கருத்துகளம் - விதிமுறைகள்

விடாதுகருப்புவிற்கு இந்த பதிவில் நான் தெரிவித்த கண்டனமும் அதை தொடர்ந்து அசுரன் எழுதிய பதிவில் நான் அளித்த பின்னூட்டம் இங்கே பதிவாக.

கருத்துகளம் என்பது போர்களமல்ல எதிராளிக்கு வலிக்க வேண்டுமென்பதற்கோ எதிராளி சாக வேண்டுமென்பதற்கோ, உமது வெற்றி எதிராளிக்கு வலிப்பதில் இல்லை, உமது வெற்றி எதிராளி உன் கருத்தை ஏற்பதில் தான் உள்ளது, உன் பக்க நியாயங்களை எதிராளியை யோசிக்க வைப்பதில் தான் உள்ளது என்பதில் நான் உறுதியாக உள்ளேன் (எல்லாவற்றையும் போல இதிலும் சில விதிவிலக்குகள் உண்டு)

பண்பற்ற, கேவலமான கெட்ட வார்த்தைகள் கண்டிப்பாக எந்த நியாயத்தையும் யாருக்கும் எடுத்து செல்லாது, அவைகள் காயத்தை மட்டுமே உண்டாக்கும், வலியை மட்டுமே உண்டாக்கும், அது அந்த வார்த்தையை பிரயோகித்தவரின் தோல்விதான், நிச்சயமாக எனக்கு அதில் உடன்பாடில்லை அதனால் தான் எனது கண்டனத்தை விடாது கறுப்புவிற்கு தெரிவித்தேன்.

இது ஒரு விதமான விளையாட்டு, இங்கே விளையாட்டின் விதிகள் வினோதமானது, நேரடியாக இந்த அனானி நீங்களா அந்த பெயரில் எழுதுபவர் நீங்களா என்று கேட்பதுமா பெரும் பாவம், ஆனால் அதையே நேரடியாக சொல்லாமல் சுச்சு என்ற பெயரில் உள்ள பின்னூட்டத்தை படித்தால் உங்கள் ஞாபகம் வருகிறதே என்றும் உங்களை பார்த்தால் அவரை பார்க்க வேண்டாம், அவரை பார்த்தால் உங்களை பார்க்க வேண்டாம் என நேரடியாக இல்லாமல் மறைமுகமாக அதையே கேட்கலாம் இது ஆட்ட விதிகளுக்குட்பட்டது, நேரடியாக கேட்பது ஆட்டவிதிகளுக்கு முரணானது.

நக்கல் நையாண்டி எனவும் பெயரை குறிப்பிடாமல் லேசாக எழுத்துகளை மாற்றி எழுதலாம் அதெல்லாம் அங்கத்தில் வந்துவிடும், அதையே நேரடியாக பெயர் கூறி எழுதினால் ஆட்டவிதிகளுக்கு முரண், இது மாதிரியான ஒரு வினோதமான விதிமுறைகள் உள்ள ஆட்டகளம் இது. ஏனெனில் முதலில் ஆட ஆரம்பித்தவர்கள் உருவாக்கிய விதிகள் இவை.

பண்பற்ற வார்த்தை பிரயோகங்கள் பிரயோகிப்பவருக்கு மட்டுமல்லாமல் யார் மேல் அது பிரயோகிக்கப்பட்டதோ அவர்களை நியாயமான காரணங்களால் எதிர்ப்பவர்களுக்கும் சேர்த்தே அளவற்ற சேதத்தை உருவாக்குகின்றது, அது மட்டுமல்லாமல் எதிரில் வார்த்தைகளால் தாக்கப்படுபவர்களுக்கு இது மாபெரும் வெற்றியாகவும் அமைகிறது, இதனை தொடர்ந்து நடைபெறும் விடயம் தான் மிக முக்கியமானது, இந்த பண்பற்ற வார்த்தைகளை யாருக்கு எதிராக பயன்படுத்துகின்றார்களோ அவர்கள் புனிதர்கள் ஆகின்றனர், மேலும் அவர்கள் அப்படி திட்டு வாங்கியதாலேயே பரிதாபத்திற்குறியவர்களாகவும் அவர்களது கருத்துகளை எதிர்ப்பவர்கள் அயோக்கியர்கள் போலவுமான சித்தரிப்பும் விழுகின்றது.


இங்கே நிதானம் மிக முக்கியம், அதுவும் வெகுசன ஊடகம் உருவாக்கி வைத்திருக்கும் பிம்பங்களை (உதாரணம் சாதிக்கட்சிகள் மோசமானவை, சாதியில்லை என்கிறீர் ஆனால் சாதி ரீதியானா இடஒதுக்கீடு தேவை, அரசியல்வாதிகளே சாதிக்கு காரணம், சாதிபற்றி பொதுவில் பேசுவதே பாவம், திராவிடம், etc...) உடைக்க முயலும் போது அது அத்தனை சுலபமானது அல்ல, ஊடகங்கள் உருவாக்கி வைத்திருக்கும் பொது மதிப்பீட்டிற்கு எதிரான நிலை எடுத்து பேசும்போது வார்த்தைகளில் கூடுதல் கவனம் தேவை, ஏனெனில் ஏற்கனவே பொதுமதிப்பீட்டில் தவறாக எடுத்துவைக்கப்பட்டுள்ள விடயத்தை பேசும்போது அது சென்று செல்ல வேண்டிய ஆட்கள்(targetted audience) யாரெனில் அது நடுநிலையாட்கள், இவர்களுக்கு மாற்று கருத்துகள் வெகுசன ஊடகங்களினால் எடுத்து வைக்கப்பட்டதில்லை, அப்படி செல்லும்போது விழும் வார்த்தை பிழறல்களினால் சொல்ல வந்தது targetted audineceஐ சென்று சேராமலே போய் விடும், targetted audience கண்டிப்பாக நடுநிலை போர்வையில் உள்ளவர்கள் அல்ல.

திட்டு வாங்கியவர்கள் அதற்கு கண்டனம் தெரிவிக்கும் சாக்கில்(கண்டனம் தெரிவிப்பது நிச்சயம் தவறில்லை) போகிற போக்கில் மற்றவர்களையும் சேர்த்தே கத்தியால் சொருகி விட்டு செல்வார்கள், அவர்களுக்கான தேவையும் அது தான், ஏனெனில் பண்பற்ற வார்த்தைகளில் திட்டுபவர்கள் அதற்கான விலையை தருவார்கள் என்பது அனைவரும் அறிந்ததே, அதன் பிறகு அவர்களின் ஆக்கங்களுக்கு கிடைக்கும் மரியாதையும் மதிப்பும் எத்தனை குறைவாக இருக்கும் என்பதும் தெரிந்ததே, ஆனாலும் இந்த வாய்ப்பை பயன்படுத்தினால் தான் போகிற போக்கில் மற்றவர்களை சொருக முடியும், நேரடியாக சொல்லாமல் மறைமுகமாக சிலரின் மீது, சில குழுவின் மீது, சில பிம்பங்களை உருவாக்க முடியும், இதன் மூலம் மாற்று கருத்துகளை எடுத்து செல்பவர்களை பொது நீரோட்டத்திலிருந்து விலக்கி வைக்கமுடியும், பொதுவாக ஒரு சாதியை கெட்ட வார்த்தைகள் திட்டினால் ஆட்டவிதிகளுக்கு முரண் என கண்டிக்கும் நம்மால் இப்படியெல்லாம் பண்பற்ற வார்த்தைகள் பேசுவதற்கு காரணமே திரா'விட'ம் என்று பொதுவாக பேசுவதை கண்டிக்க இயலாது ஏனெனில் இது ஆட்டவிதிகளுக்குட்பட்டது, அங்கேயும் பொதுமை படுத்தல், இங்கேயும் பொதுமை படுத்தல் தான், ஒரே வேறு பாடு அங்கே பண்பற்ற வார்த்தை, இங்கே நாகரீக நஞ்சில் தோய்த்த வார்த்தைகள்.


இந்த சூழ்நிலையில் ஒரு சிலர் மாற்று கருத்துகளை முன்னெடுத்து செல்லும் போது மிக கவனமாக இருக்க வேண்டும், ஏனெனில் ஒவ்வொன்றும் திரிக்கப்படும், அய்யோ என ஓலமிடப்படும் முத்து தமிழினி வார்த்தைகளில் சொல்வதென்றால் கீழே விழுந்து கை கால்களை உதைத்துக்கொண்டு அழுவார்கள், அதை சட்டென்று பார்க்கும் போது என்னமோ அவர்கள் பாதிக்கப்பட்டது போன்றதாகவுமான ஒரு படக்காட்சி உருவாக்க முயலுவார்கள், ஆனால் அந்த நேரத்தில் தேவை பொறுமை, கொஞ்சம் பொறுமையாக இருக்கும் பட்சத்தில் கடுமையான எதிர்வினை ஆற்றாமல் இருந்தால் அவர்களின் நடுநிலைமை பல்லிளிக்கும் ஆனால் அதற்கு சற்று காலம் பிடிக்கும் மேலும் இப்படியான முன்னெடுப்பாளர்களின் ஒரு ஒரு வார்த்தையும் ஆராயப்படும், ஆதலால் மிக கவனமாக இருத்தல் வேண்டும், ஏனெனில் பலரும் காத்திருப்பது இந்த முன்னெடுப்பாளர்களை போட்டு தள்ள, இதில் மிகவும் சிக்கலானதே நடுநிலை போர்வையில் இருப்பவர்களால் தான் ஆணாதிக்க சமுதாயத்தில் ஆணாதிக்கத்திலிருந்து தம்மை முற்றிலும் விடுவித்துக்கொள்ள முயல்பவர்கள் ஆனாலும் ஏதோ ஒரு இடத்தில் எத்தேச்சையாக வந்து விழும் "மீசை வைச்ச ஆம்பிளை யாரும் எதிர்க்கவில்லை" என்ற வார்த்தையை நடுநிலையாளர் சுட்டிக்காட்டி திருத்திக்கொள்ள கூட அவகாசம் அளிக்கப்படாமல் அதை ஆணாதிக்க வெறியாக சித்தரித்து அதை தொடர்ந்து பல திரிப்புகள் புனைவுகள் செய்து கை கால் உதைத்து கொண்டு ஆர்பாட்டம் செய்யும் போது கண்டிப்பாக அது அந்த வார்த்தைகளுக்கு அல்ல அது வேறு முன்னெடுப்புகளுக்கு போட முனையும் தடை என்பது புலனாகும். ஆனால் அது எல்லோருக்கும் புலப்பட நேரமெடுக்கும் அது வரை ஆட்டவிதிகளுக்குட்பட்டு பொறுமை காக்க வேண்டும், இதில் மாபெரும் வேடிக்கையென்னவென்றால் சிலரின் மடியிலிருந்த பூனைக்குட்டிகள் வெளியே வந்து அவர்களின் நடுநிலை பல்லிளிப்பது தான், மடியில் உள்ள பூனைக்குட்டி நிச்சயம் ஒரு நாள் வெளிவரும் அது வரை இந்த ஆட்டத்தில் பொறுமைதான் ஒரே விதி ஏற்கனவே சிலரின் மடியிலிருந்த பூனைக்குட்டிகள் வெளியில் குதித்தபோது எனக்கு அதிர்ச்சியாக இருந்தது, ஆனால் இப்போது இல்லை, இனி எங்கிருந்தாவது பூனைக்குட்டி குதித்தாலும் பெரிய அதிர்ச்சியெல்லாம் இருக்காது, ஒரு சிறிய வியப்பு மட்டுமே தோன்றும்.

உலகக்கால்பந்து கோப்பைக்கான இறுதி ஆட்டத்தில் முக்கிய வீரர் ஆட்டத்தின் முக்கியமான நேரத்தில் ஜிடேன் திடீரென எதிரணியினரை முட்டி மோதினார், விளைவு சிவப்பட்டை வாங்கி வெளியேறினார், முட்டுவதற்கு காரணம் ஜிடேனை இழிவுபடுத்தும் வார்த்தைகள் பேசியது, ஜிடேன் முட்ட வேண்டுமென்று பேசியது தான் அது ஆனாலும் கால்பந்து விதிகளின் படி முட்டியது மட்டுமே விதிகளுக்கு முரணானது ஜிடேனை கோப மூட்டி முட்டு வாங்கியதால் வென்றது யார்? இதற்காகத்தானே ஜிடேனை கோபமூட்டியது, முட்டுவதற்கு காரணங்கள் இருந்தாலும் முட்டியதால் ஜிடேனுக்கா வெற்றி? இல்லையே, அய்யோக்கியத்தனம் செய்து முட்டு வாங்கியவர்கள் வெற்றிகளிப்பில், அதே ஜிடேன் விதிகளின் படி அமைதியாக இருந்திருந்தால் வெற்றி பறிபோயிருக்காதே, இது தான் நேர்மையான ஆட்டத்தையும் தாண்டிய மொள்ளமாறித்தனம்.

உறுதிப்படாத ஒரு விடயத்தை வாதத்தில் வைப்பதையும் பெரும்பாலும் தவிர்ப்பேன், அப்படி ஒரு தகவலை வைக்கும் போது உதாரணமாக ஒருவரை பார்த்து நீங்கள் தான் இந்த பெயரில் பின்னூட்டமிடுகிறீர் என்று நான் கருதுகிறேன் என சந்தேகப்பட்டால் கூட போதும் மற்ற அனைத்து விவாதங்களும், கருத்துகளும், தவறுகளும் மறைக்கப்பட்டு இது மிகப்பெரிதாக பேசப்படும், எல்லா படங்களும் காட்சிகளும் அரங்கேறும், பிறகு மற்றவை எல்லாம் மறைக்கப்பட்டு இது மட்டுமே நிற்கும், ஆனாலும் பொதுமையில் இதை கவனித்துக்கொண்டிருப்பவர்களுக்கு இந்த போலித்தனம் பல நேரங்களில் புரிவதில்லை, இந்த விடயத்தில் என் குரு சிம்ரன், அவரின் தங்கை மோனல் தற்கொலை செய்து கொண்ட போது அந்த தற்கொலையின் பின்னுள்ள நடன இயக்குனர், அவரின் தங்கை, மோனலின் காதலன், இதில் நடிக மும்தாஜின் பங்கு என பேட்டியில் பேசிய சிம்ரன் ஒரே ஒரு குற்றச்சாட்டாக மும்தாஜ் ஐம்பதாயிரம் ரூபாய் பணத்தை மோனலின் வீட்டிலிருந்து திருடியதாக கூறிவிட்டார், மற்ற அனைத்தையும் விட்டுவிட்டு மிக அதிகமாக ஊடகங்களும் மும்தாஜீம் மற்றவர்களும் பேசியது ஐம்பதாயிரம் ரூபாய் விடயத்தை தான், இலட்சம் இலட்சமாக சம்பாதிக்கும் மும்தாஜ் இதை செய்திருப்பாரா என்பதில் ஆரம்பித்து அத்தனை கவனமும் இதிலே தான் இருந்தது, இதில் சிம்ரன் அம்பலப்படுத்திய மற்ற அனைத்தும் மறைந்து விட்டன, ஏனெனில் ஆட்டவிதி அப்படி.

மற்றவர் மனம் புண்படாமலெல்லாம் எதையும் எழுத முடியாது உடைக்க முடியாது, இந்து மத மூடப்பழக்கங்களை இந்து மதத்தினர் புண்படுவார்கள் என பேசாமல் இருக்க முடியாது, இசுலாமிய அடிப்படை வாதத்தை அவர்கள் மனம் புண்படுமென எழுதாமல் இருக்க முடியாது, நடிகர்களின் ரசிகர்களின் கோமாளித்தனத்தையும், அரசியல் தலைவர்கள். தொண்டர்களின் கோமாளித்தனத்தையும் மனம் புண்பட்டுவிடும் என பேசாமல் இருக்க முடியது, ஆனால் விமர்சனங்கள் கண்டிப்பாக கேவலமான வார்த்தைகளில் இருக்க கூடாது என்பது என் எண்ணம், விமர்சனத்திற்கும் காழ்ப்புணர்ச்சிக்கும் வித்தியாசம் இருக்கிறது, நல்ல வார்த்தைகளில் காழ்ப்புணர்ச்சியை துப்பினாலும் எதிர்ப்பை பதிவு செய்துவிட்டு செல்ல வேண்டும், எல்லாருடைய எழுத்துகளும் நிலைப்பாடுகளும் மற்றவர்களால் தொடர்ந்து கவனித்து கொண்டுதான் இருக்கின்றார்கள், எத்தனை போலித்தனத்தையும் அவர்களால் உடனே கண்டுபிடிக்க முடியவில்லையென்றாலும் நாளாக நாளாக அவர்களால் கண்டுபிடிக்க முடியும் அப்போது சாயம் வெளுக்கும் அதுவரை முடிந்த அளவிற்கு அவர்களை அம்பலப்படுத்திக் கொண்டிருந்தாலே போதும்.

எல்லா மனிதர்களுக்கும் பிரேக்கிங் பாயின்ட் என்று ஒன்று உண்டு சிலருக்கு அது உடனே இருக்கும் சிலருக்கு கொஞ்சம் நேரம்பிடிக்கும்.

பண்பற்ற வார்த்தைகளினால் அவர்களுக்கு மட்டுமல்லாமல் எத்தனை சேதத்தை கருத்து தளத்தில் அவர்கள் விளைவிக்கின்றார்கள் என்பதை விளக்க கிடைத்த சந்தர்ப்பமாக இதை எடுத்துக்கொள்கின்றேன்.

26 பின்னூட்டங்கள்:

அசுரன் said...

குழலியின் பின்னூட்டத்தை வரவேற்று. எனது பதிவில் நான் இட்ட பின்னூட்டங்கள்.

+++++++++++++++++++++

குழலி,

உங்களுட்ன் முழுமையாக ஒத்துப் போகிறேன். இதுதான் விடாது கறுப்பின் மீதான எனது விமர்சனமும் கூட.

இதைத்தான் சமீப காலங்களில், ஆளும் தத்துவம் அவல குரலெழுப்பி தனது வெற்றியை உறுதிபடுத்திக் கொள்ள முயல்கிறது, எச்சரிக்கை என்று பல பின்னூட்டங்களில் குறிப்பிட்டிருந்தேன்.

நீங்களே சொல்லுவது போல் ஆட்டத்தின் விதிகள் இரு புறமும் கூர்மையான கத்திதான். மிக மிக ஆபத்தான கட்டம்தான். சரியாக கையாள வேண்டும்தான்.

பொறுமை மிக மிக அவசியம்.

ஆனால் தங்கள்(தங்கள் மீது மட்டுமல்ல) மீதான விமர்சனம் என்னவென்றால். இதை நீங்கள் ஏன் விடாது கறுப்பிடம் முன்பே சொல்லி அவரது அணுகுமுறையின் ஆபத்தை புரியவைக்க முயற்சி எடுக்கவில்லை (அப்படி எடுத்திருந்தால் என்னை மீண்டும் மன்னிக்கவும்).

நான் வலைப்பூ உலகிற்க்கு புதிது. நிதானமாக இந்த விசயங்களைப் பற்றி அவரிடம் பேசலாம் என்றிருந்தேன்.

இது பற்றி இனி முடிவெடுக்க வேண்டியது விடாது கறுப்புதான்.

குழலி தங்களது அக்கறையான பொறுமையான அணுகுமுறைக்கு தங்களை வாழ்த்துகிறேன்.

தங்களது ஆழமான இந்த பின்னுட்டத்திற்க்கு மிக்க நன்றி.

வேறு விசயங்கள் இருந்தால் தனிமடலில் தெரிவிக்கவும்.

asuran@inbox.com

இந்த பதிவு பற்றிய எனது கருத்து இதுதான். விடாது கறுப்பு மீது முத்திரை குத்தும் முயற்சியை முறியடிப்பது. அதன் மூலமாக ஒட்டு மொத்தமாக பார்ப்பனிய எதிர்ப்பின் மீதும் முத்திரை குத்தும் முயற்சியை முறியடிப்பது. தற்பொழுத் அந்த எனது பதிவு நல்ல விளைவுகளை உள்ளடக்கியுள்ளதா? பாதகமான விளைவுகளை உள்ளடக்கியுள்ளதா? என்று தெரியவில்லை.

நன்றி,
அசுரன்

அசுரன் said...

//பண்பற்ற வார்த்தை பிரயோகங்கள் பிரயோகிப்பவருக்கு மட்டுமல்லாமல் யார் மேல் அது பிரயோகிக்கப்பட்டதோ அவர்களை நியாயமான காரணங்களால் எதிர்ப்பவர்களுக்கும் சேர்த்தே

அளவற்ற சேதத்தை உருவாக்குகின்றது, அது மட்டுமல்லாமல் எதிரில் வார்த்தைகளால் தாக்கப்படுபவர்களுக்கு இது மாபெரும் வெற்றியாகவும் அமைகிறது, இதனை தொடர்ந்து

நடைபெறும் விடயம் தான் மிக முக்கியமானது, இந்த பண்பற்ற வார்த்தைகளை யாருக்கு எதிராக பயன்படுத்துகின்றார்களோ அவர்கள் புனிதர்கள் ஆகின்றனர், மேலும் அவர்கள் அப்படி

திட்டு வாங்கியதாலேயே பரிதாபத்திற்குறியவர்களாகவும் அவர்களது கருத்துகளை எதிர்ப்பவர்கள் அயோக்கியர்கள் போலவுமான சித்தரிப்பும் விழுகின்றது.


இங்கே நிதானம் மிக முக்கியம், அதுவும் வெகுசன ஊடகம் உருவாக்கி வைத்திருக்கும் பிம்பங்களை (உதாரணம் சாதிக்கட்சிகள் மோசமானவை, சாதியில்லை என்கிறீர் ஆனால் சாதி

ரீதியானா இடஒதுக்கீடு தேவை, அரசியல்வாதிகளே சாதிக்கு காரணம், சாதிபற்றி பொதுவில் பேசுவதே பாவம், திராவிடம், etc...) உடைக்க முயலும் போது அது அத்தனை சுலபமானது //

குழலியின் இந்த வரிகள் தான் நாம் கவனத்தில் கொள்ள வேண்டிய மிக முக்கியமான் விமர்சனம்

நாமக்கல் சிபி said...

//மற்றவர் மனம் புண்படாமலெல்லாம் எதையும் எழுத முடியாது உடைக்க முடியாது, இந்து மத மூடப்பழக்கங்களை இந்து மதத்தினர் புண்படுவார்கள் என பேசாமல் இருக்க முடியாது, இசுலாமிய அடிப்படை வாதத்தை அவர்கள் மனம் புண்படுமென எழுதாமல் இருக்க முடியாது, நடிகர்களின் ரசிகர்களின் கோமாளித்தனத்தையும், அரசியல் தலைவர்கள். தொண்டர்களின் கோமாளித்தனத்தையும் மனம் புண்பட்டுவிடும் என பேசாமல் இருக்க முடியது, ஆனால் விமர்சனங்கள் கண்டிப்பாக கேவலமான வார்த்தைகளில் இருக்க கூடாது என்பது என் எண்ணம், விமர்சனத்திற்கும் காழ்ப்புணர்ச்சிக்கும் வித்தியாசம் இருக்கிறது//

அருமையான வரிகள்.

மாயவரத்தான் said...

யப்பா... இப்பவே கண்ண கட்டுதே!

-L-L-D-a-s-u said...

நல்ல்ல்லப் பதிவு ..

-L-L-D-a-s-u said...

நல்ல்ல்லப் பதிவு ..(உள், வெளி குத்துகளோடு)

நாகை சிவா said...

அழமான கருத்துகளை மிக அருமையாக கூறி உள்ளீர்கள் குழலி. ஜிடேனன் உதாரணம் மிக சரியான உண்மை.

//மற்றவர் மனம் புண்படாமலெல்லாம் எதையும் எழுத முடியாது உடைக்க முடியாது,//
//விமர்சனத்திற்கும் காழ்ப்புணர்ச்சிக்கும் வித்தியாசம் இருக்கிறது//
சரியான கருத்து தான். அதற்காக ஒரு கருத்தை கூறும் போது பொதுவாக அனைவரையும் குறிப்பது போல் எழுதுவதை தவிர்க்க வேண்டும்.(சில, பல என்ற வார்த்தைகளை குறிப்பிட்டாலே இதை தவிர்த்து விடலாம்)

Pot"tea" kadai said...

உணர்வுகளே வார்த்தைக் கழிவுகளாய் வெளியேறுகிறதென்றாலும் வார்த்தைகளை நிதானமாக விட வேண்டும் என்று உணர வைத்தது. வாழ்க்கையில் பல பாடங்கள். இன்றும் கற்றுக் கொண்டேன். செயல்படுத்த முயற்சிக்கிறேன்.

பயணிக்க வேண்டியவை நிறையவே இருப்பதால் கற்றுக் கொள்வதும் நிறையவே இருக்கின்றது.

அசுரனின் பதிவில் படித்த பின், உங்களிடம் தனிப்பதிவாக போடுங்கள் என தட்டச்சிய வேளையில் உங்களது பதிவு.

உணர்த்தியமைக்கு நன்றி.

பாலசந்தர் கணேசன். said...

வலைபதிவுகள் எண்ணங்களின் பரிமாற்றமாக இல்லாமல், எழுத்தாற்றலை வெளிக்காட்டுவதாக இல்லாமல், கொஞ்சம் ஆனால் கொஞ்சமே திசை மாறியுள்ளது. அளவுக்கு அதிகமான விமர்ச்னமும், முறையற்ற வார்த்தைகளும் வெளியே வரத்தான் செய்கின்றன. அடுத்தவர்களை மட்டம் தட்டும் நோக்கத்தோடு எழுதபடுகின்றன பல வரிகள். த்னிமனித சுதந்திரம், கருத்து சுதந்திரம் என்பது ஆரோக்கியாமான வகையில் இருக்க வேண்டும். கொஞ்ச நாள் முன்பு நான் வலைபதிவில் நான் பார்த்த கருத்து இது:

தமிழ்மணம் இத்தனை விதமாக வகைபடுத்துவதற்கு பதிலாக, சாதி மத சண்டை என்று ஒரு புது வகை கொண்டுவந்தால், எல்லாபதிவுகளும் அங்கு தான் இருக்கும்.

கடந்த சில நாட்களில் மிக ஆறுதலாக இருப்பவை, சாப்ட்வேர் இன்ஞினியர் ஆவது எப்படி,ப்ரியன் கவிதைகள் போன்ற பதிவுகள். விட்டு விட்டு பார்த்தால், மும்பாய் குண்டு வெடிப்பில் ஆரம்பித்து சகலத்திலும் குற்றசாட்டுகள்,விளக்கங்கள், வசவுகள். வலைப்பூக்களில் முட்கள் அதிகமாகி விட்டது. பூக்கள் இன்னமும் நிறையத்தான் இருக்கின்றன. ஆனால் முட்கள் முன்னை விட அதிகமாக உள்ளது. மொழி நம்மை இணைக்க வேண்டாமா?


குழலி கொடுத்த எடுத்துகாட்டு மிக பிரமாதம். இந்த கருத்தை நானும் சில பின்னூட்டங்களில் வெளி படுத்தியுள்ளேன். உணர்ச்சிவசபட்டு நாம் நமக்கே கெடுதல் வரும் வண்ணம் நடந்து கொள்ள கூடாது.

கோவி.கண்ணன் said...

குழலி,உசா,முத்து,விடாதுகறுப்பு,போனபர்ட்,ஜெயராமன்,லக்கிலுக் ... நீங்களெல்லாம் முன்று நாட்களாக நல்லா தூங்கினீர்களா ?
ரொம்ப கவலையா இருக்கு :((
(வேறு யாரையாவது விட்டிருந்தால் மன்னித்துக் கொள்ளுங்கள்)

இன்னிக்காவது நல்லா தூங்குங்க :))))

செல்வநாயகி said...

அருமையான பதிவு குழலி. வலையுலகம் என்று மட்டுமின்றி வாழ்வின் பல இடங்களிலும் பயன்படும் அணுகுமுறைகள் இவை

Anonymous said...

உன் பக்க நியாயங்களை எதிராளியை யோசிக்க வைப்பதில் தான் உள்ளது என்பதில் நான் உறுதியாக உள்ளேன் (எல்லாவற்றையும் போல இதிலும் சில விதிவிலக்குகள் உண்டு)

There is no sense of dialog here.
You want to convince an 'opponent'
but the moment you identify one as an 'opponent' no dialog is possible.No sensible conversation is possible whe you think x or y or z is an opponent.There could be
thousand and one views on any topic.So who is an opponent to
whom.And your post and the responses are full of streotypes.
When will you try to understand by
going beyond sterotypes and
accept that people with
the same objectives can have different and contrasting view points.

பாலசந்தர் கணேசன். said...

எதிராளி என்றால் எதிர் கருத்து உடையவன் என்று எடுத்து கொள்ளுங்கள்.

தருமி said...

நல்ல தேவையான ஒரு பதிவு. வாழ்த்துக்கள்

கருப்பு said...

அடடா... அற்புதம்... பேஷ் பேஷ்... பின்றீங்க... அடிச்சு ஆடுங்க... கொன்னுட்டீங்க..

என்று சொல்லிவிட்டு போகத்தான் வந்தேன். ஆனால் என் வாயைக் கிண்டுகிறீர்கள்.

ஒரே ஒரு வன்னிய இன இளம்பெண்ணுக்கு உதவி செய்தவர்கள் எல்லாம் இங்கே தெய்வமாக போற்றப்படுகின்றனர். அதனை நினைத்தால் சிரிப்பதா அழுவதா என்று தெரியவில்லை. ஏன் தமிழ்நாட்டில் வன்னிய இனப் பெண்கள் மட்டும்தான் வீட்டு வேலை செய்கின்றனரா? எனக்குத் தெரிந்து பார்ப்பன இனப் பெண்கள் பத்து பாத்திரம் தேய்த்து பிழைப்பு நடத்துகின்றனர். பெரிய நகரமான சென்னையிலேகூட என்னால் உதாரணம் காட்ட முடியும்.

பார்ப்பனர்களை மட்டுமே இவன் எழுதுகிறானே என்று நினைத்தவர் பலர். இவன் ஒரு இஸ்லாமியனாக இருப்பானோ என முனுமுனுத்தவர் பலர். ஆனால் நான் ராமதாசையும் விஜயகாந்தையும் கிறிஸ்துவ மதத்தையும் இஸ்லாமிய தீவிரவாதத்தையும் பார்ப்பனர்களின் திருகுதாளங்களையும் எழுதி வந்திருக்கிறேன். இன்னும் கொஞ்சம் தூரம் போனால் சீக்கிய மற்றும் புத்த மதங்களையும் ரீச் செய்துவிடுவேன் என நினைக்கிறேன்.

இவன் அவனாக இருப்பனோ... அவன் இவனாக இருப்பானோ என்ற ஐயம் ஏற்படுவது இயற்கை. என்னைக்கூட சிலர் பலரோடு தொடர்புபடுத்திப் பேசினர். பாவம் பொட்டீக்கடை கூட மனம் நொந்தார். எனக்கு யாரென்றே தெரியாத மூர்த்தியோடுகூட தொடர்புபடுத்திப் பேசினார்கள். நீங்களும் சிங்கப்பூரில்தான் இருக்கிறீர்கள் என நினைக்கிறேன். வார இறுதியில் நேரமிருந்தால் ஒதுக்குங்கள். சந்தித்து பேசுவோம். விரைவில் நானேகூட என் புகைப்படம், பெயர் எல்லாம் போட்டு எனது வலைப்பதிவின் முகப்பை மாற்ற இருக்கிறேன். டெம்பிளேட்டில் சில மாறுதல்கள் செய்ய வேண்டி இருப்பதால் தாமதம்.

அவன் இவனாக இருப்பான் என ஊகங்களால் கூறுவதாவது பரவாயில்லை. ஆனால் ராபின்ஹூட் என்பவர் பெயர், தளம் போட்டே எழுதி உள்ளார். முன்னர் அந்நியன் என்பவரைப் பற்றி ஆப்பு என்பவர் எழுதினார் என்பதற்காக ஆப்புவை தமிழ்மணம் விட்டு நீக்கினார் காசி. ஆனால் இப்போது ராபின்ஹூட் மூர்த்தி என்பவரைப் பெயர் போட்டு எழுதினார் என்பதற்காக அவரை தளம் விட்டு நீக்கவில்லை. தமிழ்மணம் மற்றும் காசியின் நடுநிலைமை குறித்து நான் சொல்ல என்ன இருக்கிறது? இந்த ராபின்ஹூட் ஒருபடி மேலே சென்று "எனக்கும் மூர்த்திக்கும் சம்பந்தம்" என்றெல்லாம் எழுதியும் காசி ஆவர் பதிவை அனுமதித்தே இருக்கிறார்.

பிராமனர்கள் பிறப்பால் உயர்ந்தவர்(!!!) என்பதற்காக அவர்களைப் பற்றி பேசாமல் என்னால் இருக்க முடியாது. நான் எழுதிய வன்னியர், கிறிஸ்தவர் எல்லாம் அமைதியாக இருக்க பார்ப்பனர்கள் மட்டும் தையதக்கா என்று குதிப்பது அநாகரீகத்தின் உச்சகட்டம்.

இஸ்லாமியரைப் பற்றி எழுதினேன் என்பதற்காக இஸ்மாயில் என்னை பிடித்து சிங்கப்பூர் போலீசில் கொடுப்பதாக ஜிகால்டி காட்டினார். எனக்கு நானே அதிபதி. அடுத்தவர் சொன்னார், செய்தார், மிரட்டினார் என்பதற்காக என் பேனா... ச்சே... என் தட்டச்சு என்றைக்கும் வளைந்து கொடுக்காது. அய்யா பெரியாரின் கருத்துகளில் ஊறி வளர்ந்தவன் நான்.

(பின்குறிப்பு:- எங்கோ வன்னிய ஏழைப்பெண்ணுக்கு உதவியவர் ஏழைப் பார்ப்பனர்களுக்கும் உதவுவாரா? விரைவில் பதிவு எழுத இருக்கிறேன்!)

குழலி / Kuzhali said...

விடாதுகருப்பு, தயவு செய்து பிறர் செய்யும் உதவிகளை விமர்சிக்காதீர்கள், எந்த சூழ்நிலையில் அதை உஷா வெளிப்படுத்தினார் என்பது முக்கியம், ஒரு முறை எங்கள் கிராமங்களில் அறியாமையால் நடந்த கொலைகள் பற்றி எழுதிய போது அவர் அதை தெரிவித்தார், மேலும் பத்து பாத்திரம் தேய்க்கும் வேலைசெய்பவர்கள் மட்டுமல்ல, நீங்கள் உங்கள் பதிவில் சொன்ன அந்த வேலையை செய்யும் ஆண்களும் பெண்களும் எல்லா சாதியிலும் உள்ளனர், ஆனால் பொதுமை படுத்தும் போது வருத்தமாக உள்ளது. மற்றபடி தமிழ்மண நிர்வாகத்தின் மீது நீங்கள் வைக்கும் குற்றசாட்டும் எனக்கு ஏற்புடையது அல்ல...

இந்த பதிவில் சொன்னதெல்லாம் சமீபகாலமாக நான் கடைபிடித்து வருவது அவ்வளவே, நானும் ஒரு முறை வார்த்தையை பிடித்து தொங்கி பலியான கதையும் உண்டு

நன்றி

Anonymous said...

//மற்றபடி தமிழ்மண நிர்வாகத்தின் மீது நீங்கள் வைக்கும் குற்றசாட்டும் எனக்கு ஏற்புடையது அல்ல...//

மூர்த்தியை எழுதலாம். ஆனால் சிலந்திவலை வெங்கட்ரமணியை எழுதக்கூடாது. நல்லா இருக்குய்யா உங்க நியாயம்!

-நரேஷ்.

கருப்பு said...

//மற்றபடி தமிழ்மண நிர்வாகத்தின் மீது நீங்கள் வைக்கும் குற்றசாட்டும் எனக்கு ஏற்புடையது அல்ல...//

சூப்பர் பதில். பொழைச்சுக்குவீங்க. அதென்ன மூர்த்திக்கு ஒரு நியாயம்... அந்நியன் வெங்கட்ரமணிக்கு ஒரு நியாயம்? சிலந்திவலை வெங்கட்ரமணி என்ன அவ்ளோ பெரிய ஆளா? அவருக்காக தமிழ்மண சட்டம் வளைந்து கொடுக்குமா? என்னோட பதிவை படிச்சீங்களா?

Anonymous said...

//You want to convince an 'opponent'
but the moment you identify one as an 'opponent' no dialog is possible.//

விஷயத்தை எடுத்துக்கொள்ளாமல் வார்த்தைகளை பிடித்து தொங்குவது..

திருந்தவே மாட்டீங்களாடா?

லக்கிலுக் said...

////குழலி,உசா,முத்து,விடாதுகறுப்பு,போனபர்ட்,ஜெயராமன்,லக்கிலுக் ... நீங்களெல்லாம் முன்று நாட்களாக நல்லா தூங்கினீர்களா ?///

ஹலோ கோவிமணி!

தெரியாத்தனமா ஒரிஜினல் அரசியல் பேசவந்து கடைசியில தமிழ்மணத்து அரசியல் சாக்கடையிலே சிக்கிக்கிட்டிருக்கிறேன்... வெளிவர என் நலனில் அக்கறை கொண்ட சில நண்பர்கள் யோசனை சொல்லிக் கொண்டு இருக்கிறார்கள்....

இனிமே இவங்க அரசியலுக்கு நான் வரப்போறதில்லை.... யாராவது வந்தாங்கன்னா சும்மா விடப்போறதில்லை.... :-)

பேசாம இம்சை அரசன் ஸ்டைலிலே "ஜாதி, மதம், அரசியல் இதற்கெல்லாம் கோஷ்டி அமைத்து சண்டை போடுபவர்களுக்கு என்று தனியாக ஒரு பகுதி தமிழ் மணத்தில் ஆரம்பிச்சுடலாம்"

நாம ஜாலியா(?) அங்கே போய் கும்மி அடிச்சுக்கலாம்.....

மா சிவகுமார் said...

"உமது வெற்றி எதிராளிக்கு வலிப்பதில் இல்லை, உமது வெற்றி எதிராளி உன் கருத்தை ஏற்பதில் தான் உள்ளத"


+1

மா சிவகுமார்

குழலி / Kuzhali said...

பின்னூட்டமிட்ட அனைவருக்கும் நன்றி என கூறி என் பின்னூட்ட கயமைத்தனத்தை செய்கிறேன்

குழலி / Kuzhali said...

பின்னூட்டமிட்ட அனைவருக்கும் நன்றி என கூறி என் பின்னூட்ட கயமைத்தனத்தை செய்கிறேன்

ரவி said...

///பின்னூட்டமிட்ட அனைவருக்கும் நன்றி என கூறி என் பின்னூட்ட கயமைத்தனத்தை செய்கிறேன///

நான் மிகவும் ரசித்தது இதுதானுங்கோ...

மனதின் ஓசை said...

குழலி... என்ன சொல்றதுன்னே தெரியல... மிக அருமையான ஒரு அலசல் கட்டுரை...இதனை படித்தபின் இதன் கருத்துக்களை இதுவரை நடந்த/இனி நடக்கப்போகும் விவாதங்களில் பொருத்திப் பார்த்தால் பல உண்மைகள் புரியும்...
முழு கட்டுரையும் அழகாக எழுதப்பட்டுள்ளது..
வாழ்த்துக்கள்..

Unknown said...

குழலி, இப்போதுதான் இந்த பதிவை படித்தேன். தெளிவாக இருக்கிறீர்கள். பொதுப்படையாக ஏசாமல் குறிப்பிட்ட தனிமனிதர்களின் குற்றங்களை முன்வைத்தால் எல்லோரும் (நானும்) அதை கண்டிக்க தயார். உதாரணத்துக்கு, இந்த தீஷிதர்களின் அட்டகாசத்தை எதிர்ப்பதில் உங்களுடன் நானும் சேர்ந்துகொள்கிறேன். அதைப்பற்றி பதிவு எழுத நேரம் கிடைக்கவில்லை (விஷயமும் சரியாக தெரியாது). இங்காவது என் எதிர்ப்பை தெரிவித்துவிட்டு செல்கிறேன்.