மடியில் இரசாயன குண்டு

தமிழோவியம் தீபாவளி மலரில் வெளிவந்த எனது கட்டுரை இது, இக் கட்டுரையை வெளியிட்ட பாலஜிக்கும் தமிழோவியம் குழுவிற்கும் நன்றி

போபாலில் நடந்த கொடுமை இன்னும் நம் நெஞ்சை விட்டு அகலவில்லை, மெத்தில் ஐசோ சயனைடு என்கிற விட வாயு கசிந்து உருக்குலைந்த மக்களும் இன்னமும் பிறந்து கொண்டிருக்கும் பாதிப்படைந்த குழந்தைகளும் அந்த கொடூரத்தின் சாட்சிகளாய் நம் முன்னே.



கடலூர் கெடிலம்,தென் பெண்ணை, உப்பனாறு என்ற மூன்று ஆறுகள் கடலில் சங்கமிக்கும் ஊர், தமிழகத்தின் தலைநகர் சென்னையை எளிதில் இணைக்கும் சாலைகளையும் மூன்றரை மணி நேர பயண தூரத்தையும் கொண்டது, இரயில் சந்திப்பு நிலையமும், துறைமுகமும் ஆக அத்தனை தரை வழி, கடல் வழிகளாலும் இணைக்கப்பட்ட போக்குவரத்திற்கு எளிதான ஒரு நகரம், தடையில்லா மின்சாரம் கிடைக்க அருகிலேயே நெய்வேலி அனல் மின் நிலையம், இத்தனையும் வரமென்றால் இந்த வரமே சாபமாகிவிட்டது கடலூருக்கு.


கடலூர் சிதம்பரம் சாலையில் கடலூர் பழைய நகரத்தின் எல்லையில் ஆரம்பிக்கும் சிப்காட் தொழிற்பேட்டை, இரசாயன தொழிற்சாலைகள் நிறைந்த இந்த பகுதியில் பல கிராமங்கள் உள்ளன, எண்பதுகளின் இறுதியில் இந்த தொழிற்பேட்டை ஆரம்பிக்கப் பட்ட போது வேலைவாய்ப்புகள் பற்றிய உறுதிகளும் அதனால் நல்ல வாழ்க்கையை எதிர்பார்த்தும் இந்த இரசாயன தொழிற்சாலைகள் பற்றிய எதிர்ப்பு முனகல்கள் கூட எழவில்லை,இன்றைய நிலையில் கடலூருக்கு ஓரளவு வேலை வாய்ப்பும் தந்து கொண்டிருக்கின்றது இந்த சிப்காட், கடந்த சில ஆண்டுகளாக சாதி மோதல்கள் அதிகமில்லாமல் இங்கே நிலவி வரும் அமைதிக்கு இதுவும் ஒரு காரணம்.

அந்த பகுதியை பேருந்தில் கடக்கும் பத்து நிமிட நேரத்திலேயே அழுகிய முட்டை நாற்றத்தை போன்ற நாற்றம் மூச்சு திணற வைக்கும், சில சமயங்களில் அந்த இரசாயன தொழிற்சாலைகளிலிருந்து சில மணி நேரங்களுக்கு ஒரு முறை திறந்து விடப்படும் கழிவு வாயு மிகக் கடுமையான நாற்றத்தோடு மூச்சு திணற வைக்கும்.

அவ்வப்போது கிராமவாசிகள் இந்த கழிவு வாயுக்களினால் மயக்கமடைவதும் நடந்து கொண்டு தான் இருக்கின்றது, அந்த நேரத்தில் மக்களிடையே சில முனகல்கள் ஏற்பட்டு பின் அடங்கிவிடும்.

SIPCOT Area Community Environmental Monitors (SACEM) இந்த பகுதியில் 12 விட வாயுக்கள் காற்றில் கலந்துள்ளதாக தெரிவிக்கின்றது, மேலும் இங்குள்ள காற்று மனிதர்கள் சுவாசிப்பதற்கு ஏற்றதாக இல்லை என்றும் சோதனைகள் மூலம் தெரிய வந்துள்ளது. அமெரிக்க தரக் கட்டுப்பாட்டின் படி இங்கிருக்கும் காற்றில் உள்ள 12 வாயுக்களில் 7 வாயுக்கள் மிக ஆபத்தானவையாக குறிப்பிடப்படுகின்றன.


இந்த காற்றில் உள்ள Trichloroethylene என்கின்ற வேதிப்பொருள் புற்று நோய் ஏற்படுத்த கூடியது, இது US Environmental Protection Agency (USEPA) தரக்கட்டுப்பாட்டில் அனுமதிக்கப்பட்டதை விட 400 மற்றும் 900 மடங்கு அதிகமுள்ளதாக இரண்டு சோதனைகளில் தெரியவந்துள்ளது மேலும் Carbon disulphide, bromomethane, trichloroethene, 4-methyl 2-pentanone, acrolein, methylene chloride and hydrogen sulphide என்ற வேதிப்பொருட்களும் அமெரிக்க தரக்கட்டுபாட்டின் அளவைவிட பல நூறு மடங்கு அதிகமாக உள்ளது.

இந்த பகுதிகளில் நிலத்தடி நீர் மட்டம் வெகுவாக குறைந்து கொண்டு வந்துள்ளது, சில ஆண்டுகளுக்கு முன் 30 அடி ஆழத்தில் கிடைத்துக்கொண்டிருந்த நீர் இன்று சில நூறு அடி ஆழத்தில் கூட கிடைக்கவில்லை, ஒரு நாளைக்கு இங்குள்ள தொழிற்சாலைகள் பயன்படுத்தும் நீரின் அளவு இருபது மில்லியன் லிட்டர், கிடைக்கும் நிலத்தடி நீரும் வெளிர் மஞ்சள் நிறத்தில் உள்ளது, தொழிற்சாலை கழிவு நீர் நிலத்தடி நீரை அழிப்பதுடன் மீன் வளத்தையும் அழித்துள்ளது. இந்த நீரில் குளிப்பதால் தோல் அரிப்பு பிரச்சினைகள் வருகின்றன.

தமிழ்நாடு மாசு கட்டுப்பாட்டு வாரியம் (TNPCB ) காற்றில் உள்ள மாசு அளவை கட்டுப்படுத்த எல்லா முயற்சிகளும் எடுப்பதாக கூறினாலும் சோதனைகள் அதை உறுதி செய்யவில்லை.

அவ்வப்போது அரசியல் கட்சிகள் இந்த பிரச்சினையை கையில் எடுத்து போராடினாலும் எதுவும் ஒரு முடிவுக்கு வரவில்லை.

மீன் பிடி தொழிலின் பாதிப்பினாலும் நம்மால் முடிந்தது ஊரை விட்டு கிளம்புவது மட்டுமே என்ற எண்ணத்தினாலும் பலர் சென்னைக்கு இடம் பெயர்கின்றனர்.

சிலருக்கு கிடைக்கும் வேலைவாய்ப்பிற்காகவும், எதிர்த்து போராட முடியாமலும் எம் மக்கள் சோர்ந்து கிடக்கின்றனர் மடியில் இராசாயன குண்டை கட்டிக்கொண்டு என்று வெடிக்குமோ என்ற பயத்தில்.

தகவல்களுக்கு நன்றி

flonnet.com
thesouthasian.org
sipcot.com
bhopal.net

எம் ஊரை காக்க உங்கள் புகாரை இந்த சுட்டியிலிருந்து அனுப்புங்களேன்.
petitiononline.com

6 பின்னூட்டங்கள்:

said...

குழலி நல்ல முயற்சி. பெட்டிசன் ஆன் லைன் -ஐ எப்படி நம்மூர் அரசாங்கத்திடம் எடுத்துச் செல்வீர்கள். அதன் நடைமுறை என்ன? தெரிந்தால் சொல்லவும்.

நான் இணையத்தில் அறிந்த வரை உங்களுக்கு சில அரசியல் கட்சிகளில் நல்ல தொடர்பு உண்டு என்று நினைக்கிறேன். அவர்கள் காதிலும் போட்டு வையுங்கள். மக்கள் பிரதிநிதிகள் இது பற்றி பேசுவது அரசின் கவனத்தை சீக்கிரம் பெறும்.

இப்படி விசயங்களைப் பேசவாவது ஒரு "Blogger MP" /MLA கோட்டா வேண்டும் :-)

இது போல் கோகோ கோலாவின் விசயமும் இன்னும் மக்களிடம் போய்ச்சேரவில்லை.

நான் ஏற்கனெவே பத்ரியின் பதிவில் நிலத்தடி நீர் சம்பந்தமாக(http://thoughtsintamil.blogspot.com/2005/09/blog-post_29.html) பின்னூட்டம் இட்டு இருந்தேன். அவரும் //இன்னமும் யோசிக்கவேண்டும். சிலரிடம் பேசிப் பார்க்கிறேன். // என்று சொல்லியிருந்தார்.

said...

நண்பரே ரொம்பவும் கனமான பதிவு.திருப்பூர் சாய பட்டறைக்கு செவிசாய்த்த நீதிமன்றம் உங்கள் பகுதி பிறச்சனைக்கு வழி இல்லாமலா போய்விடும். உங்க்ளை போல் நால்வர் ஊர் திரட்டி ஒன்று சேர்ந்தால் உண்டு நிச்சயம் நியாயம். பொது நல ஊடகங்கள் உஙகள் வசதிக்கு பயன் படுத்தி கொள்ளுங்கள். இது உயிர் சம்மந்த பட்ட பிரச்சினை .நம்ம உயிரே மயிரா போச்சுன்னு இறங்கினாலொழிய தீர்வுகள் சுமூகமில்லை,நிச்சயம் நான் நண்பகளோடு நம் வாழும் தெய்வம் கலாமுக்கு எழுது கின்றேன்.இதில் சில அரசியல் தலையீடு இருப்பதினால் பிறச்சனையை ஆறபோட்டுடாங்கன்னு நெனக்கிறேன். வரும் ஞாயிற்று கிழமை செம்பாவாங் எம் ஆர் டி அருகே உள்ள திடலில் நான் செயகுமார் உங்களை அங்கே சந்திக்கின்றேன்.

said...

வாழ்த்துக்கள் குழலி.

said...
This comment has been removed by a blog administrator.
said...

பின்னூட்டமளித்த அனைவருக்கும் நன்றி... எல்லா அரசியல் கட்சிகளும் இந்த பிரச்சினையையும் அதன் வீரியத்தையும் நன்றாக அறிந்தவர்களே...

அவ்வப்போது கழிவு வாயு வெளியேற்றத்தினால் கிராம மக்கள் மயங்கிவிழுந்தால் அரசியல் கட்சிகள் மாவட்ட ஆட்சியாளர் அலுவலகம் முன் ஆர்ப்பாட்டம் நடத்துவர் அவ்வளவே அதற்கு மேல் அவர்களால் ஒன்றும் செய்யமுடியாது அல்லது முயலவில்லை

said...

இந்த பதிவை மீள்பதிவு செய்வதை பற்றி யோசிக்கவும்..
போபால்பற்றிய விவாதங்கள் நடைபெறும் நேரத்தில் இதுவும் இடம்பெற்றால் நல்லது