அட நன்றி கெட்ட நடிகர் சங்கமே !

ரஜினியை வெறுத்தது போன்று வேறு எவரையும் நான் வெறுத்திருப்பேனா என்பது சந்தேகமே, முத்து திரைப்படத்தை முதல்நாளில் அரங்கம் சென்று ஆரவாரமாக பார்த்ததுவே நான் கடைசியாக திரையில் பார்த்த ரஜினியின் படம், அதன் பின் தொலைக்காட்சிகளில் வந்தால் கூட உடனே சேனலை மாற்றும் அளவிற்க்கு அவரின் மீது வெறுப்பு, அந்த வெறுப்பு கடந்த சில ஆண்டுகளாக சிறிது குறைந்திருந்தாலும்(ரஜினி ஒரு ஹார்ம்லெஸ் என்ற காரணமாகவும் இருக்கலாம்) ரஜினியின் மீதான வெறுப்பு ஏற்படுத்திய அத்தனை காரணிகளும் அப்படியே உள்ளன, ஆனால் பதிவு அதைப்பற்றியதல்ல...



நடிகர் அஜீத், ராஜாதிராஜ ராஜகுலோத்துங்க ராஜகம்பீர ராஜா கருணாநிதியின் புகழுரை கூட்டத்தில் பேசிய பேச்சிற்க்காக, கற்பழிப்பு கேசில் உள்ளே போன ஜாக்குவார் தங்கம் என்கிற சண்டை பயிற்சியாளர் அறிக்கை அதை தொடர்ந்த சர்ச்சைகளில் ரஜினியை போட்டு தாக்குகிறார்கள், அதுமட்டுமின்றி நடிகர் சங்கத்துக்கு அதன் விழாக்களுக்கு எல்லாம் ரஜினி வேண்டும் ஆனால் ரஜினிக்கு ஒரு பிரச்சினையென்றால் அதுவும் அரசியல் ரீதியாக தனிநபர் சார்ந்த பிரச்சினையாக இருந்தால் கூட வரவேண்டியதில்லை, பிரச்சினையே தொழில்தொடர்பானது என்பதால் நடிகர் சங்கம் வந்திருக்கவேண்டும் ஆனால் ரஜினியை யூஸ் செய்து த்ரோ செய்துவிட்டது நடிகர் சங்கம்

அட நன்றி கெட்ட நடிகர் சங்கமே ! என்ற தலைப்பில் ரஜினி ரசிகர்களால்நடத்தப்படும் இணையம் என்வழியில் வந்த பதிவு... அதிலிருந்து ஒரு பகுதி மட்டும் இங்கே, முழுக்க இதை ஏற்கின்றேன்...
http://www.envazhi.com/?p=16321

நடிகர் சங்க பவள விழாவுக்கு யாரை அழைத்தாலும் கூட்டம் வராது, வசூலும் தேறாது. நீங்கள்தான் வரவேண்டும். நீங்க ஒருவர் வந்தால் போதும்… வேறு யாரும் தேவையில்லை என்று கெஞ்சி கூத்தாடி ரஜினியை அழைத்தார்கள். நான்கு நாட்கள் நடந்த அந்த சாதாரண நாடக விழா, கடைசி நாளில் மட்டும் நட்சத்திர விழாவாக ஜொலித்தது. காரணம் ரஜினி!
நடிகைகளை விபச்சாரிகள் என்று ஒரு பத்திரிகை பட்டியல் போட்டுவிட்டது என்றதும் அலறித் துடித்து, ரஜினி வந்து பத்திரிகைகளுக்கு கண்டனம் தெரிவிக்க வேண்டும் என்று ஒற்றைக் காலில் நின்றதுதான் இந்த நடிகர் சங்கம். அன்று பல பத்திரிகைகள் ரஜினி அங்கே போகக் கூடாது என்று கோரிக்கை விடுத்தும் நடிகர் சங்கத்துக்காக போய் நின்று தனது கண்டனத்தைப் பதிவு செய்தார் ரஜினி. அவர் போனதால்தான் அன்றைய கண்டனக் கூட்டம் அடுத்த பல மாதங்கள் பேசும் அளவு பெரும் நிகழ்வானது.

அதேபோல தனது ஜக்குபாய்க்கு ஒரு பிரச்சினை என்றதும் ரஜினியும் கமலும் வந்தே தீர வேண்டும் என்று முரட்டுப் பிடிவாதம் பிடித்து வரவழைத்தவர் நடிகர் சங்கத் தலைவரான சரத்குமார். ராதிகா அழுது புலம்பினார் ரஜினியிடம். அந்த பாடாவதி படத்தின் பிரிவியூ காட்சிக்கும் ரஜினி வந்தாக வேண்டும் என்றார்கள். அவரும் வந்தார்.
அதன் பிறகு எத்தனை விழாக்கள், அர்த்தமற்ற மேடைகள்… ஆனால் அத்தனைக்கும், இந்த வெண்ணைவெட்டிகள் இழுத்த இழுப்புக்கெல்லாம் போய் நின்று சிறப்பித்துக் கொடுத்தார் ரஜினி. காரணம், சினிமா உலக நன்மைக்காக, சக கலைஞர்களின் சந்தோஷத்துக்காக மட்டுமே.

ஆனால் ரஜினிக்கு ஒரு பிரச்சினை என்றால் மட்டும் இந்த நாட்டாமைகளுக்கு நாக்கு இழுத்துக் கொள்கிறது, தொண்டை விக்கிக் கொள்கிறது. பேச்சே வர மறுக்கிறது. அவருக்கு ஆதரவாகப் பேச வேண்டிய கூட்டத்துக்கு மட்டும் போக முடியாமல் கால்கள் முடங்கிப் போகின்றன சரத்குமார்களுக்கு.

இதே ஜக்குபாய் கூட்டத்தில் ரஜினி பேசியதற்கு தியேட்டர்காரர்கள் கண்டனம் தெரிவித்தனர் (‘திருட்டு விசிடி வர காரணமான தியேட்டர்களுக்கு படம் தரக்கூடாது!’). கேவலமாக அறிக்கை விட்டனர். அதற்கு ஒரு மறுமொழி கூட சொல்லாமல் மவுனம் சாதித்தது நடிகர் சங்கமும் அதன் தலைவரும்.இப்போது யார்யாரோ கண்டபடி பேசுகிறார்கள், பேட்டி தருகிறார்கள்… ரஜினி ஒரு காமெடியர் என்று எகத்தாளம் பேசும் அளவுக்கு துணிகிறார்கள். ஆனால் இப்போதும் வாயைப் பொத்திக் கொண்டு சும்மாதான் இருக்கிறது இந்த சங்கம்.
இந்த பிரச்சினையில் மட்டுமல்ல அதாவது ரஜினி ஆதரவு கண்டிப்பாக வேண்டும். ஆனால் அவருக்கு ஒரு பிரச்சினை என்றால் அதை அவரே பார்த்துக் கொள்ள வேண்டும் என்பது இவர்களின் நியாயம்...

முதுகெலும்புள்ள அஜீத் - என்னய்யா தப்பு செய்தார்?

மண்புழு மண்ணில் கிடப்பதற்க்கு காரணம் அதற்க்கு மூளையில்லாததால் அல்ல, முதுகெலும்பில்லாததால்... சில நாட்களுக்கு முன் யாரோ ஒருவர் இப்படி பேசிகேட்டேன், முதுகெலும்பில் 12 அறுவை சிகிச்சைகள் செய்திருந்தும் முதுகை வளைத்து குழைந்து பயந்து நடுங்கிபோகாமல் தன் மனதில் பட்டதை பேசியிருக்கிறார் அஜீத்.



ராஜாதிராஜ ராஜமார்த்தாண்ட ராஜகம்பீர மன்னர் கருணாநிதி அவர்களுக்கு நடைபெற்றுக்கொண்டிருக்கும் வாரா வாரம் நடைபெறும் பல மணிநேர புகழுரைகள், நடிகைகளின் அரைகுறை ஆடை நடனங்கள் அதை படம் பிடித்து தங்கள் தொலைக்காட்சியில் போட்டு காசு பார்ப்பது என மன்னர் ரசிக்கும் ஒரு பாராட்டுவிழாவில் தான் இப்படி பேசியிருக்கார், எல்லாத்துக்கும் நாங்க வரணுமென்று மிரட்டுகிறார்கள் என்று... இதில் என்ன தவறு??

சினிமாவிலும் பேட்டிகளிலும் அரசியல் பொறிபறக்க ரசிகர்களை தூண்டிவிட்டு அதனால் சொந்த லாபம் சம்பாதித்து அதே நேரத்தில் தமிழகத்திற்க்கும் தமிழனத்துக்குமான கூட்டமென்றால் காணாமல் போய்விடும் திருட்டு நடிகன் அல்ல அஜீத். எதற்க்கும் வரமாட்டார், பொதுவாகவே எந்த விழாக்களிலும் எந்த கூட்டங்களிலும் கலந்து கொள்ளாதவர் அனல் பறக்க அரசியல் பேசிவிட்டு இனம் மொழி என்று பேட்டிகளில் பரபரப்பு காட்டுபவர் அல்ல, அவர் தன் வேலைகளுண்டு என்று போய்க்கொண்டே இருப்பவர், எல்லோருக்கும் அரசியல் ஆர்வமும் சமூக ஆர்வமும் இருக்க வேண்டுமென்ற அவசியமில்லை அவர்களை வற்புறுத்துவது எதற்காகவும் தவறு. ஆனால் எந்த அரசியல் சமூக காரணமுமின்றி இவர்களின் முகங்களை படம்பிடித்து தம் தொலைக்காட்சியில் அரைகுறை நடனங்களுக்கு நடுவே காட்டி இதன் மூலம் காசு சம்பாதிக்கும் பொறுக்கிதனத்திற்க்கு எதிராக ஆவேசமாக கூட இல்லை லேசாக முனகி எதிர்ப்பு தெரிவித்ததற்க்கே அஜீத்தை இந்த பாடு படுத்துகிறார்கள்...

முதலில் ஜாக்குவார் தங்கம் என்ற ஸ்டண்ட் மாஸ்டர் அஜீத் மீது வழக்கு போட கூறுதல் அதன் தொடர்ச்சியாக உடனடியாக அஜீத் ரசிகர்கள் ஜாக்குவார் வீட்டை உடைத்ததாக வழக்கு என அஜீத் மீது தொடர்ச்சியான அழுத்தங்கள், இந்த இடத்தில் நான் கடவுள் படம் தொடர்பான பண விவகாரம் தொடர்பாக பாலாவும் அவருக்கு ஆதரவாக சீமான் மற்றும் சில அரசியல் தொடர்புள்ளவர்கள் அஜீத்தை மிரட்டியதாக செய்தி வந்திருந்த நேரம் அது அப்போதும் கூட அஜீத் தன் ரசிகர்களை தூண்டிவிடாமல் என் பிரச்சினையை நானே பார்த்துக்கொள்கிறேன் என்று அமைதியாக்கியவரை தான் ஜாக்குவார் தங்கம் வீட்டை அடிக்க தூண்டியதாக கேஸ் போடுகிறார்கள், ஜாக்குவார் தங்கம் நாடாராம் அதனால் நாடார் சங்கம் கொதிக்குதாம்...

அஜீத் போன்ற முதுகெலும்புள்ள சுயமரியாதை உடையவர்களை நிச்சயம் நாம் ஆதரிக்க வேண்டும்... ஆம் அஜீத் மீதான அதிகாரத்துவத்தின் அடக்குமுறைகளுக்கு எதிராக என் கண்டனத்தை பதிப்பிக்கின்றேன்(இந்த ஒரு எழவைத்தவிர வேறென்ன செய்ய முடியும் என்னால்)

அடுத்தவன் பெற்ற பிள்ளைகளுக்கு அப்பன் உரிமை கொண்டாடும் திமுக

ஜெயமோகன் அவர்களின் திராவிட இயக்கத்தை நிராகரிப்பது ஏன்? என்ற தலைப்பில் இப்படியான ஒன்றை முன்வைக்கிறார்...

"இன்று திராவிட இயக்கம் தமிழியக்கத்தின் எல்லா கடந்த காலச் சாதனைகளுக்கும் உரிமை கொண்டாடுகிறது. தமிழ் நூல்களை மீட்டது, தமிழிசையை வளர்த்தது, தனித்தமிழைப் பரப்பியது எல்லாமே ஈவேரா வில் தொடங்கும் திராவிட இயக்கத்தின் சாதனைகள் என்று இன்று சாதாரணமாக மேடைகளில் பேசுகிறார்கள். "

இதே கட்டுரையில் மிகக்கடுமையாக திராவிட இயக்கங்கள் மீதான விமர்சனத்தை வைக்கிறேன் என்று தன் காழ்ப்புணர்வை பெரியாரின் மீது வைக்கிறார்... அதை ஒரு தந்திரத்துடன் செய்கிறார் ஜெயமோகன் செய்ய நினைப்பது ஷங்கர் படம் போல பல உண்மைகளின் நடுவே ஒரு பொய்யை சொறுகுவது, அதாவது இலஞ்சம் வாங்கும் ஆபிஸ் உண்மை, செருப்பு தைக்கும் தாத்தா உண்மை, அவருக்கு பின் இறப்பு சான்றிதழ் வாங்க துன்பப்படும் மனோரமா உண்மை, இதில் கொண்டுவது சொறுகும் இந்தியன் தாத்தா கற்பனை, மற்ற உண்மைகளை நம்பும்போது இந்தியன் தாத்தா என்ற கற்பனையை நம்ப வேண்டும், அது போல பெரியாருக்கு பிந்தைய நீர்த்துப்போன‌ திராவிட இயக்கத்தை குறிப்பிட்டு பெரியாரை திட்டுகிறார்.

இது தொடர்பான மேல் விபரங்களை ஆதாரங்களுடன் சுகுணாதிவாகரும், தமிழச்சியும் தொடருகின்றார்கள்... அவர்கள் அந்த இழையில் தொடர நான் இதே ஜெயமோகன் பெரியாரில் ஆரம்பித்து திராவிட இயக்கங்கள் மீது வைக்கும் குற்றச்சாட்டுகளை பெரியாருக்கு பிந்தைய திராவிட இயக்கங்கள் மீது வைக்கிறேன்...

இது ஒரு முக்கியமான கட்டம், இந்த நிலையில் நாம் நம் நம்பிக்கைகளை மறு மதிப்பீட்டிற்குள்ளாக்க வேண்டிய நிலை. ஏனெனில் தமிழினத்திற்க்கு ஆதரவான ஒரு முற்போக்கு செயல்பாடுகளுடைய ஒரு இயக்கம் தற்போது இல்லை, ஆனால் அம்மாதிரியான ஒரு அரசியல் சமூக இயக்கத்தை கட்ட தடையாக இருப்பது வெளியாட்கள் அல்ல, நாமே தான், ஏனெனில் முற்போக்காக இல்லாத ஒரு இயக்கத்தை வெறும் கோஷங்களை மட்டுமே முன்னிறுத்தும் திமுக வை ஒரு முற்போக்கு இயக்கமாகவும் கருணாநிதியை தமிழ் ஆதரவு தலைவனாகவும் கொண்டுள்ள ஒரு பொய்யான பிம்பமே இந்த தடையை ஏற்படுத்துகிறது, இதை உடைத்தால் மட்டுமே நம்மால் முன்னோக்கி நகர இயலும்.



அதிமுக,தேமுதிக போன்றவற்றை தள்ளிவிட்டு திராவிட இயக்கத்தின் ஒரே ஒரிஜினல் பீஸ்கள் என்று தம்மை கூறிக்கொள்ளும் முற்போக்கு திமுக 1949லிருந்து 2009 வரையிலான இந்த 60 ஆண்டுகளிலும் மேலும் ஆட்சியில் இருந்த 19 ஆண்டுகளிலும் திமுக பெற்றெடுத்த பிள்ளைகள் என்ன என்று தோண்டிபார்த்தால் திமுக அடுத்தவன் பெற்ற பிள்ளைகளுக்கு பெயர் வைத்துவிட்டு அதன் அப்பனாக மாறியுள்ளது.

தமிழ் சமுதாயத்தின் முற்போக்கு புரட்சிகர நகர்வுகளை தமிழ் நில மீட்சி போராட்டங்கள், தமிழின மொழி மீட்சி மற்றும் இந்தி எதிர்ப்பு போராட்டம், சாதிய ஒழிப்பு மற்றும் பார்ப்பன எதிர்ப்பு மற்றும் தலித்திய ஆதரவு நடவடிக்கைகள் , இடஒதுக்கீட்டு ஆதரவு / அரசு தனியார் வேலைவாய்ப்புகளை பெறுதல் என்ற நான்கு முக்கிய நிலைகளை வைத்து என்னளவில் பார்க்கிறேன், இதில் இன்னும் பல இருக்கலாம் அதிலும் ஈழத்து தமிழனக்கு செய்த துரோகப்பட்டியலை கணக்கிலேயே எடுக்காமல் மற்றவற்றை மட்டும் பேசலாம்.

இவைகளில் திராவிட இயக்கங்களின் ஒரே ஒரிஜினல் பீஸ் ஆன திமுகவும் அறிஞர் அண்ணா, கலைஞர் கருணாநிதி போன்றோர்கள் எந்த அளவிற்க்கு இந்த நான்கு முக்கிய நகர்வுகளில் பங்கேற்றார்கள் என பார்த்தால் மிகுந்த ஏமாற்றமே மிஞ்சும். ஆனால் திமுகவுக்கான பெயர் மட்டும் என்னவோ முற்போக்கு இயக்கம், சாதியொழிப்பா, தமிழ் மொழி இன வளர்ச்சியா, இந்தி எதிர்ப்பா எல்லாவற்றிற்கும் இவர்களே அத்தாரிட்டி போன்றதொரு தோற்றம் திட்டமிட்டு உருவாக்கப்பட்டுள்ளது, மூளையில் மஞ்சளும் கருப்பு சிவப்பும் அடைத்துக்கொண்டிருக்கும் வரை நாமும் அதை நம்பிக்கொண்டு திரிந்து கொண்டிருப்போம். இதிலும் இடைச்செறுகலாக ஏன் இவ்வளவு தீவிரமாக ஆராயாமல் ஆதரித்தோமென்று பார்த்தால் அதற்கான காரணமாக பார்ப்பனர்களே இருந்திருப்பார்கள், தேவையேயின்றி அவர்கள் திமுகவையும் கருணாநிதியையும் மூர்க்கமாக அர்ச்சிக்கும் போது நாம் மேலும் மேலும் திமுகவையும் கருணாநிதியையும் நோக்கி தள்ளப்படுகிறோம், ஆனால் பார்ப்பனர்கள் மூர்க்கமாக எதிர்க்கும் அளவிற்க்கு திமுகவும் கருணாநிதியும் worth இல்லை, பெரியார் நடத்திய திராவிடர் கழகமும் பெரியாரும் தான் பார்ப்பனர்களை நொறுக்கி தள்ளியவர்களே தவிர இவர்கள் அல்ல.

மொழிவாரி மாநிலங்களாக பிரியும் போது தமிழ் நில மீட்சி போராட்டங்கள் எதுவுமே திமுகவால் முன்னெடுக்கப்படவில்லை, மொழி வாரி மாநிலத்தால் தமிழகம் இழந்த திருப்பதி, சித்தூர், கோலார், தேவிகுளம்,பீர்மேடு, பாலக்காடு என்று பெரிய பட்டியலே இருந்தாலும் தமிழகம் இன்னும் இழந்துவிடாமல் மீட்டெடுக்கப்பட்ட திருத்தனி, சென்னை, முழுக்குமரி மாவட்டம் என தமிழர்களின் தேசிய நிலத்தை மீட்டெடுத்தவர்கள் ம.பொ.சி, நேசமணி பொன்னையா மற்றும் பலர், பார்ப்பன பத்திரிக்கையான தினமலரும் கூட குமரி மாவட்ட மீட்பில் குறிப்பிடத்தகுந்த பங்கு வகித்துள்ளது அதனால் கேரளாவில் அடக்குமுறைகளை அந்த பத்திரிக்கை சந்திக்க நேரிட்டது. ஆனால் இதில் எதிலும் திமுகவோ அல்லது அண்ணாதுரை கருணாநிதி போன்றோர்களின் பங்களிப்போ கிட்டத்தட்ட இல்லாமலே இருந்திருக்கிறது.

இழந்த தமிழ் தேசிய நிலத்தை மீட்டதோ இந்த போராளிகள் ஆனால் திமுகவின் ஆட்சி காலத்தில் கட்சத்தீவை இந்திய அரசு தமிழர்களுக்கெதிரான சிங்கள இனவாத இலங்கைக்கு தாரை வார்த்தபோது ஆட்சி அதிகாரத்தில் இருந்த போதும் வெறும் சட்டமன்றத்தில் தீர்மாணம் இயற்றியதோடு நின்று விட்டது... இனி எந்த காலத்தில் நம்மால் தமிழ் தேசிய நிலமான கட்சத்தீவை மீட்கப்போகிறோமோ?

அடுத்ததாக தமிழ் மொழி எழுச்சி அதன் வரலாற்றை மீட்டல் மணிப்பிரவாள நடையொழித்து தனித்தமிழ் போன்றவற்றில் பெரும் பங்களித்தவர்கள் பாவாணர் போன்ற தமிழறிஞர்களே அன்றி திமுக அல்ல, திமுகவின் அறிஞர் அண்ணாவின் தொடக்ககால எழுத்துகள் மற்றும் பேச்சுகளை படித்தால் தனித்தமிழ் என்பது இல்லாமலிருப்பது புரியும், தனித்தமிழெசுச்சியை கொண்டு வந்த தமிழறிஞர்கள் தமிழ் ஆர்வலர்களின் நடையை நகலெடுத்து copy cat ஆக கொண்டு வரப்பட்டது தான் திமுகவின் தமிழ் மேடைப்பேச்சுகள் ஆனால் இந்த தனித்தமிழ் திமுக பெற்ற பிள்ளை அல்ல, பாவாணர் போன்ற தமிழறிஞர்கள் பெற்ற பிள்ளை, சரி அந்த பிள்ளையை தத்தெடுத்துக்கொண்டார்கள் என்றாலும் கூட இந்தி எதிர்ப்பு போராட்டத்தை திமுக திருடிக்கொண்டது.

தமிழ் அறிஞர்களும் மாணவர்களும் பெரும் போராட்டமாக அடக்குமுறைகளை எதிர்த்து போரிட்ட இந்தி எதிர்ப்பு போராட்டத்தை கடைசியில் பந்தியில் வந்து சாப்பிட உட்கார வந்தவன் தாலியெடுத்து கட்டிவிட்டு மாப்பிள்ளையான கதையாக போராட்டம் வெற்றி பெற போகும் கடைசி நேரத்தில் திமுக தன் ஆதரவை தெரிவித்து போராட்டத்தின் வெற்றியை திருடி அதை ஓட்டாக்கி ஆட்சியை பெற்றது. இந்தி எதிர்ப்பு போராட்டம் உச்சத்தில் இருந்த சமயத்தில் அதை தூண்டிவிடுவது திமுக என்ற குற்றச்சாட்டை அரசு வைத்த போது மாணவர்கள் போராட்டத்தை நாங்கள் தூண்டவில்லை, மாணவர்கள் அரசியலில் ஈடுபடாமல் படிக்க வேண்டும் என்று மாணவர்களுக்கு புத்திமதி கூறியவர் அறிஞர் அண்ணா. இப்படியெல்லாம் மாணவர் போராட்டத்தை எதிர்த்துவிட்ட கடைசியில் மொய் வைப்பது போல ஆதரவு தெரிவித்து ஆட்சிக்கு வந்து தமிழ்நாடு என்று பெயர் மாற்றத்தை நிறைவேற்றியது, இப்படி திருடியதாலேயே இந்தி எதிர்ப்பு போராட்டம் திமுக பெற்ற பிள்ளையாகிவிடாது...

திமுக செய்ததெல்லாம் பிள்ளைக்கு பெயர் வைக்கும் வேலைகளை மட்டுமே, தமிழ்நாடு என்று பெயர்வைத்தது, பெரியார் உருவாக்கிய சீர்திருத்த திருமணத்திற்க்கு அங்கீகாரம் அளித்தது என அடுத்தவர் பெற்ற பிள்ளைகளுக்கு பெயர் வைக்கும் வேலைகளையே...

இடஒதுக்கீடு தொடர்பாக அதிகாரத்திலிருந்த திமுக கழற்றியவைகள், சாதிய ஒழிப்பில் ஒரே நேரத்தில் சாதிய எதிர்ப்பாளனாகவும் சாதிய ஆதரவாளனாகவும் நடிக்கும் இரட்டை முகங்கள், தமிழ் தேசிய மற்றும் கம்யூனிஸ்ட் கட்சிகளின் எழுச்சி போராட்டங்களை அதிகாரத்திலிருந்த காலத்தில் மிக மூர்க்கமாக அடக்குமுறைகளை ஏவி முறியடித்தாலும் இன்னமும் நாக்கூசாமல் நானும் கம்யூனிஸ்ட்தான் என்று சொல்லும் பொய்கள், வெற்று கோஷங்களை மட்டுமே முன்வைத்து பரப்பிய இயக்கமாக திகழும் இடங்கள் என திமுக திருடியவைகள் மேலும் தொடரும்...