முடிவுகளை முன்பே சொன்னேன் என்பதற்கு அதை கேட்ட என் நண்பர்களும் ஹீரோ சரவணனின் அறையில் 40 தொகுதிகளையும் எழுதி யார் வெற்றி பெறுவார்கள் என எழுதி வைத்ததும் தான் ஆதாரம், 1998ல் ஊடகங்கள் திமுக-தாமக கூட்டணி பெரும் வெற்றிபெறும் என எழுதிய போது நான் முப்பதுக்கும் மேற்பட்ட தொகுதிகள் (அடைக்கலராஜ் தோற்பார், தனுஷ்கோடி ஆதித்தன், சரத்குமாருக்கு சங்கு, நாகர்கோவிலில் பாஜகவிற்கு நிச்சய தோல்வி, மாயவரத்தில் பாமக தோல்வி) அதிமுக கூட்டணிக்கு என்ற போது சிரித்த நண்பர்கள் தேர்தல் முடிவுக்கு பிறகு ஹீரோ சரவணன் எப்படிடா இவ்வளவு சரியா சொன்னெ என்ற போது எனக்கு நானே வெள்ளக்காரன் சொன்னான் வெரிகுட்னு நானே சொல்லிக்கிட்டேன், கல்லூரியில் பல ஊர்களிலிருந்தும் படித்த மாணவர்களிடம் தனிப்பட்ட முறையில் பேசியதும், பத்திரிக்கைகள் படித்தது, கூட்டணி கூட்டல் கழித்தல்கள், வேட்பாளர் பலம், பலவீனம், அப்போதைய ட்ரெண்ட் என பல விடயங்கள் தேர்தல் கணிப்பு முடிவுக்கு நெருக்கமாக இருக்க காரணம், அதைவிட முக்கிய காரணம் நாம யார் ஜெயிக்கனும்னு நினைக்கிறத சொல்றதை விட யாரு ஜெயிப்பாங்கன்ற நெலவரத்தை மூனாம் மனுசனா இருந்து சொல்லனும்.

இந்த 2006 தேர்தலில் கொஞ்சம் தம்பட்டம் அடிச்சிடறனே....


பண்ருட்டி தொகுதி நிலவரம் தே.மு.தி.க. வில் பண்ருட்டியார் என்று அக்டோபர் 14, 2005ல் எழுதினேன் அதிலிருந்து சில வரிகள்

பண்ருட்டியாரை வைத்து தே.மு.தி.க. சட்டமன்ற உறுப்பினர் கணக்கைத் துவக்கும் என்பது நடக்காத விடயம் போலத் தோன்றுகின்றது.

பண்ருட்டி தேர்தல் முடிவு பண்ருட்டியாருக்கு மூன்றாமிடம், பாமக வேல்முருகன் வெற்றி

அப்பாலிக்கா நம்ம பொட்டீகடை சத்யா நெல்லிக்குப்பம் தொகுதி பத்தி எழுதனாரு அங்கே நம்ம பின்னூட்டம்

(அப்போது வேட்பாளர்கள் முடிவு செய்யப்படவில்லை)

//நெல்லிக்குப்பம் தொகுதியின் நாடித்துடிப்பை சரியாக கூறியுள்ளீர்... தொகுதியை மதிமுகவிற்கு கொடுத்துள்ளதால் வி.சி.எஸ் சின் வெற்றி கிட்டத்தட்ட முடிவு செய்த மாதிரி

//அதிமுக கூட்டணியில் மதிமுகவிற்கு இத்தொகுதியைக் கொடுத்திருப்பது...கையில்லாத ஜாக்கியிடம் சவாரிக் குதிரையை கொடுத்தது போன்றது!/
சரியாக கூறியுள்ளீர், ஆச்சரியமான ஆச்சரியம் நெல்லிக்குப்பம் தொகுதிக்கு சம்பத்,தாமோதரன்,சொரத்தூர் ராஜேந்திரன் என பல தலைகள் போட்டியிட இருக்கும் போது

நெல்லிக்குப்பத்தை மதிமுகவிடம் கொடுத்துவிட்டு அதிமுக வின் பலவீனமான தொகுதியான கடலூரில் போட்டியிடுகின்றது(மதிமுக பத்மநாபன் போட்டியிட்டிருந்தால் கடலூர் தொகுதி கடும்

போட்டியிலிருக்கும்- பழிதீர்ப்பாரா பத்மநாபன் என்று ஒரு பதிவெழுதி வைத்திருந்தேன், இனி பயன்படாது) விளைவு திமுக கூட்டணிக்கு எளிதாக விசிஎஸ், புகழேந்தி(கடலூர்) என இரண்டு சட்டமன்ற உறுப்பினர்கள்...
//

நெல்லிக்குப்பத்தில் திமுக வெற்றி

குறிஞ்சிப்பாடி தொகுதி தொடர்பாக நயனம் அவர்கள் பதிவில் இட்ட பின்னூட்டம்
//2004ல் திமுகவின் வாக்குகளில் மதிமுகவின் இருப்பு -7119//
உங்கள் கணிப்பில் தவறுவது இங்கே.... உள்ளூர்காரர்கள் தவிர்த்து வேறு யார் கணித்தாலும் இந்த வாக்குகள் மதிமுகவின் வாக்குகளாக கணிப்பார்கள், குறிஞ்சிப்பாடியில் 2000

வாக்குகளும், நெல்லிக்குப்பம், பண்ருட்டி என அண்டை தொகுதிகளில் மதிமுகவின் வாக்குகள் வெறும் 2000 ஆனால் கடலூரில் ஏழாயிரம் என்றால் அதற்கு காரணம் மதிமுக மாவட்ட

செயலாளர் செள.பத்மனாபன், இவர் 1989ல் சுயேட்சையாக நின்று 5000வாக்குகள் பெற்றவர், இவைகள் திமுக வாக்குகள் முன்னாள் திமுக காரர், சொந்தகாரர், சாதிக்காரர் என்று இந்த

வாக்குகள் பத்மனாபன் நின்றால் மட்டுமே விழும் வாக்குகள் பத்மனாபன் களத்தில் இல்லாத நிலையில் அது திமுகவிற்கு விழும் வாக்குகள், இரண்டாவதாக சிறுத்தைகளின் முகாமில்

திருவள்ளுவன் மூலமாக விஜயகாந்த் போட்டுள்ள ஓட்டை, அதிமுகவின் மற்றொரு பலவீனம் அமைப்புரீதியாக பிரபலங்கள் இல்லாதது....
//குறிஞ்சிப்பாடியைப் பொறுத்தவரை சசி ஒப்புக்கொள்ளமாட்டார்.
//
நானும் ஒப்புகொள்வது இயலாது, ஏனெனில் குறிஞ்சிப்பாடியில் கட்சி மீறிய சாதிப்பாசம் எம்.ஆர்.கே.பியிடம் சென்ற தேர்தலிலேயே எதிர்கூட்டணியில் இருந்த போதும் பாமக

எம்.ஆர்.கே.பி.க்கு உதவியது, விடுதலை சிறுத்தைகள் பாராளுமன்ற தேர்தலில் பெற்ற வாக்குகள் திருமாவளவன் போட்டியிட்டதால் விழுந்த வாக்குகள் திருமா போட்டியில்

இல்லையென்றால் அத்தனை வாக்குகள் விழாது, எம்.ஆர்.கே.பி.யின் ஒரே பலவீனம் அவரின் வளர்ச்சி பிடிக்காத உள்குத்து வேலை செய்யும் உள்ளூர் திமுகவினர் என்பது மட்டுமே....

ஆனால் இது கூட்டணி பலம், சொந்த செல்வாக்கு, சாதிப்பாசம் எதிரணியில் பலமில்லாத கட்சி, வேட்பாளர் என்ற நிலையில் பன்னீர் தோற்பது திமுகவிற்கு எதிராக ஏதேனும் பெரும்

அலையடித்தால் மட்டுமே உண்டு
//

குறிஞ்சிப்பாடியில் திமுகவின் எம்.ஆர்.கே.பன்னீர்செல்வம் வெற்றி

கடலூர் தொகுதி பற்றிய என் அலசல் அதில் நான் குறிப்பிட்டது
//முக்கூடல் பலத்தினால் கடலூரில் திமுக வெற்றியின் அருகில், எட்டி பிடிக்க முடியாத அளவில் அதிமுக பின் தங்கியுள்ளது//
கடலூரில் திமுக 7000ற்கும் மேற்பட்ட வாக்கு வித்தியாசத்தில் வெற்றி


ஆண்டிமடம் தொகுதி பற்றிய என் அலசல் அதில் நான் குறிப்பிட்டது

//தொகுதி பங்கீட்டில் ஆச்சரியமளித்த ஆண்டிமடத்தின் தேர்தல் முடிவில் அலையடித்தாலும் ஆச்சரியமில்லை//

இங்கேயும் திமுக வெற்றி

பரங்கிப்பேட்டை தொகுதி பற்றி இப்னு எழுதிய பதிவில் என் பின்னூட்டம்
//இப்னுவிற்கு எனது கடுமையான கன்டணத்தை தெரிவித்துக்கொள்கின்றேன், தொகுதிப்பங்கீடு செய்து கொள்ளாமல் புவனகிரி தொகுதியை எடுத்துக்கொண்டதற்கு, ஏற்கனவே தமிழ்சசியினால் குறிஞ்சிப்பாடி,விருத்தாசலம் தொகுதியையும், பொட்டீக்கடை சத்யாவினால் நெல்லிக்குப்பம் தொகுதியையும் இந்த இருவரினால் பண்ருட்டி தொகுதியையும் இழந்திருந்தேன், கேவிஆர் சிதம்பரம், காட்டுமன்னார் கோவில் தொகுதிகளுக்கு துண்டு போட்டுவிட்டார் தற்போது தான்ஆச்சரிய ஆண்டிமடம் என்று ஆண்டிமடம் தொகுதிப்பற்றி எழுதிவிட்டு வந்தால் புவனகிரி கையைவிட்டு போய்விட்டது, நான் எழுதியதிலிருந்து சில வரிகள் இங்கே,கடலூர் மாவட்டத்தில் பல அதிமுக புள்ளிகள் குறிவைத்தது புவனகிரி தொகுதியை, கிழக்கு மாவட்ட செயலாளர் சொரத்தூர் ராசேந்திரன் நெல்லிக்குப்பம், பண்ருட்டி தொகுதியோடு புவனகிரி மீதும் கண்வைத்திருந்தார், அருள்மொழித்தேவனும் புவனகிரியை குறிவைத்தார், வருமானத்திற்கு மீறிய சமீபத்தில் சிறைசென்று வந்து அதிமுக செயல்வீரர்கள் கூட்டத்தில் சமீபகாலமாக கலந்து கொண்ட முன்னாள் சட்டமன்ற உறுப்பினர் மல்லிகாவும் பெயருக்கு கேட்டுவைத்தார் பரங்கிப்பேட்டையில் சில காலங்களுக்கு முன் 'ஒத்தக்கை' பாண்டியன் கோஷ்டியினருடன் ஏற்பட்ட சாராய மோதலில் அதிமுக பிரமுகர் ராமஜெயமும், அவரது சொந்தக்காரரும் வெட்டிக்கொல்லப்பட்ட சில மணிநேரங்களில் ராமஜெயம் கோஷ்டியினரால் 'ஒத்தக்கை' பாண்டியனின் தங்கையும் தாயும் வெட்டிக்கொல்லப்பட்டு ஒரே நாளில் நான்கு கொலைகளை பரங்கிப்பேட்டை பார்த்த பயங்கரத்திற்கு பின் 1996ல் ராமஜெயத்தின் மனைவி செல்வி ராமஜெயம் பரங்கிப்பேட்டை சிறப்பு பேரூராட்சி மன்றத்தலைவர் பதவிக்கு அதிமுக சார்பாக போட்டியிட்டார், அப்போது தான் சட்டமன்றத் தேர்தலில் ஜெயலலிதாவிற்கு எதிரான அலையடித்து அதன் தொடர்ச்சி உள்ளாட்சி தேர்தல்களில் வெளிப்பட்ட போதும் செல்வி ராமஜெயம் வீடுவீடாக திண்ணைகளில் அமர்ந்து வாக்கு கேட்டதும் செல்வி ராமஜெயம் வெற்றி பெற உதவியது, அதனைத் தொடர்ந்து 2001 உள்ளாட்சி தேர்தலில் இப்படியெல்லாம் அனுதாப அலை தேவையில்லாமலே அவருடைய முந்தைய செயல்பாடுகள் வெற்றி பெற வைத்தது, மாவட்டத்தின் செல்வாக்கு அதிமுக பிரமுகர்கள் குறிவைத்த போதும் புவனகிரி தொகுதி அவருக்கு கிடைத்தது இவைகள் தெரிந்தவர்களுக்கு ஆச்சரியமில்லை, மேலும் அதிமுக, திமுக, பாமக, விடுதலை சிறுத்தைகள் என்ற வரிசையில் செல்வாக்கு பலமிருக்கும் தொகுதியில் செல்வி ராமஜெயம் வெற்றியின் அருகில், புவனகிரி கடலூர் மாவட்டத்தில் அதிமுகவின் இலுப்பைப்பூ //

புவனகிரி தொகுதியில் அதிமுகவின் செல்வி இராமஜெயம் வெற்றி

இதுவரை தனித்தனியாக தொகுதிகள் அலசியதில் ஒவ்வொரு தொகுதிக்கும் எழுதிய கருத்து கணிப்பு, தேர்தல் முடிவுகளுடன் 100% சரியாக உள்ளது

இட்லிவடை பதிவில் நடந்த தேர்தல் கருத்து கணிப்பு போட்டியில் குழலிக்கு பரிசு

//கலந்து கொண்ட 40 பேரில் பிரபு ராஜா மற்றும் குழலி பரிசு பெறுகிறார்கள். அவர்களுக்கு என் வாழ்த்துக்கள். //

போட்டியின் கேள்விகளும் என் பதில்களும் முடிவுகள் அடைப்புகுறிக்குள்

1) எந்த கூட்டணிக்கு எத்தனை இடங்கள் ?
அதிமுக கூட்டணி: 36 (69)
திமுக கூட்டணி: 197 (169)
விஜயகாந்த்: 0 (1)
மற்றவை: 1 (1)
(No Range allowed)

2) ஜெயலலிதா எத்தனை வாக்கு வித்தியாசத்தில் வெற்றி பெறுவார் ? ( அல்லது தோற்பார் ) ( Range allowed ) 15000-18000 (25,000 வெற்றி)

3) விஜயகாந்த் எத்தனை வாக்கு வித்தியாசத்தில் வெற்றி பெறுவார் ( அல்லது தோற்பார் ) ( Range allowed ) 2000-3000 (14,000 வெற்றி)

4) தேமுதிக ( விஜயகாந்த் கட்சி ) எத்தனை சதவிகிதம் வாக்கு பெறும் ? ( No Range allowed ) 8% (8.38%)

5) கூட்டணி ஆட்சியா ? அல்லது தனிக் கட்சி ஆட்சியா ? தனி (தனி)

6) மதிமுகவிற்கு எவ்வளவு சீட் கிடைக்கும் ? ( No Range allowed ) 4 (6)

7) விடுதலை சிறுத்தைகளுக்கு எவ்வளவு சீட் கிடைக்கும் ? ( No Range allowed ) 2 (2)

8) பாமகவிற்கு எவ்வளவு சீட் கிடைக்கும் ? ( No Range allowed ) 27 (18)

9) காங்கிரஸுக்கு எவ்வளவு சீட் கிடைக்கும் ? ( No Range allowed ) 36 (35)

10) முதல் கையெழுத்து எதுவாக இருக்கும் ? 2ரூபாய் அரிசி (2ரூபாய் அரிசி)

மேலே எத்தனை கணிப்புகள் சரியாகவும் எத்தனை தேர்தல் முடிவுகளுக்கு நெருக்கத்தில் இருந்தது என்றும் உங்கள் முடிவுக்கே விடுகின்றேன், விருத்தாசலம் தொகுதியின் முடிவில் சறுக்கிவிட்டேன்.

அது சரி இப்போ ஏன் இப்படி ஒரு தம்பட்டம் அடிக்கிறேன்னு கேக்குறிங்களா எல்லாம் காரணமாத்தான், சிங்கப்பூரிலிருந்து சிலுக்குவார்பட்டிக்கு கருத்து கணிப்பு எழுதினாலும் புள்ளிவிபரங்கள், தொகுதிக்குட்பட்ட சிலரின் பொதுவான கருத்துகள், தேர்தல் கூட்டணி கூட்டல் கழித்தல்கள், அப்போதைய போக்கு, வேட்பாளர்கள், கட்சிகளின் பலம் பலவீனம் வைத்து தான் எழுதுகிறோம்...

போற போக்குல நம்ம வலைப்பதிவர்கள் எழுதிய தேர்தல் கருத்து கணிப்பு பற்றி நக்கலாக மூஞ்சியில துப்பிய ஆளுங்கலாம் முடிஞ்சா எதுனா ஆக்கப்பூர்வமா எழுதலாம் இந்த மாதிரி மூஞ்சியில் துப்புவதை விட... சரிங்க

நீங்க சொல்லுங்க சிங்கப்பூரிலிருந்து சிலுக்குவார்பட்டிக்கு தேர்தல் கருத்து கணிப்பு எழுதலாமா? எளவு அதான் எழுதிட்டியே இப்போ இன்னாத்துக்கு கேக்குறனு சவுண்டு வுடாதிங்க, அடுத்த தேர்தலுக்குதான் இப்பமே கேட்டுக்கறன்.