Showing posts with label லீ குவான் யூ. Show all posts
Showing posts with label லீ குவான் யூ. Show all posts

லீ குவான் யூ

ஒரு வாரமாக இவரைப்பற்றிய பேச்சுதான், நேற்று(சனி) முக்கியமான ஒரு கட் ஓவர் இருந்ததால் கடந்த இரண்டு வாரங்களாக ஒவ்வொரு நாளும் அதிகாலை 3 மணி அளவில் தான் வீட்டுக்கு செல்வேன், காலை 10 மணிக்குள் அலுவலகம் வந்துவிடுவேன், வெள்ளி இரவு, சனி, ஞாயிறு முழுவதும் லீ அவர்களின் உடல் நிலை குறித்து செய்திகள் பார்த்துக்கொண்டே வந்தோம், திங்கள் அதிகாலை 3 மணிக்கு படுக்க சென்றேன், காலை எழுந்த போதே அந்த செய்தி பரவியிருந்தது, முதல் இரண்டு நாட்கள் அவரது உடல் குடும்பத்தினர்கள் அஞ்சலி செலுத்தவும் பின் புதன் அன்றிலிருந்து பொதுமக்கள் அஞ்சலிக்காகவும் வைக்கப்படும் என்ற அறிவிப்பு வந்தது.

வெள்ளி இரவு ஆரம்பித்து சனி காலை வரை எனக்கு கட் ஓவர் இருந்தது, சனி இரவு 8 மணி வரை தான் லீயின் உடலுக்கு பொதுமக்கள் அஞ்சலி செலுத்த இயலும் என்பதால் வியாழன் மாலை அவரது உடல் வைக்கப்ப‌ட்டிருந்த பார்லிமெண்ட்டுக்கு செல்லலாம் என வியாழன் அன்று கருப்பு உடையணிந்து வந்திருந்தேன், புதன்கிழமையே  இரவு இருந்து வேலைகளை முடித்திருந்தோம், ஆனால் வியாழன் அன்று ஆறுமணிக்கு கிளம்பும் நேரத்தில் எங்கள் பிராஜெக்ட்டில் ஒரு பிரச்சினை வந்தது, அதை சரி செய்ய உட்கார்ந்தால் அன்று இரவும் போனது, வெள்ளிக்கிழமை  ஆரம்பித்து சனி காலை வரை அலுவலகம், அப்போதும் அஞ்சலி வரிசை நிலையை பார்த்துக்கொண்டே இருந்தேன் வெள்ளி இரவு 11 மணிக்கு வரிசை நிறுத்தப்பட்டது காலை 5 மணி வரை வரிசையில் ஆரம்பிப்பது குறித்து எதுவும் செய்தி இல்லை, காலை 6 மணிக்கு வீடு வந்து படுத்தவன் மாலை தான் எழுந்தேன்.


எனது மகனையும் லீ உடல் வைக்கப்பட்டிருந்த படாங்கிற்கு அழைத்து செல்வதாக கூறியிருந்தேன், ஆனால் முடியவில்லை, எனது மகனிடம் சரி வா ஜூராங்கில் போய் அஞ்சலி செலுத்தி விட்டு வருவோம் என்றேன், அவன் அதற்கு நான் ஏற்கனவே அஞ்சலி செலுத்திவிட்டேன் என்றான், எப்படி டா என்றேன்? எங்கள் வீட்டிற்கு கீழ் உள்ள சமுதாய கூடத்தில் லீயின் புகைப்படம் வைத்து அங்கே புத்தகம் வைத்திருக்கிறார்கள், இவன் அங்கே சென்று அவருக்கு அஞ்சலி செலுத்தி விட்டு அஞ்சலி குறிப்பும் எழுதி வைத்திருக்கிறான்.


ஞாயிறு காலை நானும் மகனும் சென்று ஜூராங்கில் அஞ்சலி செலுத்தி விட்டு வந்தோம், அவரது உடலுக்கு நேரில் அஞ்சலி செலுத்த செல்ல வில்லை என்ற வருத்தம் வாட்டினாலும் வேலை பொறுட்டு தானே செல்லவில்லை என்று தேற்றிக்கொள்கிறேன், லீ குவான் யூ அவர்கள் இறந்த பின்பு அரசு பொது விடுமுறை விடவில்லை, அவ்வளவு ஏன் இன்று அவரது இறுதி ஊர்வலத்தின் போது பல இடங்களில் பின்னால் பார்தால் பேருந்துகள் நின்று கொண்டிருந்தன, ரயில்கள் ஓடிக்கொண்டிருந்தன, போக்குவரத்து தடை செய்யப்படவில்லை.


8 வயது ஆகும் மகன் 4 வயதில் ஒரு முறை போலிஸ் வேலைக்கு போக வேண்டும் என்று சொல்லியிருந்தான், நேற்று இரவிலிருந்து பல முறை லாயர் ஆக போகிறேன் என்கிறான், கேட்டால் மிஸ்டர் லீ லாயர் அவரைப்போலவே நானும் லாயர் ஆகப்போகிறேன் என்கிறான்.

இந்த ஒரு வாரத்தில் சிங்கப்பூரின் சிறு குழந்தைகளிடம் மிஸ்டர் லீ ஆழப்பதிந்துவிட்டார். உண்மையில் சொல்லப்போனால் நானொரு கொக்கு, வளமான குளம் நோக்கி பறந்தவன், என் படிப்பு திறமையை விற்று நல்ல வாழ்க்கையை தேட முனைந்தவன், சிங்கப்பூர் இல்லையென்றால் இன்னொரு ஊரில் இதை செய்திருப்பேன், அப்படி உள்ளே வந்தவன், இரண்டே வருசம், அப்படியே யுஎஸ் போயிடனும் என்று சொல்லி உள்ளே வந்தவன், அதன் பின் யுஎஸ் விசாவும், வேலையும் தயாராகி இருந்தும் சிங்கப்பூரை விட்டு போக மனமின்றி யுஎஸ் வாய்ப்பை விட்டுவிட்டேன். இனி நான் வளமான குளம் நோக்கி பறக்கும் கொக்காக இருக்க முடியாது, என் அடுத்த தலைமுறை இங்கே வேர் பிடிக்க ஆரம்பித்து விட்டது.

சிங்கப்பூரின் எல்லா புகழும் லீ குவான் யூ வுக்கே