பெண்ணாகரம்???

பெண்ணாகரம்???

சில நாட்களுக்கு முன்பு அந்த நண்பர் உரையாடியில் இருந்த போது அவரை அழைத்தேன் நலம் விசாரிக்க, பதிவுலகின் வழியே அறிமுகமாகி இருந்தாலும் சில வருடங்களாக பதிவை தாண்டி சொந்த விசயம் பேசும் அளவிற்க்கு நண்பர், மணிக்கணக்கில் அரசியல் பேசுவோம் முன்பெல்லாம், பரஸ்பர நலம் விசாரிப்புகளுக்கு பின் நண்பர் உரையாடியில் எழுதியது தான் இந்த பதிவின் தலைப்பு, நான் சில காலமாகவே உடன்பிறப்புகளுடன் அதிலும் குறிப்பாக அறிவுஜீவி உடன்பிறப்புகளுடன் அரசியல் பேசுவதில்லை, ஏனெனில் இந்த அறிவுஜீவி உடன்பிறப்புகள் கருணாநிதி என்ற இனத்துரோகியின் வாயிலிருந்து விழும் வாந்தியையே நம்மிடம் மீண்டும் மீண்டும் கக்குவதால் இவர்களிடம் அரசியல் பேசுவதை விட வேறு ஏதாவது வேலை பார்க்கலாம் என்பதால் அரசியல் பேசுவதில்லை, இருந்தாலும் நண்பர் பெண்ணாகரம் பற்றி என் வாயால் தெரிந்துகொள்ள நிறைய ஆர்வத்துடன் இருந்தார் போல...

பொதுவாகவே இடைத்தேர்தல் என்பது அந்த தொகுதி மக்களுக்கு அடித்த லக்கிபிரைஸ், ஆளுங்கட்சி எளிதாக வெல்லும், 1989ல் திமுக ஆளுங்கட்சியாக இருந்த போது நடந்த இரண்டு இடைத்தேர்தலில் அதிமுக வென்றதே தமிழகத்தி எதிர்கட்சிகள் இடைத்தேர்தலில் கடைசியாக வென்றது.

சென்ற அதிமுக ஆட்சியில் காஞ்சிபுரம் இடைத்தேர்தலில் ஆரம்பித்த பண பட்டுவாடா திருமங்கலம் இடைத்தேர்தலில் விஸ்வரூபம் எடுத்து பின் தேர்தல் என்பதே பொதுமக்களின் வசூல் என்பதாக மாறிவிட்டது. மேலும் ஆளுங்கட்சி அதிகாரம், பணம் போலிஸ் என்று அனைத்தும் ஆதரவாக இருப்பதால் திமுக எளிதாக எல்லா இடைத்தேர்தல்களிலும் வென்று வருகிறது, மேலும் எதிர்கட்சியான அதிமுக கொட்டை எடுக்கப்பட்ட புளியாக இருப்பதால் இடைத்தேர்தல்கள் எந்த விதமான போட்டியையும் திமுகவுக்கு தருவதில்லை.

சென்ற பொதுத்தேர்தலில் படுதோல்வி அடைந்த பாமக பெண்ணாகரம் இடைத்தேர்தல் களத்தில் பாமக முண்டா தட்டுவதால் பெண்ணாகரம் கொஞ்சம் களம் விறுவிறுப்பாக உள்ளது.


பெண்ணாகரம் தொகுதி ஒக்கேனக்கல் பகுதியை உள்ளடக்கிய ஒரு வறண்ட தொகுதி, குடிநீர் பிரச்சினை ஒரு முக்கிய பிரச்சினை, ஒக்கனேக்கல் கூட்டு குடிநீர் திட்டம் காங்கிரஸ் கூட்டணி அட்ஜெஸ்ட்மெண்ட்க்காக விட்டுத்தரப்படாமால் நிறைவேறி இருக்குமானால் திமுக இங்கே ஓட்டு கேட்க்க கூட போகத்தேவையிருந்திருக்காது. பெரும்பாலான மக்கள் பெங்களூர் மற்றும் வெளியூர்களில் குடும்பம் குடும்பமாக கூலி வேலை செய்ய சென்றுள்ளார்கள் (20,000 பேர் தேர்தலுக்கு முதல்நாள் வாக்களிக்க பெண்ணாகரம் வந்துள்ளார்கள்).

இடைத்தேர்தலை புறக்கணியுங்கள், 49 ஓ காமெடிகள் என்று இருந்த மருத்துவர் இராமதாசும் பெண்ணாகரம் தொகுதியில் மட்டும் முண்டா தட்ட சில முக்கிய காரணங்கள் உண்டு.

1991 சட்டமன்ற தேர்தலில் ராஜீவ் படுகொலை அலையிலும் பாமக இரண்டாம் இடத்தை பிடித்து திமுகவை மூன்றாம் இடத்திற்க்கு தள்ளியது, 1996 சட்டமன்ற தேர்தலில் சிபிஐக்கு இரண்டாமிடம் கிடைக்க மூன்றாம் இடத்தில் அதிமுக, 2001 சட்டமன்ற தேர்தலில் பாமகவிலிருந்து வெளியேறிய திரு.பெரியண்ணன் சுயேட்சையாக போட்டியிட பாமக வெற்றிபெற சுயேட்சை பெரியண்ணன் இரண்டாமிடம் பெற திமுகவுக்கு மூன்றாமிடம்.

பெண்ணாகரம் தொகுதியில் முன்பு வீரப்பனார்( ஆம் சந்தனக்கட்டை வீரப்பன் தான், எந்தெந்த பொறுக்கிகளுக்கும், இன துரோகிகளுக்கும் எல்லாம் 'ர்' போடும்போது இறந்து போன அவருக்கு 'ர்' போட்டால் குறைந்தா போய்விடும்) வலம் வந்து செல்வாக்கு செலுத்திய தொகுதியும் கூட.

இது வன்னியர்கள் 65% நிறைந்துள்ள தொகுதி என்பதால் பாமக எளிதாக வெற்றிபெறும் என்றெல்லாம் கணிப்புகள் செய்யலாம் ஆனால் திருமங்கலம் இடைத்தேர்தலுக்கு பின் இடைத்தேர்தல் இலக்கணம் மாறிவிட்டது, மேலும் பாமக பாமகவாக இல்லாமல் திமுகவாக மாற முயற்சித்ததும் அதன் செல்வாக்கை வன்னியர்கள் மத்தியில் குறைத்துவிட்டது சென்ற பொதுத்தேர்தலில் வன்னியர்கள் செறிவாக வாழ்ந்த தொகுதிகளிலும் வாக்கு வித்தியாசம் அதிகம் இருந்ததை தெரிவிக்கின்றது.

சென்ற தோல்விக்கு பின் பாமக தன் செல்வாக்கை நிரூபித்தே ஆகவேண்டிய கட்டாயம், அதனால் இம்முறை இங்கே கடும் போட்டியை காண்பிக்கிறார்கள், மூன்று மாதங்களுக்கும் மேலாக மருத்துவர் இராமதாசின் நேரடி கண்காணிப்பில் கடுமையாக வேலை செய்கிறார்கள், 80களின் காலத்தில் வன்னிய கிராமங்களில் நுழைந்து ஒரு சேரை மரத்தடியில் போட்டு அமர்ந்து எல்லோரையும் அழைத்து பேசிய ஸ்டைலில் மீண்டும் ஒரு ரவுண்டு செய்து காட்டியுள்ளார்,

சிட்டி பாலிடிக்ஸ் செய்த பாமக மீண்டும் வன்னிய கோசத்துடன் வில்லேஜ் பாலிடிக்ஸ்னுள் இறங்கியுள்ளது அதெல்லாம் எவ்வளவு பலன் கொடுக்கும் என்பது தேர்தல் முடிவுகளில் தெரியலாம்.இடைத்தேர்தல் ஸ்பெசலிஸ்ட் அழகிரி ஏரியாவாக பெண்ணாகரம் இல்லாமல் போனதும் களத்தில் பாமக காட்டும் கடும் போட்டியும் இடைத்தேர்தலுக்கு பிரச்சாரத்திற்க்கு வராத முதல்வர் கருணாநிதியை பெண்ணாகரம் பிரச்சாரத்திற்க்கு இழுத்துள்ளது.

திமுகவின் அமைச்சர் பிரியாணி ஸ்பெசலிஸ்ட் ஏ.வி.வேலுவின் களவேகமும் மருத்துவர் இராமதாசை கடுமையாக விமர்சிக்காமல் "நான் மிகவும் மதிக்கும் அய்யா ராமதாஸ்" என்றே ஒவ்வொரு இடத்திலும் வலிக்காமல் கத்தி சொறுகுவதும் மறைந்த உறுப்பினரும் ஏற்கனவே பாமகவில் இருந்து விலகி போட்டியிட்டு இரண்டாமிடம் பெற்றவருமான பெரியண்ணனின் மகன் திமுக சார்பில் போட்டியிடுவதும் திருமங்கலத்தையெல்லாம் தாண்டி அள்ளிவீசப்படும் பணமும் ஆளுங்கட்சி அதிகாரமும் அடிதடி மற்றும் போலிஸ் பலமும் உள்ளூரில் பாமக நிர்வாகிகளை உறுவியதுமென தெம்பாக இருக்கிறார்களாம்.

தர்மபுரி பகுதியை சேர்ந்த பதிவரிடம் பெண்ணாகரம் பற்றி கேட்ட போது பாமக மாடு கழுவறாங்க, திமுக ஆட்கள் 500 ரூபாயால் தான் குண்டி துடைக்கிறாங்க என்றார், இரண்டு கட்சிகளும் அதன் வேலைகளை சரியாக செய்திருந்தால் மாடும் கழுவியிருக்க தேவையில்லை, ரூபாய்களை அள்ளி தெளித்திருக்கவும் தேவையில்லை.

பணத்தை விழுங்கும் பலம் இனத்துக்கும்
இனத்தை விழுங்கும் பலம் பணத்துக்கும்
உண்டு என்பதால் பார்க்கலாம் யாரை யார் விழுங்குகிறார்கள் என்று.

என்னது அதிமுக, விஜயகாந்த் கட்சி பற்றியா? அவங்கலாம் போட்டியிடுறாங்களா என்ன?


இடைத்தேர்தலில் வெற்றி பெறவில்லையென்றாலும் கடும் போட்டியையும் கணிசமான வாக்குகளும் பெற்றால் பாமக ஒரு புதிய ஃபார்முலாவை முயற்சிக்கலாம், எப்படியும் திமுக-அதிமுக எதனுடன் கூட்டணி வைத்தாலும் 20+ தொகுதிகளும் முழுக்க வெற்றி பெற்றாலும் 20 எம்.எல்.ஏக்கள் தான் கிடைக்கும் வாய்ப்புண்டு, அதற்க்கு பதில் வலுவாக உள்ள 40 தொகுதிகளை தேர்ந்தெடுத்து முழு பலத்தையும் காண்பித்து வேலை செய்தால் அதே 15-20 தொகுதிகளை பெற வாய்ப்புண்டு, முக்கியமாக பணம் செலவு செய்ய வேண்டும், பணம் செலவு செய்யவில்லையென்றால் எல்லாம் வீணாகிவிடும், அட முதலீடென்று ஒன்று உண்டு இல்லையா?

பின் குறிப்பு: காலையிலேயே ஆரம்பித்துவிட்ட மண்டை உடைப்புகள் மறியல்கள் அடிதடிகளுடன் இரவு 7:30 மணியளவில் 82.34% வாக்குப்பதிவுடன் உள்ளது பெண்ணாகரம் தொகுதி

சாரு பாவம் ப்ளீஸ்

சாரு நம்பினார், இப்போ அந்த ஆள் மோசம் செய்துவிட்டான் இதற்க்கு சாரு என்ன செய்ய முடியும்? ஆனால் இந்த போஸ்ட் முந்தா நாள் இரவு 8.29க்கு வந்திருந்தா கூட சூப்பரா இருந்திருக்கும், இப்போ இது சப்பைகட்டு மாதிரியும் மீ த எஸ்கேப்பு மாதிரியும் இருக்குது.

சாரு குழந்தை மாதிரி சாருவின் எழுத்து கேணத்தனமா இருக்கலாம், லூசுத்தனமா இருக்கலாம், பொலிட்டிக்கல் கரெக்ட்னஸ் இல்லாமல் இருக்கலாம் ஆனால் அவர் எழுத்தில் ஒரு உண்மை இருக்கும் அந்த உண்மை தான் அவர் எழுத்தின் ஜீவன், அந்த உண்மை என்பது உண்மையாக இல்லாமல் இருக்கலாம் ஆனால் சாருவின் எழுத்தில் அந்த ஆள் என்ன நம்புகிறாரோ அதை உண்மையாக எழுதுவார் பொலிட்டிக்கல் கரெக்ட்னஸ் பார்க்காமல் அந்த உண்மை தான் அவர் எழுத்தின் ஜீவன், சாரு அவர் பொண்டாட்டியை அம்மனாக பார்க்கிறார் என்றால் நிஜமாகவே அம்மனென்று அப்படி நம்புவார்... அது போல இந்த ஆளையும் கடவுள் என்று நம்பியிருக்கார்...

[அத்தனை அய்யோக்கியத்தனங்களையும் தெரிந்தும், ஆதரிக்கும் பிரியாணி குஞ்சுகளை விட தெரியாமல் ஆதரித்து தெரிந்த பின் திட்டும் இந்த ஆள் தப்பில்லை]

இதோ பாருங்க இந்த கடைசி வரியிருக்கே சிவப்பு நிறம் அடித்ததும் அதை முதலில் எழுதி பிறகு அடிச்சேன், ஏன்னா அது என்னளவில் உண்மை தான், ஆனால் பொலிட்டிக்கலி கரெக்ட்னஸ்க்கோ அல்லது யாரையாவது குத்துமோ அவர்கள் மனம் புண்படுமோ அதனால் நாளை வேறு எதற்காகவாவது ரீ ஆக்ட் செய்வார்களோ என்று டெலிட் செய்துவிட்டேன்... (திரும்ப உதாரணத்துக்கு போட்டுவிட்டேன்) ஆனால் சாரு இப்படியெல்லாம் கிண்டல் செய்வார்கள் என்றோ பொலிட்டிக்கல் கரெக்ட்னஸ் க்காகவோ இதை செய்ய மாட்டார், தான் அப்போது எதை நம்புகிறாரோ அதை உண்மையாக எழுதுவார்... அது தான் அவர் எழுத்தின் உயிர்.. ப்ளீஸ் சாரு பாவம்...

அட நன்றி கெட்ட நடிகர் சங்கமே !

ரஜினியை வெறுத்தது போன்று வேறு எவரையும் நான் வெறுத்திருப்பேனா என்பது சந்தேகமே, முத்து திரைப்படத்தை முதல்நாளில் அரங்கம் சென்று ஆரவாரமாக பார்த்ததுவே நான் கடைசியாக திரையில் பார்த்த ரஜினியின் படம், அதன் பின் தொலைக்காட்சிகளில் வந்தால் கூட உடனே சேனலை மாற்றும் அளவிற்க்கு அவரின் மீது வெறுப்பு, அந்த வெறுப்பு கடந்த சில ஆண்டுகளாக சிறிது குறைந்திருந்தாலும்(ரஜினி ஒரு ஹார்ம்லெஸ் என்ற காரணமாகவும் இருக்கலாம்) ரஜினியின் மீதான வெறுப்பு ஏற்படுத்திய அத்தனை காரணிகளும் அப்படியே உள்ளன, ஆனால் பதிவு அதைப்பற்றியதல்ல...



நடிகர் அஜீத், ராஜாதிராஜ ராஜகுலோத்துங்க ராஜகம்பீர ராஜா கருணாநிதியின் புகழுரை கூட்டத்தில் பேசிய பேச்சிற்க்காக, கற்பழிப்பு கேசில் உள்ளே போன ஜாக்குவார் தங்கம் என்கிற சண்டை பயிற்சியாளர் அறிக்கை அதை தொடர்ந்த சர்ச்சைகளில் ரஜினியை போட்டு தாக்குகிறார்கள், அதுமட்டுமின்றி நடிகர் சங்கத்துக்கு அதன் விழாக்களுக்கு எல்லாம் ரஜினி வேண்டும் ஆனால் ரஜினிக்கு ஒரு பிரச்சினையென்றால் அதுவும் அரசியல் ரீதியாக தனிநபர் சார்ந்த பிரச்சினையாக இருந்தால் கூட வரவேண்டியதில்லை, பிரச்சினையே தொழில்தொடர்பானது என்பதால் நடிகர் சங்கம் வந்திருக்கவேண்டும் ஆனால் ரஜினியை யூஸ் செய்து த்ரோ செய்துவிட்டது நடிகர் சங்கம்

அட நன்றி கெட்ட நடிகர் சங்கமே ! என்ற தலைப்பில் ரஜினி ரசிகர்களால்நடத்தப்படும் இணையம் என்வழியில் வந்த பதிவு... அதிலிருந்து ஒரு பகுதி மட்டும் இங்கே, முழுக்க இதை ஏற்கின்றேன்...
http://www.envazhi.com/?p=16321

நடிகர் சங்க பவள விழாவுக்கு யாரை அழைத்தாலும் கூட்டம் வராது, வசூலும் தேறாது. நீங்கள்தான் வரவேண்டும். நீங்க ஒருவர் வந்தால் போதும்… வேறு யாரும் தேவையில்லை என்று கெஞ்சி கூத்தாடி ரஜினியை அழைத்தார்கள். நான்கு நாட்கள் நடந்த அந்த சாதாரண நாடக விழா, கடைசி நாளில் மட்டும் நட்சத்திர விழாவாக ஜொலித்தது. காரணம் ரஜினி!
நடிகைகளை விபச்சாரிகள் என்று ஒரு பத்திரிகை பட்டியல் போட்டுவிட்டது என்றதும் அலறித் துடித்து, ரஜினி வந்து பத்திரிகைகளுக்கு கண்டனம் தெரிவிக்க வேண்டும் என்று ஒற்றைக் காலில் நின்றதுதான் இந்த நடிகர் சங்கம். அன்று பல பத்திரிகைகள் ரஜினி அங்கே போகக் கூடாது என்று கோரிக்கை விடுத்தும் நடிகர் சங்கத்துக்காக போய் நின்று தனது கண்டனத்தைப் பதிவு செய்தார் ரஜினி. அவர் போனதால்தான் அன்றைய கண்டனக் கூட்டம் அடுத்த பல மாதங்கள் பேசும் அளவு பெரும் நிகழ்வானது.

அதேபோல தனது ஜக்குபாய்க்கு ஒரு பிரச்சினை என்றதும் ரஜினியும் கமலும் வந்தே தீர வேண்டும் என்று முரட்டுப் பிடிவாதம் பிடித்து வரவழைத்தவர் நடிகர் சங்கத் தலைவரான சரத்குமார். ராதிகா அழுது புலம்பினார் ரஜினியிடம். அந்த பாடாவதி படத்தின் பிரிவியூ காட்சிக்கும் ரஜினி வந்தாக வேண்டும் என்றார்கள். அவரும் வந்தார்.
அதன் பிறகு எத்தனை விழாக்கள், அர்த்தமற்ற மேடைகள்… ஆனால் அத்தனைக்கும், இந்த வெண்ணைவெட்டிகள் இழுத்த இழுப்புக்கெல்லாம் போய் நின்று சிறப்பித்துக் கொடுத்தார் ரஜினி. காரணம், சினிமா உலக நன்மைக்காக, சக கலைஞர்களின் சந்தோஷத்துக்காக மட்டுமே.

ஆனால் ரஜினிக்கு ஒரு பிரச்சினை என்றால் மட்டும் இந்த நாட்டாமைகளுக்கு நாக்கு இழுத்துக் கொள்கிறது, தொண்டை விக்கிக் கொள்கிறது. பேச்சே வர மறுக்கிறது. அவருக்கு ஆதரவாகப் பேச வேண்டிய கூட்டத்துக்கு மட்டும் போக முடியாமல் கால்கள் முடங்கிப் போகின்றன சரத்குமார்களுக்கு.

இதே ஜக்குபாய் கூட்டத்தில் ரஜினி பேசியதற்கு தியேட்டர்காரர்கள் கண்டனம் தெரிவித்தனர் (‘திருட்டு விசிடி வர காரணமான தியேட்டர்களுக்கு படம் தரக்கூடாது!’). கேவலமாக அறிக்கை விட்டனர். அதற்கு ஒரு மறுமொழி கூட சொல்லாமல் மவுனம் சாதித்தது நடிகர் சங்கமும் அதன் தலைவரும்.இப்போது யார்யாரோ கண்டபடி பேசுகிறார்கள், பேட்டி தருகிறார்கள்… ரஜினி ஒரு காமெடியர் என்று எகத்தாளம் பேசும் அளவுக்கு துணிகிறார்கள். ஆனால் இப்போதும் வாயைப் பொத்திக் கொண்டு சும்மாதான் இருக்கிறது இந்த சங்கம்.
இந்த பிரச்சினையில் மட்டுமல்ல அதாவது ரஜினி ஆதரவு கண்டிப்பாக வேண்டும். ஆனால் அவருக்கு ஒரு பிரச்சினை என்றால் அதை அவரே பார்த்துக் கொள்ள வேண்டும் என்பது இவர்களின் நியாயம்...

முதுகெலும்புள்ள அஜீத் - என்னய்யா தப்பு செய்தார்?

மண்புழு மண்ணில் கிடப்பதற்க்கு காரணம் அதற்க்கு மூளையில்லாததால் அல்ல, முதுகெலும்பில்லாததால்... சில நாட்களுக்கு முன் யாரோ ஒருவர் இப்படி பேசிகேட்டேன், முதுகெலும்பில் 12 அறுவை சிகிச்சைகள் செய்திருந்தும் முதுகை வளைத்து குழைந்து பயந்து நடுங்கிபோகாமல் தன் மனதில் பட்டதை பேசியிருக்கிறார் அஜீத்.



ராஜாதிராஜ ராஜமார்த்தாண்ட ராஜகம்பீர மன்னர் கருணாநிதி அவர்களுக்கு நடைபெற்றுக்கொண்டிருக்கும் வாரா வாரம் நடைபெறும் பல மணிநேர புகழுரைகள், நடிகைகளின் அரைகுறை ஆடை நடனங்கள் அதை படம் பிடித்து தங்கள் தொலைக்காட்சியில் போட்டு காசு பார்ப்பது என மன்னர் ரசிக்கும் ஒரு பாராட்டுவிழாவில் தான் இப்படி பேசியிருக்கார், எல்லாத்துக்கும் நாங்க வரணுமென்று மிரட்டுகிறார்கள் என்று... இதில் என்ன தவறு??

சினிமாவிலும் பேட்டிகளிலும் அரசியல் பொறிபறக்க ரசிகர்களை தூண்டிவிட்டு அதனால் சொந்த லாபம் சம்பாதித்து அதே நேரத்தில் தமிழகத்திற்க்கும் தமிழனத்துக்குமான கூட்டமென்றால் காணாமல் போய்விடும் திருட்டு நடிகன் அல்ல அஜீத். எதற்க்கும் வரமாட்டார், பொதுவாகவே எந்த விழாக்களிலும் எந்த கூட்டங்களிலும் கலந்து கொள்ளாதவர் அனல் பறக்க அரசியல் பேசிவிட்டு இனம் மொழி என்று பேட்டிகளில் பரபரப்பு காட்டுபவர் அல்ல, அவர் தன் வேலைகளுண்டு என்று போய்க்கொண்டே இருப்பவர், எல்லோருக்கும் அரசியல் ஆர்வமும் சமூக ஆர்வமும் இருக்க வேண்டுமென்ற அவசியமில்லை அவர்களை வற்புறுத்துவது எதற்காகவும் தவறு. ஆனால் எந்த அரசியல் சமூக காரணமுமின்றி இவர்களின் முகங்களை படம்பிடித்து தம் தொலைக்காட்சியில் அரைகுறை நடனங்களுக்கு நடுவே காட்டி இதன் மூலம் காசு சம்பாதிக்கும் பொறுக்கிதனத்திற்க்கு எதிராக ஆவேசமாக கூட இல்லை லேசாக முனகி எதிர்ப்பு தெரிவித்ததற்க்கே அஜீத்தை இந்த பாடு படுத்துகிறார்கள்...

முதலில் ஜாக்குவார் தங்கம் என்ற ஸ்டண்ட் மாஸ்டர் அஜீத் மீது வழக்கு போட கூறுதல் அதன் தொடர்ச்சியாக உடனடியாக அஜீத் ரசிகர்கள் ஜாக்குவார் வீட்டை உடைத்ததாக வழக்கு என அஜீத் மீது தொடர்ச்சியான அழுத்தங்கள், இந்த இடத்தில் நான் கடவுள் படம் தொடர்பான பண விவகாரம் தொடர்பாக பாலாவும் அவருக்கு ஆதரவாக சீமான் மற்றும் சில அரசியல் தொடர்புள்ளவர்கள் அஜீத்தை மிரட்டியதாக செய்தி வந்திருந்த நேரம் அது அப்போதும் கூட அஜீத் தன் ரசிகர்களை தூண்டிவிடாமல் என் பிரச்சினையை நானே பார்த்துக்கொள்கிறேன் என்று அமைதியாக்கியவரை தான் ஜாக்குவார் தங்கம் வீட்டை அடிக்க தூண்டியதாக கேஸ் போடுகிறார்கள், ஜாக்குவார் தங்கம் நாடாராம் அதனால் நாடார் சங்கம் கொதிக்குதாம்...

அஜீத் போன்ற முதுகெலும்புள்ள சுயமரியாதை உடையவர்களை நிச்சயம் நாம் ஆதரிக்க வேண்டும்... ஆம் அஜீத் மீதான அதிகாரத்துவத்தின் அடக்குமுறைகளுக்கு எதிராக என் கண்டனத்தை பதிப்பிக்கின்றேன்(இந்த ஒரு எழவைத்தவிர வேறென்ன செய்ய முடியும் என்னால்)

அடுத்தவன் பெற்ற பிள்ளைகளுக்கு அப்பன் உரிமை கொண்டாடும் திமுக

ஜெயமோகன் அவர்களின் திராவிட இயக்கத்தை நிராகரிப்பது ஏன்? என்ற தலைப்பில் இப்படியான ஒன்றை முன்வைக்கிறார்...

"இன்று திராவிட இயக்கம் தமிழியக்கத்தின் எல்லா கடந்த காலச் சாதனைகளுக்கும் உரிமை கொண்டாடுகிறது. தமிழ் நூல்களை மீட்டது, தமிழிசையை வளர்த்தது, தனித்தமிழைப் பரப்பியது எல்லாமே ஈவேரா வில் தொடங்கும் திராவிட இயக்கத்தின் சாதனைகள் என்று இன்று சாதாரணமாக மேடைகளில் பேசுகிறார்கள். "

இதே கட்டுரையில் மிகக்கடுமையாக திராவிட இயக்கங்கள் மீதான விமர்சனத்தை வைக்கிறேன் என்று தன் காழ்ப்புணர்வை பெரியாரின் மீது வைக்கிறார்... அதை ஒரு தந்திரத்துடன் செய்கிறார் ஜெயமோகன் செய்ய நினைப்பது ஷங்கர் படம் போல பல உண்மைகளின் நடுவே ஒரு பொய்யை சொறுகுவது, அதாவது இலஞ்சம் வாங்கும் ஆபிஸ் உண்மை, செருப்பு தைக்கும் தாத்தா உண்மை, அவருக்கு பின் இறப்பு சான்றிதழ் வாங்க துன்பப்படும் மனோரமா உண்மை, இதில் கொண்டுவது சொறுகும் இந்தியன் தாத்தா கற்பனை, மற்ற உண்மைகளை நம்பும்போது இந்தியன் தாத்தா என்ற கற்பனையை நம்ப வேண்டும், அது போல பெரியாருக்கு பிந்தைய நீர்த்துப்போன‌ திராவிட இயக்கத்தை குறிப்பிட்டு பெரியாரை திட்டுகிறார்.

இது தொடர்பான மேல் விபரங்களை ஆதாரங்களுடன் சுகுணாதிவாகரும், தமிழச்சியும் தொடருகின்றார்கள்... அவர்கள் அந்த இழையில் தொடர நான் இதே ஜெயமோகன் பெரியாரில் ஆரம்பித்து திராவிட இயக்கங்கள் மீது வைக்கும் குற்றச்சாட்டுகளை பெரியாருக்கு பிந்தைய திராவிட இயக்கங்கள் மீது வைக்கிறேன்...

இது ஒரு முக்கியமான கட்டம், இந்த நிலையில் நாம் நம் நம்பிக்கைகளை மறு மதிப்பீட்டிற்குள்ளாக்க வேண்டிய நிலை. ஏனெனில் தமிழினத்திற்க்கு ஆதரவான ஒரு முற்போக்கு செயல்பாடுகளுடைய ஒரு இயக்கம் தற்போது இல்லை, ஆனால் அம்மாதிரியான ஒரு அரசியல் சமூக இயக்கத்தை கட்ட தடையாக இருப்பது வெளியாட்கள் அல்ல, நாமே தான், ஏனெனில் முற்போக்காக இல்லாத ஒரு இயக்கத்தை வெறும் கோஷங்களை மட்டுமே முன்னிறுத்தும் திமுக வை ஒரு முற்போக்கு இயக்கமாகவும் கருணாநிதியை தமிழ் ஆதரவு தலைவனாகவும் கொண்டுள்ள ஒரு பொய்யான பிம்பமே இந்த தடையை ஏற்படுத்துகிறது, இதை உடைத்தால் மட்டுமே நம்மால் முன்னோக்கி நகர இயலும்.



அதிமுக,தேமுதிக போன்றவற்றை தள்ளிவிட்டு திராவிட இயக்கத்தின் ஒரே ஒரிஜினல் பீஸ்கள் என்று தம்மை கூறிக்கொள்ளும் முற்போக்கு திமுக 1949லிருந்து 2009 வரையிலான இந்த 60 ஆண்டுகளிலும் மேலும் ஆட்சியில் இருந்த 19 ஆண்டுகளிலும் திமுக பெற்றெடுத்த பிள்ளைகள் என்ன என்று தோண்டிபார்த்தால் திமுக அடுத்தவன் பெற்ற பிள்ளைகளுக்கு பெயர் வைத்துவிட்டு அதன் அப்பனாக மாறியுள்ளது.

தமிழ் சமுதாயத்தின் முற்போக்கு புரட்சிகர நகர்வுகளை தமிழ் நில மீட்சி போராட்டங்கள், தமிழின மொழி மீட்சி மற்றும் இந்தி எதிர்ப்பு போராட்டம், சாதிய ஒழிப்பு மற்றும் பார்ப்பன எதிர்ப்பு மற்றும் தலித்திய ஆதரவு நடவடிக்கைகள் , இடஒதுக்கீட்டு ஆதரவு / அரசு தனியார் வேலைவாய்ப்புகளை பெறுதல் என்ற நான்கு முக்கிய நிலைகளை வைத்து என்னளவில் பார்க்கிறேன், இதில் இன்னும் பல இருக்கலாம் அதிலும் ஈழத்து தமிழனக்கு செய்த துரோகப்பட்டியலை கணக்கிலேயே எடுக்காமல் மற்றவற்றை மட்டும் பேசலாம்.

இவைகளில் திராவிட இயக்கங்களின் ஒரே ஒரிஜினல் பீஸ் ஆன திமுகவும் அறிஞர் அண்ணா, கலைஞர் கருணாநிதி போன்றோர்கள் எந்த அளவிற்க்கு இந்த நான்கு முக்கிய நகர்வுகளில் பங்கேற்றார்கள் என பார்த்தால் மிகுந்த ஏமாற்றமே மிஞ்சும். ஆனால் திமுகவுக்கான பெயர் மட்டும் என்னவோ முற்போக்கு இயக்கம், சாதியொழிப்பா, தமிழ் மொழி இன வளர்ச்சியா, இந்தி எதிர்ப்பா எல்லாவற்றிற்கும் இவர்களே அத்தாரிட்டி போன்றதொரு தோற்றம் திட்டமிட்டு உருவாக்கப்பட்டுள்ளது, மூளையில் மஞ்சளும் கருப்பு சிவப்பும் அடைத்துக்கொண்டிருக்கும் வரை நாமும் அதை நம்பிக்கொண்டு திரிந்து கொண்டிருப்போம். இதிலும் இடைச்செறுகலாக ஏன் இவ்வளவு தீவிரமாக ஆராயாமல் ஆதரித்தோமென்று பார்த்தால் அதற்கான காரணமாக பார்ப்பனர்களே இருந்திருப்பார்கள், தேவையேயின்றி அவர்கள் திமுகவையும் கருணாநிதியையும் மூர்க்கமாக அர்ச்சிக்கும் போது நாம் மேலும் மேலும் திமுகவையும் கருணாநிதியையும் நோக்கி தள்ளப்படுகிறோம், ஆனால் பார்ப்பனர்கள் மூர்க்கமாக எதிர்க்கும் அளவிற்க்கு திமுகவும் கருணாநிதியும் worth இல்லை, பெரியார் நடத்திய திராவிடர் கழகமும் பெரியாரும் தான் பார்ப்பனர்களை நொறுக்கி தள்ளியவர்களே தவிர இவர்கள் அல்ல.

மொழிவாரி மாநிலங்களாக பிரியும் போது தமிழ் நில மீட்சி போராட்டங்கள் எதுவுமே திமுகவால் முன்னெடுக்கப்படவில்லை, மொழி வாரி மாநிலத்தால் தமிழகம் இழந்த திருப்பதி, சித்தூர், கோலார், தேவிகுளம்,பீர்மேடு, பாலக்காடு என்று பெரிய பட்டியலே இருந்தாலும் தமிழகம் இன்னும் இழந்துவிடாமல் மீட்டெடுக்கப்பட்ட திருத்தனி, சென்னை, முழுக்குமரி மாவட்டம் என தமிழர்களின் தேசிய நிலத்தை மீட்டெடுத்தவர்கள் ம.பொ.சி, நேசமணி பொன்னையா மற்றும் பலர், பார்ப்பன பத்திரிக்கையான தினமலரும் கூட குமரி மாவட்ட மீட்பில் குறிப்பிடத்தகுந்த பங்கு வகித்துள்ளது அதனால் கேரளாவில் அடக்குமுறைகளை அந்த பத்திரிக்கை சந்திக்க நேரிட்டது. ஆனால் இதில் எதிலும் திமுகவோ அல்லது அண்ணாதுரை கருணாநிதி போன்றோர்களின் பங்களிப்போ கிட்டத்தட்ட இல்லாமலே இருந்திருக்கிறது.

இழந்த தமிழ் தேசிய நிலத்தை மீட்டதோ இந்த போராளிகள் ஆனால் திமுகவின் ஆட்சி காலத்தில் கட்சத்தீவை இந்திய அரசு தமிழர்களுக்கெதிரான சிங்கள இனவாத இலங்கைக்கு தாரை வார்த்தபோது ஆட்சி அதிகாரத்தில் இருந்த போதும் வெறும் சட்டமன்றத்தில் தீர்மாணம் இயற்றியதோடு நின்று விட்டது... இனி எந்த காலத்தில் நம்மால் தமிழ் தேசிய நிலமான கட்சத்தீவை மீட்கப்போகிறோமோ?

அடுத்ததாக தமிழ் மொழி எழுச்சி அதன் வரலாற்றை மீட்டல் மணிப்பிரவாள நடையொழித்து தனித்தமிழ் போன்றவற்றில் பெரும் பங்களித்தவர்கள் பாவாணர் போன்ற தமிழறிஞர்களே அன்றி திமுக அல்ல, திமுகவின் அறிஞர் அண்ணாவின் தொடக்ககால எழுத்துகள் மற்றும் பேச்சுகளை படித்தால் தனித்தமிழ் என்பது இல்லாமலிருப்பது புரியும், தனித்தமிழெசுச்சியை கொண்டு வந்த தமிழறிஞர்கள் தமிழ் ஆர்வலர்களின் நடையை நகலெடுத்து copy cat ஆக கொண்டு வரப்பட்டது தான் திமுகவின் தமிழ் மேடைப்பேச்சுகள் ஆனால் இந்த தனித்தமிழ் திமுக பெற்ற பிள்ளை அல்ல, பாவாணர் போன்ற தமிழறிஞர்கள் பெற்ற பிள்ளை, சரி அந்த பிள்ளையை தத்தெடுத்துக்கொண்டார்கள் என்றாலும் கூட இந்தி எதிர்ப்பு போராட்டத்தை திமுக திருடிக்கொண்டது.

தமிழ் அறிஞர்களும் மாணவர்களும் பெரும் போராட்டமாக அடக்குமுறைகளை எதிர்த்து போரிட்ட இந்தி எதிர்ப்பு போராட்டத்தை கடைசியில் பந்தியில் வந்து சாப்பிட உட்கார வந்தவன் தாலியெடுத்து கட்டிவிட்டு மாப்பிள்ளையான கதையாக போராட்டம் வெற்றி பெற போகும் கடைசி நேரத்தில் திமுக தன் ஆதரவை தெரிவித்து போராட்டத்தின் வெற்றியை திருடி அதை ஓட்டாக்கி ஆட்சியை பெற்றது. இந்தி எதிர்ப்பு போராட்டம் உச்சத்தில் இருந்த சமயத்தில் அதை தூண்டிவிடுவது திமுக என்ற குற்றச்சாட்டை அரசு வைத்த போது மாணவர்கள் போராட்டத்தை நாங்கள் தூண்டவில்லை, மாணவர்கள் அரசியலில் ஈடுபடாமல் படிக்க வேண்டும் என்று மாணவர்களுக்கு புத்திமதி கூறியவர் அறிஞர் அண்ணா. இப்படியெல்லாம் மாணவர் போராட்டத்தை எதிர்த்துவிட்ட கடைசியில் மொய் வைப்பது போல ஆதரவு தெரிவித்து ஆட்சிக்கு வந்து தமிழ்நாடு என்று பெயர் மாற்றத்தை நிறைவேற்றியது, இப்படி திருடியதாலேயே இந்தி எதிர்ப்பு போராட்டம் திமுக பெற்ற பிள்ளையாகிவிடாது...

திமுக செய்ததெல்லாம் பிள்ளைக்கு பெயர் வைக்கும் வேலைகளை மட்டுமே, தமிழ்நாடு என்று பெயர்வைத்தது, பெரியார் உருவாக்கிய சீர்திருத்த திருமணத்திற்க்கு அங்கீகாரம் அளித்தது என அடுத்தவர் பெற்ற பிள்ளைகளுக்கு பெயர் வைக்கும் வேலைகளையே...

இடஒதுக்கீடு தொடர்பாக அதிகாரத்திலிருந்த திமுக கழற்றியவைகள், சாதிய ஒழிப்பில் ஒரே நேரத்தில் சாதிய எதிர்ப்பாளனாகவும் சாதிய ஆதரவாளனாகவும் நடிக்கும் இரட்டை முகங்கள், தமிழ் தேசிய மற்றும் கம்யூனிஸ்ட் கட்சிகளின் எழுச்சி போராட்டங்களை அதிகாரத்திலிருந்த காலத்தில் மிக மூர்க்கமாக அடக்குமுறைகளை ஏவி முறியடித்தாலும் இன்னமும் நாக்கூசாமல் நானும் கம்யூனிஸ்ட்தான் என்று சொல்லும் பொய்கள், வெற்று கோஷங்களை மட்டுமே முன்வைத்து பரப்பிய இயக்கமாக திகழும் இடங்கள் என திமுக திருடியவைகள் மேலும் தொடரும்...

ஓட்டு பொறுக்கிகளிடம் மட்டுமா தோற்றோம் முத்துக்குமரா?

ஓட்டு பொறுக்கிகளிடம் மட்டுமா தோற்றோம் முத்துக்குமரா?













சொல்கிறார்கள் ஓட்டுப்பொறுக்கிகளிடம்
தோற்றுப்போனோமாம்

ஆம் தோற்றுத்தான் போனோம்
ஓட்டுப்பொறுக்கிகளிடம் மட்டுமல்ல
ஓட்டை விற்ற பொறுக்கிகளிடமும்
தோற்றுத்தான் போனோம்

தோற்றுத்தான் போனோம்
ஓட்டுப்பொறுக்கிகளிடம் மட்டுமல்ல
தலைமை விசுவாசத்தை விட முடியா
தொண்டர் பொறுக்கிகளிடமும்

தோற்றுத்தான் போனோம்
ஓட்டுப்பொறுக்கிகளிடம் மட்டுமல்ல
புரட்சி பேசி
அதிகாரத்துக்கு அருகாமையில் இருக்கும்
அறிவுஜீவி பொறுக்கிகளிடமும்

தோற்றுத்தான் போனோம்
குத்திக்கொள்ள ஆயுதம் தந்தவனுக்கு
கொஞ்சமும் வலிக்காமல் கவிதை எழுதிய
கவிஞர் பொறுக்கிகளிடமும்

தோற்றுத்தான் போனோம்
வாய்வலிக்காமல் மனித நேயம் பேசியவர்கள்
வாய்மூடி மெளனித்திருந்த
மனிதஉரிமை ஆர்வல பொறுக்கிகளிடமும்
தோற்றுத்தான் போனோம்

இன்னும் எந்தெந்த பொறுக்கிகளிடம்
தோற்றுப்போனோம் என கணக்கு
பார்க்க துணிவில்லை எமக்கு

இன்னும் எத்தனை அஞ்சலிகள்
நினைவிலிருக்க போகிறாயோ?
ம்ம்ம்ம்ம்ம்ம்ம்ம்ம்ம்ம்ம்ம்ம்

திங்கள்(மாதம்)களின் சரியான தமிழ் பெயர்கள்

தமிழ் திங்கள்(மாதம்)களின் பெயர்களை சித்திரை, வைகாசி என்று தான் மனனம் செய்திருந்தோம் சிறுவயதிலிருந்தே, ஆனால் அவைகள் எல்லாம் சரியான தமிழ் பெயர்கள் அல்லவாம், மீண்டும் மனப்பாடம் செய்ய வேண்டும்... சரியான தமிழ் திங்கள்களின் பெயர்கள் கீழே

1. சுறவம் (தை)
2. கும்பம் (மாசி)
3. மீனம் (பங்குனி)
4. மேழம் (சித்திரை)
5. விடை (வைகாசி)
6. ஆடவை (ஆனி)
7. கடகம் (ஆடி)
8. மடங்கல் (ஆவணி)
9. கன்னி (புரட்டாசி)
10. துலாம் (ஐப்பசி)
11. நளி (கார்த்திகை)
12. சிலை (மார்கழி)

ராசி என்பதன் தமிழ் சொல் - ஓரை

நன்றி திரு வெ யுவராசன்.

இங்கே படியெடுத்து போட்டதன் காரணம் நானும் ஒரு முறை மனனம் செய்து கொள்ளத்தான்

புரட்சி நாளை காலை எட்டரை மணிக்கு வருது


ஊரே பரபரப்பாக இருக்கின்றது, எந்த பக்கம் திரும்பினாலும் புரட்சி பற்றிதான் பேச்சே, தினசரி, வார மாத பத்திரிக்கையில் எல்லாம் புரட்சி வருவதை பற்றி தான் பேச்சே புரட்சியை ஆதரித்தும் எதிர்த்தும் வாத பிரதிவாதங்கள் நடந்து கொண்டிருக்கின்றது...

ஆமா "சுதந்திரம்" வந்து எல்லாத்தையும் புடுங்கிடுச்சி, மீதியை புரட்சி வந்து தாம் புடுங்கப்போவுது சலித்துக்கொண்டார் டீக்கடை பாய்


சுதந்திரம் வந்து என்ன புரட்சி வந்து என்ன? எல்லாம் பணம் இருக்கிறவனுக்கு தாம்பா, நம்மளை மாதிரி ஏழைபாழைங்களுக்கு உழைச்சாதான் அரை வயிறு தின்னலாம், போப்பா போயி வேலையைப்பாருங்கப்பா கும்பலாக புரட்சி வருவதை பற்றி பேசிக்கொண்டிருந்த சிவப்பு சட்டை போட்ட "போர்ட்டர்" தோழர்களை விரட்டிக்கொண்டிருந்தார் ஹெ.எம்.எஸ் கோபால்


அரசியல் தலைவர்களிலும் கூட புரட்சியை ஆதரித்தும் எதிர்த்தும் அறிக்கைகள் விடப்பட்டுக்கொண்டிருந்தது


புரட்சி வருவதை யாராலும் தடுக்க முடியாது - திமுக தலைவர் உதயநிதி அறிவிப்பு

புரட்சியை ஆதரித்தால் தமிழ்நாடு உருப்படாது, புரட்சியை எதிர்த்து பாமக தலைவர் டாக்டர் அன்புமணி அறிக்கை

புரட்சியை நாங்கள் ஆதரிக்கவும் இல்லை எதிர்க்கவும் இல்லை, - மாதிமுக(மாறன் திமுக) தலைவர்

நாங்கள் வித்தியாசமானவர்கள், மதுரைக்கு வடக்கே புரட்சிக்கு ஆதரவும் மதுரைக்கே தெற்கே எதிர்ப்பும் தெரிவிப்போம் மதுரையில் ஆதரவோ எதிர்ப்போ செய்யமாட்டோம், இளைய புரட்சி கலைஞர் பிரபாகரன் தலைமையை ஏற்கும் வரை நான் தேமுதிக வின் தலைமை பொறுப்பில் இருப்பேன், இளைய புரட்சி கலைஞர் பிரபாகரன் அவர்கள் தலைமை ஏற்கும் நாளுக்காக காத்திருக்கிறோம், அதன் பின் ஒரு தொண்டனாக தேமுதிகவில் தொடருவேன் - தேமுதிக தலைவர்(பொறுப்பு) சுதீஷ் பரபரப்பு பேட்டி


புரட்சி பற்றி முடிவு செய்ய புரட்சித்தலைவியின் ஆணைக்காக காத்திருக்கின்றோம், புரட்சி தலைவி கனவில் வந்து ஆணையிட தயாராக இன்றிலிருந்து புரட்சி வரும் நாள் வரை தூங்கப்போகிறோம், புரட்சி தலைவர் நாமம் வாழ்க, புரட்சி தலைவி புகழ் ஓங்குக - அதிமுக பொதுச்செயலாளர் ஏகாம்பரம் பேட்டி

புரட்சி உழைக்கும் மக்களை சுரண்டும் பொறுக்கிகளின் கொண்டாட்டம், உழைக்கும் மக்களை உடனடி பிரச்சினைகளிலிருந்து திசை திருப்பும் செயலே புரட்சி இதோ வருது புரட்சி அதோ வருது என்கிற நாடகம், புரட்சி வருது வருது என்று இத்தனை நாட்களாக மக்களை ஏமாற்றிக்கொண்டிருந்தார்கள் புரட்சியை ஆதரிக்கும் தரகு முதலாளிகள் - தோழர் கிச்சா என்கிற கிருஷ்ண மூர்த்தி அய்யங்கார் - ம க இ க செயலாளர் - புதிய ஜனநாயகம் பத்திரிக்கையில் வெளியிட்ட அறிக்கை தோழர் "தீவிர அசுரனின்" வலைப்பதிவில்...


கரகம், காவடி மேள தாளங்களோடு பீர் விஸ்கி கைகளோடு புரட்சியை வரவேற்க ஊர் எல்லையிலேயே காத்திருந்தார்கள் இளைஞர்கள்....

"ஏம்பா கி.பி. 2000த்துலயே ஒரு புரட்சி வந்து ஊத்திக்கிச்சாமே தெரியுமா?"

"ஆமாம் நானும் கேள்விப்பட்டேன், நெட்ல கூட அது டீட்டெய்ல்ஸ் தேடினேன், 2000ல புரட்சி வந்ததுன்னு தகவல் இருக்கு ஆனா அதுக்கு மேல வேற ஒண்ணும் தகவல் இல்லை"

"ரொம்ப வருசம் கழிச்சி இந்த புரட்சி வந்திருக்கு, ஏற்கனவே சுதந்திரம் ஊத்திக்கிச்சி, இந்த புரட்சியும் ஊத்திக்கிச்சினா அவ்ளோதான் நம்ம கனவெல்லாம் வீணாயிடும்"

ஏய் புரட்சி வந்துருச்சி புரட்சி வந்துருச்சி, கத்திக்கொண்டே அந்த காரை நோக்கி ஓடினார்கள் இளைஞர்கள்....

தாரை தப்பட்டை முழங்க காரை சுற்றி சுற்றி வந்தார்கள்...

முகத்தை தொங்க போட்டபடி இறங்கினார் ....

எல்லோரிடமும் அப்போது ஒரே கேள்வி தான் புரட்சி வந்துருச்சா?? ஒரு வேளை முதலாளி புரட்சி வராம இருக்க சதி செய்துட்டாரா?, அவருக்கு புரட்சி வருவதில் விருப்பமேயில்லை, அவர் பையன் தான் புரட்சி வரவைக்க ஆர்வமாக இருந்தார்...

"அண்ணே புரட்சி வந்துருச்சா? "

"அட என்னப்பா திடீர்னு கூட 50 லட்சம் கூட குடுத்தாதான் புரட்சியை கொடுப்பேன்னு சொல்றானுங்க, அதான் பணம் பொறட்டிக்கிட்டு போக வந்துருக்கேன், பயப்படாதிங்க நாளைக்கு காலையில எட்டரை மணிக்குள்ள புரட்சி வந்துடும்"

புரட்சி - சென்ற மாதம் தான் அறுபதாம் கல்யாணம் செய்த சூப்பர் ஸ்டார் "விஜய்" - பழம் பெரும் நடிகை ஸ்ரேயாவின் பேத்தி சுரேயா நடிக்க 200 கோடி ரூபாய் செலவில் தயாரான தமிழ் திரைப்படம்


பின்குறிப்பு:
இது ஒரு மீள்பதிவு

கணிணி அடிப்படை தொழில்நுட்ப பாடங்கள் தேவை

கணிணி அடிப்படை தொழில்நுட்ப பாடங்கள் ஏதேனும் தமிழில் தேவைப்படுகின்றன, எடுத்துக்காட்டாக விசைப்பலைகை(கீ போர்ட்) விசைகள் SHIFT Enter CTL பற்றிய விளக்கங்கள், Notepad பயன்படுத்துவது, மவுஸ் பயன்படுத்துவது போன்ற அடிப்படையான பாடங்கள் தமிழில் கிடைத்தால் தந்து உதவவும்.

தேடுபொறிகளில் தேடிப்பார்த்தேன் கிடைக்கவில்லை, எனவே உங்களுக்கு தெரிந்தால் இங்கே கொடுக்கவும்.

நன்றி

பிழைக்கத்தெரியாதவருக்கு பிறந்தநாள் வாழ்த்துகள்

இனத்தை அடகு வைத்து பிழைத்திருக்கலாம்
உன் பேரன்கள் உலகின் பெரிய பணக்காரர்
வரிசையில் வந்து சேர

தமிழை அடகு வைத்து பிழைத்திருக்கலாம்
உன் பையன்களுக்கு மத்திய மாகாண
மந்திரிகளாக வந்து சேர

மொழியை அடகு வைத்து பிழைத்திருக்கலாம்
உன் குடும்பங்கள் ஊருக்கு ஒரு சேனல் கொண்டு
தொழிலதிபர்களாக வந்து சேர

உன் மீதான நம்பிக்கையை வைத்து பிழைத்திருக்கலாம்
உன் பதவி பறிபோகாமல் சாகும்வரை
பதவிகள் வந்து சேர

எம் இனத்துக்கான போராட்டத்தை அடக்கி பிழைத்திருக்கலாம்
பல்லாயிரம் கோடி ஊழல்கள் மூலம்
பணம் வந்து சேர


இதெல்லாம் செய்தால் பழி வந்துசேருமா?

அடப்போய்யா அண்டி பிழைக்கும் நாய்களை
விட்டு சொல்ல சொல்வோம்
ராஜதந்திரமென குரைக்க சொல்லலாம்

இதெல்லாம் இனத்துரோகி என்ற பெயர் வருமா?

அடப்போய்யா பாராட்டி பிழைக்கும்
ஓணாண்டிபுலவர்களை விட்டு நடத்துவோம்
ஒரு மொழி மாநாடு

இதெல்லாம் செய்தால் கோழையா?

அடப்போய்யா பொழைக்க தெரியாதவனே
எவன் காலை நக்கியும் பிழைக்க தெரியனும்

துரோகிகளும், பிழைப்புவாதிகளும், கோழைகளும்
நிறைந்த இந்த கேடு கெட்ட இனம்
இன்னமுமா இந்த மண்ணில் இருக்கு
என்றே வியந்திருக்கேன்
இவ்வினம் இம்மண்ணில்
பிழைத்திருப்பதே உன் போன்ற
வீரர்களாலும்
அவர்களின் ஈடற்ற தியாகங்களாலுமே


உன் போன்ற ஒரு தலைவன்
ஆயிரமாண்டுகளாய் கண்டதில்லை
எம் இனம்

உன் போன்ற ஒரு வீரன்
ஆயிரமாண்டுகளாய் கண்டதில்லை
எம் இனம்

உன் போன்ற ஒரு மனிதன்
ஆயிரமாண்டுகளாய் கண்டதில்லை
எம் இனம்

வீரர்களை பார்த்ததில்லை
மாவீரர்களையும் பார்த்ததில்லை
கேட்டிருக்கேன், கதைகள் பல கேட்டிருக்கேன்
எம் இன வீரர்களின் கதைகள் பல படித்திருக்கேன்
இதோ உன் காலத்திலேயே நாங்களும் வாழ்ந்திருக்கோம்


'ஈன'த்தலைவர்களை
எல்லாம் 'இன'த்தலைவர்களாக
நெஞ்சில் சுமந்து திரிந்திருக்கேன்

ஏ பிழைக்கத்தெரியாதவனே
நீ தான் எம் இனத்தலைவன்
தமிழனத்தலைவன்

நீ இருந்தாலும் இல்லையென்றாலும்
எப்போதும் நீ வாழ்கிறாய்
எங்கள் நெஞ்சிலும்
எம் இன சரித்திரத்திலும்

"ஈழம்- மௌனத்தின் வலி" யில் சைத்தான்களின் காவியம்!

கோமாளிகள் வசனம் பேசின
அவை கவிதையானது!
தத்துபித்து ´பஞ்ச்´ டயலாக்குகள்
வீர வசனங்களாயின,
அவை வியாபாரமானது.
ஏகாதிபத்யம் மனிதநேயத்தை
சாமியார்களின் போதனைகளாக்கின!
அவை ´அன்பே´ சிறந்தது.
தீவிரவாதம் ஒழியட்டும்,
´அன்பே´ மனிதனை ஆளட்டும் என்கிறது!

யுத்தத்தில் இறந்த ஈழத் தமிழர்களின் ஒரு மசுறுக்கு கூட இந்த புத்தகத்தை சமர்ப்பிக்க முடியாதபோது, ஈழத்தமிழர்களின் வலிகளை வியாபாரமாக்க முயலும் வியாபாரிகளின் குரூரத்தை நாம் அம்பலப்படுத்தவே முயல்கிறோம். உண்மையான உணர்வாளர்கள் ஒவ்வொருவரும் இப்புத்தகத்தை புறக்கணிக்க வேண்டும்.

என்று பொங்குகிறார் தோழர் தமிழச்சி, மேலும் முழு கட்டுரையும் படிக்க செல்லுங்கள் இங்கே

பெரியாரியத்தை மதமாக்கும் சில பெரியாரிஸ்ட்கள்


இந்த கட்டுரை யாரையும் காயப்படுத்தவோ வருத்தப்படுத்தவோ அல்ல, சில நேரங்களில் சுயவிமர்சனங்கள் தேவைப்படுகின்றன, அப்படியானதொரு சுயவிமர்சனம் தான் இது...

மதங்கள் எப்படி தோன்றியிருக்கும் அது எப்படி மிகவும் இறுக்கமானதாக மூர்க்கமானதாக மாறியிருக்கும் என்பது பற்றி பல நேரங்களில் விளங்கிக்கொள்ள முயற்சித்திருக்கிறேன், அதை எனக்கு தற்போது முழுமையாக செய்முறையாக விளக்கிக்கொண்டிருக்கின்றார்கள் சில பெரியாரிஸ்ட்கள்...

எல்லா காலங்களுக்கும் எல்லா மக்களுக்கும் எல்லா சூழலுக்கும் பொறுந்தக்கூடிய கருத்தோ நியாயமோ இருக்கவே முடியாது, எனவே எந்த கருத்துகளையும் யார் சொல்லியிருந்தாலும் அது எந்த சூழலில் யாருக்கு சொல்லப்பட்டிருக்கின்றது(context) என்பதை கணக்கில் எடுத்து அதன் வழியாக தான் அந்த கருத்துகளை புரிந்து கொள்ளவேண்டுமேயொழிய அந்த வார்த்தைகளை அப்படியே எடுத்துக்கொண்டு அதை எக்காலத்துக்கும் எல்லா சூழலுக்கும் எல்லா மனிதர்களுக்கும் பொறுத்தி பார்க்க கூடாது, ஆனால் எல்லா மதங்களும் சொல்வது அவர்களின் புனித நூல்கள் சொல்லும் கருத்துகள் எக்காலத்துக்கும் எப்போதுமே பொறுந்தும் என்பதே...

புரியாத சடங்குகள் பற்றிய புரிதலை கொடுத்தது ஒரு ஜென் கதை, எல்லோருக்கும் தெரிந்த கதை தான், ஒரு ஜென் துறவி தம் சீடர்களுக்கு பாடம் எடுத்துக்கொண்டிருப்பார், அப்போது அவர் வளர்த்துக்கொண்டிருந்த பூனை இதற்கு இடையூறாக குறுக்கும் நெடுக்குமாக ஓடிக்கொண்டிருந்தது, எனவே ஜென் துறவி வகுப்பு ஆரம்பிக்கும் முன்பு அந்த பூனையை பிடித்து கட்டி போட சொன்னார். ஒரு நாள் ஜென் துறவியும் இறந்து போக கொஞ்ச நாளில் பூனையும் இறந்து போக புதிதாக பொறுப்புக்கு வந்த துறவி வகுப்பு எடுக்கும் முன் சீடர்களை பார்த்து கேட்டாராம் ஏன் இன்று பூனையை கட்டி போடவில்லை என்று, அதற்கு பூனை செத்து போயிவிட்டது என்றார்களாம், அதனாலென்ன இன்னொரு பூனையை வாங்கிக்கொண்டு வந்து கட்டி போடுங்கள் உங்களுக்கு தெரியாதா வகுப்பு எடுக்கும் முன் பூனையை கட்டிப்போடுவது நம் பெரிய துறவி ஏற்படுத்திய வழக்கமென்று...இந்த கதை சடங்குகள் எப்படி ஒரு புரிதலின்றி நடத்தப்படுகின்றது என்பதை புரியவைக்கும்.

ஒரு பெரியாரிஸ்ட் என சொல்லிக்கொள்பவர் காலையில் எக்காரணம் கொண்டும் குளிக்க மாட்டார் மாலையில் தான் குளிப்பார், காலையில் குளிப்பது நம் பழக்கமில்லை என்பார், அது பார்ப்பனர்கள் உருவாக்கிய வழக்கம் என்பார், சரி நல்லது ஆனால் அதற்காக எக்காரனம் கொண்டும் காலையில் குளிக்க கூடாது என்ற சடங்கை பின்பற்ற தேவையில்லை ஆனால் அவர் எந்த சூழலிலும் எந்த காரணத்துக்காகவும் காலையில் குளிக்க கூடாது என்ற சடங்கை கடுமையாக பின்பற்றுகிறார்.

விடுதலை பத்திரிக்கையில் ஒரு கட்டுரை வருகிறது, நாம் நம் குடும்பங்களோடு நிகழ்ச்சிகளில் கலந்து கொள்ள வேண்டும் இப்படி குடும்பங்களாக கலந்துகொள்வதால் திருமண உறவுகள் நம் இயக்க தோழர்களின் குடும்பங்களுக்குள் உருவாகும் என்கிறார்கள், இப்படித்தானே கோவிலிலும் மற்ற விழா நிகழ்ச்சிகளிலும் நடைபெறுகிறது, சரி இது கூட பரவாயில்லை

கடவுள் நம்பிக்கை உள்ள ஒரு பெண்ணை ஒரு பெரியாரிஸ்ட் திருமணம் செய்கிறார் அதெப்படி கடவுள் நம்பிக்கை உள்ள பெண்ணை திருமணம் செய்யலாம் நீயெல்லாம் ஒருபெரியாரிஸ்ட்டா என இன்னொரு பெரியாரிஸ்ட் விமர்சிக்கிறார், அப்படியென்றால் ஒரு பெரியாரிஸ்ட் இன்னொரு பெரியாரிஸ்ட்டை மட்டும் தான் திருமணம் செய்ய வேண்டும் போல அடடே இப்படி தானே ஒரே மதத்திற்குள் மட்டுமே திருமண உறவுகள் என்று மதங்கள் தங்களை இறுக்கிக்கொள்கின்றன.

பெரியார் திருமணத்தை பற்றியும் குழந்தை பெற்றுக்கொள்வதை பற்றியும் கருத்துகளையும் விமர்சனங்களையும் வைக்கிறார் அவர் பெண் விடுதலை என்ற நோக்கில் இதை நெறி செய்கிறார், ஆனால் ஒரு சில பெரியாரிஸ்ட்கள் குழந்தை பெற்றுக்கொள்ளாத திருமணம் செய்யாமல் சேர்ந்து மட்டுமே வாழனும் என்று எதிர்பார்க்கிறார்கள் (சிலர் இதை பெண்களிடம் நூல்விட பயன்படுத்தியுள்ளார்கள் என்பது வேறு கதை), பெண் விடுதலை என்பதன் அடிப்படையிலேயே பெரியார் அதை சொல்லியிருப்பார் அவரே திருமணமும் செய்திருக்கார், ஆனால் இவர்கள் பெண் விடுதலையை தூக்கிப்போட்டுவிட்டு திருமணமும் குழந்தையும் வேண்டாமென்று பெரியாரின் கருத்துகளை உதிர்த்துவிட்டு வார்த்தைகளாக மட்டுமே பின்பற்றிகிறார்கள் வேதங்களை பின்பற்றுவது போல.

எப்படி மதத்தை பின்பற்றுபவர்கள் தங்கள் குழந்தைகளுக்கு தங்கள் மதத்தை சிறு வயதிலிருந்தே திணிக்கின்றார்களோ அதே போல பல பெரியாரிஸ்ட்கள் குடும்பங்களில் சிறு வயதிலிருந்தே கடவுள் இல்லையென்றும் பெரியாரியமும் திணிக்கப்படுகின்றது, இப்படியாக சிறு வயதிலிருந்தே மதத்தை போல பழக்கப்படுத்தப்படும்போது(புரிந்து தெளிந்து ஏற்றுகொள்பவர்களை குறிப்பிடவில்லை) எப்படி மதவாதிகளால் அவர்கள் மதத்தை தாண்டி பார்க்க இயலாதோ அதே போல இவர்களும் ஆக்கப்படுகிறார்கள்.

மிஷனரி கல்வி நிறுவங்கள், இந்து மடம் கல்வி நிறுவங்கள் போன்றவற்றில் மதப்பிரச்சாரம் வலிந்து திணிக்கப்படுகிறது என்று விமர்சித்துக்கொண்டே பெரியார் மணியம்மை கல்லூரியில் மாணவிகளின் பெட்டிகள் திறந்து பார்க்கப்படுகின்றன சாமி படம் எதுவும் வைத்திருக்கிறார்களா என்று, மாணவிகள் கடவுள் நம்பிக்கையுடன் உள்ள சின்னங்களை அணிய அனுமதிப்பதில்லை(கல்லூரியில் இல்லையென்றாலும் விடுதியிலாவது அணுமதிக்கலாமே?)படிக்கிறார்களோ இல்லையோ எல்லோருக்கும் திராவிடர் கழக பத்திரிக்கை சந்தா கட்டியாக வேண்டும் அந்த பத்திரிக்கை அவர்கள் வீட்டுக்கு போய்விடும், இங்கே கடவுள் நம்பிக்கை உள்ளவர்களை நிராகரிக்கின்றார்கள், அதிகாரம் உள்ளதால் தங்கள் நம்பிக்கையை வலிந்து திணிக்கின்றார்கள், பெரியாரியலை புரிந்து ஏற்றுக்கொள்ள வேண்டியதை வருத்தி திணிக்கிறார்கள், இவைகளைத்தானே மதங்களும் செய்கின்றன பிற மதத்தவர்கள் மீது.

ஒரு பெரியாரிஸ்ட் பெரியாரின் தாடி மயிர் எங்களிடம் உள்ளது, இதை நாங்கள் பெருமையாக கருதுகிறோம், பாதுகாப்பாக வைத்திருக்கோம் என்கிறார். என்ன புத்தர் பல் பாதுகாக்கப்படுவது நினைவுக்கு வருகிறதா?

இதற்கடுத்ததாக பெரியார் கொள்கைகளை சரியாக எடுத்து செல்லவில்லை என்ற சண்டை அதில் இயக்கம் உடைகிறது, ஒரு குழு தாங்களே உண்மையான பெரியார் தொண்டர்கள் அவரோட எழுத்துகள், புத்தகங்கள் (மற்றும் சொத்துகள்) எங்களுக்கு மட்டுமே சொந்தம் என்று வழக்கு போடுகிறார்கள், கேட்டால் மற்றவர்கள் பெரியாரின் எழுத்துகளை திரித்துவிடுவார்கள் என்கிறார்கள் ஆகா இப்படித்தானே ஹீனயானமும் மகாயானமும் புத்தமத்தில் உருவானது, இப்படித்தானே கத்தோலிக்க, புராட்டஸ்டண்ட் உருவானது.

பெரியாரின் எழுத்துகளுக்கு சொந்தம் கொண்டாடும் திராவிடர் கழகமும் அதன் தொண்டர்களும் பெரியாரின் எழுத்துகளையே தங்கள் தலைமை திணித்துள்ள வாரிசை ஏற்றுக்கொள்ள பயன்படுத்துகிறார்கள், மதவாதிகள் எல்லாவற்றையும் அவர்களின் வேத நூலில் இருந்தே எடுத்து நியாயப்படுத்துவதை போல.


தமிழ் ஓவியா அவர்களின் கட்டுரைகளை படித்துவிட்டு ஒருவர் உரையாடியில் கேட்டார்
--------------------
10:11 PM நண்பர்: thala
tamiloveiya post la periyar solli irukiratha potirukare athu nijama?
10:13 PM me: யெஸ்
100% அவர் சொன்னது தான்
நண்பர்: kodumai :)) ithuku karunanithi better
-------------------
மற்றொரு நண்பர் உரையாடியில் பேசியது
1:05 PM நண்பர்: என்ன கொடுமை தலைவா இது
me: edhu?
நண்பர்: இப்படி பட்ட மீனிங்கா பெரியார் சொன்னார்? தமிழ் ஓவியா பதிவு பற்றி
me: எதை சொல்றீங்க
1:06 PM அதுக்கு தான் சொன்னேன் தாலிபான் என்று தல
1:07 PM நண்பர்: பெரியாரும் ஒரு கும்பலை இப்படி ஆக்கி வைத்திருக்கிறாரே என்று

வருத்தம் வருகிறது :(
1:08 PM me: இல்லை
நண்பர்: இயக்கத்துக்குள் பகுத்தறியக்கூடாதா??
me: உலகத்தில் எதுவுமே எக்காலத்துக்கும் எல்லா இடத்திலும் எல்லோருக்கும்
பொறுத்தமான சரியான ஒன்று உலகில் எப்போதுமே இல்லை
1:09 PM பெரியாரின் எழுத்துகள் மட்டுமின்றி எல்லோருடையதும் அபப்டித்தான்
நண்பர்: மந்தையாய் வாழ்வதே இயக்கம் மாதிரி அர்த்தமாயிடுச்சே தமிழ் ஓவியா சொல்வது

:(
me: சூழ்நிலைகளையும் எம்மாதிரியான தருணங்களில் சொல்லப்பட்டது
என்பது முக்கியம்
---------------------
ராமசாமி சொல்றான்னு நான் சொல்ற எதையும் அப்படியே ஏற்றுக்கொள்ளாதீர்கள், நீங்கள் உங்கள் பகுத்தறிவைக்கொண்டு ஆராய்ந்து பாருங்கள் என்று சொன்ன பெரியாரை ஒரு சர்வாதிகாரி போன்றும் மாற்று கருத்துகளுக்கு மதிப்பளிக்காதவராகவும் போன்ற தோற்றம் அளிக்கும் வகையில் தமிழ் ஓவியா பெரியாரின் கருத்துகளை எடுத்து போட்டுள்ளார்.

ஒரு முறை திரு.வீரமணி அவர்களுடன் பேசிக்கொண்டிருந்த போது கீழ் வெண்மணி கொடுமை நடந்த பின் பெரியார் கம்யூனிஸ்ட் கட்சிகளை தடை செய்ய சொல்லி அறிக்கை விட்டாரே சரியா என்று கேட்ட போது திரு வீரமணி அவர்கள் கூறியது என்னவெனில் அதை அப்படியே இன்றைக்கு சொன்னது போல எடுத்துக்கொள்ள கூடாது, எந்த சூழலில் அதை சொன்னார் என்று கவனிக்க வேண்டும், அப்போது தான் அண்ணாதுரை ஆட்சிக்கு வந்துள்ளார், அந்த ஆட்சியை எப்படியாவது கவிழ்க்க வேண்டுமென திட்டத்தில் பலர் இதை காரணமாக வைத்து பிரச்சினைகள் செய்தனர் என்றார். அப்போது புரிந்து கொண்டேன் பெரியாரை பிழையாமை வேண்டும் என்று ஆனால்

தமிழ் ஓவியா அவர்கள் பெரியார் கூறிய இயக்க கட்டுப்பாடு பற்றி கூறிய கருத்துகளை எந்த சூழலில் கூறினார் என்பதை சொல்லாமல் மொட்டையாக பெரியார் வார்த்தைகளை போட்டதால் பெரியார் மிக மோசமான கருத்தை சொன்னதான தோற்றம் நண்பர்களுக்கு ஏற்பட்டுள்ளது, பெரியார் ஒரு சர்வாதிகாரி போன்றும் மாற்று கருத்துகளுக்கு மதிப்பளிக்காதவராகவும் போன்ற தோற்றம். பெரியார் எந்நிலையில் அதை கூறினார், திராவிடர் கழகம் என்ற சமூக விடுதலை இயக்கத்தை அதன் அடிப்படையிலிருந்து அதை விலக்கி அதிகாரத்தை கைப்பற்றும் ஒரு கருவியாக அண்ணாதுரை அவர்கள் பயன்படுத்த விரும்பியதும் அதற்கு திராவிடர் கழகத்தினுள்ளேயே பெரும் ஆதரவு உருவாகியதுமான (பின்னே அதிகாரம் பெறுவதென்றால் ஆதரவுக்கா பஞ்சம்) நிலையில் கருத்தாடல்கள், அறிவுஜீவித்தனம், விவாதம் என்ற பெயரில் கழகத்தின் அடிப்படையான சமூக விடுதலை இயக்கம் என்பதிலிருந்து விலகி அதிகாரத்தை கைப்பற்ற வேண்டுமென்ற அண்ணாதுரைக்கு ஆதரவு திரட்டப்படுவதுமான சூழலில் பெரியார் இப்படியான கருத்துகளை தெரிவித்தார், அப்படியான ஒரு சூழலா இன்று இயக்கத்தில் உள்ளது? இவர்கள் தங்கள் தலைமையின் மீதான விசுவாசத்தையும் அடிமைத்தனத்தையும் நியாயப்படுத்த பெரியாரின் எழுத்துகளை பயனபடுத்துகிறார்கள்...

இந்த மாதிரியாக நடந்துகொள்ளும் பெரியாரிஸ்ட்கள் புரிந்து ஏற்றுக்கொண்டு அனுபவிக்க வேண்டிய பெரியாரியத்தை மதங்களை போல பழக்கத்திலும் புரிந்து கொள்ளாமலும் பின்பற்றுவது பெரியாரியத்தையும் இன்னொரு மதமாக்காமல் இவர்கள் ஓயமாட்டார்கள் என்றே தோன்றுகிறது, கருப்பு சட்டை போடுவதும் 'மானமிகு' என்று அழைத்துக்கொள்வதையும் சடங்காக்கிவிடாதீர்கள்...

திராவிடர் கழகத்தின் வர்ணாசிரம தலைமையும் மானங்கெட்ட மானமிகுகளும்

திராவிடர் கழகம் கண்ட பெரியாரின் மிக முக்கிய கொள்கை வர்ணாசிரம எதிர்ப்பு மற்றும் சுயமரியாதையை வலியுறுத்தல், வர்ணாசிரமம் என்றால் என்ன? பிறப்பின் அடிப்படையில் மனிதர்களிடையே உயர்வு தாழ்வு பார்ப்பது, பிறப்பின் அடிப்படையில் தகுதியை நிர்ணயிப்பது, பிறப்பின் அடிப்படையில் பலரை தாழ்த்தி சிலரை உயர்த்துவது... பாவம் திராவிடர் கழக கூடாரத்தில் இருப்பவர்கள் பிறப்பின் அடிப்படையில் வேறுபாடு பார்ப்பதை வெறும் சாதி அளவில் மட்டும் என்று நினைத்துவிட்டார்கள் போலும், அது தலைவரின் மகன் என்ற பிறப்பின் அடிப்படையில் பதவி வழங்குவதும் வர்ணாசிரமம் தான் என்பதை மறந்துவிட்டார்கள்

சுயமரியாதை என்பதை பெரியார் வலியறுத்திய மிக முக்கியமான ஒன்று, சுயமரியாதை என்பது தம்முடைய மரியாதைக்கும் சுயத்துக்கும் இழுக்கு ஏற்படுத்தும் எதையும் வற்புறுத்தலாலோ அல்லது மதத்தின் பெயராலோ அறியாமையாலோ ஏற்று கொள்ளாமல் எதிர்த்து போராடுவது, அதனாலேயே திராவிடர் கழகத்தின் தலையிலிருந்து வால்வரை அத்தனை பேரும் "மானமிகு" என்று அழைத்துக்கொள்வதும் போட்டுக்கொள்வதும்.

திராவிடர் கழகத்திற்கு நாம் பெரியாரின் கருத்துகளை விளக்க வேண்டிய கொடுமையை பாருங்கள்...

திராவிடர் கழகத்தின் எத்தனையோ செயல்வீரர்கள், அனுபவமும் திறமையும் மிக்க அடுத்த கட்ட தலைவர்கள், கழகத்திற்காக முழு நேரமும் பாடுபட்டவர்கள், தம் வாழ்க்கையையே அற்பணித்தவர்கள் என பலரும் இருக்கும் போது ஆசிரியர் அய்யா வீரமணி அவர்களின் புதல்வர் திரு.அன்புராஜ் அவர்கள் கழகத்தின் அதிகாரம்மிக்க பதவிக்கு வந்துள்ளர், அதாவது வர்ணாசிரமத்தின்படி பிறப்பின் அடிப்படையில் பதவிக்கு வந்துள்ளார், பிறப்பின் அடிப்படை என்பது பார்ப்பான், சத்திரியன், வெள்ளாளன், தலித் மட்டுமா? தலைவரின் மகன் என்ற அடிப்படையில் வழங்கப்படும் பதவி பிறப்பின் அடிப்படையில் இல்லையா? இந்த கூட்டத்தில் தலைவர் சொன்னதாக பத்திரிக்கையில் வெளியான செய்தி என்னவென்றால் இந்த நியமணத்திற்கு என்ன எதிர்ப்பு வந்தாலும் அதை எதிர்கொள்ள தயார் என்றாராம், அதாவது தலைவர் எதற்கும் துணிந்து தான் இந்த வேலையை செய்துள்ளார்.

திமுகவில் வாரிசு அரசியல் இல்லையா, பாமகவில் இல்லையா என்று வாதத்திற்கு வரும் முன் அவைகள் எல்லாம் ஓட்டு பொறுக்கி அரசியல் கட்சிகள், திராவிடர் கழகம் தான் ஓட்டுப்பொறுக்காத சமூக விடுதலை இயக்கமாச்சே,வர்ணாசிரமத்தை எதிர்க்கும் பேரியக்கமாச்சே இங்கே ஏன் இப்படி?

பெரியாரின் பிறப்பின் அடிப்படையில் வேறுபாடு பார்ப்பதை எதிர்க்கும் கொள்கைக்கு தான் திக தலைமை குழி தோண்டி புதைத்துவிட்டதென்றால் அதன் "மானமிகு" தொண்டர்களும் நிர்வாகிகளும் பெரியாரின் சுயமரியாதைக்கு பாடை கட்டியுள்ளனர்.

திரு.அன்புராஜ்க்கு பதவிபிரமாணம் செய்ய தலைமை முடிவெடுத்திருந்தாலும் திராவிடர் கழக "மானமிகு" தொண்டர்களும் நிர்வாகிகளும் என்ன செய்திருக்க வேண்டும், கழக தொண்டு, கழக பணிகள், அனுபவம், தியாகம், திறமை இவைகளையெல்லாம் தாண்டி திரு.அன்புராஜ் அதிகாரம்மிக்க பதவிக்கு அறிவிக்கப்பட்டிருப்பது இந்த திறமையான மூத்த நிர்வாகிகள் தொண்டர்கள் இவர்களை எல்லாம் தகுதி குறைத்த செயல்தானே, இவர்களுடைய தகுதி குறைக்கப்பட்டது என்பது இவர்களின் சுயமரியாதைக்கு இழுக்குதானே, இந்த மானமிகுகளின் சுயமரியாதைக்கு இழுக்கு என்றவுடன் என்ன செய்திருக்க வேண்டும், தலைமையை எதிர்த்து குரல் எழுப்பியிருக்க வேண்டாமா?

இந்த நியமணத்தை எதிர்த்து போராடியிருக்க வேண்டாமா சுயமரியாதையை தன் மூச்சாக கருதிய பெரியாரின் இந்த தொண்டர்கள்... மத நம்பிக்கைகளையும், மூட நம்பிக்கைகளையும் அடிமைத்தனத்தையும் (அடிமைத்தனம் எந்த உருவத்தில் என்றாலும் பாசம், எஜமான விசுவாசம், மத நம்பிக்கை, காதல் என எந்த உருவத்திலும்) எதிர்த்த பெரியாரின் இந்த மானமிகு தொண்டர்கள் எந்த விசுவாசத்தின் அடிப்படையில் இதை சகித்துக்கொண்டுள்ளார்கள்?

இதையெல்லாம் பார்க்கும்போது இவர்கள் போடும் கருப்பு சட்டைக்கும் "மானமிகு" அடைமொழிக்கும் பொருள் புரிந்து தான் போடுகிறார்களா? அல்லது இவர்களும் காவி உடுத்தி பெயரின் முன் ஸ்ரீஸ்ரீஸ்ரீஸ்ரீஸ்ரீ ஜல்சானந்தா சுவாமிகள் என்று போடுவது போல கருப்பு சட்டையையும் "மானமிகு" அடைமொழியையும் பயன்படுத்துகிறார்களா என்று புரியவில்லை

தலைப்பு கடுமையாக இருக்கிறது என்று நினைத்தால் பார்பனீயத்தையும் வர்ணாசிரமத்தையும் எதிர்த்து திக வினர் வெளியிட்ட கட்டுரைகளின் தலைப்புகளின் கடுமையை பார்க்கும்போது இந்த தலைப்பெல்லாம் ஒன்றுமேயில்லை.

இணைப்புகள்

அப்பாடா! சுமை இறங்கியது!

இந்தச் சூழலில் அன்புராஜ் தான் உருவாக முடியும்!

சாமி,ரூசோ,தாகி மற்றும் பலர் திமுகவினரின் சகோதர படுகொலைகள்

சாமி,ரூசோ,தாகி,சீனி.பன்னீர்செல்வம் மற்றும் பல உட்கட்சி தகராறுகளில் கொல்லப்பட்ட திமுகவினர், யார் இவர்களெல்லாம்,இவர்களை கொன்றவர்கள் யார்? கொன்றது எந்த கட்சிகாரர்கள், எடுத்து பார்த்தால் திமுகவின் முக்கிய புள்ளிகளான அவர்களை வெட்டி யும், குத்தியும், சுட்டும் கொன்றதும் திமுக காரர்கள்தான்.

ஒரே நோக்கத்திற்காக போராடும் இரண்டு இயக்கங்கள் கருத்து வேறுபாட்டால் அடித்துக்கொண்டால் அது சகோதர மோதல்கள் சகோதர படுகொலைகள், அப்போது ஒரே இயக்கத்துக்குள் அவைகள் நடந்தால் அதன் பெயர் என்ன? திமுகவினரின் சகோதர படுகொலைகள் என்று சொல்வதா? திமுகவினரின் தற்கொலைகள் என்று சொல்வதா?

யாம் எந்த படுகொலைகளையும் நியாயப்படுத்தவோ, ஆதரிக்கவோ இல்லை, எல்லா படுகொலைகளும் கண்டிக்கத்தக்கவையே, எல்லா படுகொலைகளும் மனிதத்தன்மையற்றவையே...

மூச்சுக்கு முன்னூறு முறை தன்னுடைய இன துரோகத்தை மறைக்க கருணாநிதி பரப்புரை செய்யும் சகோதரபடுகொலைகள் என்றும் திசை மாற்றும் கருணாநிதி இந்த படுகொலைகளுக்கு என்ன பெயர் சொல்வார்?

திமுக ஒரு ஆயுதம் ஏந்தாத இயக்கம், அரசியல் கட்சி, இராணுவத்திடமிருந்தோ அரசிடமிருந்தோ எந்த உயிர் அச்சுறுத்தல்களும் இல்லாத இயக்கம், திமுகவினர் எந்த இராணுவத்தாலும், காவல்துறையாலும் பார்த்த இடத்திலே சுட்டுத்தள்ளப்படுவார்கள் என்ற நிலையில் இல்லாத ஒரு இயக்கம், அதன் தலைமையை பல நாடுகளின் உளவுத்துறையாலோ இராணுவத்தாலோ கொல்லப்படும் அபாயமில்லாத நிலை, தினம் தினம் சுற்றியிருப்பவர்களால் உயிராபத்து ஏற்படுமோ என்ற நிலை இல்லாத போதும் ஏன் இத்தனை படுகொலைகள் அதுவும் சொந்த கட்சிகாரர்களையே கொல்லும் படுகொலைகள், இதில் நாம் திமுகவினர் கொன்ற அதிமுக, மதிமுக மற்றும் பல மாற்று கட்சிகாரர்களை நாம் கணக்கில் எடுக்கவேயில்லை...

திருப்பத்தூர் அரசியலில் வளர்ந்து வந்த இளம்தலைமுறை ரூசோவை உட்கட்சி அரசியலுக்காக கொன்றவர்களை கட்சி தலைவர் கருணாநிதி என்ன செய்தார்?

தாகி கொலை வழக்கில் குற்றம்சாட்டப்பட்டவர்கள் விடுதலை செய்யப்பட்டுவிட்டார்கள், அப்போ தாகியை கொன்றது யார்? தாகி ஒரு வேளை தற்கொலை செய்து கொண்டாரா?

வைகோ, எம்ஜிஆர் மற்றும் பலர் தலைமையுடன் முரண்பட்ட போது கழுத்தை பிடித்து இயக்கத்தை விட்டு வெளியேற்றினாரே கருணாநிதி, ஒரு வேளை திமுக ஆயுதம் தாங்கி போராடும் இயக்கமாக இருந்திருந்தால்? இவர்கள் கதி? இவர்கள் வாய்வீச்சு அரசியல் செய்து கொண்டிருந்ததற்கு பதில் ஆயுத போராட்டம் செய்து கொண்டிருந்தவர்கள் என்றிருந்தால் என்ன ஆகி இருக்கும், இவர்கள் கையில் ஆயுதம் இருந்திருந்தால் என்ன நடந்திருக்கும் என்று கற்பனை செய்யலாம்...

ஆட்சியும் அதிகாரமும் ஊடகமும் கையில் இருக்கிறது என்பதற்காக தம் இனத்துரோகத்தை மறைக்க தம் பொய் பிரச்சாரத்தை அவிழ்த்து விட்டுக் கொண்டும் தம் துரோகத்தை மறைக்க தமிழ்செம்மொழி மாநாடு நடத்தவும் தலைப்பட்டிருக்கும் இவர்களை இன்னமுமா இனமான தமிழர்களும் மூளையுள்ள தொண்டர்களும் நம்புகிறார்கள்?

இந்த பதிவின் பின்னூட்டங்கள் கடும் மட்டுறுத்தலுக்குள்ளாகும், பதிவிற்கு தொடர்பில்லாத எந்த பின்னூட்டங்களும் அனுமதிக்கப்படாது

ஜெகத்கஸ்பர் அருட்தந்தையா? புளுகுமூட்டையா?

ஃபாதர் ஜெகத்கஸ்பர் அடிக்கடி சர்ச்சைக்குள்ளாகும் பெயர், நான்காம் ஈழத்தில் நான்காம் கட்டப்போர் உச்சத்தை எட்டியிருந்த போது தமிழகத்தில் தேர்தல் உச்சத்தில் இருந்தது, அந்த நேரத்தில் திமுக-காங்கிரஸ் கூட்டணி மீது மிக கடுமையாக விமர்சனம் எழுந்தது, திமுக-காங்கிரஸ் கூட்டணியின் தமிழின துரோகம் அக்கூட்டணிக்கு தேர்தல் தோல்வி ஏற்படுத்துமென்றே நம்பப்பட்டது.

அந்த நேரத்தில் ஃபாதர் ஜெகத்கஸ்பர்(கனிமொழி கருணாநிதி யின் நண்பர் மற்றும் திமுக ஆதரவாளர், ஜெயலலிதாவினால் புலி ஆதரவாளர் என விமர்சிக்கப்பட்டவர், ஜெயலலிதா ஆட்சி காலத்தில் கைது செய்யப்பட்டுவிடுவார் என்றே நம்பப்பட்ட ஒருவர்) ஈழப்போராட்டம் பற்றிய பதிவுகளை எழுத ஆரம்பித்தார்...

அவரோட பதிவுகள் எல்லாம் இயக்குனர் சங்கர் படங்களை போன்றே இருந்தன, பல உண்மைகளுக்கு இடையில் தம் பொய் பரப்புரைகளை புகுத்துவது, முதலில் இலை மறைவாக தமிழகத்தின் ஈழத்தமிழ் ஆதரவு தலைவர்களை(இவர்களை எல்லாம் யோக்கியம் என்று சொல்லவில்லை) விமர்சித்தார் அவரோட விமர்சனம் எல்லாமே கருணாநிதியையும் காங்கிரசையும் காப்பது போன்றே இருந்தது.

நக்கீரனில் ஒரு பதிவில் அப்போதைய மத்திய உள்துறை அமைச்சர் ப.சிதம்பரத்தை குறிப்பிட்டு இவர் போர் நிறுத்தத்திற்கு மிகவும் முயன்றதாகவும் கனிமொழி கண் உறங்காமல் பாடுபட்டதாகவும் எழுதினார், பாவம் நக்கீரன் லேஅவுட் மற்றும் ஃப்ரூப் ரீடர்கள் கண்ணில் அது படவில்லையோ என்னமோ, நக்கீரனின் வேறு கட்டுரைகளின் பக்கங்களில் வேட்டி கட்டிய உயர்ந்த பதவியில் இருக்கும் முக்கிய தமிழர் இன்னுமா முடிக்கலை, இன்னும் என்னவெல்லாம்தான் உதவி செய்வது என்று சிங்களனை திட்டிக்கொண்டே அந்த உயர்மட்ட கூட்டத்திற்கு கலந்து கொள்ள சென்றார் என்று எழுதியிருந்தார்கள், இதில் எது உண்மை?

போர் நிறுத்தத்திற்கு தமிழக காங்கிரஸ் பெரியமனிதர்(ப.சிதம்பரம்?) மற்றும் திமுக பெரிய இடத்து ஆட்கள் எல்லாம் உறங்காமல் முயன்று கொண்டிருந்த போது தமிழகத்தின் முக்கிய ஈழ ஆதரவு தலைவர்கள் இன்னமும் நிலமை மோசமாகட்டும் அப்போது தான் நாம் இங்கே தேர்தலில் வெற்றி பெறலாமென ஜெகத் கஸ்பர் காது பட பேசினார்களாம், கனிமொழியின் நண்பர், திமுகவின் ஜால்ரா ஜெகத் கஸ்பர் காதில் விழுமாறு பேசும் அளவிற்கு அந்த தலைவர்கள் கேணையர்களா? அவ்வளவு தூரம் சொல்பவர் ஏன் கிசு கிசு பாணியில் எழுத வேண்டும் பெயரை சொல்ல வேண்டியது தானே?

போர் முடிந்தும் இப்போதும் திமுகவிற்கும் காங்கிரசுக்கும் விழுந்த துரோக கறையை துடைக்க முடிந்த அளவிற்கு தம் பொய் மூட்டைகளை அவிழ்த்துவிட்டுக்கொண்டே இருக்கின்றார் அருட்தந்தை.

தற்போது ஒரு போராளி போன் செய்து சொன்னார் என்றும் பொய்யான நம்பிக்கையை தந்தார்கள் தமிழக தலைவர்கள் அதனால் தான் எல்லாம் போயிருச்சி என்றும் மீண்டும் ஒரு முறை இவர்கள் மீது விழுந்து பிடுங்கியுள்ளார் அருட்தந்தை? போயும் போயும் இந்த தலைவர்கள் தந்த கணிப்புகளை நம்பி செயல்படும் அளவிற்கு கேணத்தனமாகவா இருந்தார்கள் போராளிகள்? அருட்தந்தையின் புளுகுமூட்டைகளுக்கு அளவேயில்லையா?

ஈழத்தமிழர் விசயத்தில் இப்படித்தான் தமிழகத்தின் ஒவ்வொரு இயக்க ஆட்களும் தங்கள் தலைமைகளுக்கு சப்பைகட்டு கட்டிக்கொண்டுள்ளார்கள் தங்கள் தலைமைகளின் துரோகம் தெரிந்தும்.

ஈழத்தமிழர்கள் விசயத்தில் தமிழகத்தின் அத்தனை பேரும் துரோகம் செய்துள்ளார்கள், கட்சி தலைமைகளுக்கு அடிமைகளாய் அவர்களின் துரோகங்கள் தெரிந்திருந்தும் அதை சப்பைகட்டு கட்டும் காவல்நாய்களாய் இருக்கும் தொண்டர்கள், பணத்திற்காக தங்கள் வாக்குகளை விற்ற பொதுமக்கள் என அத்தனைபேருக்கும் பொறுப்பு உண்டு.

அருட்தந்தை ஜெகத்கஸ்பர் கனிமொழிக்கு கூஜா தூக்கட்டும், திமுகவுக்கு ஜால்ரா போடட்டும் ஏன் உடன்பிறப்பாக மாறி தலைவர் வாழ்க, தளபதி வாழ்க கோசமும் கூட போடட்டும் ஆனால் ஈழத்தமிழ் போராட்டத்தில் தம் ஈனத்தனத்தை காட்ட வேண்டாம்.

நக்கீரன் பத்திரிக்கைக்கு ஒரு நிகழ்வை சுட்டிக்காட்ட விரும்புகிறேன், நக்கீரனுக்கு முன்பு தராசு என்றொரு பத்திரிக்கை இருந்தது, ஷ்யாம் அதன் ஆசிரியர், தராசு பெரிய அளவில் விற்பனையில் இருந்தது, மிகப்பிரபலமான அரசியல் பத்திரிக்கை, அந்த பத்திரிக்கைக்கும் திமுக(மற்றும் அப்போதைய உள்துறை செயலாளர் நாகராஜன்)வுக்கும் பிரச்சினை எழுந்தது, பாக்சர் வடிவேலு தலைமையில் ரவுடி கும்பல் அந்த பத்திரிக்கையின் உள் புகுந்து அடித்து இருவரை கொலை செய்தனர்.

இதை சமாளிக்க ஜெயலலிதா ஆதரவுக்கு மாற துவங்கியது இந்த தராசு பத்திரிக்கை, கொஞ்சம் கொஞ்சமாக அதன் நடுநிலை குறைய ஆரம்பித்த போது நக்கீரன் களம் இறங்கி மொத்த தராசு வின் வியாபரத்தையும் எடுத்துக்கொண்டு மிகப்பிரபலமானது.

நக்கீரன் பத்திரிக்கைக்கும் ஜெயலலிதாவிற்கும் மிகப்பெரிய பிரச்சினைகள் நடந்துள்ளது, இன்னமும் இருக்கலாம், அதற்காக திமுக மற்றும் கருணாநிதியின் முழு ஜால்ராவாக மாற ஆரம்பிப்பது நக்கீரன் பத்திரிக்கையின் வியாபாரத்திற்கும் அதன் நடுநிலைக்கும் சரியானதாக இருக்காது. திமுக சார்புநிலை என்பதை தாண்டி திமுக ஜால்ரா என்ற நிலைக்கு நக்கீரன் சென்று கொண்டுள்ளது.

தற்போது அரசியல் பத்திரிக்கைகளே இல்லையென நினைக்க வேண்டாம் "தமிழக அரசியல்" என்றொரு பத்திரிக்கை தற்போது சர்க்குலேசனில் நல்ல முன்னேற்றம் கண்டுள்ளது, மேலும் உங்கள் மார்க்கெட் பலவீனப்படும் போது மற்றவர்கள் அந்த இடத்தை பிடிக்க கடும் முயற்சி செய்வார்கள்

ஜ்யோராம் = ரோசா = வன்முறையாளன் = ? = ? = ?

ரோசாவைப் பார் என்பார்
அவர் அடித்தார் என்பார்
அவர் குத்தினார் என்பார்
தெரியுதுபார் அவர் குத்தியது
மூக்கில் ஒழுகும் ரத்தத்திலென்பார்
அடித்தவர் நின்று அடித்தது
தானே என்றதால் ஆச்சி
இல்லையெனில்
அய்யகோ எப்படி நிரூபிப்பது?


மருமகன் டிவி வைத்திருந்தால்
அய்யோ கொல்றாங்க கொல்றாங்க
என்று படம் புடிச்சாவது நிரூபிக்கலாம்
போலி பிரச்சினையென்றால் கூட
அட்லீஸ்ட் ஸ்க்ரீன் ஷாட் சாட்சியாகும்
மூஞ்சியில் குத்தியவர் ஓடிப்போயிருந்தால்
மூஞ்சியில் குத்து வாங்கியதற்கு
உடைந்த மூக்கும்
மூக்கினில் ஒழுகும் ரத்தமுமே சாட்சியாம்

எத்தேச்சையானதா என்றால்
இது திட்டமிட்டதே என்பார்
அன்பாக பேசி அழைத்தார்
உணவில் விஷம் வைத்து கொல்லவே என்பார்
குடியில் அடித்துக்கொண்டதா என்றால்
நான் தான் நிறைய அவர் குடித்தது குறைவே என்பார்


ரோசாவின் பக்கமும் நியாயமிருக்குமே
குத்த தூண்டியதின் நியாமென்னவோ
என்றால்
அடுத்தவர் செயல்களை ஆராய
தன்னை மேல் நிலையில் நிறுத்தி
குத்தியதற்கு காரணம் வேண்டுமானால் இருக்கலாம்
ஆனால் நியாயங்கள் இருக்க முடியாது என
அவர்கள் என்னமோ கொலைக்கு
உடந்தை போல் என்று சிலர் அடையாளம்
சுட்டப் படுவர்

பின் நவீனச் சிந்தனையாளர்களாய் அறியப்படும்
சிலர் அடுத்தவன் பேங்க் கணக்கையும் பெட்ரூம் கணக்கையும்
சொல்வது வன்முறையில்லையா?

எழுத்தில் பெண்ணியம் பேசும் பலர்
தம் மனைவிகளையைக் கொலை செய்கின்றார்
மெதுவாக
எழுத்தில் அறம் குறித்துப் பேசுபவர் செயல்பாடுகளில்
அறமற்ற தன்மையே துறுத்தி நிற்கிறது பெரும்பாலும்

இதைப்பற்றி பேசினாலோ
எழுதினாலோ
சண்டைக்கு நிற்கிறான் பாரு
வேலையத்தவனுங்க என்கிறார்கள்

எல்லார்க்குள்ளும் கொஞ்சம் கொஞ்சம்
வன்முறையாளன் இருக்கிறான்

டைப்பர் போடாத என் பையன்
என் முதுகில் சூடாக மூச்சா போனதால்
போய் கழுவலாமா என நினைப்பதால்
பாதியில் நிற்கப் போகிறது
இந்த (இந்த வன்முறை) கவிதை

நண்பா ஜ்யோராம்,
காயங்கள் ஆறியிருக்குமென நம்புகிறேன், நலமடைந்திருப்பாய் சம்பவத்திற்கு பின் இரண்டு பதிவுகள் பார்த்தேன் உம் வலைப்பதிவில், இது ஒரு மொழிவிளையாட்டு, இது ஒரு கவிதை, ஒவ்வொரு மனிதனுக்குள்ளும் ஒரு வன்முறையாளன் இருக்கிறான் அவன் வாய்ப்பை பொறுத்து கொஞ்சமாகவோ அதிகமாகவோ வன்முறை செய்கிறான், அதை மொழிவிளையாட்டாக இதில் கூறியுள்ளேன், மற்றபடி யாரையும் நக்கல் செய்தோ கிண்டல் அடித்தோ அல்லது எந்த வன்முறையையும் ஆதரித்தோ இல்லை.... என் வாக்குமூலத்தை நம்பி இதை வெறும் கவிதையாகவோ அல்லது வெறும் மொழிவிளையாட்டாக மட்டும் எடுத்துக்கொண்டு இதை ரசிக்க உங்களால் முடிந்தால் சூப்பர் ஜ்யோராம்.... மிக்க நன்றி, உங்களை கை எடுத்து கும்பிடுகிறேன்.... இதற்கு மேல் இந்த பதிவை நீங்கள் படிக்க தேவையில்லை....

ஆனால் இதை படிக்கும்போதோ அல்லது அதற்கு நான் மொழிவிளையாட்டு எல்லோருக்குள்ளும் வன்முறையாளன் இருக்கிறான் என ஒரு வியாக்கியானம் செய்யும் போதோ என் மூஞ்சி மேல ஒரு அறைவிடனுமென்று தோன்றியிருந்தாலோ, சில பல கெட்ட வார்த்தைகளை உதிர்த்திருந்தாலோ, மயிரான் என் வலி தெரியுமாடா உனக்கு என்று நினைத்திருந்தாலோ, ஏன்டா பாடு என் மூஞ்சியில் குத்தியதில் உனக்கு மொழிவிளைட்டாடா என்றோ, உன் மூஞ்சியில் எவனாவது குத்தியிருந்தா தெரியும்டா நாயே உனக்கு அதனோட வலி என்றோ அல்லது ஒரு எரிச்சலாவது ஏற்பட்டிருந்தால்... மன்னிக்கவும் நண்பா உன்னை எரிச்சல் படுத்துவதற்கோ அல்லது வேறு எதற்குமோ நான் இதை எழுதவில்லை...

மற்றவர்களுக்கு ஒரு நிகழ்ச்சி நடைபெறும்போது நமக்கு அவர்கள் வலி புரிவதில்லை, அட புரியவில்லை என்றால் மூடிக்கொண்டாவது இருக்கலாம், ஆனால் நாமோ மூடிக்கொண்டும் இருப்பதில்லை, நாம் நம் முற்போக்குத்தனத்தையும் மேன்மையையோ, நம் நவீனத்துவத்தையோ அல்லது ஹா இதெல்லாம் ஒரு மேட்டரா என்றோ பல தத்துவ இசங்களை பேசிக்கொண்டே போகிறோம் அவர்களின் உணர்வுகளை மதிக்காமல், ஆனால் ஒரு நிகழ்ச்சி நமக்கே நடக்கும்போது நாம் பிறருக்கு சொல்லும் முற்போக்கு தன்மையையும், நவீனத்துவத்தையும் மற்ற பல எழவுகளையும் கடைபிடிப்பதில்லை....

போலி = மூர்த்தி = ? = ? = ? பதிவை உம் மொழிவிளையாட்டை படித்து பார்க்கவும், ஞாபகம் இருக்கா நண்பா அன்றே நாம் தொலைபேசியில் பேசிக்கொண்டோம் இது யாரையும் ஆதரித்து அல்ல, ஒவ்வொருவனுக்குள்ளும் ஒரு போலியிருக்கிறான் என்று சொன்னீர்கள், அதே போன்றே இன்று இதற்கு நானும் ஒவ்வொருவனுக்குள்ளும் ஒரு வன்முறையாளன் இருக்கிறான் என்ற விளக்கம் சொல்லும்போது நீங்கள் என்ன நினைத்துக்கொண்டீர்கள் என்று என்னிடம் சொல்லவெல்லாம் வேண்டாம்... அன்றைக்கு போலி பிரச்சினையில் பாதிக்கப்பட்டவர்கள் உணர்வுகளை கொஞ்சம் கூட புரிந்து கொள்ளாமல் அதை ஒரு கவிதையாக அணுக சொல்லியிருப்பீர்கள், நீங்கள் அடிபட்டதை எழுதிய பதிவில் ஒரு அனானி நகைச்சுவையாக எழுதியிருந்ததை உங்களால் நகைச்சுவையாக எடுக்க முடியவில்லையே... இன்று உங்களால் இதை ஒரு கவிதையாக மட்டுமே அணுக முடிந்ததா என்று உங்கள் மனசாட்சியிடம் மட்டும் கேட்டுக்கொள்ளவும், முன்பும் இதே போன்றே ஒரு பதிவு சுகுணாவுக்கு எழுதியது அந்த பதிவில் சில வரிகள் மீண்டும் இங்கே

அறிவுரை முற்போக்கு புரட்சி புண்ணாக்கு எல்லாம் மற்றவர்களுக்கு பேசும்போது நல்லா தான் இருக்கும், தமக்கும் அதே சூழல் வரும் போது எப்படியாக இருக்கும் என்பதற்கான ஒரு நிகழ்வு தான்...காத்திருந்து மாட்டுனியாடா மகனே என்று நேரம் கிடைக்கும் போதும் வாய்ப்பு கிடைக்கும் போது குத்தி காட்டுகிறாயா என்று கேட்பீர்களானால் ஆமாம் காத்திருந்து சரியான வாய்ப்பு கிடைக்கும் போது சொன்னால் தான் உணர்வு பூர்வமாக புரியும் இல்லையென்றால் அப்போதும் முற்போக்கு மூளைக்கு சரியாக புரியாது...

இந்த பதிவு விடயத்தை சுகுணா திவாகருக்கு ஜ்யோராமுக்கு மட்டும் தெரிவிக்க வேண்டுமெனில் சுகுணாவுக்கு ஜ்யோராமுக்கு ஒரு மின் மடலோ அவரின் கைபேசியில் அழைத்தோ சொல்லியிருப்பேன், ஆனா இது சுகுணாவுக்கு ஜ்யோராமுக்கு மட்டுமல்ல, இதே போன்று எண்ணமிருக்கும் சில முற்போக்குவாதிகளுக்கும் இந்த செய்தி போக வேண்டுமென்பதால் இது பதிவாகவே ஆனது.

நண்பா ஜ்யோராம் மேலேயிருக்கும் கவிதை(?) மொழிவிளையாட்டு என் நிலைப்பாட்டினை சொல்வதற்கில்லை, உம்மை வெறுப்பேற்ற வேண்டுமென்ற ஒற்றை காரணத்திற்காக தேடி தேடி எழுதியது, நடந்த துன்ப நிகழ்வின் தொடர்பான என் நிலைப்பாட்டிற்கும் அதில் உள்ள வரிகளுக்கும் துளிகூட தொடர்பில்லை.... நான் அந்த துன்ப நிகழ்வில் ரோசாவை நிச்சயமாக அவருக்கு எத்தனை காரணங்கள் இருந்தாலும் எத்தனை நியாயங்கள் இருந்தாலும் அடித்தது மிகத்தவறு அதை நான் ஆதரிக்கவில்லை...

முன்பே இது தயாராகிவிட்டாலும் கொஞ்சம் நாளாவது ஆகட்டுமென காத்திருந்து இப்போது தான் பதிவிடுகிறேன்...

அழகிய தமிழ் பெயர் பெண் குழந்தைக்கு சூட்ட பரிந்துரையுங்கள்

கடந்த சில ஆண்டுகளுக்கு முன் தூய தமிழ் பெயரை குழந்தைகளுக்கு வைப்பது என் வட்டாரங்களில் எனக்கு அறிமுகமான இடங்களில் மிக குறைவாக (கிட்டத்தட்ட இல்லையென்றே சொல்லலாம்) முதலில் என் கல்லூரி நண்பர்கள் அவர்களின் குழந்தைகளுக்கு தூய தமிழ்பெயர்கள் வைக்க ஆரம்பித்தனர், அதன் பின் நானும் என்னை தொடர்ந்து என் சகோதரியும் என இப்படியாக தூய தமிழ்பெயர் வைப்பது என் வட்டத்தில் தற்போது அதிகரித்துள்ளது, தொடர்ச்சியாக பலரிடமும் தூய தமிழ்பெயர் வைப்பதின் அவசியத்தை எடுத்து கூறிக்கொண்டுள்ளோம்...

ஆனால் சிறந்த தூய புதுமையான தமிழ்பெயர்கள் கிடைப்பது அரிதாகவே உள்ளது, தமிழ்பெயர் புத்தகங்கள் எல்லாம் பெரும்பாலும் வடமொழி பெயர்களையே கொண்டுள்ளன...

என் மகனிற்கு தூய தமிழ்பெயர் சூட்ட பெயர்களை தேடினோம், இலக்கிய பாடல்களிலிருந்தெல்லாம் தேடினோம், என் நண்பனின் மகனுக்கும் இப்படியே தேடி பதிவில் இட்டோம், பல நல்ல பெயர்கள் பரிந்துரைக்கப்பட்டன.

என் நண்பரின் பெண் குழந்தைக்கு சூட்ட ஒரு தூய தமிழ்பெயர் தேவைப்படுகிறது, தூய தமிழ்பெயர்களை தெரிவித்து உதவுங்கள்...

Mustafa Warehouse sale Singapore

சிங்கப்பூர் முஸ்தபா நிறுவனத்தின் Warehouse sale அக்டோபர் 8 முதல் 11
வரை

பயணப்பெட்டிகள், மற்றும் LCD TV போன்றவைகள் விலை சற்று குறைவாக உள்ளன, அல்ஜூனைட் MRT யில் இருந்து பேருந்து எண் 100 எடுக்கவும்...

மேலும் தகவல்களுக்கு இங்கே சொடுக்கவும்

மகஇக ஏஜென்ட் மருதையன் எத்தனை முறை சிறை சென்றிருக்கிறார்?

மகஇக பொதுத்தளத்தில் யாருக்கும் தெரியுமோ என்னமோ ஆனால் இணையத்தில் வாய்கிழிய பேசும் இயக்கம், பெரியார் திக காரர்கள் மகஇக வோடு சோடி போட்டுக்கொண்டு சுற்றினார்கள், மகஇகவின் பார்ப்பன தலைமை சாயம் வெளுத்ததோ என்னமோ இப்போது முறைத்துக்கொண்டு திரிகின்றார்கள்...

எல்லோரையும் நோண்டு நொங்கெடுக்கும் புனித(?!)மான மகஇக வின் நிரந்தர பொதுச்செயலாளர் மருதையன் அவர்களின் மீது ஒரு சந்தேகம், எந்த மகஇக தோழர்களாவது தீர்த்துவைத்தால் தன்யனாவேன்...

சாதாரண பத்திரிக்கையாளர் நக்கீரன் கோபால் அவரில் ஆரம்பித்து நெடுமாறன், வைகோ, சுப.வீ, கொளத்தூர் மணி என்று நீளுகிற பட்டியல் தமிழர் விடுதலைப்படை மாறன், தமிழர் மீட்சிப்படை முத்துக்குமார் என பெரும் பட்டியல்... அடடே இதென்ன பட்டியல் என்கிறீர்களா? ஆம் இவர்களெல்லாம் பொதுவாழ்வில் அது பத்திரிக்கையாகவோ, அரசியலாகவோ, ஆயுதப்போராட்டமாகவோ என அரசையும் அதிகாரத்தையும் ஏதோ ஒரு காலகட்டத்தில் ஏதோ ஒரு காரணத்திற்காக எதிர்த்து போராடியவர்கள் (உடனே மகஇக தோழர்கள் இவன் இது செய்தான் அவன் அது செய்தான் என்றெல்லாம் பட்டியல் போடவேண்டாம், இவர்கள் அனைவரும் நான் புனிதர்கள் என்று சொல்லவில்லை), இதற்காக இவர்கள் மீது தடா பொடா என ஏகப்பட்ட வழக்குகள், அந்த வழக்குகளுக்காக மாதக்கணக்கில் ஆண்டுக்கணக்கில் சிறையினுள் இருந்தவர்கள்... இன்னமும் ஏகப்பட்ட வழக்குகள் இவர்கள் மீது உள்ளன...

எதற்கெடுத்தாலும் நாங்கள் தான் காவல்துறையின் கடும் அடுக்குமுறையை சந்திக்கிறோம் என்று காவல்துறை தங்களின் க(ன்)ணை தங்கள் பிடறியின் மீது வைத்திருப்பதாக பீலா விட்டுக்கொண்டிருக்கும் மகஇக (இங்கே குறிப்பது மகஇக வின் அடிமட்ட தொண்டர்களையோ அல்லது இடை மட்ட பொறுப்பாளர்களையோ அல்ல அவர்கள் பாவம் பலியாடுகள், மகஇக வின் தலைமையை குறிப்பிடுகிறேன்)

நான் மேலே குறிப்பிட்டவர்களை போல ஏதேனும் மகஇக மருதையன் மீது அரசாங்கத்திற்கு எதிராக போராடி அதனால் சிறைக்குள் மாதக்கணக்கில் ஆண்டுகணக்கில் இருந்திருக்கிறாரா?

1.தோழர் மருதையன் எத்தனை முறை சிறை சென்றுள்ளார்?( ரிலையன்ஸ் போராட்டத்தில் மதியம் அரெஸ்ட் ஆகி மாலை ரிலீஸ் ஆன கதை போன்றல்ல)

2. மருதையன் மீது என்னென வழக்குகள் நீதிமன்றத்தில் உள்ளன?

3. தடா, பொடா, குண்டாஸ், மிசா என்ற வழக்குகள் ஏதேனும் அவர் மீது இருந்தனவா? அல்லது இருக்கின்றனவா? அப்படியெனில் எத்தனை மாதம் உள்ளே இருந்தார்?

4. மகஇக அடிமட்ட தொண்டர்களையே போலிஸ் ஜட்டியோடு அடிப்பதாக பீலா விடும் மகஇக வினர் மருதையன் அது மாதிரி எத்தனை முறை பரேடு வாங்கியிருக்கிறார்?

இந்த கேள்வியை சுத்தி சுத்தி சிலரிடம் விசாரித்தேன்... ம் பதில் கிடைக்கவில்லை, அது தான் இப்போது பதிவில் கேட்கிறேன்... ஒரு வேளை மருதையன் மீது பெரிய வழக்குகள் ஏதுமில்லை, உள்ளேயெல்லாம் போனதில்லை, ஜட்டியோடு அடிவாங்குவதெல்லாம் மகஇக தொண்டர்கள் மட்டும் தானென்றால் மருதையனின் புரட்சி யாரின் தயவில் நடக்கிறது என்பதை புரிந்து கொள்ளலாம்...

செந்தில்நாதனுக்காக பிரார்த்தியுங்கள் - இன்று VAD fixing அறுவை சிகிச்சை

செந்தில்நாதன் என்னும் சிங்கைநாதனுக்கு இன்று சிங்கப்பூர் நேரம் காலை 8:00 மணிக்கு முதல்கட்டமான VAD fixing அறுவை சிகிச்சை நடைபெற ஆரம்பித்துள்ளது... நேற்று செந்தில்நாதனை சந்தித்தப்போது மிகுந்த நம்பிக்கையுடன் தெளிவாக இருந்தார், 2 வாரங்களுக்கு முன் சந்தித்தபோது இருந்ததை விட தெளிவுடனும் நம்பிக்கையுடனும் இருந்தார்...

இந்த அறுவை சிகிச்சை 8 மணி நேரம் நடைபெறும், செந்தில்நாதன் எப்போதும் எங்களிடம் கேட்டுக்கொள்வது பிரார்த்தனை செய்யுங்கள் என்று... செந்தில்நாதனுக்கு நடைபெறும் இந்த அறுவை சிகிச்சை வெற்றியடைந்து நல்லபடியாக வீடு திரும்ப அனைவரும் செந்தில்நாதனுக்காக பிரார்த்தியுங்கள்...